தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு வெளியிட்ட “தமிழரசு இலக்கிய மலர்” செறிவான படைப்புகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது. “ஒரு நூற்றாண்டு இலக்கிய ஆவணம்” என்று முன்னுரைப் பகுதியில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதைகள் என்று வளமான படைப்புகளோடு வாசிக்க எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. தமிழ்வளர்ச்சியின் நவீனக் குறியீடுகளில் அந்த மலருக்கு முக்கிய இடமுண்டு என்பதில் ஐயமில்லை.
அதற்கு நிகரான இன்னோர் இலக்கிய மலர் என்றால் அது தமுஎகச மாநில மாநாட்டை ஒட்டி வெளியிடப் பட்டிருக்கிற “சிறப்புமலர்” ஆகும். “இனிமையும் குளுமையும் தமிழெனல் ஆகும்” என்ற தமிழ் இலக்கண விதியின் ஒத்திசைந்த சாயலோடு ஒளிவீசுகிறது. ‘தமிழரசு” போலவே கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், சிறுகதைகள் குழந்தை இலக்கியப் பனுவல்கள் என்பவற்றோடு இலக்கிய ஆளுமைகளின் நேர்கணல்கள் என்று ஆழ்ந்து செறிந்த உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல் தமிழ்ப் பித்தனின் ஓவியப் பதாகைகள் அனைத்துப் படைப்புகளுக்கும் முகமும் விழியும் தந்து அழகுபடுத்துகின்றன. வாழ்ந்ததன் அனுபவங்கள் வழியாக வாழவேண்டிய திசையைக் காட்டும் படைப்புகள் அதிகம். உலகின் பல திக்கிலும் இயங்கிக் கொண்டிருக்கிற தமிழ் ஆளுமைகள் தங்கள் அரிய படைப்புகளால் மலரை அலங்கரித்திருக்கின்றன்றனர்.
இன்றைய நிலையில் இந்தியாவெங்கும் சமூகநீதி பற்றிய உரையாடல்கள் வேகமெடுத்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மனிதகுல சமத்துவத்துக்கு முதன்மைத் தேவை பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடா, ஜாதிய ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடா என்ற கேள்வி அனைத்து சித்தாந்தவாதிகளையும் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டும் தேவை என்பதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை; ஆனாலும் முதன்மைத் தேவை எது? இந்திய அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிற அறிவுஜீவிகள் இருகூறுகளாய்ப் பிரிந்து வாதம் செய்தபடி இருக்கின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, இம்மலரில் வெளியாகி உள்ள தோழர் “ஆனந்த் டெம்டுல்டே” அவர்களின் நேர்காணல்.
டெம்டுல்டே அவர்கள் இந்திய சமூக நீதி வானத்தின் துருவ நட்சத்திரம். உலகின் மிகச்சிறந்த அரிவுஜீவிகளில் ஒருவர். சட்டமேதை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களின் பேரன். ”நகர்ப்புற நக்சல்” என்று குற்றம் சாட்டப்பட்டு 31 மாதங்கள் தாலேஜா மத்திய சிறையில் சித்திரவதைகளை அனுபவித்துவிட்டு, பிணையில் வெளிவந்திருக்கிறார். இவருடன் சிறைவாசம் அனுபவித்தவர்தான் அருள்தந்தை ஸ்டாம் ஸ்வாமிகள். அவர் ஒரு கிறித்துவ போதகர்; 84 வயதில் தண்ணீர்க் குவளையை உதட்டில் வைத்து அருந்தமுடியாத சூழலில் அவருக்கு உறிஞ்சுகுழல் தர மறுத்தது சிறை நிர்வாகம். அடக்கி ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடிய அவர் அன்னந்தண்ணி இல்லாமல் சிறையிலேயே மரணம் அடைந்தார். தாலேஜா சிறை என்பது, இரண்டாம் உலகப்போரின்போது முற்போக்குச் சிந்தனையாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட பாஸ்டில் சிறையைவிடக் கொடூரக் கொடுக்குகளைக் கொண்டது.
டெம்டுல்டே சொல்கிறார். “பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு பொருளியல் சமத்துவத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜாதி ஒழிப்பு நடக்காது; ஜாதி ஒழியாமல் பொருளாதார சமத்துவம் மட்டும் இருந்தால் ஒன்றுபட்ட சமூக இயக்கம் நேர்பாதையில் நடைபோட வாய்ப்பில்லாமலே போய்விடும். ஜாதி ஒழிப்பு நடந்துவிட்டால் பொருளாதார சமத்துவம் அனைவருக்குமானதாய் மாறமுடியும். ஆகவே, ஜாதி ஒழிப்புத்துத்தான் முதல் தேவை” என்கிறார்.
இன்றைக்கும் தமிழகம் தவிர இந்தியாவின் பெரும்பாலான ஆண்பெயர்கள் ஜாதி ஒட்டு இல்லாமல் புழங்குவதில்லை. இந்தநிலை மாறவேண்டும் என்று வலியுறுத்துகிறது டெல்டும்டேயின் நேர்காணல். அழகிய எளிய மொழியில் தமிழ்ப் படுத்தியிருக்கிறார் தோழர் கமலாலயன்.
இன்னொரு முக்க்கியப் படைப்பு சிந்துவெளி நாகரீகத்தின் திராவிட அடித்தளத்தை விவரிக்கும் ஜான் மார்ஷல் அவர்களின் கட்டுரை. இரா. விஜயகுமார் அவர்களின் அற்புதமான மொழியாக்கம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் வாசிக்க வைக்கிறது. திராவிட இனத்தின் தொன்மையையும் மொழிப்புலமையையும் காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்திருக்கிறார் ஜான்மார்ஷல். (அரபு நாடுகளின் பிரமிடுகளில் தமிழி எழுத்துகள் உள்ளன என்று இன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிற விஷயம், ஜான் மார்ஷலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.)
திராவிட ஆய்வாளர் திரு பாலக்கிருஷ்ணன் அவர்களின் திருக்குறள் பற்றிய ஆய்வு புதுமையான பார்வையைக் கொண்டிருக்கிறது. திருக்குறளைப் பொதுமறை என்று சொல்வது வேதமரபுக் கோட்பாட்டைப் பிரதி எடுத்ததுபோல் இருக்கிறது என்று அவர் முன்வைக்கும் வாதம் செயற்கைத்தனம் இல்லாமல் நியாயத்தின் சுவடுகளைக் கொண்டிருக்கிறது. ஆரிய வேதங்கள் வேறு யாருக்கும் குறிப்பாக ஆரியரல்லாத பிற ஜதியாருக்குப் புரியக் கூடாது என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையிலான வன்மத்தைக் கொண்டது; சூத்திரன் காதில் வேதமந்திரம் விழுந்துவிட்டால் அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்பது மனுஸ்ம்ருதியின் ஆதாரக் கொள்கைகளில் ஒன்று. அதனால்தான் ஆரிய வேதங்கல் “மறைநூல்கள் என அழைக்கப் பட்டன. ஆனால் திருக்குறள் அனைவருக்குமான அறநூல். ஆகவே, “பொதுமறை என்பதற்குப் பதில் பொதுமுறை என அழைக்கவேண்டும் என்கிறார் ஆய்வாளர் பாலக்கிருஷ்ணன். ஆய்வுநோக்கக் கூறுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான அடையாளமான படைப்பு இது.
16 சிறுகதைகளும் செழுமையான பதிவுகள். இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் மதவாத பீடத்தை நையாண்டி செய்யும் அ. கரீம் அவர்கலின் ”அம்பத்தாறா மங்கல பெருவழுதி மன்னன் அரசாண்ட கதை”. வாசிக்க வாசிக்க சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதே கருப்பொருளை மையமாகக் கொண்டு எழுதப் பட்டுள்ள ச. மருதுதுரையின் “மாயா பஜார்” ஆழமான அழுத்தமான கலையழகுமிக்க படைப்பாய் மிளிர்கிறது. கு. இலக்கியனின் படைப்பு நஞ்சைநிலக் கண்மாயின் பரவு காவலரின், ஊரைக் காக்க்க உயிர்த்தியாகம் செய்யும் மேன்மையை உரிய்த் துடிப்புடன் சொல்கிறது. ஷோபா சக்தி எழுதியுள்ள பொன்ஜுர் ரூசோ, சொந்த நிலத்தில் வாழமுடியாமல் வெளிநாடுகளில் அகதிகளாய்த் தஞ்சமடையும் தமிழர்களின் அவல வாழ்வை உண்மையின் படித்துறையில் நின்று ஓங்கி உரைக்கிறது.
பாவலர் அறிவுமதியும் கதை எழுதியிருக்கிறார்; சிறந்த கவிஞராக அறியப்பட்ட அவர் சிறுகதையிலும் ஒளிர்கிறார். கருவில் இருக்கும் பெண்குழந்தையைக் கொல்லும் பழைய உள்ளடக்கம்தான் என்றாலும் மனம் உருகும் வண்ணம் எழுதியிருக்கிறார். அம்மாவின் கருவில் இருக்கும் மூன்|றாவது பெண்குழந்தை பேசுகிறது. “என்னக் கொல்லும்போது என் அம்மாவுக்கு எந்த வலியும் இல்லாமக் கொல்லுங்கய்யா” என்று குழந்தை பேசும்போது மனம் கனத்துக் கண்ணில் நீர் சொட்டுகிறது. மைதிலி கஸ்தூரி ரெங்கன் எழுதியுள்ள “மன்னருக்கு இருமல்” குழந்தைகள் எளிதில் வாசிக்கும் கதையாக இருக்கிறது. அமுதாசெல்வி எழுதியுள்ள “பீநாற்றம்,” (இன்னும் கொஞ்சம் கலையழகு தேவைப்பட்டாலும்) முதியவர்களைப் பாதுகாக்க வேண்டிய மனித நியாயத்தை வலியுறுத்துகிறது. உள்ளடக்கரீதியாக எல்லாக் கதைகளும் சிறப்புத் தன்மை உடையவையாய் மிளிர்கின்றன. கலைத்தன்மை தேவைப்படும் கதைகளும் இருக்கின்றன என்பது இன்னொரு குறிப்பு.
இம்மலரில் உள்ள கவிதைகள் அனைத்தையும் தொகுத்துத் தனி நூலாகப் போடலாம் என்று தோன்றுகிறது. இளம் கவிஞர்களும் முந்தையவர்களும் அவ்வளவு நேர்த்தியாய்ப் பதிவு செய்துள்ளனர். ஜயபாஸ்கரன் எழுதியுள்ள வரிகளான “படைப்பு பேசும்/படைப்பாளியே பேசாமலிரு” என்ற கோரிக்கை அனைத்து இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும்.
சொல்வதற்கு இன்னும் ஏராளம் உண்டு. வாங்கி வாசித்தால் புது அனுபவம் கிடைக்கும். மலர்த்தயாரிப்புக் குழுவையும் வடிவமைப்புக் கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் உழைப்புதான் இந்த மலரை உச்சமானதோர் இடத்தில் முன்னேற்றி வைத்திருக்கிறது. தமுஎகச வெளியிட்ட எத்தனையோ சிறப்பு மலர்களில் முதலிடம் வகிக்கிறது இந்த சிறப்புமலர். வாங்கி வாசித்தால் புது அனுபவம் கிடைக்கும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தமுஎகச 16வது மாநில மாநாடு சிறப்புமலர் ஒரு பார்வை |
| ஆசிரியர்: | – |
| வெளியீடு: |
பாரதி புத்தகாலயம்
|
| விலை: | ₹.600 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 தேனி சீருடையான் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
