“உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்”
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது.
நீதியை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன.
மிருகங்களை காப்பாற்ற பல அமைப்புகள் இருக்கின்றன.
மக்களைக் காப்பாற்ற தான் யாரும் இல்லை.
கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகள் இவை.
இன்றைக்கு மனித உரிமைகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
காலம் காலமாக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு வடிவங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் கோயமுத்தூர் மாவட்டம் தொடங்கி ஓசூர் மாவட்டம் வரையிலும் கொத்துக்கொத்தாக சம்பந்தமே இல்லாத பல்வேறு மக்களை வன்கொடுமை செய்ததை யாரும் மறந்து விட முடியாது. அதேபோன்று வாச்சாத்தி சம்பவம் குறித்து இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் தலையீட்டின் காரணமாக அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இன்னும் நியாயம் கிடைத்த பாடில்லை. ஆணையங்கள் தவறு செய்தவர்கள் இவர்தான் இவர்கள்தான் என்று சுட்டிக் காட்டிய பின்பும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. உசிலம்பட்டியில் குருவையா காவல் மரணம் தொடங்கி சாத்தான்குளத்தில் நடந்த காவல் மரணங்கள், மானாமதுரையில் சமீபத்தில் நடந்த காவல் மரணம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் இன்னும் பல்பீர் சிங்குகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இந்தியாவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் களத்தில் மனித உரிமைக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கி மக்களுக்காக போராட்டம் நடத்துவதோடு நியாயம் கிடைப்பதற்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
பிரதானமான மனித உரிமைகள்:
வாழ்வுரிமை,
சித்திரவதை பாதுகாக்க உரிமை,
நியாயமான விசாரணைக்கான உரிமை, பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, தனி மனித உரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை, வேலை உரிமை மற்றும் சுதந்திரமாக நடமாடும் உரிமை.
இந்த உரிமைகளை அரசும் அரசு சார்புள்ள நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் செயலாளருமான தோழர் வி பழனி எழுதியுள்ள “மனித உரிமைகள்” எனும் நூல் மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள், மனித உரிமை அமைப்புகள், உயிர் வாழும் உரிமை, மனித நேயம், தேசிய காவல் ஆணையம், குடியிருப்பு உரிமை, குழந்தைகள் உரிமை, தீண்டாமை வன்கொடுமைகள், இன ஒதுக்கல், சிறுபான்மை மக்கள் ஆணையம், போரும் அமைதியும், சதி வழக்குகள், சிறைக் கொடுமைகள், நீதிமன்றங்கள், கல்வி உரிமை, மொழி உரிமை, அனைவருக்குமான மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண்ணியமான வாழ்வு, பத்திரிக்கை சுதந்திரம் இது போன்ற 64 தலைப்புகளில் மிக அருமையாக உருவாக்கியுள்ளார் நூலாசிரியர்.
இளம் சிறுவர்கள், குடும்பம் சமூகம் அரசு ஆகியவற்றால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் உலகெங்கிலும் பின்தங்கிய நாடுகளில் குறிப்பாக நமது நாட்டிலும் பல கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் கொத்தடிமைகளாகவும் உள்ளார்கள்.
பீடி, தீப்பெட்டி, பட்டாசு, தோல், நெசவு, வீட்டு வேலை போன்ற தொழில்களில் தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதைவிட கொடுமை குழந்தைகள் பாலியல் தொழிலும் ஈடுபடுத்தப்படுவது தான்.
தீண்டாமை கொடுமை என்பது மறைமுகமான ஒரு அடிமை முறையே ஆகவே அடிமை முறைகளில் இது மோசமான வடிவம் ஆகும் என்று அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதோடு ஆவண படுகொலைகள் நிகழ்த்தத் தொடங்கி விட்டார்கள்.
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகுந்த அளவு அதிகரித்துள்ளது. எந்த குண்டு வெடிப்புகள் சம்பவங்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூகம் தான் நிகழ்த்தி இருக்கிறது என்று தொடர்ந்து இந்த அரசு வலியுறுத்திக் கொண்டே உள்ளன. இதன் மூலம் இந்து தேசமாக மாற்றுவதற்கான பெரும் பணியினை இந்த அரசு மேற்கொண்டு வருவது அதிகரித்துள்ளது.
பத்திரிக்கை சுதந்திரம் மீதும் உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டு வருவதை பார்க்க முடியும். பத்திரிக்கையாளர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் தாக்குதலையும் நடத்தி வருவதை பார்க்கலாம்.
மனித சமூகம் அடிமைச்ச சமுதாயத்தை தாண்டித்தான் வந்துள்ளது மனிதர்கள் ஆடு மாடுகள் போல விலை பேசி விற்கப்பட்டனர் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இது போன்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை தொகுத்து இந்த நூலில் அங்கங்கே பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
இந்த நாட்டின் ஒவ்வொரு சாதாரண குடிமகனும் அவர்களுக்குள்ள அடிப்படை உரிமைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கில் இந்த அடிப்படை நூல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மனித உரிமை ஆர்வலர்களும் இடதுசாரி சிந்தனையாளர்களும் குறிப்பாக கள செயல்பாட்டாளர்கள் இந்த நூலை அவசியம் படித்து தேவையான நேரங்களில் பயன்படுத்துவதற்கு உகந்த நூல் இது.
இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் அற்ற சமுதாயத்தை படைக்க ஒவ்வொரு ஒவ்வொருவருக்கும் இந்த நூல் உதவியாக அமையும்.
நூலின் விவரங்கள்:
நூல்: “மனித உரிமைகள்”
நூலாசிரியர் : வீ.பழனி
விலை: ₹ 60/-
வெளியீடு : அ ஆ இ பதிப்பகம்
பாளையங்கோட்டை – 627007
தொடர்பு எண்: 9443391196
எழுதியவர் :
✍️ – MJ. பிரபாகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
