கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த 25 நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை.
பரிசோதனைக் கூடங்களிலும், அறுவை சிகிச்சை மேடையிலிருந்தும், மருத்துவமனை படுக்கையிலும் பிறந்த கவிதைகள் இவை. எனவேதான் இது வாதையின் கதை.
எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்
இந்த உலகில் கதைகளால் நிரம்பி வழிபவை இரண்டு இடங்கள் தான் . ஒன்று , சிறைச்சாலைகள் , மற்றொன்று , மருத்துவமனைகள் ,இரண்டுமே மனித உடல்களைக் கையாளும் இடங்கள். சிறைச்சாலைகள் உடலை வாதைக்கு ஆட்படுடுத்துவதன்மூலம் உடல்மீதான தம் அதிகாரத்தை நிறுவுகின்றன . மருத்துவமனைகள் வாதையிலிருந்து உடலை விடுவிப்பதற்காக உடல்களை , தம் கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றன . ஆனால் உடல்களும் அவற்றின் வாதைகளுமே முடிவற்ற கதைகளின் பிறப்பிடங்கள் என்கிறார் மனுஷ்ய புத்திரன்
இனி சில கவிதைகள்:
திரையில்லை
அறிந்துகொண்டபின்
ஆறுதல் படுத்த முடியுமா ? இருளை மூடத் திரையில்லை.
எச்சில் கிண்ணம் ஏந்தும் தேவதைகள்
எச்சில் கிண்ணம்
ஏந்தும் தேவதைகளுக்கு
அவை எச்சில் என்பது
நினைவிருப்பதில்லை
தாங்கள் தேவதைகள் என்பதும் நினைவிருப்பதில்லை
பிணியாளி
அடிவயிற்றிலிருந்து
பத்து நிமிடத்திற்கொருமுறை இருமுகிறான்
நுரையீரலில்
வெண்ணிறச் சளியின் ஊற்றுகள்
இடைநிற்பதே இல்லை
செவிலி
ஒருமுறையும் தாமதிப்பதில்லை நீல எச்சில் கிண்ணத்துடன்
முதல் இருமலிலேயே வந்து நிற்கிறாள்
குரல் வளை அறுபடும் ஓசைபோல
தொண்டையில் புரளும் கபத்தின் ஓசை
பிணியாளியை மூச்சுத் திணறவைக்கிறது
அவன் காறி உமிழ்கையில் செவிலியின் கைகளிலும்
எச்சில் தெறிக்கிறது
எச்சில் கிண்ணம் ஏந்தும் தேவதைகள் மௌனமாக எச்சில் கிண்ணங்களை
வாஷ்பேசினில் கழுவுகிறார்கள் சானிடைஸைரில்
கைகளை சுத்தம் செய்துகொள்கிறார்கள்
அடுத்த இருமலை எதிர்நோக்கி அமைதியாக ஒரு ஸ்டுலில் அமர்ந்துகொள்கிறார்கள் .
சீக்கிரம் எழவேண்டும்
‘ நீ எப்போது
இந்த நோய்மைப் படுக்கையிலிருந்து
எழுந்து கொள்வாய் ? ‘ என்று கேட்கிறாய்
கடைசிப் பார்வையாளரும் வந்தபிறகு
கடைசிக் கரிசனமும் கிடைத்தபிறகு
இனி ஒருநாள் தாமதித்தாலும் இந்த உலகம் நம்மை மறந்துவிடுமென உணர்ந்தபிறகு.
அன்னிய உடல்
….என் பழைய உடலில்
ஆயிரம் குறைபாடுகள் உண்டு
கடவுள் தன் வேலைப்பாடுகளில் மோசமான தவறிழைத்த
உடல் அது
ஆனால் அதை நான்
எனக்கான பிரபஞ்சமாக தகவமைத்துக்கொண்டேன் அங்கே நிலவுகள் பொழிந்தன சூரியன்கள் ஒளிர்ந்தன
இப்போதைய உடலுக்கு
என்னால் பொறுப்பேற்றுக்கொள்ள முடியவில்லை ….
திரை விலகும் காலம்
ஒரு சிறிய மனத்தாங்கலுக்காக நான் ரத்தம் சிந்துவதை மௌனமாக பார்த்துக் கொண்டே இருப்பீர்களா ?
ஒரு வருத்தத்தில் சொன்ன சொல்லுக்காக
நான் தவறி விழுகையில்
ஒரு கை தராமல்
அப்படியே போய் விடுவீர்களா?
ஒன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்காக
நான் அம்பு தைத்த பறவையாக விழுந்திருக்கும் காலத்தில் என்னை உங்கள் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளமாட்டீர்களா?
ஏதோ ஒன்றை மறுதளித்தேன் என்பதற்காக ஒருவன் உங்களுக்கு தந்த
ஆயிரம் நினைவுகளை மறுதலித்துவிடுவீர்களா ?
ஏதோ ஒன்றை பொறுப்பற்று நிர்பந்தித்தேன் என்பதற்காக
என் மீதான எல்லா பொறுப்பிலிருந்தும் உங்களை விடுவித்து கொள்வீர்களா?
உயிரையும் தருவேன் என்றவர்கள்
சொட்டும் ஒரே ஒரு மலரை மட்டும் தாருங்கள்
நோய்மையின் காலங்கள்
திரை விலகும் காலங்கள்
வருத்தம் ஒன்றும்மில்லை
என் கவிதையின் அன்பு
இந்த உலகை மாற்ற வில்லை என்பதை நினைக்கும் போது மனம் உடைந்து விடுகிறேன்.
இருள வைக்கும் காலம்
எப்படி மீண்டு வந்தோம்
என்ற வியப்பு தீருமுன்
ஏன் மீண்டு வந்தோம்
என இருளைவைக்கும்
காலமே
காயங்களில்
கண்ணீரின் உப்புப் பட்டால்
தீயாய் எரிகிறது.
வாதையின் கதை – மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 110
விலை ரூ 130
-தங்கமணி
தருமபுரி .