முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பம் எவ்வாறு அதற்குள் தீர்வை தேடுவதற்காகச் சட்டத்தை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் என்பதை, அதன் திண்டாட்டத்தை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளது ‘உடன் பால்’ திரைப்படம்.
சினிமா சி.டி விற்கும் அப்பா. அவரிடம் அக்காவும் தம்பியும், ஆன்லைன் (ஓ.டி.டி) சினிமாவால் நலிவுற்ற குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்பதற்காக வீட்டை விற்கச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.
அப்பா வீட்டை விற்க மறுத்து, வீட்டிலிருந்து வெளியேறுகிறார். அவர் சென்ற இடத்தில் விபத்து நடந்து, காம்ப்ளக்ஸ் இடிந்து விழுந்து அனைவரும் இறந்துவிட்டதாக டிவியில் செய்தி வருகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் நஷ்ட ஈடு தருவதாக அரசாங்கம் அறிவிக்கிறது.
அப்பா செத்து விட்டதாக நினைத்து, தங்கையும் அண்ணனும் 20 லட்சம் ரூபாயை எவ்வாறு பிரித்துக்கொள்ளலாம் என்று சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பணத்தைப் பங்கிட்டுக் கொள்வதென முடிவான பிறகு, உடலை வாங்குவதற்காக அண்ணன் கிளம்பும்போது, கதவு தட்டப்பட்டு செத்ததாக நினைத்த அப்பா உயிரோடு உள்ளே வருகிறார்! தங்கை, தங்கையின் கணவன், அண்ணன், அண்ணி, என குடும்பமே 20 லட்சம் ரூபாய்க்காக திட்டமிட்டு, அதற்காக குடும்பமே அல்லோளப்பட்டது எல்லாம் நகைச்சுவையாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வீட்டில் அப்பா இயற்கையாகவே மரணம் அடைகிறார்! இப்போது, இயற்கை மரணத்தை விபத்தில் இறந்ததாக நாடகமாடி அந்த 20 லட்ச ரூபாயைப பெற வேண்டும் என்று குடும்பமே சேர்ந்து திட்டம் தீட்டுகிறது.
இறந்துபோன தன்னுடைய அப்பாவின் உடலை விபத்து நடந்த இடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக பல வழியில் முயற்சி செய்கிறார்கள்.
ஒரு வழியாக அப்பாவின் உடலை விபத்து நடந்த இடத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்துவிட்டு வருகிறார்கள்.
இவர்கள் உடலை வைத்த ஆம்புலன்ஸ் விபத்துக்கானது அல்ல சாதாரண பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டியாக இருக்க, பிணம் வேறிடம் சேரவும் அவர்கள் இது தங்களுடையது இல்லை என்று ஒதுக்கி தனியாக வைத்து விடுகிறார்கள்.
இதற்கிடையில், குடும்பத்தில் பணத்தை எவ்வாறு வாங்கிப் பிரித்துக் கொள்வது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, கதவு தட்டப்படுகிறது.
அப்பாவின் நெருங்கிய நண்பர் உள்ளே வருகிறார். ‘எங்கே உங்கள் அப்பா’ என்று கேட்கிறார். ‘அப்பாவும் நானும் விபத்து நடந்த இடத்திலிருந்து விபத்துக்கு முன்பே வந்துவிட்டதாகவும் நல்லவேளை நாங்கள் இருவரும் உயிர் தப்பி விட்டோம்’! என்றும் கூறுகிறார். வீட்டில் அவர் இல்லை என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்களை அப்பாவின் நண்பர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். குடும்பத்தில் இருக்கும் ஒருவன், இரும்புக் கம்பியால் இவனைத் தாக்கிவிட்டு, காயம் அடைந்தவர்க்கான 2 லட்சம் ரூபாயை அவனுக்கே பெற்றுத் தருவதாகக் கூறி கம்பியைப் எடுக்கிறார்.
மறுபுறத்தில் உடம்பால் சடங்கு இல்லாமல் அப்பா பிணம் கிடக்கிறது.
இன்னொரு காட்சியில் சிறுவன் தாத்தா இறந்துபோனது தெரியாமல் ‘நீ எப்படி தாத்தாவைப் பார்த்துக் கொள்கிறாயோ அதைப் போல நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன்’ என்கிறான். மூன்று காட்சியும் ஒரே வேளையில் தோன்ற படம் நிறைவடைகிறது.
முதலாளித்துவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்படும் முதன்மை முரண்பாடுகளை, உபரி மதிப்பு கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாத, இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடிக்கொள்ள விரும்பும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையைத்தான் இந்தப் படம் காட்டுகிறது.
நாம் எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும், யாரெல்லாம் உயிர் வாழ வேண்டும் என்றெல்லாம் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் முடிவு செய்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்காலிக மூச்சு விடுவதற்காக எந்த தவறையும், திருட்டுத்தனத்தையும் செய்யலாம் என தூண்டும் பொது புத்தியின் மனசாட்சிதான் இந்தப் படம்.
முதலாளித்துவத்தின் தோல்வியால் தற்கொலைகள், திருட்டு, பெற்ற பிள்ளையை விற்பது, உடல் உறுப்பை விற்பது ஆகியவை நடக்கிறது. தொழிலாளிவர்க்கம் அடைகிற துன்பத்திற்கு பாவ புண்ணியம், இந்த ஜென்மத்தில் சரியாக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் நல்ல நிலையில் வாழ்க்கை அமையும் என்றெல்லாம் மதவாதிகள் முதலாளித்துவத்தின் ஆதரவான கருத்தியல்களை மக்கள் மூளையில் பதிய வைத்துவிட்டார்கள். இந்த நுகர்வு கலாச்சாரம் முதலாளித்துவ அமைப்பில் இருந்து கொண்டு அனைத்தையும் சரி செய்ய முடியும் மாற்ற முடியும் என்று எண்ணுகின்ற பொது புத்தியை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பிற்குள்ளேயே தீர்வைத் தேடுவது முட்டாள்தனமானது என்கின்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்துகிறது. அதற்குள் தீர்வே இல்லை. சமூகத்தை மாற்றி அமைப்பதைத் தவிர வேறு தீர்வில்லை என்கிற முடிவை நோக்கி, கம்யூனிசத்தை நோக்கி தொழிலாளி வர்க்கத்தை கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. மனிதர்கள், உறவுகள் எல்லாம் முதலாளித்துவத்தில் இதயமற்ற இயந்திரங்கள் ஆகிவிட்டன. முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரத் தத்துவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரித்துக்கொண்டே செல்ல, தொழிலாளிகள் மேலும் சுரண்டப்படுகிறார்கள்.
ஏகாதிபத்தியம், முதலாளித்துவ பொருளாதாரம் ஆகியவற்றின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்த குடும்பமும், எந்த தனி நபரும் தப்ப முடியாது என்பதை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நகைச்சுவையாக கூறியுள்ள படம்தான் ‘உடன் பால்.’
இந்தப் பரந்துபட்ட மக்களைத் திரட்ட திராணியற்று இருக்கும் நாம் குற்றவாளிகள் ஆவோம்.
இந்தப் படத்தின் கதை ஒரு கற்பனை என்றாலும் அதன் காலமும் கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. முதலாளித்துவம் இருக்கும்வரை அதன் பொருளாதார அமைப்பு நீடிக்கும்வரையில் நாடுகளுக்கிடையேயும் மட்டுமல்ல மனிதர்களுக்கிடையேயும் நடக்கும் வன்முறை ஓயாது. ‘நாங்கள் நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று விரும்பினோம் இந்த சமூகத்திற்கு எங்கள் நேர்மை தேவையற்றதாக ஆகிவிட்டது, அதனால் நாங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி எங்கள் கடனை அடைக்க முயற்சி செய்கிறோம்’ என்கிற ஒரு குடும்பத்தின் கதை இப்படம்.
ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தன் தவறுகளை உணராமல் எப்படி நியாயப்படுத்த முடியும், தன் குடும்ப கஷ்டம் தீர முறைகேடான வழிகளில் பணம் வந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனநிலை ஒரு குடும்பத்திற்கு எப்படி வந்தது,
போட்டிகள் நிறைந்த உலகில் முறைகேடுகள் செய்தால் அனைத்தையும் அடைய முடியும் என அந்தக் குடும்பம் நம்புகிறதா, வாழ்க்கையை எதிர்கொள்வதில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் போனது ஏன்?
உலகமயம், தனியார்மயம், தாராளமையம்
நுகர்வு கலாச்சாரம் ஆகியவற்றின் விளைவாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம், அதிலிருந்து விடுபட முறைகேடான வழியில் தப்பிக்க வழி தேடும் ஒரு கதை இது.
– கார்த்திக் வர்ஜினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.