வற்றிய நதியின் கரையில் சில பூக்கள்
*********************************************
நைந்து போன கடிதத்தை
வாசிக்க..வாசிக்க
தோற்ற காதல்
வாசனை தேடிப் போன
மனதில் எச்சில்சொட்ட
பசித்த ஓநாய்
சிறகு உலர்த்துகிற
பறவையிடமிருந்து
தூறல் மழை
சிற்பியின் மனதில்
உதித்த உருவல்ல
பாறையுள்ளிருந்து சிலை
புகழ்வான்
பாராட்டுவான்
புதைகுழி பற்றி கவனம் கொள்ளுங்கள்
அடித்தால் அடியுங்கள்
உதைத்தால் உதையுங்கள்
அன்பாயிருப்பது ஏமாறுவதல்ல.
ராமன் ஆண்டாலென்ன?
ராவணன் ஆண்டாலென்ன?
அன்னாடங் காச்சிகள்
ஈயாதான் பறக்கணும்.
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
உண்மையைக் காப்பாற்ற பொய் சொல்லலாம்
பொய்யைக் காப்பாற்ற
உண்மை சொல்லாதே
காக்க காக்க நீதி காக்க
நவதானியங்கள் தின்றவர்கள்
சுகமாய் வாழ்ந்தார்கள்
கோதுமை தின்பவர்கள்
நோயோடு அல்லாடுகிறார்கள்
நளபாகம் நாலாவிதமாகிப் போச்சு
கோடாரியை கீழே போடு
காடுகள் கோபத்தில் இருக்கின்றன
சிதைக்குள் சிக்கிக் கொள்ளபோகிறாய்
வயிற்றில் கக்கூஸோடு அலைகிறீர்கள்
மூளையை கக்கூஸாக்கி வெறிக்கூத்தாடுகிறீர்கள்
கக்கூஸ் என்றதும் ஏன் பதறுகிறீர்கள்?
வலியிருந்து வெளியேறுகிறேன்
வேதனையை கழற்றி எறிகிறேன்
ஆசுவாசமாக இருக்கிறது.
ஒடுக்கப்படுபவர்களுக்காக குரலெழுப்புவேன்
அடக்கப்படுபவர்களுக்காக
கரம் நீட்டுவேன்
நான் உயிருள்ள மனிதன்
ஒடுக்குகிறார்கள்
உயிராய் நேசிக்கிறீர்கள்
போதும் பெண்ணினமே
பூவுக்குள் தேன்
முள்ளுக்குள் பூ
தேன் மட்டும் குடிக்கின்றன வண்டுகள்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.