கோவி.பால.முருகு (Kovai Bala Murugu) எழுதிய விலையாய்ப் பெற்றதா விடுதலை? - நூல் அறிமுகம் | நா.வே.அருள் - சிறுவர் கவிதைத் தொகுப்பு - https://bookday.in/

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம்

விலையாய்ப் பெற்றதா விடுதலை? – நூல் அறிமுகம்

கோவி.பால.முருகு
ஒரு குழந்தைப் புலவர்
******************************

குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா ஒருவரைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்ன காலம் ஒன்றுண்டு. இன்று சிறார் இலக்கியத்திற்குச் சிறப்பான காலம். ஏராளமான இளைய எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியத்தில் கோலோச்சுகிறார்கள். குழந்தை எழுத்தாளர்களின் பரப்பளவு பரந்து விரிந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஒரு முழுமையான எழுத்தாளர் என்றால் அவர் குழந்தை இலக்கியம் படைத்தவராக இருக்க வேண்டும் என்ற வரையறையே உண்டு என்று எப்போதோ படித்த ஞாபகம்.

கோவி பால.முருகு இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். சிறுகதைத் தொகுப்புகள், பயண அனுபவக் கட்டுரைகள்,இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற பெயரில் இலக்கணத்தை எளிய பாடல்கள் ஆக்கியிருப்பது என எழுத்தில் பன்முகத் தன்மை வழங்கியவர். இலக்கணம் கற்றவர்; ஆனால், குழந்தைகளுக்கும் புரியும்படிச் சொல்கிற எளிமை கைவரப்பெற்றவர். இதுவரை சிறார் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டும், சிறார் கவிதைத் தொகுப்புகள் இரண்டும் தந்திருப்பவர். புலவர் தொடர்ந்து சிறுவர்களுக்கான படைப்புகளை வண்ணக்கதிர் (தீக்கதிர்) இதழில் தந்து வருபவர். சிறார் இலக்கியம் படைப்பதில் தனியொளியாகத் திகழ்கிறார். அவர் இப்போது ‘’ விலையாய்ப் பெற்றதா விடுதலை?”என்ற சிறுவர் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
மனிதன் மேன்மையானவன். அவனை மேலும் மேலும் செம்மையான சிந்தனைகளால் செதுக்குவது அவசியம். அதனால்தான் வாசிப்பின் அவசியத்தை வானளாவப் புகழ்கிறார்கள். ஒரு பாறை சிலையாகிறபோது அடைகிற பரவசம் முக்கியமானதில்லையா? அதைவிடப் பயனுள்ளவை மனிதன் மேன்மையானவனாக மாறுகிற தருணங்கள். ஒருவனை முழு மனிதன் ஆக்குவதற்கான முயற்சிகள்தாம் இந்த முத்து முத்தான பாடல்கள். கருணை உலகத்தைப் படைப்பதற்காக ஒரு கவிஞன் கொள்கிற கரிசனம்தான் இந்தக் கவிதைத் தொகுப்பு.

“சட சட என்றே கொட்டும் மழையின்
சத்தம் காதில் இனிக்குது
டம டம என்றே இடிக்கும் ஒலியில்
டம்மென காதை அடைக்குது”

இந்தப் பாடல் மிகவும் ரம்மியமாய் வந்திருக்கிறது. பளிச் பளிச், துளித் துளி, ஒய்ங் கொய், மட மட, கொர்புர், சர், சர், சர சர, அட அட, சிவ் சிவ் என்று பாடல் முழுவதும் இரட்டைக் கிளவியால் இசையொழுங்கில் அசத்தியிருக்கிறார் கவிஞர்.
மழலைகள் புரிந்து கொள்கிற வகையில் மருத்துவக் குறிப்புகள் உணவில் சொல்ல முடியுமா என்று வியந்து போகிறேன். “பழகும் கிளிகள் பேசும் பார்த்த காகம் கூசும்” வரிகளின் அழகில் ஒரு வசீகரம்.

இன்னொன்று, இவை குழந்தைக்கான பாடல்கள் அல்ல. சிறுவர் பாடல்கள். குழந்தைப் பாடல்களை விடக் கூடுதல் நுட்பம்; கருத்துச் செறிவு; சிறுவர்கள் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது என நம்பலாம். ஒரு மரத்துக்குள் ஒளிந்திருக்கும் நாற்காலியைக் கண்டுபிடிப்பது போல ஒரு மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மேன்மையான மனிதனைக் கண்டுபிடிக்க ஒரு கவிஞன் செய்யும் கவிதை முயற்சி.

சிறுவர்களுடன் உரையாடல் நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களின் உலகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்; நமது உலகத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கையே கவிஞரின் இந்தத் தொகுப்பு நமக்குப் புலப்படுத்துகிறது.

ஏன் ஒருவரைச் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொள்ள வைக்கிறது? இந்த உலக நடவடிக்கைகள் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. இங்கு நடக்கும் அநீதிகளும் கொடுமைகளும் அவருக்குச் சம்மதமில்லை. இதற்கான மாற்று என்னவென்பதை முற்றிலும் தீர்மானிக்க முடியாத சூழலில் குறைந்தபட்சம் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் தன் அபிலாசைகளைச் சொல்லி வைக்கிறார். தான் அடைய இருந்த ஆனந்தமயமான சமுதாயத்தைக் குழந்தைகள் மூலம் அடைய நினைக்கிறார். தன்னுடைய கனவுகளைக் குழந்தைகளின் மேல், சிறுவர்களின் மேல் ஏற்றி வைக்கிறார் என்று கூடச் சொல்வேன்.

எல்லாமே ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) என்றாகிவிட்ட இந்த இணையவெளி உலகில் குழந்தைகளை, சிறுவர்களைப் பாடல்கள் ஈர்த்துவிடுமா என்கிற கேள்வி எழலாம். உண்மைதான். உறவுகளின் தன்மைகள் மாறியிருக்கின்றன. ஆனால் அடிப்படையில் மனித உறவுகள் குழந்தைகளை மையம் கொண்டிருக்கின்றன. புத்தகங்களில் பாடல்கள் படித்த குழந்தைகளும் சிறுவர்களும் அப்பாடல்களை இப்போது யு டியுப்-இல் கேட்கத்தானே செய்கிறார்கள். மட்டுமல்ல. இணையவெளி பயன்பாடு ஒன்று இருக்கிறபோது, புத்தகவழி போதனையும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.

குழந்தைக்கு முதலை பொம்மைதான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அது யானை பொம்மையையும் விரும்பலாம். கரடி பொம்மையையும் விரும்பலாம். இணையவெளி காலத்திலும் புத்தகங்களுக்கான காலம் முடிந்துவிடுவதில்லை. புத்தகங்கள் மட்டுமன்றி, பால முருகு போன்ற பாவலர்கள் இணையவெளி மூலமும் தங்கள் இருப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கூடுதல் அவசியமும் இருக்கிறது.

மாம்பழக் கன்னத்தைச் செல்லம்மா – உன்
மாணிக்கப் பற்களால் கடியம்மா!
கொம்புப் பலாச்சுளைக் கண்ணம்மா – உன்
கொவ்வை இதழ்களால் சுவையம்மா!

என்று சொல்கிறபோது இவர் வெறும் அழகியல் தன்மைகளோடு தன் அரிச்சுவடியை முடித்துக் கொள்வதில்லை என்பது புரிகிறது. தனது ஆழ்ந்த நுண்புலத்தை வேறுவிதமாக வெளிப்படுத்தத் தவறவில்லை.
“கூந்தலில் மேகம் தெரியுதம்மா” என்கிறபோது கவிஞர்கள் பெண்களின் கூந்தலை மேகம் என்று வருணிக்கிற பழைய சித்தாந்தம்தானே என்று தோன்றும் ஆனால் தன் நுண்மாண் நுழைபுலத்தை அடுத்த வரியிலேயே நிரூபித்துவிடுகிறார்….“ – உன் கூரிய அறிவு ஆயுதமாம்”
எல்லாம் விதி. எனக்கு இப்படி ஆகிவிட்டது. இப்படியான புலம்பல்களுக்குக் குழந்தைகளும் சிறுவர்களும் பலியாகிவிடக்கூடாது என்பதில் கவனம் தெரிகிறது….

“ஆதியும் அந்தமும் ஏழையாய்
ஆனது உன்விதி என்பதா? – அட
நீதியும் இதுவென கழிப்பதா?
நீள்நிலம் உன்னைப் பழிப்பதா?”

என்ற வினாவைச் சிறுவர்களை நோக்கி வைக்கிறார்.

“சிறுவன் தானே என்று எண்ணி
சிந்தித் திருக்காதே – உலகில்
சிறுவர் செய்த சிறந்த செயலைச்
சிந்திக்க மறக்காதே”

என்று கவிஞர் சிறுவர்களை நோக்கிப் பாடுகிறபோது நான் எழுதிய கவிதையொன்று நினைவில் நிழலாடுகிறது…கீழ் வெண்மணியில் அரைபடி நெல் கூடுதலாகக் கேட்டுப் போராடியவர்களைத் தீயிட்டுக் கொளுத்தியதற்கு நான் எழுதிய கவிதை

“சப்பிமுடியாத மார்பகத்திலிருந்து
பிடுங்கியெறியப்பட்ட சிசுதான்
உலகின்
முதல் குழந்தைப் புரட்சியாளன்”

கவிஞர் குழந்தைகளுக்காகச் சொல்ல வந்த கவிதைகளே அறிவின் சூத்திரங்களாக ஆகிவிடுகின்றன. அம்மாவை அன்பின் சூத்திரமாக அறிவோம். கவிஞர் சொல்கிறார்: “அம்மா… நீ… சும்மா என்ற சொல்லை அழித்த சூத்திரம்”. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் அறிவித்திருக்கலாம். ஆனால், கவிஞர் சொல்லும் தம்மபதமோ தனித்துவம் வாய்ந்தது:

“பறக்கும் பலூன் பார்த்திடவே
பற்றும் ஆசைகள் – அதில்
பிறக்கும் இன்பம் பெற்றிடவே
பெரிய ஆசைகள்!”

காட்டில் வசிக்கக் கூட்டில் இடங்கேட்கும் குழந்தைகள், சிங்கத்துடன் வசிப்பதற்குக் குகை கேட்கும் குழந்தைகள் கடைசியில் காட்டு நண்பர்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வார்கள்:

“உங்கள் வீட்டைக் கொள்ளையிடும்
உளுத்தர் தம்மை விரட்டிவிடு
பொங்கும் வனத்தைச் சூறையிடும்
பொல்லாதவரைத் துரத்திவிடு”

ஆசிரியர் என்பதன் இலக்கணத்தை குழந்தைகள் வாயிலாக கவிஞர் பசுமரத்தில் ஆணி அறைவதைப் போல பதங்களை அறைகிறார்:

“அறிவியல் அறிவை ஊட்டுவார்
அறியா நோயை ஓட்டுவார்”

வள்ளுவரின் ‘இனியவை கூறல்’ அதிகாரத்தைக் குழந்தைகளுக்கு மூன்றே சீர்களில் முத்திரை பதிக்கிறார்:

“வாயைத் தேனாய் ஆக்கிடுவாய்
வாய்மை மட்டுமே பேசிடுவாய்”

கீழ்க்கண்ட வரிகளில் கவிஞரின் நுட்பம் தெரியவரும்.

மக்கள் தன்னில் பேதம் பார்க்கும்
மடமை வேண்டுமா – தம்பி
ஈக்கள் மொய்க்கும் சாதி மதங்கள்
இங்கு வேண்டுமா?

ஈக்கள் மொய்க்கும் சாதி மதங்கள் என்று சொல்வதன் பொருள் மிக ஆழமானதாக நான் புரிந்துகொள்கிறேன். ஈக்கள் எப்போது மொய்க்கும்?…இனிப்புக்கு ஈக்கள் வரும். முதன் முதலாக சாதி மதம் மனிதனுக்கு இனிப்பான விஷயங்களாகத்தாமே இருக்கின்றன? சாதியும் மதமும் ரத்தம் சிந்த வைக்கிறபோது கதை கலவரமாகிவிடுகிறது. இனிப்பை மொய்க்க வந்த ஈக்கள் பிணத்தையும் மொய்க்க வரும். சாதி மதம் என்றாலே கலவர பூமியாகிவிடுகிற, கற்காலமாகிவிட்ட தற்காலத்தில், சடலங்களாவது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. அதனால்தான் குறிப்பாக உணர்த்துகிற விதமாகப் புலவர் “ஈக்கள் மொய்க்கும் சாதி மதங்கள்” என்று சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.

பல வினாக்களுக்கு தீர்க்கமான தீர்வையும் சொல்லுகிற சிந்தனைப் போக்கு இருக்கிறது. குழந்தைகள் சிறார்கள் புரிந்துகொண்டால் வீட்டிலும் நாட்டிலும் நல்ல விளைவுகள் உண்டாகலாம். கவிஞர் கனவு நனவாகலாம்.

நூலின் தகவல்கள் :

நூல் : விலையாய்ப் பெற்றதா விடுதலை?
ஆசிரியர் : கோவி.பால.முருகு

நூல் அறிமுகம் எழுதியவர் : 

கவிதை: எனது வசியம் - நா.வே.அருள் - Book Day

நா.வே.அருள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *