உடல் நலம் புதிய சிகிச்சை முறைகளும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் “உடல் நலம் புதிய சிகிச்சை முறைகளும்”
(அறிவியல் கட்டுரைகள்)
நூலாசிரியர் : முனைவர். ஜோதி எஸ் தேமொழி
விலை : ரூபாய் 150/-
வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம்
மதுரை-625018.
தொடர்பு எண் : 7010997639
ஏன்? எதற்கு? எப்படி? என்பது போன்ற கேள்விகள் தான் நமக்கு புதிய செய்திகளையும் புதிய பார்வையும் வழங்குகிறது….
பகுத்தறிவு தந்தை பெரியார் “படிப்பு வேறு அறிவு வேறு என்பதை பத்திரமாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்த கருத்தோடு தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
தேடுதல் மனநிலை கொண்டவர்கள்தான் உலகின் சாதனை மனிதர்களாக நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
ஏன்? எப்படி? எதற்காக? எங்கே? என்ற கேள்விகள் மூலம் தேடுதல் எப்போதும் தொடர வேண்டும். தேடுதல் ஆர்வமும் குழந்தை பருவத்துடன் முடிந்து விடக்கூடாது.
ஒரு குழந்தையின் தேடுதல் மனநிலை இல்லாதவர்கள் ஓய்வு பெறுவதற்காகவே வாழ்ந்தும், ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என தெரியாத இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விடுகின்றார்கள்.
வாழ்வின் பொருள் என்பது மனதை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஒரு குழந்தையின் வியப்போடு வாழ்ந்து புதியன கண்டு சுவைப்பதும் தான் அறிந்ததை பிறருக்கு சொல்வதிலும் தான் இருக்கிறது.
ஏன்? எப்படி? எதற்காக? என்பது போன்ற கேள்விகள் தான் நமக்கு புதிய செய்திகளையும் புதிய பார்வையும் கொடுத்து நமது வாழ்வை சுகமாக்குகிறது. நமது அறிவுப்பார்வையை நமக்குள்ளும் விரிவடையச் செய்கிறது. இதை நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் இந்நூல் நம்க்கு வலியுறுத்துகிறது.
இந்நூல் ஆசிரியர் வழங்கி உள்ள அறிவியல் கட்டுரைகள் அனைத்தும் மிகுந்த ஆழமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நம்மை அதிசயிக்க செய்கிறது.
குறிப்பாக இன்றைய சமூகத்தில் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் அறிவியல் பார்வையோடு சிந்திப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார்.
நமது இடது பக்க மூளையின் செயல் அது போன்று வலது பக்க மூளையின் செயல் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது என்ற கருத்து உள்ளது. ஆனால் படைப்பாற்றல் என்பது மூளையின் பல பகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல் திறன் என்பதாகும்.
எதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்கு ஆர்வம் அவசியம் .
சில வேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்க வேண்டிய சூழல் உள்ளது. கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களை ஒருபோதும் தடுக்க இயலாது.
எனவே ஆர்வம் என்பது தான் கற்றலுக்கு அடிப்படை.
நாம் கற்கும் பொழுது மூளை அதிகமாக சிந்திக்குமானால் நாம் கற்பது தாமதமாகும் என்ற அறிவியல் உண்மையை விளக்குகிறார் நூலாசிரியர்.
ஆணும் பெண்ணும் சிந்திப்பதில் மாறுபட்டவர்கள். தகவல்களை நினைவு கூர்வதிலும் பெண்கள் வல்லவர்கள் என பெண்களின் குணநலன்களும் பழக்க வழக்கங்களும் உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆண் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் எந்த வேறுபாடு இல்லை என்பதை ஆய்வுகளோடு தெரிவிக்கிறார்.
நம் தினசரி வாழ்க்கையில் சரியான தொடர் பயிற்சியின் மூலமும் விடாமுயற்சியுடன் அவற்றை வாழ்க்கையின் ஒரு பகுதியாக பழக்கமாக்கிக் கொள்வதும் மகிழ்ச்சி நிறைந்த மனதை அடைய முடியும்.
குறிப்பாக மனதை கட்டுப்படுத்தும் திறன் நம் கையில் சரியான பயிற்சியின் மூலம் நிறைவான வாழ்க்கையும் நிலையான மகிழ்ச்சியும் நாம் அடையலாம் என்பதை அறிவியல் முடிவுகள் வாயிலாக தெரிவிக்கிறார்.
“மன இறுக்க குறைபாடு” என்று அழைக்கப்படும் “ஆட்டிசம்” என்ற வளர்ச்சி குறைபாடு உடையவர்களின் மூளையின் கட்டமைப்பில் வழக்கத்திற்கு மாறாக மாறுதல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
என்பதை மிக அருமையாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
ஆட்டிசம் பதிக்கப்பட்டவர்களின் ஆய்வுக்கு உதவும் கைபேசி செயலி.
குறிப்பாக ஆட்டிசம் குறைபாடல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கண்டறிவது என்பதற்கான குறிப்புகள் மிக விரிவாக பதிவு செய்துள்ளார். ஒரு குழந்தையின் முக பாவத்தை வைத்து இக்குறைபாட்டை கண்டறிய முடியாது.
குழந்தையின் நடவடிக்கையையும் பழகும் விதத்தையும் கவனித்து ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தை என்பதை உறுதி செய்யலாம்.
இதற்காக டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஒரு இலவச ஆப்பிள் ஐபோன் காண செயலியை உருவாக்கி உள்ளார்கள் இதை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி பயன்பெறலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கான புதிய சிகிச்சை முறையையும் விரிவாக அலசி உள்ளார்.
புற்றுநோயை கண்டறியும் எளிய சோதனை முறை கண்டுபிடிப்பையும் எளிமையாக குறிப்பிட்டுள்ளார்.
மரபணு சிகிச்சை மூலம் நம்மிடையே உள்ள பார்வை குறைபாட்டை எளிதாக தீர்வு காண முடியும் எனவும் பதிவு செய்த உள்ளார்.
14 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
நூலைப் படிப்பதன் மூலம் நமது அறிவியல் பார்வையை மேம்படுத்தி கொண்டு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

