(ராம்)வசந்த மொழிகள்
மனிதனாய் மட்டுமல்ல வணிகனாய் வெல்ல வேண்டுமாயினும் அறத்தின்பால் நிற்க வேண்டும் எனும் சூட்சுமத்தை ‘ வணிகத்தலைமை கொள்’
மூலமாக வலியுறுத்துகிறார் ராம் வசந்த்.
முதல் தொழில் முயற்சியைப் போன்றே தனது முதல் புத்தக முயற்சியையும் லாவகமாக கையாண்டுள்ளார். உராய்வில்லாத ஆனால் செறிவுமிக்க உத்வேகம் அளித்து ஒரே மூச்சில் படிக்கச் செய்யும் உத்தியை அம்சமாக கைவரப் பெற்றுள்ளார்.
பெரும்பாலான ‘தன்னம்பிக்கை புத்தகங்கள்’ போன்று ‘ வளவளா கொழகொழா என்றில்லாமல் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டென’ தனது தொழில் அனுபவங்களை முன்னிருத்தி வணிக உத்திகளை வடிவமைத்து தந்திருக்கின்ற பாங்கு சிறப்பான பலனை அளித்திருக்கின்றது.
அரசுப்பணியில் இருக்கும் நமக்கு இந்த புத்தகத்தில் என்ன கிடைத்துவிடப் போகிறதென்று அசட்டையாக ஆரம்பித்த வாசிப்பு அற்புதமான அனுபவத்தோடு முடிந்தது. வாசிப்பின் முடிவில் இது வணிகவியலோடு வாழ்வியல் புத்தகமுமாய் இருப்பதையும் உணரமுடிந்தது.
அதற்கு இப்பத்தகத்திலிருந்து எனக்கு கிடைத்த பின்வரும் பொன்மொழிகளே சான்று.(உண்மையிலேயே முலாம் பூசப்படாத ஹால்மார்க் பொன்மொழிகள்)
“தெரியாததைத் தெரியாதென்று சொல்வதும் ஒரு சரியான விடை!!!”
“கேள்விகளை பயமின்றி எதிர்கொள்.
உலகம் உன்னுடையது…”
“சவுகர்ய நிலையைத் துறந்து வெளிவருபவனே எல்லாவற்றையும் மாற்றுகிறான்.”
“பயங்களை விட்டொழிக்க ஒரே வழி எந்தச் சூழலுக்கு நாம் பயப்படுகிறோமோ அந்தச் சூழலைத் தவிர்க்காமல் நாமே வலிந்து உருவாக்கிக் கொள்வது தான்!!”
இத்தகைய வாழ்வியல் வழிகாட்டுதல்கள் புத்தகம் முழுதும் விரவிக் கிடக்கின்றன.
ஆக
வணிகத்தலைமை கொள்ள விழைபவர்க்கு மட்டுமின்றி வையத்தலைமை, குடும்பத்தலைமை கொள்ள பிரயத்னப்படுபவர்க்கும் ஏற்ற கோனார் உரையாக கிடைக்கின்றது
‘ வணிகத் தலைமை கொள்’.
வணிகத்தில் வெற்றி பெற வரவு செலவு லாபம் நட்டம் அனைத்தையும் ஆவணப்படுத்த வற்புறுத்தும் ராம் வசந்த் தனது வணிக முயற்சிகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளார் என்பது வெளிப்படை.
விகடன் பிரசுரமாய் தரமான புத்தகமாய் வெளியாகியுள்ள இப்படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டால் சர்வதேச அந்தஸ்தை எட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அ.சீனிவாசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

