விடாமுயற்சி (Vidaamuyarchi) – திரைப்பட விமர்சனம்
அஜீத்தின் கார் அஜர்பைஜான் ஹைவேஸில் பயணிக்கிற மாதிரி ஒரு ஸ்மூத்தான திரைக்கதை! மிதமான வேகத்தில் ஆரம்பிக்கிற கதை (அதை ஸ்லோன்னு சொல்லக்கூடாது) போகப் போக பரபரவென வேகம் எடுக்கிறது! எனக்கு இன்னொரு அஃபயர் இருக்குன்னு நேர்மையா கணவனிடம் சொல்லி டிவோர்ஸ் கேட்ட காதல் மனைவியை அவளது பிறந்த வீட்டில் கொண்டு போய் இறக்கிவிடவும் இறுதியா உன்னுடன் ஒரு லாங் டிரைவ் எனவும்..
கார்ப் பயணம் துவங்கும் வரை படத்தின் வேகம் மெதுவானது தான்! ஆனால் ஆரவ், அர்ஜுன், ரெஜினா, அஜர்பைஜான் போலீஸ் அதிகாரிகள், என அடுத்தடுத்த கியர்கள் போட்டு கதை அதி வேகமெடுக்கிறது! ஆரம்பத்தில் ஹீரோ எல்லாரிடமும் அடி வாங்கிக் கொண்டே வருவதும், பின்பாதியில் அவர் திருப்பி அடிப்பதை சிலர் கேலியான விமர்சனமாக வைத்திருந்தனர்!இனி செய்வதற்கு ஒன்றுமில்லை எனும்போது மனிதன் என்ன செய்வான்?
கோபத்தில் எதிர்த்து தாக்குவது தானே இயற்கை! அதுதானே நியாயமும்! இருக்கும் நேரம் குறைவு, முதலில் அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்! அதுவரை அவர்கள் அவர் மனைவியை உயிரோடு வைத்திருப்பார்களா என்பது நிச்சயமில்லை! விரைந்து அவரைக் காப்பாற்ற வேண்டும் முடிந்தவரை முயற்சிப்போம் என்ற சூழலில் தான் அஜீத் தாக்கவே துவங்குவார்! அந்த நேரத்திற்கு அதுதான் தேவை! அதைத் தான் அஜீத் கேரக்டர் செய்கிறது!

மற்றபடி அஜர்பைஜான் ரெஸ்டாரெண்ட் பார், மோட்டல்கள், இறுதிக் காட்சியில் வரும் பங்களா, அந்த நாட்டு வீடுகள், நெடிய சாலைகள் என லொகேஷனும் அர்ஜுனுக்கு உதவும் அஜர்பைஜானியர்கள், அவர்களது உறவுகள் (அங்கும் மாமியார் மருமகள் சண்டை) என வெளிநாட்டுப் படம் பார்த்த உணர்வினை கொண்டு வந்திருக்கிறார்கள்! இந்தப் படத்திற்கு ஏன் அஜர்பைஜான் லொகேஷன் என்ற கேள்விக்கு சரியான பதில் இது!
அஜர்பைஜானின் அனைத்து லொகேஷன்களுமே படம் பார்க்கும் நமக்கு ஒரு திகில் கலந்த அச்சத்தை தருகிறது! இதை இந்தியாவில் எடுத்திருக்கலாமேனு ஒரு விமர்சனம் படித்தேன்! சிரிப்பு தான் வந்தது! படத்தின் மிரட்டலுக்கு இந்த லொகேஷனும் ஒரு காரணம்! படத்தில் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு வலது கண் என்றால் ஶ்ரீகாந்தின் எடிட்டிங் இடது கண்! இரண்டும் பார்ப்பதற்கு கிறிஸ்டல் க்ளியர் எனும் அற்புத அனுபவத்தை நமக்குத் தருகிறது!
அர்ஜுன் & ரெஜினா குருர வில்லத்தனம் தமிழ் சினிமாவிற்கு புதிது! அநேகமாக இத்தனைப் பொய்களை அரசியல்வாதி தான் சொல்லமுடியும்! இறுதிச் சண்டையில் ரெஜினா அமிலத் தொட்டியில் விழுந்து இறந்ததும் “நாங்கள் கொன்றவர்களை இது போல அமிலத் தொட்டியில் போட்டு பொசுக்கிவிடுவோம் இது மெக்ஸிகன் கார்டெல் ஸ்டைல் அழிப்பு! ஆனா அவர்கள் கூட உயிரோடு யாரையும் இதில் போட்டதில்லை என்பார் அர்ஜுன்.
கார்டெல்களைப் பற்றி இன்னும் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கிறது! கொலம்பியாவின் டிரக் மாஃபியா The boss பாப்லோ எஸ்கோபர் மற்றும் அவரது போட்டியாளர்களின் கார்டெல்களின் சித்திரவதை கூடங்கள் *ஹி*ட்*ல*ரின் வதை முகாம்களை விட கொடூரமானது! இயக்குநர் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்திடம் இது பற்றி நான் நிறைய விவாதித்துள்ளேன்! அயன் படத்தில் கூட கார்டெல் பாணி டிரக்ஸ் கடத்துகின்ற சில காட்சிகள் வரும்!
இப்படி ஒரு இண்டர்நேஷனல் நெட்வொர்க் உள்ள கேங் இந்தியாவில் இருப்பது போல காட்டியிருந்தால் அதுதான் பொருத்தமாக இருந்திருக்காது! கார்டெல்கள் பற்றிய விவரங்கள் விக்ரம் 2வில் வருவதாகக் கேள்விப் பட்டேன்! மகிழ் பாணியிலும் ஒன்று வரணும்! உங்கள் இயக்கத்திற்கு ஒரு மெகா ஸைஸ் பூங்கொத்து! ஆர்ட் டைரக்ஷன் க்ளாஸிக்! கிராபிக்ஸ் எஃபக்ட்ஸ் எல்லாம் திரையில் எவருக்கும் அகப்படாமல் கடவுள் போலுள்ளது பாராட்டுகள்!
பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் அனிருத்துக்கு வாழ்த்துகள்! அவரிடம் தாழ்மையிலும் தாழ்மையான ஒரு வேண்டுகோள் ஆலுமா டோலுமா தொனி இனியும் அஜித்தின் பாடல்களுக்கு வேணுமா? கொஞ்சம் சிந்தியுங்க அனிருத்! அர்ஜுன் ஆக்ஷன் கிங் என்பதற்கு எல்லா படங்களிலும் நியாயம் செய்பவர்! இதிலும் செய்திருக்கிறார்! ரெஜினா! அடடா! என்ன ஒரு குரூரமான நடிப்பு & சிரிப்பு வெல்டன் ரெஜினா!
படத்தில் மைனஸ்களே இல்லியா? கொடூரமான குணம் கொண்ட ரெஜினா மனநல காப்பகத்தில் அடைபட்டு கிடைக்கும் போது அங்கு சக ஃபேஷண்டாக அர்ஜுனை சந்திக்கிறார்! இவர்கள் எப்போது அங்கிருந்து வெளியே வந்தனர்? அல்லது தப்பித்தனரா? அங்கிருந்து அர்ஜுனோடு வெளியேறியதும் தன்னை காப்பகத்தில் பார்க்கவராத பெற்றோர்களை கொன்றுவிடுகிறார் ரெஜினா அப்படின்னா அவர் போலீஸ் தேடப்படும் குற்றவாளியல்லவா!?

எப்படி அவர்கள் சுதந்திரமாக தப்புகிறார்கள்? அதுவும் பல நாடுகளின் பாஸ்போர்ட்டில் தப்ப முடியும்! திரைக் கதையில் உள்ள மரணப் பள்ளத் தாக்கு இந்த இடம் ! ஒரு வசனமாகக் கூட அதை எங்காவது வைத்திருக்கலாம்! அதுபற்றி எங்குமே தெளிவாக சொல்லப் படவில்லை! அத்தனைக் காதலுடன் இருக்கின்ற அஜீத் திரிஷா பிரிவுக்கு வலுவான காரணமில்லை! ரெஜினா அனு பற்றி சொன்ன பொய் போல கூட ஒரு காரணம் இருந்திருக்கலாம்!
அடுத்து, ஒரு வங்கியின் சென்னைக் கிளையில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நீங்கள் அதே வங்கியின் கொட்டாம்பட்டி கிளையில் உங்கள் மொத்த சேமிப்பையும் 30 நிமிடத்தில் எடுக்க முடியுமா? உங்க பணம் தான் என்றாலும் ஒரு ஐயத்தில் பாங்க் மேனேஜர் போலீசுக்கு தகவல் சொல்லமாட்டாரா? இந்த நாட்டில் க்ரைம் ரேட் கம்மி என்பார் இன்ஸ்பெக்டர்! ஆனா அங்கே தான் 40 பெண்கள் கடத்தி கொடூரமாகக் கொல்லப்பட்டு இருப்பார்கள்!
இதெல்லாம் படம் பார்க்கும் பரபரப்பில் எவருக்கும் தெரியாது! அதான் சொன்னேனே படத்தின் விறுவிறுப்பு அப்படி! விடாமுயற்சி வித்தியாசமான திரையனுபவம்.. நிச்சயம் நீங்கள் தியேட்டருக்குப் போயி அனுபவித்து பார்க்க வேண்டிய படம்..
எழுதியவர் :
வெங்கடேஷ் ஆறுமுகம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.