“ஒளியிலிருந்து இருளுக்கு” – இந்த நூலுக்கான அணிந்துரையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள், “ஒவ்வொரு அறிவியல் மாணவர் கையிலும் இந்தத் தொகுப்பு இருப்பது அவசியம்; அல்லாதவர் கையில் இருப்பது அதனினும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.” இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அவர் கருத்தின் ஆழத்தை நான் உணர்ந்து கொண்டேன். இந்த நூலில் மொத்தம் 11 அறிவியல் கட்டுரைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத, மறைக்கப்பட்ட பல உண்மைகளை இந்த நூலின் மூலம் அறிய முடிந்தது.
எந்த கண்டுபிடிப்பிற்கும் தீவிர ஆராய்ச்சித் தேவைப்படுகிறது. சில சமயம், அந்த ஆராய்ச்சியில் நாம் முற்றிலும் எதிர்பாராதவை அரங்கேறுகின்றன. உதாரணத்திற்கு, பிரபல ஃபைஸர் மருந்து நிறுவனம், இருதயவலிக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அவர்கள் எதிர்பார்த்தப் பலன்கள் கிடைக்கவில்லை. பரிசோதனைக்காக இந்த மருந்தை உண்டவர்கள், அவர்கள் உடலில் இந்த மருந்தினால் ஏற்பட்ட மாற்றத்தைக் கூற, அது “வயாகரா” என்ற மாத்திரை கண்டுபிடிப்பிறகு வித்திட்டது. “நீலக் குளிகை” என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த மாத்திரை, பல பில்லியன்களை மருந்து நிறுவனத்திற்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதைப் பற்றியும் பிரபல வலி நிவாரணி டைக்ளோஃபெனக், ஒரு பறவை இனம் அழிவதற்கு எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை “விழைந்ததும் விளைந்ததும்” கட்டுரை விளக்குகிறது.
பொதுவாக நிறுவனங்கள் ஆராய்ச்சியின் மூலம் தங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்வது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், “பீபஸ் கார்ட்டல்” என்ற பன்னாட்டு மின்விளக்கு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்கள் பொருட்களின் விற்பனையைக் கூட்டுவதற்கு, அவற்றின் தரத்தை குறைக்கச் செய்த சதியைப் பற்றி விவரிக்கிறது “ஓளியிலிருந்து இருளுக்கு” என்ற கட்டுரை. இந்த நிறுவனங்களை கூட்டுக் களவாணிகள் என்று சாடுகிறார் ஆசிரியர். இவர்கள் செய்த சதி என்ன? இவர்கள் தயாரிக்கும் விளக்குகளின் ஆயுள் இரண்டாயிரம் மணிகளுக்கும் மேலாக இருந்தன. விளக்குகள் விற்பனையை இரு மடங்காக்க, அவற்றின் ஆயுளை ஆயிரம் மணிகளாக குறைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிரபல மருந்து நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியின் வழியாக புதிய மருந்துகளை கண்டு பிடிக்கின்றன. அவற்றிற்கான காப்புரிமை 20 வருடத்திற்கு இருக்கும். இந்தக் கால கட்டத்தில், இவற்றை மற்ற மருந்து நிறுவனங்கள் உண்டாக்க முடியாது. ஆகவே, காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனம் சொல்கின்ற விலைக்கு மற்றவர்கள் வாங்க வேண்டும். ஆனால், காப்புரிமை முடிந்தவுடன், மற்றவர்களும் அந்த மருந்தை தயாரிக்க விலை குறையும். இதைப் பாதுகாக்க நிறுவனங்கள், காப்புரிமை குறையும் போது சில மாறுதல்கள் செய்து, புதிய மருந்து பழையதை விடவும் சக்தி வாய்ந்த மருந்து என்று விளம்பரம் செய்து தங்கள் சந்தையை தக்க வைத்துக் கொள்ளவும், விரிவாக்கவும் செய்கின்றன. இதைப் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர் “முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம்” என்ற கட்டுரையில்.
கருநீல வண்ணத்திற்கு இண்டிகோ என்று பெயர். இந்திய உற்பத்தியான இந்தக் கருநீலச் சாயத்திற்கு, இந்தியாவிலிருந்து என்று பொருள் அளிக்கும் “இண்டிகோ” என்று பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். அடிமைகள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்திய இண்டிகோ சாத்தானின் உணவு என்று முத்திரையிடப்பட்டு, பிரிட்டிஷ் அரசால் 1532ஆம் வருடம் தடை செய்யப்பட்டது. 1700ஆம் ஆண்டில் ஜெர்மனி அரசு இண்டிகோ பயன்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை அறிவித்தது. இதைப் போன்ற பல சுவாரசியமான செய்திகளை ”இண்டிகோ – ஒரு நிறத்தின் வரலாறு” கட்டுரையில் காணலாம்.
இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மிகச் சிறந்த விஞ்ஞானியாக அறியப்படுகிறார். அவருடைய ஆராய்ச்சியில் அவருடைய முதல் மனைவி மிலேவாவிற்கு பெரும் பங்கு உண்டென்றும், ஆராய்ச்சியினால் ஐன்ஸ்டைன் அடைந்த புகழை மனைவிக்கு பகிர்ந்து அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அதனைப் பற்றிய விரிவான விளக்கங்களை “ஐன்ஸ்டைன் மனைவி” என்ற கட்டுரையில் காணலாம். இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது என்று சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
இந்த தமிழ் அறிவியல் புத்தகத்தில் பாராட்டதக்க முக்கிய இரண்டு அம்சங்கள் :
பொதுவாக அறிவியல் புத்தகங்களைத் தமிழில் படிக்கும் போது சில நெருடல்களை சந்திக்க நேரிடும். சிலர் ஆங்கில வார்த்தைக்கு ஒப்பான தமிழ் வார்த்தையை எழுதுவார்கள். அந்த ஆங்கிலச் சொல் என்ன என்று மனம் யோசிக்கும். சிலர் ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதுவார்கள். இதற்கு ஒப்பான தமிழ் வார்த்தையை கொடுத்திருக்கலாம் என்று தோன்றும். ஆனால், ஆசிரியர் இந்த நூலில், தமிழ் வார்த்தையைக் கொடுத்து, அடைப்புக் குறியில் ஆங்கில வார்த்தையை அந்த மொழியிலேயே கொடுத்திருக்கிறார். கட்டுரையைப் புரிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருந்தது. ஆசிரியர்க்கு பாராட்டுகள்.
எல்லாக் கட்டுரைகளின் முடிவில், மேலும் அறிய விரும்பும் வாசகர்களுக்கு, இதன் தொடர்பு ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள் பட்டியலிட்டு அளித்துள்ளார்.
அனைவரும் படிக்க வேண்டிய அறிவியல் புத்தகம்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஒளியிலிருந்து இருளுக்கு” |
| ஆசிரியர்: | வெங்கட்ரமணன் |
| வெளியீடு: | தமிழினி |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கே.என்.சுவாமிநாதன், சென்னை. |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

