Image Credits: thegiftofgivinglife.com



முகம் சுளிக்கிறாய்
அருவருக்கிறாய்
எட்டிப் போகிறாய்
கிட்ட வரத் தடுக்கிறாய்
மூன்று நாட்கள் வரை
தனிமனத்தில் வைத்துப் பூட்டுகிறாய்
தீட்டு தீட்டு என அலறுகிறாய்
உயிரைக் குதறும்
அந்த பெண்வலி அறிவாயா ?
ஊற்றெடுத்துப் பீறிடும் உதிரத்தால்
நரம்பு தோறும் ஊசி குத்தும்
வேதனை பற்றித் தெரியுமா ?
நீ சுகிக்க..
நீ பசி தீர்க்க..
உன் தினவு கரைக்க..
என்னை வர்ணிப்பாய்
நேசிப்பதாய் நடிப்பாய்
பாசம் காட்டுவதாய் பசப்புவாய்
எப்பொழுதும்
மிருகமாய்..எந்திரமாய்..
உன் கனவுகளை
மலர வைக்க..
உன் ஆசைகளை
நிறைவேற்ற..
நான் ஒரு கருவியாகணும்
யாவும் பூர்த்தியானால்
உனக்கு ஆவேன் தூரமாக
நான்…
குப்பையில் வீசப்படும்
மூன்று நாட்களுக்குப் பின்னாலான
நாப்கின் போல….

வசந்ததீபன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *