Vaikai Nathi Nakarikam (வைகை நதி நாகரிகம்) - a historical book Written by S.Venkatesan (சு. வெங்கடேசன்) - Published by Vikatan - https://bookday.in/

வைகை நதி நாகரிகம் (Vaikai Nathi Nakarikam) – நூல் அறிமுகம்

வைகை நதி நாகரிகம் (Vaikai Nathi Nakarikam) – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல்  : வைகை நதி நாகரிகம்

ஆசிரியர் : சு. வெங்கடேசன்

வெளியீடு : விகடன்

பக்கங்கள் : 151

விலை : ரூ.210

பூமியில் கால் வைத்து நடக்கிறோம். பூமிக்குக் கீழே பல விஷயங்கள் புதைத்து உள்ளது. பானைகள், கல்வெட்டுகள், சிலைகள், நாணயங்கள் என தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் போது கூடவே ஒரு வரலாற்று திறப்பு ஏற்படுகிறது. அந்த வரலாறு நமது முன்னோர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும், வாழ்வியலையும் நமக்குப் புலப்படுத்துகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு இதுவரை நாம் வரையறுத்து வைத்து உள்ள காலவரிசையைக் கலைத்துப் பார்க்கிறது. காலவரிசையைத் திருத்தி எழுதச் சொல்கிறது. தென் கோடியில் ஒரு நகர நாகரிகம் செழுமையுடன் இருந்ததைச் சுவைப்படச் சொல்லும் நூல் தான் “வைகை நதி நாகரிகம்”

“ஒரு துலாக்கோளைக் கொண்டு வாருங்கள். அதன் ஒரு தட்டில் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்” என்கிறது பரிபாடல்.

அவ்வளவு வளங்களையும், பண்பாட்டையும், கலையையும், வணிகத்தையும், மக்கள் வாழ்க்கைத் தரத்தையும் தன்னகத்தே கொண்டு உள்ள நகரம் மதுரை.
ஜீவநதி அல்லாத வரும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்று தான் வைகை.

தேனூர் கருவேலமரத்தடியில் ஒரு புதையல் மண்ணிலிருந்து தானே வெளிப்பட்டது. ஏழு தங்கக்கட்டியில் தமிழ் பிராமியில் “கோதை” பெயர் தாங்கிய தங்கக் கட்டி.
எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி இந்தியாவில் முதன் முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.

உருவ வழிபாடு இல்லாத காலத்தில் கிடைத்த இந்த தங்கக்கட்டி கடவுள் பெயரையோ, அரசர் பெயரையோ குறிப்பவை அல்ல. காதல் நிமித்தமாக எழுதப்பட்ட அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

Vaikai Nathi Nakarikam (வைகை நதி நாகரிகம்) - a historical book Written by S.Venkatesan (சு. வெங்கடேசன்) - Published by Vikatan - https://bookday.in/

தங்கத்தைக் கையாளும் தொழில்நுட்பத்தை ரசவாதத்தையும் அறிந்த கலைப்படைப்பாளிகள் என ஒரு மேம்பட்ட சமூகமாக இருந்து உள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி கடைசியாக இருந்த வீடு, கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட நரிகள் என இலக்கியத்தில் உள்ள நிகழ்வுகளுக்கு தற்போது சான்றாக இருக்கும் “கடை சிலம்பு ஏந்தல்” ( கடச்சனேந்தல்), அந்தனேரி ஊர்களில் தற்போது நிற்கும் ஆசிரியர் கூறுகிறார். நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில் , நின்று கொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். இறந்தவர்கள் நினைவாக நடப்படும் “நடுகல்” வரலாற்று வீரக்கதைகளை சொல்கிறது.

ஏழு வகைப் போர்களிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவனின் நினைவாக நடுகல் அல்லது வீரக்கல்லை அமைத்தனர். தொல்காப்பியன் “ஒரு வீரனின் புகழை என்றென்றும் சுமந்து நிற்கப்போவதால் வலிமை மிகுந்த கல்லைத்தான் நடுகல்லாக நட வேண்டும். ஊருக்குப் பக்கத்தில் கிடக்கிறது என்பதால் எந்த கல்லையும் தூக்கி நட்டு விடக் கூடாது” என்கிறான்.

கால்நடைகளைக் கவர்ந்து வரும் போது நடக்கும் போரை “வெட்சி” என்றும், மீட்கும் போது நடக்கும் போரை “கரந்தை” என்றும் தமிழர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள். வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான்கோம்பை என்னும் ஊரில் வீரர் அந்துவன் பெயரில் நடுக்கல் கிடைத்தது.

பசுக்களைக் கவர்ந்து வரும் போது தாக்கப்பட்டு இறந்துபோன வீரன் “அந்துவன்” நினைவாக நடப்பட்ட வீரக்கல். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இந்தக் கல் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 2400 ஆண்டுகள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

Vaikai Nathi Nakarikam (வைகை நதி நாகரிகம்) - a historical book Written by S.Venkatesan (சு. வெங்கடேசன்) - Published by Vikatan - https://bookday.in/

பேரரசர்களின் ஸ்தூபி எழுப்புவதற்கு முன்னரே ஒரு வீரனுக்குச் சாமானிய மக்களால் நடப்பட்ட நடுக்கல் கல்வி, நாகரிகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நடுகல் என்பது வீரம், மொழி, வரலாறு, பண்பாடு எல்லாம் சம்பந்தப்பட்டது. நதியை படகால் கடந்து செல்வதைப்போல, காலத்தை, கல்லால் கடக்கும் முயற்சி
வரலாற்றுப் பெருமையைக் கையில் ஏந்தியபடி வடகரையில் கோதையும் தென்கரையில் அந்துவனும் நிற்கிறார்கள். இரண்டு கரைகளுக்கு இடையில் இருப்பது, நீரோடும் நதி அல்ல. நிலைகொண்ட நாகரிகம் என்பதை உலகுக்குச் சொல்லும் சாட்சியே இவர்கள்.

மண்ணுக்கு அடியில் ஒரு பானையின் ஓடு “அழகன் குளம்” பகுதியில் கிடைக்கிறது. ஒரு பானை ஓட்டின் மேல் ரோமானிய கப்பலின் கோட்டோவியம். வைகை கரையில் அமர்ந்து கடலில் வந்த கப்பலை ஒரு கோட்டோவியமாக வரைந்து கைவிடப்பட்ட பானை காலங்கள் தாண்டி வரலாறு சொல்ல வருகிறது.
வரைந்தது ஆணா? பெண்ணா?

கோடுகளின் வளைவுகள் நெகிழ்வுகள் கொண்டு அது பெண் என முடிவு செய்து கடல் கடந்து வணிகம் சென்ற கணவன், காதலன் நினைவாகப் பிரிவின் நிமித்தமாக வரைந்த ஓவியம் என முடிவு செய்கின்றனர்.

அசையும் கப்பலாக அவன் நினைவும், நங்கூரம் கிழிக்கும் அடி நிலமாக அவள் மனமும் எப்போதும் இருக்கின்றன. கால் நடையாகப் பொருள் தேடிச் செல்வதை “காலிற்பிரிவு” என்றும், கடல் கடந்து செல்வதை “கலத்திற்பிரிவு” என்றும் சொல்கிறது.

பிரிவுத் துயரில் இருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் சொல்கிறாள். ஆறுதலில் நந்தி அரசனின் செல்வச் செழிப்பையும் ஆட்சி அமைப்பையும் சொல்கிறாள்.
உலகையே தன் கைவசம் கொள்ளப் புறப்பட்ட அலெக்சாண்டர் நத்தி மன்னன் படைபலத்தையும் குறுக்கில் வந்த ஆற்றையும் அறிந்து பின் வாங்கினார்.
ஒரு அகத்திணை பாடலில் ஒரு புறத்திணை தகவல்களை ஒரு சாமானியன் வாய்வழி அறிய முடிகிறது.

பயணத்தைத் தூரம் கொண்டு அளவிட்டுச் சொல்வது விஞ்ஞானம். துயரம் கொண்டு அளவிட்டுச் சொல்வது இலக்கியம். விஞ்ஞானம், இடைவெளியின் நீளத்தை மட்டும் சொல்கிறது. இலக்கியம், இடைவெளியின் ஆழத்தை, கனத்தை அதன் மொத்தப் பரிமாணத்தையும் சொல்கிறது.

நம்முடைய இலக்கியத்தில் உள்ளது மிகப்பட்ட கற்பனைகள், வர்ணனைகள் என்று எண்ணிப் புறந்தள்ளாமல் இருக்க வேண்டும்.அதற்கான வரலாற்று ஆவணங்கள் வெளிநாட்டில் இன்றும் உள்ளன.

அழிந்த ஒரு யுகத்தினுடைய அறிவுச்செல்வத்தை, அடுத்த யுகத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பது தான் கலை இலக்கியத்தின் சக்தி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வாக்கியத்திற்கு இணங்க கடல் காற்றையும் கப்பலையும் கொண்டு ஒரு பெரும் வணிகம் தென்தமிழகத்திலிருந்து ரோமாபுரிக்கு நடந்து உள்ள.

பெயர் இல்லாத ஓர் அரிய கையெழுத்துச் சுவடி, ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ளது. ரோமானிய நாட்டு வணிகனுக்கும், தமிழகத்து வணிகனுக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் அது ஹிப்பாலஸ் பருவக்காற்றைப் பயன்படுத்தி முசிறியிலிருந்து கப்பல்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செங்கடல் துறைமுகத்தை 40 நாட்களில் சென்று அமைந்திருக்கின்றன. அரபிக்கடலில் வீசும் பருவக்காற்றைப் பயன்படுத்தி நிகழ்ந்த பயணமாக இது இருந்துள்ளது.

காலம் எல்லாவற்றையும் அழித்தாலும், நினைவுகளின் ஓரத்தின் வழியே மனிதன் ஒரு கிளை நதியை உருவாக்கி புதிய நிலத்துக்கு வந்து பழைய விதைகளை நட்டு விடுகிறான். வடக்குக்கும் தெற்குக்குமான இணைப்பு என்பதைவிட, வலிமை மிகுந்த இரு நாகரிகத்துக்கான இணைப்பாகத்தான் இது இருந்துள்ளது.
வரலாறு எனும் விசித்திரத்தை, அது விட்டுச்சென்ற காலடித் தடத்திலிருந்து மட்டுமே நாம் அனுமானிக்க முடியும். அது நிலத்தில் பதிந்துள்ள காலடித் தடம் கூட அல்ல. காலத்தில் பதிந்துள்ள காலடித் தடம்.

Vaikai Nathi Nakarikam (வைகை நதி நாகரிகம்) - a historical book Written by S.Venkatesan (சு. வெங்கடேசன்) - Published by Vikatan - https://bookday.in/

ரோமானியர்கள் தங்கத்தால் தங்களை அலங்கரிக்கக் கொள்ள விருப்பம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தென் தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் கஜானா இதனால் குறைந்தது. விழிப்புடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள் என அரசவையில் அறிவுரை கூறினார்கள். இது அரசர் உடைய செல்வம் அல்லாமல் ஒரு தனி வணிகர் உடைய செல்வம் என நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது.

எல்லா காலத்திலும் பண்பாடு, வணிகத்தைப் பின்தொடர்ந்து வந்துசேரும். மதுரை யவனர்களின் கூடாரமாக இருந்தது. வீரர்கள், அரசர் மனைவி, அவர்களுக்குச் சேவை செய்பவர்கள் எனப் பரவலாக இருந்தனர்.

இந்தியாவில் இதுவரை 129 இடங்களில் ரோமானிய நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 90 சதவிகிதம் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் செய்ததும் செய்ய வேண்டியதும்:

கீழடியில் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் 43 அகழாய்வுக் குழிகளைத் தோண்டி 5300 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு நகர நாகரிகம் செழித்து இருந்ததற்கான சான்றுகள்.

ஆனால் கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் இரண்டு மட்டுமே. மற்ற மாநிலங்களில் நடத்தப்படும் அகழாய்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கீழடிக்குத் தரப்படவில்லை. இதிகாசங்களில் இருக்கும் தடங்களைத் தேடி வரலாற்றை நிறுவ மற்ற மாநிலங்களில் நிதியும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.

ஆனால் சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புடைய கீழடி அகழாய்வுக்கு ஏன் முன்னுரிமை முக்கியத்துவம் தர மறுக்கிறார்கள்? இதன் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை அறிந்து வரலாற்றை மீட்கப் போராட வேண்டும்.

பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாடிக் கட்டிடங்கள் எழுப்பி விட்டது. பல கல்வெட்டுகள் பாலங்கள் கட்ட பயன்படுகிறது. நாம் தொல்பொருட்கள் பற்றி போதிய விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இல்லை என்றால் அகழ்வாய்வைச் சரியாக நடத்தாமல் மூடத் தான் முனைவார்கள்.

சிந்து சமவெளி நாகரிகம், ஒரு திராவிடப் பண்பாடு… திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டு நெருங்கிய தொடர்பு கொண்டது
அகழாய்வுக்கான ஒரு பொக்கிஷம் கீழடி. இந்த இடத்தை நாம் பாதுகாப்பதும் தொடர்ந்து இங்கு அகழாய்வுப் பணிகள் நடப்பதை உறுதிசெய்வதும் இன்று தமிழக அறிவுச் சமூகம் முன்னெடுக்கவேண்டிய கடமை.

எதிர்காலத் தலைமுறையினரிடம் உரையாடும் ஆற்றல் கொண்ட மானுட எச்சம். மூதாதையர்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஒருங்கே சுமந்து நிற்கும் சாட்சி. நாகரிகத்தின் பிடி மண்.

 

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

பிரியா புரட்சிமணி

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *