கைகளைப்பற்றிக்
கொண்டிருக்கிறேன்
கைகளுக்குள் வெயில் நின்று கொண்டு இருக்கிறது
தன் போக்கில் பறந்து திரியும் வெயிலை ஏன் அடக்க முற்படுகிறீர்கள்
காற்றில்லாமல் மிதக்கும் காந்தல் வெயில் சப்தமிடுவதில்லை பெரும்பாலும்
அமைதியைத் தவிர வெயிலுக்கு என்ன தெரியும்,
காற்றில் கலந்து யாகம் நடத்தட்டும் விடுங்கள்
பகிர்ந்து கொள்ள இயலாத வெயிலின் பிரம்மை உலர்ந்த நிலத்தை கடந்து போகட்டும் அதில் யாருக்கென்ன வருத்தம்
கூத்துக்கலைஞனின் குறு குறு பார்வை தனித்துவிடப்பட்ட வெயிலுக்கு
வெயிலைத்தின்னும் கண்களுக்கு வெயில் எவ்வளவு பெரிய வசீகரம்
எங்கெங்கும் நிறைந்து ததும்பும் ஜலமயம்
வெயிலின் மங்களகர மஞ்சள் நிறம்
பூமி நெடுகிலும் பரவும் அதன் நீட்சியை
அதன் ஈரத்தை
அறிந்தவர் யார்
பழச்சாற்றினை பருகிக்கொள்வதைப் போல் வெயிலை பருகிக்கொள்ளுங்கள்
வெயிலின் நிறம் பரவட்டும் உடலெங்கும்
பாதரசமென மின்னும் வெயிலை கைகளால்
தயக்கமின்றி தொட்டும் பாருங்கள் வெயிலின் மீதிருந்த கோபம் குறையலாம்,
வெயில் இனிதென தோன்றலாம்…..
மகாராணி
அருப்புக்கோட்டை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

