நீருள் தான் மீன்
___________________
கலையற்ற அரசியல்
வறட்டுத்தனம்
அரசியல் அற்ற கலை
குருட்டுத்தனம்
அரசியலும் கலையும்
கலையும் அரசியலும்
வாழ்வின் இனிய தருணம்
உயிர்ப்பின் தரிசனம்
கனவுகளின் விமோசனம்
யுகங்களின் ஒளிப்பிரசவம்
விடுதலையின் பிரவாகம்
இகம் பரம் யாவும் ஒலிக்கும் மந்திரம்
நுகத்தடிகளின் சிதைவு
விலங்குகளின் உடைவு
பாலைவனத்திலும் நீர் ஊறும்
பட்டமரத்திலும் பூ பூக்கும்
பறவைகளின் இசை கூடும் அரங்கம்
நெருப்பென்றால் உயிர் கொதிக்கும்
பனியென்றால் மனம் குளிரணும்
மனிதம் தினம்தினம் தோன்றும்
மிருகம் இல்லாது ஒழிந்து போகும்
உலகம் என்றும் மகிழ்ந்து சுழலும்.
தீவானவள்
__________________
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
பூஜையறைக்கும்
இடையே
விதிக்கப்பட்டிருக்கிறது
அவளுக்கு…..?
வீடென்னும் உலகம்.
நொடிகள் ஒழுகும்
ஆயுளின் ஓட்டைப்பாத்திரம்
காயலான் கடையை
கனவு கண்டபடி.
மெளனத்தில் ஆர்ப்பரிக்கும்
பிறவிப் பெருங்கடல்
மீள முடியா பயணத்திற்கு
முன்னகர்த்திக் கொண்டு.
தனித்த ஊஞ்சலின்
ஒற்றை ஆட்டம்
நிழல்…?
தீரும் வரைக்கும்.
மொழி அறிந்த ஊமையின்
வேதனைகளோ…
தினமும்
வேர்களும்..கிளைகளுமாய்
கிளைத்துப் படர…
பறவையின் பாடலுக்காய்
செவி திறந்து
காத்துக் கிடக்கிறது
அந்த கண்ணீர் சூழ்ந்த நிலம்.
வசந்ததீபன்

