மனோந்திரா எழுதிய 2 தமிழ் கவிதைகள் | தீயினும் கெட்டது (மனக்கண்ணி) | இல்லை எங்களுக்குச் சோறுதான் (கண்ணிகள்) - BookDay Kavithaikal

மனோந்திரா எழுதிய 2 கவிதைகள்

1. தீயினும் கெட்டது
(மனக்கண்ணி)

துன்பக் குளத்தினிலே- மனமே!
துவண்டு கிடக்காதே!
கன்னத்தைக் கண்ணீர்கொண்டு- மனமே!
காயங்கள் செய்யாதே!
பொன்னுலகம் தோன்றிவிடும்- மனமே!
பொங்கி எழுந்துநின்றால்
தின்னும் துயரமெல்லாம்- மனமே!
தேய்ந்து மறைந்திடுமே!

வாட்டும் வறுமைகண்டு- மனமே!
வாடி இருந்திடாதே!
ஓட்டினைப் போட்டுவிட்டு- மனமே!
ஒதுங்கி இருக்காதே!
காட்டுவுன் கண்களிலே- மனமே!
காட்டு நெருப்பினையே
நாட்டில் சுரண்டலைத்தான்- மனமே
நாசம் புரிந்திடத்தான்

ஏகாதி பத்தியம்தான்- மனமே!
ஏழைகளைத் தின்கிறது
ஆஹா வெனஎழணும்- மனமே!
ஆங்கோர் புரட்சியும்தான்
சாகாது பார்!சுரண்டல்- மனமே!
தானாக எந்நாளுமே
போகாது எப்போதுமே- மனமே!
போராட்டம் இல்லையெனில்

ஆயிரம் பொய்பேசிவிடும்- மனமே!
ஆள்கிற வர்க்கமும்தான்
தாயிடம் கூடஅது- மனமே!
தன்நலம் பார்த்துவிடும்
தீயினும் கெட்டதது- மனமே!
தீண்டாமல் கொன்றுவிடும்
வாயில் வடைகள்சுட்டு- தனது
வர்க்கநலன் காத்துவிடும்.

2. இல்லை எங்களுக்குச் சோறுதான்
(கண்ணிகள்)

வானில் சூழ்ந்திருக்கு
தேனின் கூடுயென முகிலினம்- இந்த
வையம் காத்திருக்குப்
பெய்யும் மழையெனவே திகிலுடன்
தானி யம்பெருக
மேனி வருந்திடவே உழைக்கிறோம்- வயலில்
சரிந்த நெல்மணியை
அரிந்து தான்அதிலே பிழைக்கிறோம்

நஞ்சை விளையுமெனில்
நாட்டிற் குணவுதனைக் கொடுக்கிறோம்- இல்லை
நஞ்சை பொய்க்குமெனில்
நஞ்சை அருந்திஉயிர் விடுக்கிறோம்
புஞ்சைப் பயிர்விளைக்கக்
கெஞ்சிக் கடன்களையே வாங்குவோம்- அந்தப்
புஞ்சை பொய்க்குமெனில்
கஞ்சி தண்ணியின்றி ஏங்குவோம்

நெல்லை விளையவைத்தும்
இல்லை எங்களுக்குச் சோறுதான்- நாங்கள்
நித்தம் உழைப்பதெல்லாம்
செத்த பிணங்களாக மாறத்தான்
எல்லை இல்லையெங்கள்
அல்லல் களுக்குயிங்கு உண்மைதான்-என்றும்
ஏழ்மை நிலையில்யாம்
வாழ்தல் சிலருக்கிங்கு நன்மைதான்

தெய்வம் துணைக்குவரும்
உய்வோம் ஒருபொழுதில் என்றுதான்- நாங்கள்
தேரை இழுக்கின்றோம்
ஊரே கூடிநின்று இன்றும்தான்
மெய்யும் வருந்திடவே
செய்யும் தொழிலைநன்றாய்ச் செய்கிறோம்- இருந்தும்
தெய்வம் பொய்ப்பதினால்
கைகள் வலுவிழந்து நைகிறோம்

கவிதை எழுதியவர்:-

– மனோந்திரா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. “சாகாது பார்! சுரண்டல்- மனமே!
    தானாக எந்நாளுமே
    போகாது எப்போதுமே- மனமே!
    போராட்டம் இல்லையெனில்”

    மிகத் தேர்ந்த வரிகள்!
    இரண்டு கவிதைகளும் மிகச் சிறப்பு

    “தேரை இழுக்கின்றோம்
    ஊரே கூடிநின்று இன்றும்தான்”

    என்ற வரியில் இன்றும் என்று சொல்லின் இடத்தை மட்டும் மாற்றி,
    “தேரை இழுக்கின்றோம்
    இன்றும் ஊரே கூடி நின்று தான் ”
    என்று அமைந்தால் முன்னுள்ள தொடருடன் நன்கு இயையும்.

    “நெல்லை விளையவைத்தும்
    இல்லை எங்களுக்குச் சோறுதான்- நாங்கள்
    நித்தம் உழைப்பதெல்லாம்
    செத்த பிணங்களாக மாறத்தான்”

    வலி மிகுந்த வரிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *