வாச்சாத்தி ஆவணப்படம்: அதிகார அடக்குமுறையை வென்றெடுத்த எளிய மக்களின் காவியம்
– நா.ஜெகன்
இந்திய வரலாற்றில் அரசு இயந்திரமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு, ஒரு குறிப்பிட்ட கிராமத்து மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட மிகக்கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஒன்று வாச்சாத்தி சம்பவம். தர்மபுரி மாவட்டம், சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள இந்தச் சிறிய கிராமம், இன்று நீதிக்கான உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது.
அந்த மூன்று கருப்பு நாட்கள் (ஜூன் 20, 21, 22 – 1992)…
சந்தன மரக்கடத்தலைத் தடுப்பதாகக் கூறி, 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த சுமார் 269 அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தனர். அடுத்த மூன்று நாட்களும் அக்கிராமம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.
மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களின் சேமிப்பு தானியங்கள் தரையில் கொட்டப்பட்டு பாழாக்கப்பட்டன. குடிநீர் கிணறுகளில் மாட்டுச் சாணமும், பூச்சிக்கொல்லியும் கலக்கப்பட்டு மக்கள் தாகத்திற்குக்கூட நீர் அருந்த முடியாமல் சித்திரவதை செய்யப்பட்டனர்.
ஆண்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பாராமல் அனைவரும் கொடூரமான முறையில் லத்திகளாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் மிகவும் இருண்ட பக்கம் 18 பழங்குடியினப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை. அரசு அதிகாரிகளால் ஒரு வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பெண்கள், அதிகார பலத்தால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் சிதைந்து போனாலும், “இழப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றுமில்லை” என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னும், அவர்கள் துணிச்சலுடன் உண்மையைச் சொல்ல முன்வந்தனர்.
அதிகாரிகள் தங்களின் குற்றத்தை மறைக்க, அந்த கிராமத்து மக்கள் மீது “சந்தனக் கட்டை கடத்தல்” மற்றும் “அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்” எனப் பொய் வழக்குகளைப் போட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாச்சாத்தி மக்கள் தனித்துவிடப்பட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அவர்களுக்குப் பக்கபலமாக நின்றன.
மக்களை வெறும் பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களைத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வீரர்களாக மாற்றியது இந்த இயக்கம்.
சி.பி.எம் மாநிலச்செயலாளர் தோழர் சண்முகம் அவர்கள் “அனைத்தையும் இழந்த மக்களின் மறுவாழ்விற்கு தோவையான பொருட்களை மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் உண்டியல் வசூல் செய்து லாரி நிறைய பொருட்களோடு ரூ.5000 தொகையும் தோழர் அ.சௌந்தரராஜன் தலைமையில் CITU தோழர்கள் அனுப்பி வைத்தனர்” எனப் பேசும் போது உடைந்து அழுவார். நம்மாலும் அக்காட்சியை கண்ணீர் இல்லாமல் கடக்க முடியாது.
19 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், சிபிஐ (CBI) விசாரணை கோரி உயர்நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றனர்.
2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவையே உலுக்கியது.
குற்றம் சாட்டப்பட்ட 269 அதிகாரிகளில் உயிரோடு இருந்த 215 பேருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வன்கொடுமை வழக்கில் 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று வாச்சாத்தி கிராமம் மற்ற கிராமங்களைப் போலவே அமைதியாகக் காட்சியளித்தாலும், அங்குள்ள ஒவ்வொரு கல்லும் மண்ணும் அந்த வலியின் சாட்சியாக இன்றும் இருக்கின்றன. அந்த மக்களின் சிரிப்புக்கு பின்னால் ஒரு நீண்ட காலப் போராட்டத்தின் வெற்றி ஒளிந்துள்ளது.
”எங்களுக்கு காவல் தெய்வம் சி.பி.எம் கட்சி தான், அவங்க எங்ககூட இருக்குறவர யாரும் எங்க கிட்ட வரமுடியாதுனு” வாச்சாத்தி மக்கள் பேசும் போது அவர்கள் முகத்தில் தோன்றும் நம்பிக்கையை எந்த வார்த்தையாழும் பதிவு செய்ய முடியாது.
வாச்சாத்தி சம்பவம் நமக்குக் கற்பிக்கும் பாடம் ஒன்றுதான் “அதிகாரம் என்பது மக்களைக் காக்கவே அன்றி, அவர்களை ஒடுக்க அல்ல.” மக்களின் ஒற்றுமையும், சரியான அரசியல் வழிகாட்டுதலும் இருந்தால், எப்பேர்ப்பட்ட அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தி நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கு வாச்சாத்தி ஒரு நிரந்தர உதாரணம்.
இப்படத்தை இவ்வளவு சிறப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் தயாரித்து வெளியிட்ட comrade Talkies குழுவினருக்கும்… இப்போராட்டத்தில் அதிகார வர்கத்திற்கு எதிராக துணிச்சலாக போராடிய அனைத்துத் தோழர்களுக்கும் ரெட் சல்யூட்…
📚 எழுதியவர்:
– நா.ஜெகன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

