உரைச் சித்திரத் தொடர் 8: இரவுகள் விடியும் – கவிஞர் ஆசு

உரைச் சித்திரத் தொடர் 8: இரவுகள் விடியும் – கவிஞர் ஆசு



இந்த இரவை நினைக்கும் போது, நேற்றைய இரவு ஞாபகம் வருகிறது. நேற்றைய இரவில் சரியாக உணவு கொள்ளவில்லை. சரியாக உறங்க முடியவில்லை. பழைய காதலின் நினைவுகள் பிறாண்டிக் கொண்டிருந்தன. அவளிடம் எதற்கு மனதை பறிக் கொடுத்தேன் என்றே தெரியவில்லை.

மனைவி கண்ணெதிரே இருக்கிறாள்
என்னிடம் மிகுந்த அக்கறையுள்ளவள்
காதலியைவிடவும் அழகுள்ளவள்
உண்ட பிறகே உணவுகொள்பவள்
ஆனால், எல்லாவற்றையும் மறந்த பிறகும், பழைய காதலி ஞாபகத்தை
ஏன்? கிளற வேண்டும்.

நட்சத்திரங்கள் நிலவு ஒளிர்ந்து
கேலி செய்வதுபோல, மேலும் நினைவுகளை கிளர்கின்றன. இன்றைய இரவும் தூக்கம் வரவில்லை. மனைவி கேட்கிறாள், இந்த இரவும் தூக்கம் வரவில்லையா?. அவளிடம் என்ன சொல்ல முடியும். குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும் மனதிற்கு, சுத்தமான
அன்பை புரிந்துகொள்ள முடியாதது போல.

நேற்றைய இரவு, இன்றைய இரவைக் கொன்று நகர்கிறது. இருள் சிதறல்கள்.
ஒளித்துகள்கள். கலங்கடிக்கும் சாமம்.
பின்னிரவில், குடுகுடுப்பைக் கொட்டி
“நல்ல காலம் பொறக்குது” எனச் சொல்கிறான் கோணங்கி.

விழித்துப் பார்த்தால், நேற்றை இரவைக்
கவ்விக்கொண்டு விடிகிறது.
நாளையும் விடியும் இரவுக்கு மட்டும் ஏன்?
நினைவுகள் தளும்பி கனக்க வேண்டும்.

ஆசு



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *