“விடுதலை – 2” (Viduthalai Part 2) தொடங்கிய விவாதம்
விடுதலை – 2 முழுக்க கம்யூனிஸ்ட் கொடிகளால், செயல்களால், சித்தாந்த விவாதத்தில், அழித்தொழித்தல், அரச பயங்கரவாதம் என்று முக்கியமான பொருளைப் பேசுகிறது.
படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டதால், நாமும் விவாதிக்கத் தொடங்கலாம். கதை புலவர் கலியபெருமாளை கருவாகக் கொண்டு, தமிழரசனைத் தொட்டு, தஞ்சைத் தரணியைத் தழுவி, சங்கம் கட்டத் துணிந்து, சாதிய ஒழிப்பைப் பேசி, நிலப்பிரபுத்துவக் கொடூரங்களைக் காட்டி, தலைமையில் பிராமணிய அதிகாரம் கோலோச்சுவதை, அதன் பகடைக் காய்களாய் அமுதன் வழித் தமிழ்த் தேசிய மக்கள், குமரேசன்கள் பகடைகளாய் உருட்டப்படுவதை உணர்த்திச் செல்கிறது.
இருந்தாலும் நேரடிக் கதையின் அர்த்தத்தில் ஆயுதப் போராட்டம் தவறு; தலைவனுக்காக காத்திருப்பது தவறு; மக்கள் போராட்டங்களில் மக்கள் தான் ஆயுத வழியா, ஓட்டு வழி அரசியலா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதே நேரத்தில் நக்சல் வழியைக் கொச்சைப் படுத்தாமல் கவனமாக அது தவறான பாதை என்று மட்டும் வெற்றிமாறன் கடந்து செல்கிறார்.
மக்களுக்கான போராட்டங்களில் திராவிடமும் நேச சக்திகள் என்று வெற்றி மாறன் கிளைம் செய்கிறார். பங்கு கோருகிறார். அதையும் முழுதாக மறுக்க இயலாது. கதையின் வன்முறை அனைத்தும் உண்மை சம்பவங்களின் மீது எழுப்பப்பட்ட புனைவுகள் என்கிற வகையில் அவையும் தவிர்க்க இயலாதவை.
ஆனால், கீழத்தஞ்சை போராட்டம், முந்திரிக்காடு தமித்தேசிய தமிழரசன் வழி, தர்மபுரி நக்சல்கள், போலீசின் வருசநாடு, தர்மபுரி நக்சல் வேட்டை என்று குழப்பி அடிப்பதால் கதையில் தெளிவோ நேர்கோட்டுத் தன்மையோ இல்லை.
இது தர்மபுரி கதையுமில்லை; முந்திரிக்காடு கதையுமில்லை; கீழத்தஞ்சை வெண்மணிக் கதையுமில்லை. எல்லாவற்றையும் கலக்கி ஒரு மிக்சராக்கி இருக்கிறார்.
விடுதலை (Viduthalai Part 2) சொல்ல வருவது, நோக்கம் நல்லதாயினும் ஆயுதப் போராட்டம் தோற்றுவிட்டது. மக்களைத் திரட்டும் அரசியல் வேண்டும். தலைவன் வருகைக்காக காத்திருப்பது கூடாது. மக்கள் அரசியலில் திராவிடத்திற்கும் பங்கு உண்டு என்பது தான்.
விவாதிக்க வேண்டிய மையமான கருத்து, மக்களை வர்க்கப் போராட்டத்திற் காகத் திரட்டிக் கொண்டிருந்தாலும் அந்த மக்கள் தங்களது பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் மொழிக்கும் பாதிப்பு என்றால் தானாக எழுந்து போராடுவார்கள் என்பதைத் தான். வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மனதில் வைத்து அந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
நாம் முகம் சுழிக்காமல் மக்கள் அரசியலைப் பாடுபொருளாக்கி இருப்பதால் விடுதலைப் படத்தை வரவேற்கலாம் ஆனால், விடுதலைக்கான கருத்தியல் இது தானா என்பதை விவாதிக்கலாம்.
ஏன் விவாதிக்க வேண்டும் என்றால், விடுதலை படத்தின் கருத்தியலாக, 880-வது குறள் எடுத்துக்காட்டப்படுகிறது.
அது, “உயிர்ப்ப உயிரல்லர் மன்ற செயிர்ப்பவர்/ செம்மல் சிதைக்கலா தார்.” என்பது. இந்தக்குரலுக்கு சாலமன் பாப்பையா, கீழ்க்கண்ட விளக்கம் தந்துள்ளார்.
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.
ஆனால், கலைஞர், மு.வரதராசனார் விளக்கம் மாறுபடுகிறது. படத்தின் கரு பாப்பையா கருத்தை பற்றி நிற்பதாக நான் கருதுகிறேன்.
படத்தின் உருவாக்கம், அதாவது செய்நேர்த்தி, கதை சொல்லும் முறை அருமையாக இருந்தது. பாடல்கள் சிறப்பு. தீவிரமான கருத்து விவாதத்தைக் கூட அழகியலோடு கையாண்டு இருக்கிறார். கடைசி வரை முதல்வர் யார் என்றே காட்டாமல், குமரேசனின் அம்மாவையும் காட்டாமல் இரு புள்ளிகளில் கதையை இணைத்து இருப்பது, நல்ல உத்தி.
நமது தோழர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, விடுதலை (Viduthalai Part 2) போன்ற கருத்து விவாதங்களை நாம் ஒரே அடியாகப் புறந்தள்ளாமல், 2012 தத்துவார்த்த தீர்மான வழிகாட்டுதல்படி செல்லவேண்டும்.
அது, முற்போக்காளர்கள், இடதுசாரிகள், இடதுசாரி தனி நபர்கள், குழுக்கள் நம்மோடு 90% ஒரு கருத்தில் முரண்பட்டாலும் நாம் அவர்களோடு ஒன்றுபடுவதற்கான புள்ளிகளைக் கண்டடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எனவே, சித்தாந்தப் போதாமையை சுட்டிக் காட்டிக் காட்டிக்கொண்டே, இடதுசாரி அரசியலை வலுவாகப் பேசும் விடுதலை போன்ற கருத்துக் கதையாடல்களை வரவேற்போம்! புரிதலுக்கு நன்றி.
கட்டுரையாளர் :
– சக்தி சூர்யா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அரசு, இந்தப் படத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொண்டதால் தான் எந்த ஒரு இடத்திலும் கம்யூ. கட்சிக் கொடி வருவதை Censor செய்துள்ளது. இதிலிருந்தே அரசு பயங்கரவாதத்தை இப்படம் உரக்க சொல்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். எனது இணையரிடம் Climax ல் நீ என்ன விரும்புகிறாய் என்று கேட்ட போது (அவர்கள் இடது சாரி அல்ல) கட்டாயம் அந்த காவல் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் – ஜீப் அப்படியே மலையிலிருந்து விழ வேண்டும் என்றார். அப்படியாயின் சாதாரண மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியமைக்கு இந்தப் படம் ஒரு வெற்றி தானே? இதை ஆதரிக்காவிடில் வேறெதைக் கொண்டாடப் போகிறோம்?