கவிதை: கைகளைக் கழுவ விடுங்கள் – உமா மோகன்

கவிதை: கைகளைக் கழுவ விடுங்கள் – உமா மோகன்



கைகளைக் கழுவ விடுங்கள்

நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள்
நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள்
அவுரி கண்ட மண்ணுக்கு
ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு
உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது
நகரும் கால்களில்
உங்களுடையது
நான்காமிடமோ
நாற்பதாமிடமோ
உடைமை என்பதே பெருஞ்சுமை
அதை இறக்கத்தானே
இத்தனை பாடு
*********”*
நைச்சிய சொற்களின்
அடையாளம்
நாளும் களைபறித்த
கண்களறியாதா
கொழுமுனை கீறிய நிலத்துக்குள்
புதையட்டும்
பொய்ம்மையின் பசப்பல்
வரலாறு
எல்லாவற்றையும் பிடுங்கிப்பிடுங்கி
உருட்டி உருட்டி
நாலாய் எட்டாய் மடித்து விழுங்க
எங்கள் வாழ்வென்ன
உங்கள் அம்மைசுட்ட ரொட்டியா
விழுங்கும்வேகத்தில்
ஒரு விக்கல் வந்தாவது
நினைவூட்டாதா
தொண்டைக்குக்கீழே
எல்லாம் ஒன்று
எல்லார்க்கும் ஒன்று என்று
பக்கத்திலிருக்கும்
முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது
எங்களுடையது
கஞ்சி
உங்களது
பாரிட்ஜ்
உண்டு கழுவ விரும்பும் கைகளையுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ
              – உமா மோகன்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *