ரவி அல்லது கவிதைகள்
***********************************************
1. துளியின் தேக்கப்பொழுது
அதன் ஓய்வின்
காத்திருப்பு
எதனாலென எனக்குத் தெரியாது.
அதன் போக்கில்
ஏதோவொரு பெயர் தாங்கி
இங்கு வராமல் விட்டகன்றிருக்கலாம்.
சற்றே மன திடத்தின்
பிடிமானத்தில்
கடந்துவிட
நேற்று முயன்றதில்
கனம் கூடிய ஆடைகள்
கயிற்றில்
காற்றாடிக் கிடக்கின்றன.
அழைப்பு நேரத்திற்குள் போகவேண்டிய
கட்டாயத்தில்
வெளி சீதோசனங்களின்
பொழிவுக் குறிப்புகளின் சகாயம்
படிக்கும் பிள்ளைகளுக்குப் பயன்பட்டது.
உட்காரும் இடத்தில்
ஒய்யாராமாக வலு கூட்டி
பற்றி
வழுக்கி நழுவாமல்
***********************************************
2. ஒளிந்துப் பழகியவனின் ஓலம்
சாத்தியங்கள் யாவும்
பொய்த்துப் போனபின்
அவன்
தன்னை மறந்தான்.
அவனுக்கு
அது புதிதல்ல.
வாய்த்தக் கணங்களில்
வாழ்வை ருசித்துக்கொண்டிருந்தான்.
இணையாத மனைவியின் மனதோடு
இணையத் தெரிந்த அவன்
தன்னைக் கையளித்த வாழ்விற்கு ஒப்புக்கொடுத்தான்.
தானொரு கோழை என்பதையும்
தானொரு பயந்த சுபாவம் கொண்டவனென்பதையும்
சில சொற்ப சமாதானங்களைப்போட்டு
மூடி வைத்திருந்தான்.
நட்பையும் உறவையும்
தூரமாக்கி
தன்னைத் தொலையக் கொடுத்ததில்
அவன் சிதிலமடைவதை அறிந்தே இருந்தான்.
அன்றவனுக்கு
அப்படியொன்றும்
புதிதாக நடந்தேறவில்லைதான்.
விசம் தோய்த்த
பகடி வாளின்
வீச்சவனுக்குப் பரிச்சயம் தான்.
எதிர் கொள்ளத் தயங்கி
எப்போதும் வாழ்வில்
ஒதுங்கியே ஓடியவன்
அப்பொழுதும்
அந்த இடத்தைவிட்டு
அகலத்தான் நினைத்தான்.
தன்னைத் தடுக்க நாதியற்ற
அழுகுரலோடு
தோள்சாய
யாருமற்ற துயரத்தின் வெறுப்போடு
ஓட்டத்தில்
தன்னை
ஒளிக்க முயன்றான்.
பாவி .
மறந்தே போனான்
தான்
பதினோராவது மாடியில்
இருக்கிறோமென்பதை
சிதறி
செத்துத் தொலைத்த பொழுது.
***********************************************
பிகு:
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து
தொடர்பு எல்லைக்கு அப்பாலே சென்றுவிட்ட நண்பரே…
மனது வலிக்கிறது.
குட்… பை.
***********************************************
📚 எழுதியவர்:
✍️ – ரவி அல்லது
ravialladhu@gmail.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

