அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது
எச்சில்கள் துப்பப்பட்டன
யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது
மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து
புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின்
விருட்சத்தின் கிளையில்தான்
நீங்கள் அமர்ந்து யோசிக்கும் நாற்காலி உருவாகியுள்ளது…….

நித்திரை கலைந்த மொத்த இருளின்
யாரோ ஒருவரின் இருட்பசியை போக்கிட
சிறு விளக்கு வெளிச்சத்தில்
மொத்த மோகப்பெருவெளியில்
அடர்ந்த மேகமாய் சூழ்ந்த
மனிதப் பரப்பில் சிறு சிறு காயங்களைத் துடைத்தெறிந்த
அந்தவொரு மெல்லிய தேகத்தில்
சிலிர்த்து எழும்பி பறிபோகிறது ஒரு துளி குருதியில்
யாரோ ஒருவரின் அராஜக வேகமும்…மோகமும்……

கிளறிய மண்ணுக்குள்
தீ நுழைந்து நீங்கள் மரமாக வேண்டாம்
மண்புழு செரித்திடாத ஒரு பசித்தாவரமாய் இல்லாத
இறுகப்பற்றும் ஆல விழுதாய் மாறிடப்பழகுங்கள்…….

இந்த ஈர காற்றுவெளியில் ஏதோ சிலாகித்தலை
ஆழ்த்தும் அந்த ஏகாந்த நொடிகளைப் பற்றி
அகலும் உனது ஒட்டுமொத்த தேவைகளைப் பறித்துச் செல்லும் இடத்தில்
ஓர் அடி பின்னால் வைத்து உனது உரிமையை இழுக்கப் பழகுங்கள்……..

அனாதையில்லங்களின் வாசலில்
இரட்டை மரங்களிலிருந்து சிந்திய
தனியொரு அனாதை தென்னங்கீற்று பெருக்கெடுத்து
துயரம் பாய்ந்தாற்போல் ஒவ்வொரு கீற்றிலும்
சுத்தம் செய்யும்விரல்களாய்
உனது கரங்களை ஊன்றிடப் பழகுங்கள்…..

கண்ணீர்க் கடலில் கட்டுமரமும்
அலையுமான அனைத்து ஏற்ற இறக்கங்களில்
சிறு அலையெனத் துள்ளிடும்
மீனின் சிறு கடல் துளியாய்
நீ நீச்சலில் காதம் பற்றி பலதூரம் கடந்திடு
நித்தம் துயரிலும் விருட்சமாய் துளிர்விடு……

கவிஞர் சே.கார்கவி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *