சுடரும் ஒரு லாந்தரை பிடித்துக்கொண்டு, வீதியில் போய்க்கொண்டிருந்தார்
ஒரு முதியவர். அதுவும் உச்சி வேளை. உடல் தள்ளாடவில்லை. மூப்பின்
சுருக்கங்கள் ஆங்காங்கே இருந்தாலும்,
அநுபவங்களின் வடுக்களாக அவை இருந்தன.
உச்சிப்பொழுதிலும், கையிலே லாந்தரை
ஏந்திப்போகும் அவரை பார்ப்பவர்கள். இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றார்கள். அவர்கள் சொல்வது அவருக்கு கேட்கத் தான் செய்தது.
பெரியவருக்கு, உலகத்தின் வெளிச்சம்
மிகப்பெரியதாயினும், தன் கையிலுள்ள
சிறிய வெளிச்சம் தான். ஆகப்பெரிய நம்பிக்கையாக நம்பினார். இந்த சின்னஞ்சிறு ஒளி இருளினும் மிகச் சிறியது தானே. ஆனாலும், அணையா
ஞானச் சுடரில் அவரும் சுடர்கிறார்.
அந்த முதியவரை பின்பற்றி சிறுவர்கள் பின் தொடர்ந்தனர். சிறுவர்கள் “பகலிலே
இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது, உங்க கையிலே எதற்கு லாந்தரை எடுத்து செல்கிறீர்” என்றனர். முதியவர் புன்னகைத்தார்.சூரியனை பார்த்து, “அது உலகத்திற்கு ஒளி, இது எனக்கு ஒளி” என்றார்.
சூரியனாரை
அடைத்து வைத்தேன்
கூண்டுக்குள்ளே
சூரியன் விழித்தான்
எனக்குள்ளே
அடீ ஞானப்பெண்ணே!
முதியவர் பாடலில், கிறக்கம் கொண்ட சிறுவர்கள், என்ன பாட்டு பலமாக இருக்கிறதே என்றனர்.
அணையா விளக்கு முன்
அடங்கும் மனிதர்காள்
சோதிமிகு வாழ்வில்
சுடர் ஒன்று ஏற்றினேன்
இருள் அகற்றும்
ஞான விளக்கில்
ஒளிரும் ஞானப்பெண்ணே!
முதியவர் நடந்துகொண்டிருந்தார். அவரின் ஒவ்வொரு அடியிலும், கசப்பு
கண்ணீர் புன்னகை அன்பு எல்லாமுமாகி
ஒளிர்ந்தன.
சிறுவர்கள் முதியவரின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல், பின்
தங்கிவிட்டனர். அப்போது அவர் ஏந்திச் சென்ற லாந்தரின் ஒளி சிறுவர்களின்
கண்களில் ஒளிர்ந்தன.
ஆசு