இந்த ஊரடங்கு விடுமுறை நாளில்

தோழர். சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலையும் படித்து முடித்தாகிவிட்டது.

கிட்டதட்ட 1400 பக்கங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட ஒரு மாபெரும் படைப்பு இந்த நாவல்.

பெரும் மகிழ்வை ஏற்படுத்திய

இந்நாவலின் ஆசிரியர், தோழர். சு.வெங்கடேசனுக்கு முதலில் நன்றி சொல்லி விடுகிறேன்.

இந்த சிறு பதிவின் மூலம், நாவலின் மையமான சில விஷயங்களை மட்டுமே பகிர்கிறேன். நாவலை ருசிக்க வேண்டும் என்றால், நீங்களும் அதை படித்தே தான் ஆக வேண்டும்.

”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”

”கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி”

என்கிற இரண்டே சொற்றொடர் தான், இந்த நாவலை படிப்பதற்கு முன் பாரி குறித்து எனக்கு இருந்த அறிமுகம்.

பொதுவாகவே மன்னர்களின் புகழ்பாடும் வரலாறுகளில் அவ்வளவு ஆர்வம் எனக்கு கிடையாது. ஆனால் பாரி அதில் விதி விளக்காகவே எனக்கு தெரிகிறான்.

                                          நன்றி GAK’ S HUB: வீரயுக நாயகன் வேள்பாரி

பாரி, பறம்பு மலையின் சிற்றரசன், அது ஒரு குறிஞ்சி நிலம். மலையில் வாழும் அவனும், அவன் மக்களின் வாழ் நிலையும் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறை.

பறம்பு தேசத்து மக்களுக்கு, அந்த மலை முழுவதுமே அவர்களின் வீடு தான். மலையையும், காட்டையும் முழுமையாக அவர்கள் அறிந்ததனால் அவர்களுக்கு அங்கு வாழ்க்கை வசப்படுகிறது.

பறம்பு மக்களுக்கு, மலையும், காடும் இயற்கை அரணாகவும். பறம்பு மலைக்கும், காடுகளுக்கும், பாரியும் அவன் மக்களும் அரணாகவும் மாறிமாறி திகழ்கிறார்கள் என்பதே கதை முழுவதும் காண முடிகிறது.

காட்டில் வாழும் ஒவ்வொரு செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, சிறு பூச்சியிலிருந்து…. பெரு விலங்குகள் வரை பறம்பு மக்களின் அனுபவ அறிவு படிக்க படிக்க வியப்பூட்டுகிறது. காட்டில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தையும் தங்களை வாழ வைக்கும் உணவாகவும், மருந்தாகவும், உடையாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்தும் அம்மக்களின் வாழ்வியல் முறை படிக்க படிக்க தெகிட்டாமல் சொல்லி செல்கிறார் ஆசிரியர் .

இவைகளில் பல செய்திகள் புனைவுகளாக இருந்தாலும், அதை சுவாரசியமாக, நம்பும் படி நம்மை கதையோடு அழைத்து செல்கிறார். இத்தனை செடி, கொடிகளின் பெயரையும், இன்று நாம் காணமுடியாத பல உயிரனங்களின் பெயரையும் (புனைவாக இருந்தாலும்)  ஆசிரியர் எங்கிருந்து கையாண்டார் என்பது பெரும் வியப்பே!!!

                                           வீரயுக நாயகன் வேள் பாரி | நன்றி யாழ் இணையம்

பாரியிடம் பாடல் பாடி பரிசு பெரும் பாணர்களின் வழியே பாரியின் ஆட்சியின் சிறப்பும், பறம்பு மலையின் வளமும், சமவெளியில் வாழும் மக்களுக்கு சென்றடைகிறது. அன்றைய தமிழ்நிலத்தின் பெரும் புலவரான கபிலர் பாரியின் பெருமை அறிந்து அவனை தேடி பறம்பு மலைக்கு வருகிறார். உண்மையில் பெரும் புலவன் கபிலனின் எழுத்துக்கள் வழியே தான் பாரியை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர் என்றே நான் புரிந்து. கொள்கிறேன்.

பாரியோடு வெகு நாட்கள் தங்கியிருக்கும் கபிலர் சமதலத்தில் (மருத நிலத்தில்) வாழும் மூவேந்தர்களின் வாழ்நிலையில் இருந்து பறம்பு மலை மக்களின் வாழ்நிலை அறம் நிறைந்தாக உணர்கிறார். குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை, இயற்கை சார்ந்ததாக, அறம் சார்ந்தாக, மன்னனும் மக்களும் சமத்துவம் பேணுவதாக உள்ளது என்று உணர்கிறார்.

                             வீரயுக நாயகன் வேள் பாரி | நன்றி யாழ் இணையம்

திருமண உறவுகளில் ஆண், பெண் இரு பாலரும் அவரவருக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமைகள் உடையதாக பறம்பு மக்களின் வாழ்வியல் முறை உள்ளது. பறம்பு மலை மக்களிடம் பெரு தெய்வ வழிபாடு இல்லை..

தங்களின் குலங்களை காத்த முன்னோர்களையே பறம்பின் தெய்வங்களாக வழிபடுகிறார்கள்.

அதே வேலையில் சமவெளியில் வாழும் மருத நிலத்தை ஆளும் மூவேந்தர்களின் வாழ்நிலை இதற்கு எதிர்மாறாக உள்ளது.

மூவேந்தர்களும்….

தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்த, தங்கள் வியாபாரத்தை பெருக்க, நாடு பிடிக்க,சூழ்ச்சியும், வஞ்சகமும், அறமற்ற ஒரு வாழ்வியலை கொண்டதாக கதை வழியே உணர்த்துகிறார் ஆசிரியர்.

தமிழ் மண்ணில் ஏராளமான சிறு சிறு ஆதி குலங்கள் இருந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் பல சிறப்பு இயல்புகளும், தொழிலும், திறமைகளும் இருந்ததை ஆசிரியர் விரிவாக விவரிக்கிறார்.

தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்த மூவேந்தகர்கள் ஏராளமான சிறு குலங்களை அழித்தொழித்தனர். அப்படி அழித்தொழிக்கபட்ட  பல ஆதி குலங்களை சேர்ந்தவர்களை பாரியே அரவணைத்து அந்த குலங்களை காப்பாற்றுகிறான்.

                                                 நன்றி mcube: வேள்பாரி

பல குலங்களை அழித்த மூவேந்தர்களால் பாரியின் பறம்பு நிலத்தை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வர முடியவில்லை. பாரியின் மீது மூவேந்தர்கள் போர் தொடுக்க மைய காரணமாக இருப்பது பறம்பு மலையில் உள்ள ஒரு அறிய விலங்கு என்பது கதையில் ஒரு சுவரசியமான செய்தி. அந்த விலங்கின் பெயர் தேவ வாக்கு விலங்கு. இதற்கு ஒரு சிறப்பு இயல்பு உண்டு. அது ஒரு திசை காட்டும் விலங்கு. எத்திசையில் அந்த விலங்கை வைத்தாலும் அது வடக்கு நோக்கியே அமரும் தன்மை கொண்டது.

இந்த விலங்கை கைப்பற்றினால் கடலில் செல்லும் தங்களின் வணிக்கப்பல்களுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுத்தலாம், இதன் மூலம் தங்களின் வணிகம் பெருகும் என்று திட்டமிடுகிறான் பாண்டிய மன்னன். அதற்காக பாரி மீது படையெடுக்க முடிவெடுக்கிறான். ஏற்கனவே பாரியின் பறம்பு நிலத்தின் செல்வங்களை கொள்ளையடிக்க நினைத்து பாரி மீது போர் தொடுத்து தோல்வி அடைந்த சேர, சோழ மன்னர்களும் பாண்டியனுடன் கூட்டாளியாக இணைகிறார்கள்.

மூவேந்தர்களின் கூட்டு படையின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போடு பாரியின் படை மிக மிக சிறிய படையே. மூவேந்தகளோடு… பாரியின் படை மோதும் காட்சியை ஆசிரியர் மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஒரு போர் களத்தை நம் கண் முன்னர் நிறுத்தியிருக்கிறார்.  ஒரு போர் என்றால் ஒரு நாள் முடிவு செய்து அடுத்த நாள் நடப்பதாக சினிமாவில் பார்த்து பழகிய எனக்கு ஒரு போருக்கான திட்டமிடலும், தயாரிப்பும் என்பது எவ்வளவு நுட்பமானது, சிரமமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

பல மையில் தூரம் கடந்து வரும் வீர்ர்களுக்கான உணவு, உறைவிடம், மருத்துவம், குடிநீர் எவ்வளவு முக்கியம்..

அதோடு போரில் கலந்து கொள்ளும் யானை, குதிரைகளுக்கான பராமரிப்பு, போர் ஆயுதங்களின் பராமரிப்பு, அந்த போர் ஆயுதங்களை போர் நடக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும் பணி, என்று போர் என்பது போர் களத்தில் இரு தரப்பு வீர்ர்கள் மோதி கொள்ளும் காட்சி மட்டும் அல்ல, அதற்கு முன் அதற்கான திட்டமிடல் என்பது எத்தனை பெரிய வேலை என்பதை ஆசிரியர் மிக சிறப்பாக போரை அழகாக விவரித்துள்ளார்.

                                                              நன்றி சிந்தனைப்பூக்கள்: வீரயுக நாயகன்

பாரியோடு மோதும் மூவேந்தர் படை ஒவ்வொரு நாளும் பாரியின் படையின் எதிர்பாராத தாக்குதல் முறையால் தினம் தினம் தோல்வியை தழுவும். இயற்கையை கைகொள்ள தெரிந்த மலை மக்களுக்கு காற்றும், சிறு பூச்சிகளும், காட்டு விலங்குகளும் கூட போரில் உதவியாய் நிற்பதை ஆசிரியர் புனைவாக சொன்னாலும் இயற்கையோடு இயந்தும், அறிந்தும் வாழும் பறம்பு மக்களுக்கு இயற்கையே ஆயுதமாகவும் மாறியது ஆச்சரியமில்லை.

போரின் துவக்கம் முதலே மூவேந்தர்கள் பாரியை சூழ்ச்சியின் வழியே வெல்ல முயல்வார்கள். ஆனால் போரின் சட்டதிட்டதின் வழியே நடக்கும் பாரியின் படை, இறுதியில் வெற்றி பெறுகிறதா என்பதை இறுதிவரையில், சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி செல்கிறார் ஆசிரியர்.

நாடு பிடிப்பதும், அடுத்த நாட்டு செல்வங்களை கொள்ளையடிப்பதும், காலகாலமாக மனித குல வரலாற்றில்   ஆதிக்க சக்திகளால் நடந்தே வருகிறது. அன்று மூவேந்தகர்களின் செயலையே, இன்று வளரும் மூன்றாம் உலக நாடுகள் மீது ஏகாதிபத்திய நாடுகள் இன்றைய நவீன உலகில் அறங்கேற்றி வருகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளின் பாதுகாவலனாக சோசலிச அரசுகள் இன்று இருப்பது போலவே மூவேந்தர்களுக்கு எதிராக பல குலங்களின் காவலனாக, பாரி எனக்கு இந்த நாவலில் தென்படுகிறான். கதை நெடுக ஆசிரியர், பாரியின் வீரத்தையும், அறத்தையும் போற்றினாலும்,  அவனின் அறமே மனதில் நிற்கிறது.

”வீரயுக நாயகன் வேள் பாரியைவிட….  அறம் காத்த பாரியாகவே”, மிளிர்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *