ஆ. சிவசுப்பிரமணியன்
[email protected]

தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத்துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்றெடுத்த தந்தையேயாயினும் யான்பெற்ற மக்களேயாயினும் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை நேசிப்பதுமில்லை. (வ.உ.சி. “கர்மயோகி” மார்ச் 1910)

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி ஓர் அழுத்த மான சைவர். சைவ சமயத்தின் சாத்திரங்களில் ஒன்றான சிவஞான போதத்திற்கு உரை எழுதி 1935இல் வெளியிட்டவர். பகவத்கீதையை அவர் கற்றறிந்திருந்தார். ஆயினும் தேசியத்தின் அடையாளமாகவோ தமிழர்களின் அடையாளமாகவோ சிவஞானபோதத்தையும் பகவத்கீதையையும் அவர் முன் நிறுத்தவில்லை. திருக்குறளையே அவர் முன்வைத்தார்.

திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு அதற்கு எழுதப்பட்ட பழைய உரைகளையும், கற்றறிந்தவர். அவற்றுள் சில அச்சு வடிவம் பெறாது சுவடிவடி வில் இருந்தவை. திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னவர் என்றறியப்பட்ட மணக்குடவர் (11ஆவது நூற்றாண்டு) எழுதிய உரை இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை அச்சிடப்படாது சுவடி வடிவிலேயே இருந்தது. 1917 ஆவது ஆண்டில் திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய அறத்துப்பால் உரையை வ.உ.சி. பதிப்பித்து வெளியிட்டார்.

அவரது வறுமைச் சூழலில் பொருட்பாலையும் காமத்துப்பாலையும் பதிப்பித்து வெளியிட முடியாது போயிற்று. ஆனால்தாமே திருக்குறளுக்கு ஒரு உரை எழுதியுமுள்ளார்.

வ.உ.சி.யின் உரை:
திருக்குறளின் மூன்று பால்களுக்கும் உரை எழுதிய வ.உ.சி அறத்துப்பாலின் உரையை 1935 பிப்ரவரியில் வெளியிட்டார். எஞ்சிய இரண்டு பால்களுக்கும் அவர் உரை எழுதி முடித்திருந்தாலும் அவை நூல்வடிவம் பெறவில்லை. பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தூத்துக்குடியில் வ.உ.சி பெயரில் இயங்கி வரும் கல்லூரியில் நான் பணியாற்றிய போது அக்கல்லூரி நூலகத்தில் உள்ள நூல்களையும் ஆய்விதழ்களையும் உறுதியான அட்டையால் கட்டும் பணிக்காக ஒருவர் அடிக்கடி வருவார். அறுபது வயதுக்கும் மேலான அவரை அடிக்கடி நூலகத்தில் சந்திக்க நேரிடும். ஆனால் உரையாடியதில்லை. ஒரு நாள் நூலகர் திரு. முத்தையாபரனாந்து அவரை அறிமுகம் செய்வித்ததுடன் ‘இவர் வ.உ.சியின் கடைசிக்காலத்தில் அவரது நூல்களைப் பைண்ட் செய்து கொடுத்தவர்’ என்று கூறினார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தமக்கு வரும் சட்ட இதழ்களை நூல்வடிவில் பாதுகாக்க இவர் உதவி இருப்பார் என்று முதலில் நினைத்தேன். அவரிடம் உரையாடியபோது அவர் கூறிய செய்தி உள்ளத்தை உருக்குவதாய் இருந்தது.

தமது தூத்துக்குடி வாழ்க்கையில் நூல்களை அச்சிடும் போது பண நெருக்கடியினால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அவற்றை நூல்வ டிவில் பெற்றுக்கொண்டுள்ளார் . எஞ்சியவற்றை பக்க வரிசையில் முறையாக அடுக்கி கட்டுக்களாகக் கட்டிப் பாதுகாத்துவந்துள்ளார். நூல்கள் வேண்டும் என்று கேட்கும் போது அக்கட்டுக்களைப் பிரித்து கட்டுநர் உதவியால், அவற்றை நூல்வடிவாக்கித் தந்துவிடுவார். திரு இசக்கி இளம் வயதிலேயே இத் தொழிலில் தேர்ச்சி பெற்றவர். வேறு இடத்தில்பணிபுரிந்தாலும் பகுதிநேர வேலையாக இத்தொழிலை வீட்டில் இருந்தவாறே செய்து வந்துள்ளார். வ.உ.சி.யின் நூல்களை அட்டைக்கட்டு செய்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டதை 1968 அல்லது 1969இல் ஒரு குறிப்பாக எழுதி வைத்திருந்ததன் சாரம் வருமாறு:


‘பைண்டிங் செய்யவேண்டி இருந்தால் வைக்கப் பிள்ளை (வக்கீல் பிள்ளை) ஜயா சொல்லிவிடுவார். நான் அவர்களைப் பார்க்க வீட்டுக்குப் போவேன்.

வா இசக்கி என்பார்கள். அச்சடிச்ச பாரங்களைக் கொடுப்பார்கள். பைண்ட் செய்துகொண்டு போனதும் சில சமயம் உடனே காசு கொடுத்து விடுவார்கள். சில சமயம் மணியார்டர்வரலேயப்பா என்பார். சரிண்ணுட்டு வந்துருவேன். இரண்டு நாள் கழிச்சுப் போனா சில சமயம் பணம் கிடைக்கும்.சிலநேரம் கிடைக்காது.சில நேரம் போஸ்ட்மேன் வாராராண்ணு பார்ப்போம். எனக்கும் பணம்வேணும்னு சொல்லி உக்காரச் சொல்லிருவாக. போஸ்ட் மேன் இரண்டு மூணு மணியார்டர் கொண்டு வந்தா முழுப்பாக்கியும் கிடைக்கும். எதிர்பார்த்த மாதிரி மணியார்டர் வரலைண்ணா அவங்களும் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிடுவாக. எனக்குக் கொஞ்சப் பணம்தான் கிடைக்கும். நானும் அழுத்திக் கேக்கமாட்டேன். எப்படியும் பாக்கியைத் தீர்த்துவிடுவார்கள்,

இக்கட்டுரையின் தலைப்பிற்குப் பொருந்தாத செய்தியாக இச் செய்தி இருப்பதாகத் தோன்றினாலும் வ.உ.சி.யின் திருக்குறள் உரை முழுமையான வடிவில் கிடைக்காமைக்கான காரணத்தை நாம் அறிய உதவுகிறது. 1935 பிப்ரவரியில் திருக்குறள் அறத்துப்பால் உரையை நூலாக வெளியிட்ட வ.உ.சி அடுத்த ஆண்டில் (1936 நவம்பர் 18) காலமானார். அதற்கு முன்னரே எஞ்சிய பொருட்பால் காமத்துப்பால் என்ற இரு பால்களுக்கும் உரை எழுதி முடித்து விட்டார்.

அவர் மறைவிற்குப்பின் அவை இரண்டும் நூல்வடிவம் பெறாது அவரது மகன் திரு.வ.உசி. சுப்பிரமணியம் பொறுப்பில் இருந்தன . அக்கையெ ழுத்துப்படிகளை அவர் பாரிநிலையத்திடம் வழங்கியுள்ளார். அச்சு வடிவில் முதலில் வெளியான அறத்துப்பால் உ ரையையும் ஏனைய இருபா ல்களின் உரைகளையும் இணைத்து ஒரே நூல் வடிவில் பாரி நிலையத்தார் 2008 இல் வெளியிட்டுள்ளனர்.

பதிப்பாசிரியர் உரை:
திருக்குறளுக்கு வ.உ.சி. எழுதிய உரை முழுவதையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் பேராசிரியர் இரா.இளங்குமரன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்தவர். பதிப்பாசிரியர் விளக்கம்’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள பதிப்புரை, வ.உ.சி. எழுதியுள்ள திருக்குறள் உரை குறித்த நல்லதொரு அறிமுகமாக அமைந்துள்ளது. இப்பதிப்புரையில் வ,உ.சி.யின் திருக்குறள் உரையின் அமைப்பையும் அதன் சிறப்பையும் மிகத் தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

வ.உ.சி.யின் முன்னுரை:
தமது முன்னுரையின் தொடக்கப்பகுதியிலேயே பரிமேலழகர் உரையுடன் தமது உரைவேறுபடுவது குறித்தும், தமக்கு முந்தைய உரையாசிரியர்கள் கொண்டுள்ள மூல பாடங்களில் இருந்து பரிமேலழகர் வேறுபட்டிருப்பதையும் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி.யின் உரை:
இனி வ.உ.சி.யின் திருக்குறள் உரையில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

எடுத்துக்காட்டு: 1
எடுத்துக்காட்டாக நான்கு குறள்களுக்கான அவரது உரைகளைக் காண்போம். இவ்வுரைகளின் வழி அவரது இலக்கிய இலக்கணப் புலமை மட்டுமின்றி அவரது சமூகப் பார்வையும் வெளிப்படுகிறது. இக்கட்டுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ள குறள்கள் வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் தொகுத்துப் பதிப்பித்த திருக்குறள் – உரைவளம் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. இப்பதிப்பை அடியொற்றியே குறள் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை.
(குறள் எண்: 43)

என்ற குறளில் இடம் பெற்றுள்ளதென்புலத்தார் என்ற சொல்லுக்குப் “பிதிரர் என்று பரிமேலழகர் பொருளுரைத்துள்ளார். பிதிர் என்ற சொல் குறிக்கும் பொருள்களில் ஒன்று இறந்த பெற்றோர் மூதாதையர் ஆகியோரின் ஆன்மா ஆகும். இவர்களை நினைவு கூர்ந்து செய்யும் சடங்கு பிதிர்க்கடன் எனப்படும். இறந்த தந்தைக்குச் செய்யும் ஈமக் கிரியையைப் பிதிர்க்கருமம் என்று சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி
( தமிழ் லெக்சிகன்) குறிப்பிடுகிறது. பிதிரர் என்ற சொல்லுக்கு” பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற்* படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி அவர்க்கிடம் தென் திசையாதலின் தென்புலத்தாரென்றார்” என்று பரிமேலழகர் விளக்கமளித்துள்ளார். “புதல்வரைப் பெறுதல்” என்ற தலைப்பிலான திருக்குறளின் ஏழாவது அதிகாரத்திற்கு எழுதிய அதிகார வைப்பு முறையில் தெனபுலத்தார் கடனை நிறைவேற்ற புதல்வரைப் பெறுதல் தேவை என்று ம் கூறியுள்ளார். புறநானூறு (9:3) “தென்புல வாழ்நர் என்று பிதிரர்களைக் குறித்துள்ளது. உ.வே.சா. பதிப்பித்த புறநானூற்றுப் பதிப்பில் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள அரிய சொற்களைப் புரிந்து கொள்ள அவர் உருவாக்கிய அரும்பத அகராதி இடம் பெற்றுள்ளது. அதில் தென்புல வாழ்நர் என்பதற்குத் “தென்றிசைக்கண் வாழும் பிதிரர்” என்றே பொருளுரைத்துள்ளார்.

காலத்தால் பரிமேலழகருக்கு முற்பட்ட திருக்குறள் உரையாசிரியர்களில் பரிதியார் என்ற உரையாசிரியர் “பிதிர்லோகத்தார்” என்றும் காளிங்கர் என்ற உரையாசிரியர்” தன் குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும்” என்று உரை எழுதியுள்ளனர். இச் செய்திகளின் பின்புலத்தில் தென்புலத்தார் என்ற சொல்லிற்கு வ.உ.சி கொண்ட பொருளைக் காண்போம். தென்புலத்தார் என்ற சொல்லுக்கு “மெய்யறிவுடையார்” என்று இக் குறளுக்கான பதவுரையில் வ.உ.சி.பொருள் கூறியுள்ளார். இதுவரை நாம் கண்ட பொருளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. இக் குறளுக்கான அகல உரையில், (விருத்தி உரை) ‘தென்-அழகிய, புலம்-அறிவு,அழகிய அறிவானது மெய்யறிவு. அதனால் தென்புலத்தார்
என்பதற் கு மெய்யறிவுடையார் ” எனப் பொருள் உரைக்கப்பட்டது. என்று விளக்கமளித்துள்ளார். தற்போது இந்நூலைப் பதிப்பித்துள்ள முனைவர் குமரவேலன் தமது குறிப்புரையில் “உரையாசிரியர்கள் அனைவரும் தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் சொல்ல, வ.உ.சி. மெய்யறிவுடையார் என்று கூறியுள்ள திறமும் கருதத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது. இருப்பினும் அவரது தமிழ்ப்புலமை மட்டுமின்றி அவரது சமூகக் கண்ணோட்டத்தின் தாக்கமும் பழைய உரையாசிரியர்களின் உரையில் இருந்து விலகிநிற்கத் தூண்டியிருக்கலமோ என்று கருதவும் இடமுள்ளது.

நவம்பர் 1927 இல் சேலம் நகரில் நடைபெற்காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் தலைமை உரையும் வ.உ.சி நிகழ்த்தியுள்ளார். அதை “எனது அரசியல் பெருஞ்சொல்” என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவ்வுரையில் பிராமணர், பிராமணர் அல்லாதார் சண்டையை நோ ய் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அந்நோய்க்கான மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்திக் கூறியுள்ளார். அம் மூன்று காரணங்களில் இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள காரணம் வருமாறு (அரசு.வீ.2002:213):

“பிராமணர்களே பிராமணரல்லாதவர்கள் கடவுளை அடைவதற்குரிய வழியைக்காட்டும் குருமா ர்களென்றும் பிராமணரல்லாதார்களின் குடும்பங்களில் நிகழும் மங்கல அமங்கலச் சடங்குகளையும் நடாத்துவிப்பதற்குரிய ஆச்சாரியர்கள் என்றும் கூறிப் பிராமணரல்லாதார்களின். பொருள்களை அவர்கள் தாய்வயிற்றில் உற்பவித்த காலம் முதல் அவர்கள் இறக்கும் வரையிலும், அவர்கள் இறந்தபின் அவர்கள் மக்கள் உயிரோடிருக்கும் காலம் முடியும் வரையிலும் கவர்ந்து கொண்டு வருகிறார்கள்” (அழுத்தம் எமது)

அத்துடன் இச் சடங்குகளை “…தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்டகொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை ஜாதியாளர்களுக்கு விதித்த அபராதத் தண்டனை.” என்றும் விமர்சித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பான பெரியாரின் கருத்தை
ஏற்றுக்ககொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

எனவே அவரிடம் இடம் பெற்றிருந்த சடங்குகள் தொடர்பான சமூகக் கண்ணோட்டமும் தென்புலத்தார் என்ற சொல்லுக்கு, முந்தைய உரையாசிரியர்களின் உரையில் இருந்து விலகி நிற்கச் செய்துள்ளது என்று கருத இடமுண்டு.

எடுத்துக்காட்டு:2-3
திருக்குறளில் ஏழாவது அதிகாரமாக இடம் பெற்றுள்ள அதிகாரத்தின் தலைப்பு “புதல்வரைப் பெறுதல்” ஆகும் புதல்வர் எனும்போது அது ஆண்பாலைச்சுட்டி பெண்பாலைப் புறக்கணிக்கிறது. திருக்குறளின் பழைய உரையாசிரியரும் மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர், ஆகியோரும் புதல்வரைப் பெறுதல் என்றே கொள்கின்றனர். ஆனால் வ.உ.சி “இரு பாலரையும் உள்ளடக்கி மக்கட்பேறு”என்று தலைப்பிட்டுள்ளார். இவ் அதிகாரத்தின் முதற் குறள்

பெருமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
(குறள் எண்:61)

என்பதாகும். இக் குறளில் இடம் பெற்றுள “அறிவறிந்த” என்ற பாடத்தைத் தவிர்த்து அறிவுடைய என்ற பாடத்தை வ . உ . சி கொண்டுள்ளார். இப் பாடத்தை முன் வைப்பதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

“அறிவறிந்த மக்கட்பேறு என்பது கற்று அறிய வேண்டுவனவற்றை அறிந்த மக்களைப் பெறுதல் எனப் பொருத்தமற்ற பொருளைத் தருதலானும் ‘அறிவுடைய’ மக்கட் பேறு என்பது ‘இயற்கை அறிவையுடைய மக்களைப் பெறுதல் எனப் பொருத்தமுள்ள பொருளைத் தருதலானும் அறிவுடைய என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. ‘அறிவறிந்த’என்றதனான் மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது ” என உரை ப்பாரும்* உளர் . அப்பாடத்தைக் கொள்ளினும் அவ்வுரை பொருந்தாது. கல்வியறிவு இரு பாலர்க்கும் பொதுவாகலான்” இதே அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு குறள் பரவலாக அறிமுகமான குறள்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
(69) இக்குறளில் இடம் பெற்றுள்ள “கேட்ட தாய்” என்ற சொல்லுக்கு, உரை எழுதிய பரிமேலழகர் “தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்” என்று பத வுரையிலும் விருத்தியுரையில் “பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்டதாய் எனவுங் கூறினார்” என்று எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி தன் மகன் அறிவுடையவன் என்பதை ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியாது. பிறர் கூறித்தான் அறிந்து கொள்ளமுடியும். கேட்டதாய் என்பதற்கு பரிமேலழகரின் இக்கருத்தை
ஏற்றுக் கொள்ளாததுடன் அவரது கூற்றைமேற்கோளாகக்காட்டி “ பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாயெனக் கூறினார் என்று உரைப்பாரும் உளர்.பெண்ணின் இயல்பு தானாக அறியாமை என்பது அறிவிலார் கூற்றென அவ்வுரையை மறுக்க” என்று சற்றுக் கடுமையாகவே மறுத்துள்ளார்.

இறுதியாக கேட்டதாய் என்பதற்குப் பிறர் கூறக் கேட்டதாய் என்று நேரடியாகப் பொருள்கொண்டு ‘தன் மகன், கல்வியும் அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன் என்று பிறர் பேசக் கேட்டதாய் பேருவகை எய்துவாள்’ என்று கருத்துரையில் கூறியுள்ளார்.

பெண்கள் மீது வ.உ.சி. கொண்டிருந்த மதிப்புணர்வை இவ்விரண்டு குறள்களுக்கும் அவர் எழுதியுள்ள உரையால் அறிய முடிகிறது.

எடுத்துக் காட்டு:4
நிலையாமை என்ற அதிகாரத்தில் மனித உடலுக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பு குறித்த

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்ப
(குறள்: 338)

என்ற குறள் இடம் பெற்றுள்ளது. இக்குறளில் இடம்பெற்றுள்ள குடம்பை என்ற சொல்லுக்கு “கூடு” என்று மணக்குடவர் பொருள் கொண்டு “கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு என்றவாறு” என்று உரை எழுதியுள்ளார். காளிங்கர் என்ற உரையாசிரியரும் குடம்பை என்பதற்கு “புள் இயற்றும் கூடு” என்றே பொருள் உரைத்துள்ளார்.

பரிமேலழகர் குடம்பை என்பதை முட்டை என்று பொருள் கொண்டு “…முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு” என்று உரை எழுதியுள்ளார். அத்துடன் கூடு புள்ளுடன் தோன்றாமையானும் அதன் கண் மீண்டு புகுதலுடமையானும் உடம்பிற்கு உவமை யாகாமை யறிக” என்று விளக்கமளித்துள்ளார்.

வ.உ.சி. தாம் போற்றும் மணக்குடவர் வழிநின்று குடம்பை என்பதற்கு கூடு என்றே பொருள் கொண்டுள்ளார். இக் குறளுக்கான அகல உரையில் பரிமேலழகரின் உரையை மறுத்து வ.உ.சி. எழுதியுள்ள உரைப் பகுதியில் மேற்கூறிய பரிமேலழகரின் உரையை மேற்கோளாகக் காட்டிவிட்டு

“அவர் இவ்வதிகாரம்” நிலையாமை என்பதையும் இக்குறள் உடம்பைவிட்டு உயிர் நீங்கும் தன்மையையே கூறுகின்ற தென்பதையும், உடம்போடு உயிர் தோன்றுதலையாவது , உடம்பினுள் உயிர் மீண்டும் புகாமையையாவது கூற வந்ததில்லையென்பதையும் நோக்கிலர். அன்றியும் முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப்பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கேயன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று. மேலும் முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டதுமில்லை கேட்டதுமில்லை” என்று விருத்தியுரையில் குறிப்பிட்டுள்ளதுடன் மட்டுமின்றி தம் உரைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சேக்கை மரனொழியச் சேணிங்கு புட்போல, யாக்கை தமர்க்கொழிய நீத்து” என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ள நாலடியார் (3-10) செ ய்யுள் ஒ ன்றை யும் மேற்க்கோளாகக் காட்டியுள்ளார்.

இவ்வாறு பல புதிய விளக்கங்களை வ.உ.சி. முன் வைத்துள்ளார். அவற்றில் சிலவற்றை மறுப்பதற்கும் இடமுண்டு. எனினும் அவற்றை முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.

கட்டுரையாளர்:
மூத்த பேராசிரியர், நாட்டாரியல் ஆய்வாளர்.

நன்றி:
காக்கை ச் சிறகினிலே

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *