வாய் பிளந்து நிற்கிறேன்
இப்போதெல்லாம் வாயை மூட முடிவதில்லை
நிறுத்தி ஒன்றிரண்டு பழம் பறித்துக் கொள்கின்றனர்
முகம் தெரியாதவர்கள் கூட
வளரும் புதிய கிளைகளும்
முள்ளோடு முளைத்து தொண்டையைக் கீறித் தொலைகிறது
என் வாயிலேயே முளைத்தாலும்
என்னால் எதையும் சாப்பிட முடிவதில்லை
கவிதா முன்பே சொன்னாள்
இலந்தைப் பழக் கொட்டையை
முழுங்கக் கூடாது என்று
எதிரில் வரும் இன்னொரு பெண்
பாவம், விழுங்கியது தர்பூஸ் விதை
காகிதக் குப்பைகளை
என்ன செய்வது தெரியவில்லை
புனைவின் அலகால் குதறப்பட்ட
காகிதத்தின் சிறு சிறு துண்டங்கள்.
அரிசி போட்டு வளர்த்த
மயிலிறகின் குட்டிகளை
காட்டுக்கும் அனுப்ப மனமில்லை
பத்திரமாய் வைக்கா விட்டால்
மீண்டும் பிரிட்டிஸ்காரர்கள் திருடிக் கொள்வார்கள்
நல்ல வேளை கவிதா சொன்னதுபோல்
விழுந்தவுடன் பல்லை
பின் கொல்லையில் புதைத்துவிட்டேன்
எல்லாப் பற்களும் சரியாய்
அரக்கனுக்கு வரையப்பட்ட கொடும்பாவியின்
பற்களைப் போல் வளர்ந்துள்ளது
கொம்பு வளரத் துவங்கி விட்டது
ஃபிரான்ஸ் போக வேண்டும்
முட்டிய அவளுக்கும்
கொம்புகள் வளர்ந்திருக்குமா
வளர்வது நிற்கவில்லையென்றால்
மொட்டையடித்து
விகடனும் ஒனிடாவும்
எனக்குச் சொந்தமென்று எழுதிக் கொள்ள வேண்டும்

பிரின்சிபாலுக்கு ரெட்டை முனி கோவிலில்
முட்டை மந்திரிச்சு வைத்தேன்
அடுத்த முறை பிரின்சிபலை சந்திக்கப் போனால்
அந்தச் சோம்பேறி ரெட்டை முனியின் பெயரில்
அவர் காலடியில் முட்டை மந்திரித்து வைத்து வர வேண்டும்
நல்ல வேளை அன்று காளி கோயில்
பூசாரி குடித்திருந்தான்
சூலம் அன்று இரவு களவு போனது
இல்லையேல் நான் குருடாக சுத்தியிருப்பேன்
முட்டிக் கொண்டு வந்ததில்
கோவில் சுவற்றில்தான் ஒண்ணுக்கு இருந்தேன்
ஒருவர் ‘அ’ போட்ட இடத்தில்
இன்னொருவர் ‘அ’ போடக் கூடாது
![]()
அடப் பைத்தியமே
என்னடா தேடுகிறாய் என்றேன்
தொலைத்ததைதானடா பைத்தியமே
என்றான்
ஒருவருக்கொருவரை மிகவும்
பிடிக்கும் என்பதால்
தன் பெயரை இன்னொருவருக்கு
வைத்துக் அழைத்துக் கொள்ளும்
ஆழமான நட்பு எங்களுடையது
அவனும் மனிதம்
என்ற சொல்லின் பொருளுக்கு
மனிதனைக் கடைசி வரியில்தான்
எழுதினான்
ஊர் அவனையும் பைத்தியம்
அண்டப் பிதற்றலின்
மற்றனைத்து நுண்ணுயிரிகளை
முதல் வரிசையில் வைத்தெழுதும்
பைத்தியம் அவனுக்கு
பைத்தியம்அவனுக்கும்
தினமும் எதையாவது தொலைத்து விட்டு
தேடுவது அவனது அன்றாட வாடிக்கை
தொலைத்த இடங்களில்
பொதுவாய் தேடும் பழக்கம் இல்லை
அங்கு தேடினால்
விரைவில் கிடைக்கும்
மீண்டும் தொலைந்து போகும் வாய்ப்புள்ளது
என்ற பயம் அவனுக்கு உண்டு
நேற்று கூட
மழையை சுகப்பிரசவத்தில்
தேக்கி வைத்திருந்த
ஒரு களிமண் தரையில்
மனிதக் குழந்தை ஒன்று
நடந்து போன கால் தடம்
சில நாட்களுக்கு முன், அவன்
கண்டெடுத்தான்
அந்தக் ஓவியக் கால்தடத்தில்
எஞ்சிக் கிடந்த நீரை
ஒரு புதையல் போல்
காத்து வந்தான்
ஐயோ பாவம்
அவன் கண் அயர்ந்த நேரத்தில்
அழகின் கழிவிரக்கம்
காணாமல் போக
தேடத் தொடங்கினான்
இப்படி பல
தொலைத்ததை அவன்
தேடிச் செல்கையில்
அவனுக்கு சில
தெய்வங்கள் கிடைப்பதுண்டு
இருந்தும் அவன் அதை
அவனோடு எடுத்து வருவதில்லை
கிடப்பதை வைத்து கொள்ள வேண்டியதுதானே
பைத்தியமே என்றேன்
பைத்தியமே கடல் மேல்
பெய்யும் மழைக்கு மானிகள் எதற்கு என்றான்
அதுவும் சரிதான்
சரி இப்போது எதைத் தொலைத்தாய்
அருகிலிருந்த ஆலமரத்தை
கை காடின்னான்
இந்த மரத்தையா தொலைத்தாய்
என்றேன்
மரங்களை தொலைப்பது
மனிதர்களின் வேலை
எனக்கு அந்த பொழுதுபோக்கில்
நாடடமில்லை என்றான்
பிறகென்ன தொலைத்தாய்
காலம் தின்ற இலைகளுக்கு நடுவில்
காலத்தை தின்ற ஒரு இலை ஒன்று
காய்ந்து சருகாகாமல்
காய்ந்த பின்னும் மரத்திலேயே
அஞ்ஞாத வாசம் கொண்டு
ஒட்டி மரத்திலிருந்தாலும்
தனக்கான அண்டத்தின்
சிறப்படையாளத்தோடு
மழையில் ஊறி வெயிலில் தழைத்து
நரம்பு மட்டும் தெரியும் படியாய்
மற்ற சருக்குப் பகுதிகள்
எறும்பு சிலந்தி போன்ற
பெரும்பான்மை உயிரிகளின்
உணவாகி, சில நாட்கள்
குடையாகி
பல கோடி காற்றை சமர் கொண்டு
குழந்தையின் எச்சில் போல்
ததும்பி நேற்றோடு உதிர்ந்து
இருத்தல் என்ற கவிதை
தன் கடைசி வார்த்தையால்
நிறைவு செய்து போனது
எந்தப் பக்கம் பறந்தது
வா தேடலாம் என்றேன்
செல்லும் வழியில் சிரித்து கொண்டே
ஒரு புத்தன் கிடைத்தான்
சரி வா நீயும் தேட
லாஹபேட் வாங்கித் தருகிறேன்
என்று அழைப்பு விடுத்தேன்
இல்லை எனக்கு ரத்தம்
பொதுமென்று புத்தத்தை
என் கையில் கொடுத்து விட்டுப்
ஹன்சா காபி கடைக்குள் நுழைந்தான்
பைத்தியமும் நானும் தொடர்ந்து
தேடிக் கொண்டு இருக்கிறோம்
_+_+_+_+_+_
லாஹபேட் – Lahpet – பர்மாவில், தேயிலையைக் கொண்டு செய்யப்படும் ஊறுகாய் போன்ற ஒரு பதார்த்தம்
Hansa cofee – இலங்கையின் காபி மறுமலர்ச்சியில் பங்கெடுக்கும் இன்னொரு காபி ஏற்றுமதியாளர்
**************
விக்ரம் வைத்யா

