உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள் - 1. பூனைக்குட்டியின் தந்திரம் / 2.மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும் -மலையாளத்தில் - அஷீதா - https://bookday.in/

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள்

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள்

1. பூனைக்குட்டியின் தந்திரம்

மலையாளத்தில் – அஷீதா
தமிழில் – உதயசங்கர்

சின்னுவின் வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. ஒரு நாள் எலிகள் கரும்பி ஓட்டை விழுந்த சட்டையைக் கொண்டுவந்து நண்பர்களிடம் காட்டினாள் சின்னு.

கதைப்பாட்டி பூனைக்குட்டியிடம்,

“ நீ போய் எலிகளை விரட்டிவிடு.. எப்போதும் இப்படியே விளையாடிக் கொண்டு, சின்னு தருகிற பாலைக் குடித்துக் கொண்டு படுத்து தூங்கிக் கொண்டேயிருந்தால் போதுமா? “

என்று கேட்டார். பூனைக்குட்டி அவமானமாக இருந்தது. பூனைக்குட்டிக்கு கோபம் வந்தது. அது எலிகள் வசிக்கிற இடத்தைக் கண்டுபிடித்தது. அங்கேயே போய் இருந்து கொண்டது. பிறகு ஒவ்வொரு எலியாகக் கொன்று தின்றது. எலிகளுக்கு தப்பிப்பதற்கு எந்த வழியும் தெரியவில்லை. அவை மண்ணைத் தோண்டி வளைகள் அமைத்து அங்கே போய் இருந்தன.

எலிகளை வெளியில் வரவழைக்க என்ன செய்யலாம்? என்று பூனைக்குட்டி மண்டையைப் போட்டு உடைத்தது. கடைசியில் அருகிலிருந்த மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியது. பார்த்தால் யாரோ கொன்று தொங்க விடப்பட்டதைப் போல தெரியும். ஒளிந்திருந்த எலிகள் அதைப் பார்த்து விட்டு,

“ ஆகா! என்ன ஒரு நடிப்பு.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொங்கு.. எங்களைப் பிடித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம்.. தெரிஞ்சுதா? “

 

2.மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்

மலையாளத்தில் – அஷீதா
தமிழில் – உதயசங்கர்

ஒரு நாள் நல்ல நிலா வெளிச்சம். நீலகண்டன் குள்ளநரி சுவரேறிக் குதித்தது. மெகர்பா கோழி இருக்கும் கூட்டுக்கு அருகில் போனது. மெகர்பா கண்களை மூடித் தூங்குவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த சத்தமுமில்லை. நாய்க்குட்டி எங்கே உறங்குகிறது என்று தெரியவில்லை. கர்வம் பிடித்த நாய்க்குட்டி தோணுகிற இடத்தில் உறங்கும். அது முழித்து விட்டால் கடித்துக் கொன்றுவிடுவான்.

கண்ணை மூடித் தூங்குகிற மெகர்பா கோழியைப் பார்த்துப் பார்த்து குள்ளநரிக்கு வாயில் எச்சில் ஊறியது. என்ன அழகான கால்கள்! பொரித்த கோழிக்காலைக் கடித்துத் தின்பதில் என்ன ஒரு சுகம்!

நீலகண்டன் குள்ளநரி மெல்லப்பாடியது,

“ உன்னை யார் பார்த்தாலும் ஆசைவருமே கோழிப்பெண்ணே!

பிறகு ஏன் இன்றுவரை உன்னைக் கலியாணம் முடிக்க யாரும் வரவில்லை?”

மெகர்பா விழித்து விட்டது. தன்னுடைய கலியாணத்தைப் பற்றி நினைத்தபோது சோகம் வந்தது. நீலகண்டன் அண்ணன் சொல்வது சரிதான். அந்தப்பக்கத்தில் இருக்கும் சேவலுக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றன.

நீலகண்டன் குள்ளநரி இன்னும் கவனமாகப் பாடியது,

“ என்னுடன் நீ காடு சுற்றிப் பார்க்க வருகிறாயா கோழிப்பெண்ணே.. தோடு வாங்கலாம், மாலை வாங்கலாம்,, என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்..”

நாய்க்குட்டி அருகில் இருந்த வைக்கோல் குவியலில் படுத்திருக்கிறது என்று இரண்டு பேருக்கும் தெரியாது. நாய்க்குட்டி விழித்தது. காது கொடுத்துக் கேட்டது. ஆகா! நீலகண்டன் குள்ள நரி தானே பாடுது…

மெகர்பா கோழி யோசித்துப் பார்த்தது. நீலகண்டன் குள்ளநரி பாடுவதிலும் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. தோடு ஒன்று வாங்கவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. கதைப்பாட்டியின் காதுகளில் அழகாகத் தொங்குகிற மாதிரி வேண்டும்.

மெகர்பா நீலகண்டனைப் பார்த்துப் பாடியது,

“ ஆலப்புழக்காரன் நீலகண்டன் மாமாவே நாளை எனக்கு ஒரு தோடு வேண்டும். தோடு வேண்டும். பிறகு தோடு வேண்டும் தோளில் தட்டுகிற மாதிரி தோடு வேண்டும். ஆச்சியும் நானும் கோவித்துக் கொள்ளும்போது கூடவே கோவித்து ஆடுகிற தோடு வேண்டும்..”

“ சரி.. வாங்கித் தருகிறேன்..” குள்ளநரிக்குத் தன்னுடைய தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் சொன்னது,

“ நீ வெளியே வா மெகர்பா.. நாம் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம்..”

நாய்க்குட்டி எழுந்தது. பாய்ந்து குள்ளநரியின் கழுத்தில் கடித்தது. குள்ளநரி ஊளையிட்டு அழுதது. கோழி, க்க்கோ க்க்கோ க்க்கோ..” என்று சத்தம் போட்டது. வீட்டுக்காரர்கள் விழித்து விளக்கைப் போட்டார்கள். பூனைக்குட்டி சீறிப் பாய்ந்து குள்ளநரியின் முதுகில் நகங்களால் கீறி விட்டது.

நீலகண்டன் குள்ளநரி ஓரே ஓட்டம் ஓடியது. ஆலமரத்துக்கு அருகில் கூடி ஓடும்போது கதைப்பாட்டியும் ஒரு அடி கொடுத்தாள்.

 நன்றி – பறயாம் நமுக்கு கதகள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *