நூல்: படிப்பது சுகமே
ஆசிரியர்: வெ. இறையன்பு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
படிப்பு என்பதை ஒரு சுகானுபவமாக இனிக்க இனிக்க விளக்கும் இந்தப் படைப்பின் ஆசிரியர் இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி திரு. வெ. இறையன்பு அவர்கள்.
இதுமட்டுமில்லாது பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.
படிப்பு என்பதை மிகப்பெரிய பாரமாக நினைத்து மருகித் தவிக்கும்
மாணவர்களுக்கு … தன்னம்பிக்கையூட்டும் ஆகச்சிறந்த படைப்பு இது.
பயமோ பதட்டமோயின்றி ஒரு பாடத்தையோ தேர்வையோ எந்த வகையில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்… எப்படி அணுகவேண்டும்
என்பதையெல்லாம் மிகமிக எளிய நடையில் வெகு சுவைபட அத்தனை அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
“பள்ளி திறந்ததும்” என்ற தலைப்பின் கீழான.. கற்பது குறித்த மூன்று மாற்றங்களாக…
1. மன நிலையில் மாற்றம்
2. அறிவுநிலையில் உயர்வு
3. திறமை மேம்பாடு
போன்றவற்றை வரிசைப்படுத்தி
இவர் விவரிக்கும் விதத்தில்
படிப்பு என்பது அச்சப்பட்டு விலகியோடும் பெருஞ்சுமையல்ல…
இஷ்டப்பட்டு வரித்துக்கொள்ளும் மிகப்பெரியதொரு ஆனந்தம் என்பதனை மிக இலகுவாக உட்புகுத்திவிடுகிறது இந்தப் புத்தகம்.
படிப்பு என்பது வெறும் பாடப்புத்தகத்தோடு நின்றுவிடாமல்
விளையாட்டு.. கலை.. இலக்கியம்.. தொடர்பான பல்வேறுபட்ட நாட்டு நடப்புகள், உள்ளூர் வெளியூர் தினசரி நிகழ்வுகள், உலக நடப்புகள் என்று விரிந்து பரந்ததொரு வாசிப்பின் தேடலாக இருக்க வேண்டும் , ஏட்டுக்கல்வி என்பது மட்டும் நிச்சயம் போதாது என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
மாணவர்களுக்கு ஆகப்பெரிய பலமாக விளங்கும் இந்தப் புத்தகம்
தற்கால மனப்பாட கல்விமுறைக்கு
எந்த வகையிலும் ஒத்துவராத ஒன்று.
மாணவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான படைப்பு இது.