1

அப்பா இறந்திருந்தார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்த இயலாது கைவிரித்தனர் மருத்துவர்கள். இறப்பின்மீது சந்தேகம் எழ விசாரணை குழுவொன்றை நிறுவனம் ஏற்பாடு செய்தது. விசாரணை குழுவே நிறுவனம் விரும்பும் முடிவுகளை அறிவிக்க தான் என முதன்மை போட்டி நிறுவனத்தின் தலைவர் செய்திகளில் பேசிக் கொண்டிருந்தார். நிறுவனத்தின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட குழு தன்னுடைய விசாரணையை எங்களிடமிருந்து தொடங்கியது.

முதல் அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் நகரின் ஒதுக்குப்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தூய்மை இலாகாவின் அலுவலகம். சாம்பல் நிற ஒற்றைக் கை தானியங்கி இயந்திரங்கள் சதுர வடிவ பிணைப்புக் கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து சுவர் எழுப்பும் பணியில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தன. எங்களை உள்ளே அழைத்துச் செல்ல வந்திருந்த கருப்பு நிற அங்கி மனிதர் முதல் அடி எடுத்து வைக்கவும் இயந்திரங்கள் தங்களுடைய பணியை நிறுத்தியிருந்தன. நாங்கள் கடந்தப் பிறகு அந்த கீரிச் சத்தம் மீண்டும் தொடங்கியது.

கருப்பு நிற அங்கியணிந்த மனிதர் வெளியே நின்றுக் கொள்ள நாங்கள் உள்ளே சென்றோம். அம்மா உணர்வுகளற்று இருந்தாள். எதிரே ஒளிர்ந்துக் கொண்டிருந்த திரையில் ஆறு மனிதர்கள் வெவ்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இடையிடையே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். வெள்ளை நிற முகக் கவசம் அவளின் முகத்தின் முக்கால்வாசியை அடைத்துக் கொண்டிருக்க அம்மா தன் கண்களில் உண்மையும் கண்ணீரும் வழிய பதில் அளித்துக் கொண்டிருந்தாள். இடையில் என்னையும் தங்கச்சியையும் கருப்பு நிற அங்கி மனிதர் வெளியே அழைத்துச் சென்றார். அவர் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்துக் கொள்ள முயன்றார். அப்பாவைப் போலவே. அப்பாவின் நண்பர் அவர் என்பதையும் சொல்ல மறக்கவில்லை.

அப்பா நிறைய பேருக்கு நண்பராய் இருந்தார். நிறுவனத்திற்கு எதிராக அறியப்பட்ட முகங்களுள் அவரும் ஒருவர். தமிழிய பிராந்தியம் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நிறுவனத்தின் செயல் அதிகாரி இரங்கல் கூட்டத்தில் பேசினார். எங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் நான் பணிக்கு செல்ல தயாராகும் வரை நிறுவனத்தின் அங்காடிகளில் பெற்றுக் கொள்ளும் அனுமதியை வழங்கினார். செயற் அதிகாரியின் புத்திசாலித் தனமான நடவடிக்கை இதுவெனவும் நிறுவனத்தின் நற்பெயருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் நேரலை விவாதங்களில் சண்டைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. திரையின் வலதுப் புறத்தில் அன்றைக்கு இறந்தவர்கள், உயிரோடு இருந்து பாதிக்கப்பட்டவர்கள், உயிரோடு இல்லாதவர்கள் என நகரும் எண்கள் ஓடிக் கொண்டிருந்தன.

2

அப்பா நிறுவனத்தின் ஆரம்பகால இயக்குனர்களுள் ஒருவர். அரசுகள் மொத்தமாக கலைக்கப்பட்டு நிறுவனங்கள் அதிகாரத்திற்கு பொறுப்பேற்ற காலம் முதல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கான கதைகளில் அப்பாவின் பழைய நினைவுகள் உருவம் பெறும். சிறிய வயதில் அவர் பெற்றோர்களோடு மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றது, பள்ளிக் கூடம் என்பது வீட்டிற்கு வெளியே எங்கோ இருந்தது, அந்த பள்ளிக்கு செல்ல மஞ்சள் நிற தானியங்கி வாகனங்கள் வந்தது, சந்தை, பொருட்காட்சி, திருவிழா, திரையரங்கம் இப்படி பேசிக் கொண்டே இருப்பார். அப்பாவின் எல்லா கதைகளிலும் மனிதர்கள் கூட்டமாகவே வருவார்கள். போவார்கள். நடமாடுவார்கள்.

எனக்கான பாடத்திட்டத்தில் வரலாறு என்பது நிறுவனம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கும். அதற்கு முன்னதான உலகம் பற்றிய பதிவுகள் வேறு எந்த இணைய பக்கங்களிலும் இருந்தது கிடையாது. ஆனால் அப்பாவுக்கு தெரிந்திருந்தது.

அப்பா நிறுவனத்தின் அடிப்படை பங்குதாரர் என்கிற நிலையிலிருந்து கூட விலகி இருந்தார். அவரது ஒரு காணொளி நிறுவனத்தை கேள்வி கேட்பதாக அமைந்திருந்தது. நிறுவனத்துக்கும் பழைய அரசுக்குமான ஒப்பீடு குறித்து அவர் பேசி இருந்தார். அது தான் அவரை பல முறை நீதிமன்ற காணொளி விசாரணைகளில் பதில் அளிக்க வைத்தது. தொடர் மன அழுத்தத்தால் மது நோயாளியாக கொஞ்ச கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தார் அப்பா.

அப்பா கதைகள் சொல்வது குறைந்தது. பெரும்பாலான நேரங்களில் அவர் தனிமையிலேயே இருந்தார். எப்போதாவது எங்களைப் பார்த்தார். அவரது மின்னஞ்சல் பல நாட்களாக திறக்கப்படாமலே இருந்தது.

வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது. அம்மா ஒவ்வொரு முறையும் அன்பாக அப்பாவிடம் பேசப் போயி, அது விவாதமாகி பின்னர் சண்டையாக முடிவடையும். இரவுகளில் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அல்லது அப்பாவின் அனத்தல் சத்தம்.

இனி ஒரு துளி மது அருந்தினாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிற மருத்துவரின் அறிக்கை வந்த பிறகு அப்பா மது தொடுவதையே நிறுத்தினார்.

கொஞ்ச நாட்களுக்கு கண்களுக்கு கீழ் கருவளையத்தோடும், உலர்ந்த உதடுகளோடும், மெலிந்தும் காணப்பட்டார்.

காகிதத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். அதை விட எழுதியவற்றில் பெரும்பாலானவற்றை தீயிலிட்டு எரிக்கவும் செய்தார். நிறுவனம் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்கிற ஒற்றை வரியைத் தவிர கணினியிலோ தொடுபலகையிலோ எதுவுமே எழுதவில்லை.

அப்பாவை நிறுவனத்தின் சமாதான தூதுவர்கள் ஒருமுறை அழைத்து சென்று திரும்பி வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வரை இதை மட்டுமே திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருந்தார். அடுத்து அவர் வாழ்ந்தது வெறும் மூன்று நாட்களே.அப்பாவின் எல்லா புத்தகங்களும், கருவிகளும், ஏடுகளும் எடுத்து செல்லப்பட்டன. எனது நாட்குறிப்பில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு பக்கத்தைத் தவிர.

3

அன்புள்ள மகனுக்கு,

நீ படித்த எந்த வரலாறும் உண்மை கிடையாது. உண்மையான வரலாறின் பல கூறுகளைப் பிரித்து பிரித்து உங்களுக்கு கதையாக சொல்லியிருக்கிறேன். அதன் இறுதி பத்தி இந்த கடிதம்.

தொற்றுவியாதிகளின் காலம் தொடங்கியது மனிதர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம். முதலில் இயற்கை பேரழிவு என்றே எல்லோராலும் நம்பப்பட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தோம். நாட்கள் மாதங்களாக மாறியது. மாதங்கள் வருடங்களாகி பல வருடங்களாக பரிணமித்தது. அரசுகள் தங்களின் தோல்வியில் கலைந்தது. சில இடங்களில் கலைக்கப்பட்டது. நிறுவனங்கள் தங்களுக்குள் பிராந்தியங்களைப் பிரித்துக் கொண்டன. செயல் அதிகாரிகளும், இயக்குனர்களும், தணிக்கையாளர்களும் மக்களை ஆளத் தொடங்கி இருந்தனர். மருத்துவம், கல்வி, சுகாதாரம், உணவு என்பவை விலையுள்ள சேவைகளாகின. மது, பாலியல் தொழில், பொழுதுபோக்கு, இணைய சேவை இலவசமாகின. இவற்றை வழங்குவதே நிறுவனத்தின் கடமை என நம்ப வைக்கப்பட்டது.

எதை செய்தாவது உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது தர்மமாக தொடங்கியது. பல ஆண்டுகளாக இவை எவற்றையும் யாரும் தெரிந்துக் கொள்ள முடியாதபடி பூச்சாண்டி காட்டியே இந்த நிறுவனங்கள் செயல்பட்டன. அவற்றுக்கு எல்லா வருவாயும் செலவுகளின்றியே கிடைப்பதினால் இலாபம் ஈட்டுவதில் உள்ள ஆசை மறைந்து மக்களை ஆள்வதில் கவனம் குவிக்க ஆரம்பித்தன. ஆனால் அதற்குள்ளாகவே பாதி மக்கள் தொகை அழிந்திருந்தது.

மக்களைப் பணியாளர்களாகவும், வாடிக்கையாளர்களாகவும் நிறுவனங்கள் பழகிக் கொண்டன. நிறுவனங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றன. அவர்களின் பகடை காய்கள் மக்களே.

உனக்கு நான் கதைகளில் கூறிய உலகம் இங்கிருந்து வெகு தொலைவில் மறைந்து இருக்கிறது.அதன் பிரகாசமான ஒளி கண்ணைக் கூச செய்கிறது. இப்போதே நான் அதைப் பார்க்க தொடங்கிவிட்டேன். கொஞ்ச நாட்களில் இறந்து போனால் நான் அங்கு தான் போவேன் என நம்புகிறேன். நீ வாழும்போதே இவ்வுலகம் சீராக வேண்டும். அல்லது சீராக்கிக் கொள்.

அன்புடன்,

அப்பா

4

நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன். நேரலையில் அப்பாவின் விசாரணை குறித்த தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எளிதில் புரிந்துக் கொள்ள இயலாத கிருமியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதுவே காரணமாக இருக்கலாம் என அறுதியிட்டுக் கூறப்பட்டது. அது எந்த மருத்துவ சோதனையிலும் தெரியவில்லை எனவும் இதுவரை அறிந்திராத புதுவகை என்றும் அறுவர் குழு முடிவுக்கு வந்தது. ஆகையால் இறப்பின் மீது சந்தேகங்கள் களையப்பட்டதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அம்மா இப்போதும் உணர்ச்சிகளற்று இருந்தார்.

அப்பா கூறிய உலகின் வானம் எனக்கு தெரிய தொடங்கியது. என் தங்கைக்கு அதைக் காட்ட பெரிதும் விரும்பினேன். தங்கைக்கு மட்டுமில்லை எல்லோருக்கும். வானத்தின் கீழ் நேர்க்கோட்டில் நட்சத்திரம் ஒன்றும் ஒளிர்ந்தது. கண்ணைக் கூச செய்யும் ஒளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *