ஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ்
திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது.
பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான் பாமக. அப்படியான அந்தக் கட்சி பெயரளவில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களை போட்டுக் கொண்டு, சமூகநீதி பேசுவது போல போக்கு காட்டிவிட்டு, சனாதனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் குறியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கொள்கை – கோட்பாடு – நம்பகத்தன்மை இப்படி எந்த ஒன்றும் தேவையில்லை, வாக்குகள் மட்டுமே ஒற்றைக் குறிக்கோள் என்று தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தியாய் தாவும் ஒரு கட்சி இருக்கிறதென்றால், அது பாமகதான். டாக்டர் ராமதாஸ் கடந்த காலங்களில் ‘சத்தியம்’ செய்து சொன்னவற்றை எல்லாம் ஏட்டில் எழுதிடவும் முடியாது. ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேள்வியும் கேட்கமுடியாது.
“தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சியின் பதவிக்கு வரமாட்டார்கள். சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் எனது குடும்பத்தினர்கள் கால் வைக்கமாட்டார்கள். எனது கட்சி உறுப்பினர்கள் ஊழல் செய்தால் நடுரோட்டில் சவுக்கால் அடியுங்கள்; இது சத்தியம், சத்தியம்” என்று மேடை மேடையாக பேசி எல்லோரையும் ஏமாற்றினார். அப்படி சொன்னவற்றை அவரே மீறியதற்காக அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதும் இல்லை. வருத்தம் தெரிவித்ததும் இல்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிய மக்களையும் கட்சிகளையும் ஏமாற்றுவதையே ஒரு தொழிலாக கொண்டிருப்பவர் ராமதாஸ் அவர்கள்.
சாதிச் சங்கத்தை, பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி 1991ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார் ராமதாஸ். 199 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரே இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவுடனயே பண்ருட்டி ராமச்சந்திரன், “ராமதாஸ் ஒரு ஏமாற்றுப் பேர்வழி” என்று குற்றம் சுமத்திவிட்டு வெளியேறினார். பின்னர், ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற அமைப்பை துவங்கினார்.
1996ஆம் ஆண்டிலிருந்தே தொகுதிப் பேரங்களுக்கான ‘தொழிலை’ ராமதாஸ் ஆரம்பித்தார். திமுக கூட்டணியில் த.மா.க., ஆர்.எம்.வீரப்பன் அணி, இந்திய தேசிய லீக், மக்கள் நல உரிமைக் கழகம் ஆகிய கட்சிகளோடு பாமகவும் இடம் பெறும் என்று ராமதாஸ் அறிவித்து தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆனால், தனது ‘பிளாக்மெயில்’ அங்கு எடுபடவில்லை.
உடனே மதிமுகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவங்கினார் ராமதாஸ். அங்கு இரண்டு பிரச்னைகள் உருவானது. முதலில் வழக்கமான தொகுதிகள் பங்கீடு, அடுத்த பிரச்னை மதிமுக கூட்டணி என்பதை மாற்றி ‘மதிமுக – பாமக கூட்டணி’ என்று அறிவிக்கவேண்டும் என்று ராமதாஸ் மிரட்ட ஆரம்பித்தார். அதுவும் அங்கு எடுபடவில்லை. 116 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டது. நான்கே தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்குகளில் வெற்றிபெற்றது. அதற்கடுத்த தேர்தல்களில் அதிமுக, திமுக என்று மாறிமாறி வெற்றிபெறுகிற கூட்டணியை தேடிப்போய் இணைத்துக் கொண்டார் ராமதாஸ். பாமக சேருகிற அணி வெற்றிபெறும் என்ற ‘மாயை’யை உருவாக்க முனைந்தார். ஆனால், அது எடுபடவில்லை.
2009 ஆம் ஆண்டோடு பாமகவின் கூட்டணி நாடகம் முடிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாசக, மதிமுக அணி தோல்வியடைந்தது. காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள் அணி வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் ராமதாஸ் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து, அன்புமணியை அமைச்சராக்கினார். காங்கிரஸ் ஆட்சி முடிந்ததும் 2014இல் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்தது. திமுகவும் அதிமுகவும் பா.ம.க.வின் சந்தர்ப்பவாதத்தை புரிந்துகொண்டது. வேறு வழியில்லாமல் திணறினார் ராமதாஸ். அப்போது, அவர் மீண்டும் சாதிவெறியை கையில் எடுத்தார். நவம்வர் 7, 2012 அன்று தருமபுரி – நத்தம் சேரிகளை எரித்து, இளவரசனை படுகொலை செய்து ‘கலவர’ அரசியலை மீண்டும் துவங்கினார்.
ராமதாசின் மாமல்லபுரம் பேச்சுக்களும் மாநாடுகளும் தரம் தாழ்ந்து போயின. முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன் ஆகியோரை மிகமிக கேவலமாக – அநாகரீகமாக, திட்டினார். அரசியல் தோல்வியால் விரக்தியின் விளிம்பில் நின்று பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். (ஒவ்வொரு மாமல்லபுரம் மாநாட்டின் போதும் மது வியாபாரம் பல கோடிகளை தாண்டியதாக ‘டாஸ்மாக்’ நிர்வாகம் பெருமைபட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது) தருமபுரி கலவரத்தின் தொடர்ச்சியாக, தலித்துகளுக்கு எதிராக 64 சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சாதிக் கலவரத்தை பற்றவைக்க முயற்சித்தார். ‘நான் பிராமின்’ இயக்கத்தை போல ‘நான் தலித்’ இயக்கத்தைக் கட்டமைக்க படாதபாடுபட்டடார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவை ‘தெருச் சண்டைக்கு’ இழுப்பது போல் இழுத்தார். அதன் விளைவு ராமதாஸ் கைது செய்யப்பட்டார். விடுதலை வேண்டி தமது மனைவியை அனுப்பி மண்டியிட்டார். (இதற்கு முன்பே கலைஞரிடம் அவரது மனைவியை அனுப்பி மன்னிப்பு கேட்டது வேறுகதை) விடுதலையானதும் “சிறையிலேயே இறந்திருப்பேன் என்னை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று புலம்பினார். சிறைப்படுத்தியபோது வட தமிழகத்தின் பல இடங்களில் பேருந்துகளை எரித்து கலவரம் செய்தது பாமக. அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில், “வன்முறை செய்த பாமகவிடம் தான் இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்வோம்” என்று அறிவித்தார்.
ராமதாஸ் ஒரு வன்முறையாளர் என்பதை புரிந்துகொண்டு தான் 1992ஆம் ஆண்டு “பாமக ஒரு வன்முறைக் கட்சி என்றும், அக்கட்சியை தடை செய்ய வேண்டும்” என்றும் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் குறித்து பின்னாளில் (சனவரி 21, 2014) திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்வி-பதில் அறிக்கையில் அம்பலப்படுத்தினார். இப்படி சர்தர்ப்பவாதத்தை மட்டுமே மூலதனமாக வைத்து ஒரு கால் நூற்றாண்டு காலத்திற்கு மேல் தமிழக அரசியலையே கேலிக்கூத்தாக்கி வருகிறவர் மருத்துவர் ராமதாஸ்.
2014ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே “தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லை” என்று உதார்விட்டனர் தந்தையும் மகனும். பிப்ரவரி 10, 2014 அன்று மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை ஒழிக்கவேண்டும். அதற்கான மாற்றுத் திட்டங்களை, நாங்கள் வைத்துள்ளோம். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் சேரமாட்டோம்” என்றார் ராமதாஸ்.
இந்த அறிக்கைவிடுத்த பத்து நாட்களில் மதிமுக, தேமுதிக, பாசகவுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்தார் ராமதாசு. தமது அன்பு மகனை அரியணையில் ஏற்றுவதற்கு தான் தருமபுரி சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது பின்னாளில் உறுதி செய்யப்பட்டது.
2016ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற மாய்மாலத்தை விளம்பரம் ஆக்கியது பா.ம.க. முதல்வர் வேட்பாளராக கட்டி இறக்கிவிடப்பட்டார் அன்புமணி. பாவம் அவர் திருவிழாவுக்குள் நுழைந்த குழந்தையை போல ஓட ஆரம்பித்தார். ‘நான் முதல்வர் ஆனால்…’ என்று பள்ளிக் குழந்தையின் பேச்சைப் போல மேடை மேடையாக ஒப்புவித்துக் கொண்டிருந்தார்.
அப்போதும் அன்புமணி, “நூறு சதவீதமல்ல, நூத்தி ஓரு சதவீதம். திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி இல்லை. கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்தற்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஊடகங்களிடம் பேட்டியளித்தார்.
தந்தையும் மகனும் நினைத்தவற்றை எல்லாம் ‘சவடால்’ விடுகிற பாணியில் பேசி வந்தனர். ஆனால், இவர்களின் பேச்சை யாருமே பொருட்படுத்தவில்லை. ‘சாதிவெறி’ என்கிற இமேஜை மாற்றுவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவது, இடம் ஒதுக்குவது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் மாட்டினார் அன்புமணி. சிபிஐ அன்புமணி மீது வழக்கு பதிவு செய்தது. “அடிப்படை முகாந்திரம் இல்லையென்றும் தன்னை விடுவிக்க வேண்டும்” என்றும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி மன்றாடினார். சி.பி.ஐ. ஆதாரத்தை தாக்கல் செய்தது. நீதிமன்றமே விடமறுத்தது. அப்படி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அன்புமணி தான் கடந்த டிசம்பர் 9, 2017ஆம் தேதி தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் ஒன்றை ஆளுநர் பன்வரிலால் அவர்களிடம் கொடுத்தார். அதிமுக அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று 15 பக்க அறிக்கையாக கொடுத்தார்.
திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டை சீரழித்துவிட்டன என்றும் இது குறித்து என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று திராவிடக் கட்சிகளுக்கு அன்புமணி சவால் விட்டார்.
இப்படி திமுக, அதிமுக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன என்றும் பா.ம.க. மட்டுமே தமிழகத்தை காப்பாற்றப் போகிற கட்சி என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த பா.ம.க. இப்போது, அதிமுகவிடம் மண்டியிட்டது.
ஜெயலலிதாவும், கலைஞரும் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பாமகவை தனிமைப்படுத்தவே முயற்சித்தனர். யாரும் கூட்டணியில் சேர்க்கவே தயங்கினர். நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல என்றும், தமிழக அரசியலில் பெரும் தீங்கான சக்தி என்பதையும் தெரிந்து கொண்டுதான் காய் நகர்த்தினார்கள்.
ஆனால், ‘அம்மாவின் ஆட்சி’ ‘அம்மாவின் ஆட்சி’ என்று வாய்க்கு வாய் பெருமைப்பட்டுக்கொள்கிறது எடப்பாடி-ஓபிஎஸ் அரசு. பாமகவோ, “ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்ற குற்றவாளியான ஜெயலலிதா படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கூடாது” என்று கடந்த 17, பிப்ரவரி 2017 அன்று வழக்கு தொடுத்தது. அது மட்டுமல்ல, ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை’ முடக்கவேண்டும், மற்றும் ஜெயலலிதா படங்களை அரசு செலவில் விளம்பரமாக வெளியிடக்கூடாது என்றும் அதிமுகவுக்கு எதிராக தீவிரமாக வழக்கு தொடுத்தது பா.ம.க.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ‘வன்முறை முகம் கொண்ட தீயசக்தி’ என்று அடையாளம் காட்டப்பட்ட ராமதாசை அதிமுக கூட்டணியில் சேர்த்தது ஜெயலலிதா அம்மையாருக்கு செய்யும் துரோகமே! தமிழக அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தியான பாமகவை தனிமைப்படுத்துவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
-வன்னி அரசு
குச்சிகொளுத்தி ராமதாசுக்கு வன்முறையைக் கண்டிக்க அருகதை உண்டா?
சாத்தான் வேதம் ஓதுகிறது அல்லது ஓர் ஓநாய் வன்முறைக்கு எதிராக அகிம்சை பேசுகிறது என்றால் யாராவது நம்புவார்களா? . தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து வழி நெடுக வன்முறையின்மூலமும் அநாகரிகத்தின் உச்சத்தின்மூலமும் தமிழக அரசியலை மோசமான பாதைக்கு நகர்த்திச் சென்ற மிகப் பெரிய வன்முறையாளர் பா.ம.க. இராமதாசு, இப்போது அமைதியைப் பற்றியும் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும் பேசுகிறார். நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிறார். இதெல்லாம் தமிழக அரசியலுக்கு நேர்ந்த அவலம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையறாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி தமிழகம் முழுக்க அதிமுகவினரால் போராட்டங்களும் ஆங்காங்கே பேருந்து உடைப்புகளும் எரிப்புகளும் நடந்தேறின. இச்செயல்கள் ஏற்கக்கூடியவையல்ல. தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்காலும், விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் நடந்தேறிய செயல்கள். இவற்றை முன்வைத்துத்தான் பா.ம.க. இராமதாசு நாளொரு அறிக்கையின் மூலம் அதிமுகவை மிரட்டிக்கொண்டிருக்கிறார். வன்முறையின் ஒட்டுமொத்த உருவமான, அநாகரிகத்தின் மறு வடிவமான, பிற்போக்குத்தனத்தின் புதிய வடிவமான இராமதாசுக்கு வன்முறை குறித்தோ, அமைதி குறித்தோ பேசுவதற்கு எதாவது அருகதை உண்டா? அவருடைய கடந்த கால வன்முறை வெறியாட்டத்தின் பட்டியலைப் பார்த்தாலே அவரது யோக்கியதை புரியும்.
வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு, 1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கூலிப்படையினர் தப்பித்துக்கொள்ள, பொய் வழக்கில் அன்றைய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும் பலிகடா ஆக்கப்பட்டனர்.
பா.ம.க.வில் தனித்துவமாக வளர்ந்த பேராசிரியர் தீரனை 1998ஆம் ஆண்டு இராமதாசு நீக்கினார். நீக்கப்பட்ட தீரன் ‘தமிழ் பா.ம.க.’ என்கிற கட்சியை உருவாக்கி ஊர் ஊராய் இராமதாசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். ஆத்திரமடைந்த இராமதாசு தமது கட்சியின் அப்பாவி இளைஞர்களைத் தூண்டி விட்டதன் விளைவு, ஆண்டிமடத்திற்குப் போகும்போது இரும்புலிகுறிச்சி அருகே பேராசிரியர் தீரன் அவர்களின் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய இரும்புலிகுறிச்சியின் பா.ம.க. பொறுப்பாளர் தமிழ்ஒளி வழக்குச் செலவுக்காக தைலாபுரம் தோட்டத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். நாயை விரட்டுவதுபோல் விரட்டியடித்தனர் இராமதாசு குடும்பத்தினர். “இராமதாசு என்னை நயவஞ்சகமாகத் தூண்டிவிட்டார். அதற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்” என்று பின்னாளில் பேராசிரியர் தீரனிடமே உதவி வேண்டி நின்றார் தமிழ் ஒளி.
1999ஆம் ஆண்டு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் வன்னியர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வன்னிய மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராமதாசு அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு விழுப்புரம் அருகே வாழப்பாடி இராமமூர்த்தியின் காரை வழிமறித்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் வாழப்பாடியார் தப்பித்தாலும் பலர் காயமடைந்தார்கள். ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தியின் மீதான வன்முறைத் தாக்குதல் அவர் மறையும் வரை நின்றபாடில்லை.
வன்னியர் சங்கத்தை உருவாக்கியதோடு, பா.ம.க. என்கிற அரசியல் கட்சியையும் உருவாக்க உறுதுணையாய் இருந்த பு.த.அருள்மொழி, பு.த.இளங்கோவன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல். பா.ம.க.விலிருந்து பண்ருட்டி இராமச்சந்திரன் விலகியவுடன் அவரது அசோக் நகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு. முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீரவன்னியர் பேரவை நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பேரவையைக் கலைக்கும்படி மிரட்டினார் இராமதாசு. அதற்கு அஞ்சாத ஜெகத்ரட்சகன் தொடர்ந்து வன்னியர் பேரவை நடத்தி வந்தபோது ஜெகத்ரட்சகனின் சம்மந்தி டெல்டா நாராயணசாமியை குடும்பத்துடன் கடத்திக்கொண்டுபோய் மிரட்டியதன் விளைவாக வீரவன்னியர் பேரவை கலைக்கப்பட்டு அவரும் திமுகவில் போய்ச் சேர்ந்தார்.
இப்படி வன்முறை வெறியாட்டத்தின் மூலம் அரசியலைத் தொடர்ந்த இராமதாசு கொலைவெறியாட்டத்தையும் நிகழ்த்தியுள்ளார். பா.ம.க.விலிருந்து விலகிய பண்ருட்டி இராமச்சந்திரன் ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். பா.ம.க.விலிருந்து விலகி பலர் பண்ருட்டியாரின் கழகத்தில் இணைந்தனர். அப்படி இணைந்த கரவொலி கதிரவன் என்பவர் மிகத் தீவிரமாக இராமதாசின் சுயநல வெறியை மேடைகளிலும் துண்டறிக்கைகள் மூலமும் அம்பலப்படுத்தினார். மக்கள் நல உரிமைக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த கரவொலி கதிரவன் திடீரென லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இராமதாசின் இயக்கத்தால் நடைபெற்ற இந்தக் கொலையை, பின்னாளில் விபத்து என்று வழக்கை முடித்தார்கள்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் திண்டிவனம் பகுதியில் இராமதாசு குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாயிருந்தார். இதைப் பொறுக்க முடியாத இராமதாசு சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய பா.ம.க.வின் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டார். இராமதாசின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை. ஆனாலும் கொலைவெறி தலைக்கேறிய இராமதாசு தனது மனைவி சரஸ்வதியின் சகோதரர் இராமச்சந்திரனின் இளைய மகன் ரகுவை (புதுச்சேரி அனந்தராமனின் தம்பி) கொம்பு சீவிவிட்டார். “கட்சியில் உனக்குப் பெரிய இடம் இருக்கு. முக்கியப் பொறுப்புக்கு வரப்போகிறாய்” என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டவே ரகு தயாரானார்.
2006ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சி.வி. சண்முகம் அலுவலகத்துக்குள்ளேயே கொலைவெறியுடன் கும்பல் ஒன்று புகுந்தது. சண்முகம் எங்கே என்று அரிவாளுடன் தேடியபோது, சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் அவர்களைத் தடுக்க அக்கொலைவெறிக் கும்பல் முருகானந்தத்தை வெட்டிக் கொன்றுவிட்டு சண்முகத்தைத் தேடியது. சண்முகம் தப்பித்து ஓடிவிட்டார். இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டிருப்பார். முருகானந்தம் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இராமதாசு இரண்டாவது குற்றவாளியாக அன்புமணி, மூன்றாவது குற்றவாளியாக சரஸ்வதி, நான்காவது குற்றவாளியாக இராமதாசின் தம்பி சீனிவாச கவுண்டர் என்று இராமதாசின் குடும்பத்தினர் பதினொரு பேர் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நின்றார்கள்.
இவ்வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த ரகு அடிக்கடி தைலாபுரம் சென்று, “நீங்கபாட்டுக்கு கொலை செய்யச் சொல்லிட்டுப் போயிட்டீங்க… யாரு கோர்ட்டுக்கு செலவு பண்ணுவாங்க? என்று செலவுக்கான தொகையைக் கேட்க ஆரம்பித்தார். “அதெல்லாம் இல்ல… வெளிய போடா..” என்று இராமதாசும் அவரது மனைவியும் விரட்டியடிக்க “அப்படியென்றால் நான் அப்ரூவராக மாறி போலீசில் எல்லா உண்மையையும் சொல்வேன்” என்று ரகு சொன்னதும் பயந்துபோன இராமதாசு அப்போதைக்கு பேசி ரகுவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஓரிரு நாளில் ரகு தர்பூசணித் தோட்டத்தில் இரவில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையின் கருணையால், வழக்கம்போல் தற்கொலை வழக்காக முடித்தனர்.
பா.ம.க.வில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று தனித்துவமாக வளர்ந்துவந்த பண்ருட்டி வேல்முருகனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டிருந்தார் இராமதாசு. 2011 தேர்தலில் பா.ம.க. படுதோல்வியைச் சந்தித்த பின் வேல்முருகன் அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். வேல்முருகனும் ஞாயம் கேட்டு ஊர் ஊராய் இளைஞர்களை அணிதிரட்டினார். இளைஞர்களும் பெருமளவில் வேல்முருகன் அவர்களின் பின்னால் திரண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இராமதாசு வழக்கம்போல் தனது கொலைவெறித் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக காடுவெட்டி அருகே போய்க்கொண்டிருந்தபோது காடுவெட்டி குருவின் ரவுடிக் கும்பல் வேல்முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர்.
இப்படி ஒரு ரவுடியைப் போல கொலைகளையும் கொலை முயற்சிகளையும் இராமதாசு நடத்தியது வேறு இனத்தவர் மீதல்ல. எந்தச் சமூகத்திற்கு உழைப்பதாகச் சொல்லி கட்சியைத் தொடங்கினாரோ, அந்த சொந்த வன்னிய சமூகத்தினர் மீதுதான் இவ்வளவு கொலைவெறியாட்டத்தையும் நடத்தினார். பா.ம.க.வின் மாணவரணியின் பொறுப்பாளராக இருந்த அறிவுச்செல்வன் கார் விபத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. இது விபத்தல்ல, கொலைதான் என்று அறிவுச்செல்வனின் தந்தை சொன்னதோடு இராமதாசுக்கு எதிராக 16 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் ஒட்டுமொத்த வன்னிய மக்களின் மனசாட்சியாய் இராமதாசின் முன் நிற்கின்றன.
சொந்த மக்களையே தன்னுடைய குடும்ப வளர்ச்சிக்காகப் பலி கொடுத்துவரும் இராமதாசு அப்பாவி தலித் மக்களை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா?
தலித்துகளின் தலைநிமிர்வுக்காகக் களமாடிவரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது பல முறை, பல்வேறு இடங்களில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார் இராமதாசு. அத்தாக்குதலையெல்லாம் சிறுத்தைகள் முறியடித்தன. ஆனாலும் எத்தனையோ தலித் இளைஞர்கள் இராமதாசின் சாதிவெறியால் கொல்லப்பட்டனர். தர்மபுரி சேரி மட்டுமல்ல பெரம்பலூர், ஒகளூர் சேரி மட்டுமல்ல வட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மரக்காணம் கலவரம்
காதல் நாடகம், சாதி கவுரவம் என்று தலித்துகளுக்கு எதிராகப் பல சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். காதலித்துத் திருமணம் செய்துகொண்டு தனது காதல் மனைவியோடு வாழ்ந்த இளவரசனையும் திவ்யாவையும் பிரித்ததோடு இளவரசனைக் கொலை செய்துவிட்டு தனது சாதிய தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.
இவையெல்லாம் இராமதாசின் கொலைவெறி, வன்முறை அரசியலுக்கு எடுத்துக்காட்டுகள். (தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துச் சொல்வதென்றால் அதற்குத் தனியாக ஒரு புத்தகமே போடலாம்)
தி.மு.க. தலைவர் கலைஞருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு செய்தியாளரிடம் பேசிய இராமதாசு, “கலைஞர் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர், அந்த நாகரிகம் பாராட்டுக்குரியது” என்று சொன்னார். கலைஞர் நாகரிகமானவர்தான். ஆனால் இராமதாசு நாகரிகமானவரா? தருமபுரி கலவரத்திற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களை இப்பவும் ‘யூ டியூப்’பில் பார்க்கலாம் அவரது நாகரிகத்தின் லட்சணத்தை (இணைக்கப்பட்டுள்ளது: குச்சிகொளுத்தி ராமதாசின் சாதி வெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதி வெறி பேச்சு). ஆசிரியர் கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரை அவன், இவன் என்று ஒருமையில் பேசியதும், முதுபெரும் அரசியல்வாதியான, கலைஞரை மேளம் அடிக்கிற பயல், சாதிகெட்ட பயல், அவன் கூட இருந்தால் கட்டியிருக்கிற வேட்டியக்கூட உருவிடுவான் என்று பேசியதும்தான் நாகரிக அரசியல் பண்பாடா?
பா.ம.க. தொடங்கியதிலிருந்து இராமதாசின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்த்தால், முன்னுக்குப்பின் முரணாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். தனது குடும்பத்திலிருந்து மகனோ வேறு யாருமோ அரசியலுக்கு வரவே மாட்டார்கள் என்று சத்தியம் செய்த இராமதாசுதான் இப்போது அதே அன்பு புத்திரனுக்காகக் கேவலமான அரசியல் செய்து வருகிறார். திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு வெட்கமே இல்லாமல் அவர்களின் கூட்டணிக்காக நாக்குத் தொங்க அலைகிற நாயாக மாறிவருவது அரசியல் நாகரிகமா?
பேசுகிற இடங்களிலெல்லாம் வன்முறையைத் தூண்டி விடுவதும், தமிழர்களாய் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்க வேண்டிய வன்னிய சமூகத்திற்கு சாதிவெறி ஊட்டி தவறாக வழிகாட்டுவதுதான் நாகரிகமா? சொந்தச் சமூகத்தை நாகரிக உலகத்திற்கு அழைத்துச் செல்லாமல் கற்காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான் வழிகாட்டும் அரசியல் தலைவரின் நாகரிகமா?
வன்னிய மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் இராமதாசு அந்த மக்களுக்குச் செய்தது என்ன என்று அவரது மனசாட்சியைக் கேட்டாலே தெரியும். அவர் அரசியலில் நுழைந்த காலத்தில் ‘டி.எஸ்.இ. 1819’ என்கிற ஓட்டை அம்பாசிடர் காரில்தான் சுற்றினார். இன்றைக்கு அவரது நிலை என்ன? மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என ஒவ்வொருவருக்கும் பல கோடி மதிப்புள்ள சொகுசுக் கார்கள். ஒன்றரை ஏக்கர் நிலத்தை வைத்திருந்த இராமதாசுக்கு இன்றைக்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தைலாபுரம் பண்ணை; ஏற்காட்டிலும் ஏலகிரியிலும் 1000 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுகள்; திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள், கோடம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகை விஜயசாந்தியின் வீட்டை விலைக்கு வாங்கி மூத்த மகள் காந்திக்குக் கொடுத்தது, ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி இளைய மகள் கவிதாவுக்குக் கொடுத்தது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பங்களாக்கள் என்று சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு தன் சொந்த சாதி மக்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறாரா? பசியைத் தீர்த்திருக்கிறாரா? வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு ஜெயலலிதாவின் வழக்குகளைப் பேசுவது காமெடியாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் கைதை ஒட்டி அதிமுகவினர் ஆங்காங்கே செய்துவரும் வன்முறைகளை ஒப்பீட்டளவில் பார்த்தால் சாதாரணம்தான். மாமல்லபுரத்தில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பேசிய பிறகு இராமதாசு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதையொட்டி நடந்த வன்முறைகளோடு, வெடிகுண்டு வீச்சுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவினரின் போராட்டங்கள் மிகமிகச் சாதாரணம்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழக அரசியலில் நாகரிகம் குறித்தோ, வன்முறை குறித்தோ, சொத்துக் குவிப்பு தொடர்பாகவோ பேசுவதற்கு இராமதாசுக்கு எந்த அருகதையும் இல்லை. இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக இராமதாசு பேசி வருவது திருச்சி சிறையில் அடைத்ததால் உள்ள வெறுப்புணர்ச்சியாலும் பழிவாங்கும் உணர்ச்சியாலுமே தவிர வேறல்ல.
விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அதிமுகவினரைக் கண்டிப்பதற்கு ஒரு ஜனநாயக உரிமை உண்டு; கடமையும் உண்டு. ஆனால் இராமதாசுக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறைதானே. அப்படிப்பட்ட வன்முறையாளருக்கு அதிமுகவினரையோ ஜெயலலிதாவையோ கண்டிக்க எந்த அருகதையும் இல்லை. தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தி இராமதாசுதான். இதை கலைஞர் உட்பட அனைவரும் புரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டிற்கு நல்லது.