எம்.எஸ் ராஜகோபாலின் கவிதை “பெரியார் பேசுகிறார்”
“வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..”
கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது. ஆனால் கவிதை முடிகிறபோதுதான் புரிய ஆரம்பிக்கிறது. நம் மண்டையில் ஓர் ஆணியை வைத்துச் சுத்தியலை ஓங்கியதுதான் கவிதையின் இந்த வரியோ?கவிதை என்பது எழுதுவது அல்ல…. நேர்வது. கவிஞர்கள் எத்தனையோ கவிதைகளை எழுதலாம். ஆனால் எப்போதாவது ஓரிருமுறைகள்தாம் ‘கவிதைகள் நிகழ்கின்றன”. அப்படி நிகழ்ந்த ஒரு கவிதையாக எனக்குத் தோன்றும் கவிதை இது.விஷயம் ரொம்ப சிம்பிள். இதை ஒரு முகநூல் பதிவாகவும் கொள்ளலாம். அல்லது முகநூல் பதிவு எழுதும் ஒருவரும் அவரது முகநூலைப் பின்தொடரும் ஒருவரும் நேரில் உரையாடுவதாகவும் நேர்ந்து கொள்ளலாம். இருவரும் நண்பர்கள். இப்படியான இப்படியா அப்படியா என்று சந்தேகம் கொள்ள வைப்பவை கவிதையின் இரண்டு வரிகள்.
“நண்பர் இளமைக்கால நினைவுகளை முகநூலில்
எழுதுவதில் பெருமிதம் கொள்பவர்..“
நாம் வசதிக்காக, நேரில் நடந்த உரையாடலாகவே நினைத்துக் கொள்வோம். நெடுநேர உரையாடல்! தேநீர் இடைவேளை. இரண்டாம் கோப்பை. ஒரு கோப்பைத் தேநீருக்குள் என்ன இருக்கும்? சுவை என்று சொல்லிவிடலாம். சுவைக்குள்… சுருள் சுருளாய் எழும் புகையைப் போல சுழன்று சுழன்று வரும் மலரும் நினைவுகள். அந்தக்கோப்பைக்குள்ளிருந்து உறவின் ஒவ்வொரு நினைவின் நிமிடங்களும் புகை நதியைப்போல காற்றின் கரைகளில் தள்ளாடி அசைகின்றன. ஒரு மனிதன் பழையவனாகிறபோது நமக்கு அவனை மேலும் பிடித்துப் போய்விடுகிறது. மனிதன் நினைவுகளின் போதையில் மிக அழகாகத் தள்ளாடுகிறான்.
“நிதானமாக இரண்டாவது கோப்பையை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்..
சிறிது சிறிதாக பருகி நேரத்தின் வேகத்தை குறைக்க முயன்றார்..”
இப்படியான சூழலில், இரண்டாவது கோப்பை என்ன? மூன்றாவதை நோக்கியும் முன்னேற முடியும். மிதமான சூடும்… இதமான நினைவும் போதாவா? நினைவுகளின் காட்டில் மேய ஆரம்பித்துவிட்டது மனம். ஆல்பத்தில் ஒவ்வொரு புகைப்படமாய் அசைகிறது.
“பள்ளி கல்லூரி
விடுமுறைகளின் போது
தாத்தாவின் பண்ணைக்கு செல்வோம்..
நிறைய அத்தைகள்.. மாமன்கள்..
என்னுடைய வயதில்
ஏழெட்டு அத்தை மாமன் மகள்கள்..”
அத்தை மாமன் மகள்களை நினைக்கிறபோதுதான் நினைவுகளுக்கு ருசி இருப்பதை அறிந்துகொள்கிறது மனம். ‘வாலி பாலாய்’ உருளும் வார்த்தைகள். பூப்பந்தாய் சிந்தும் புன்னகை. அடிக்கடி சிக்சர் அடிக்கும் கிரிக்கட்….அவ்வளவு சீக்கிரமாகவா கழிந்துவிட்டது வாழ்க்கை என்று அங்கலாய்க்க வைக்கிறது.
“வேர்க்கடலையை உரித்துக் கொடுப்பது..
விளையாட்டில் இருட்டில் பதுங்குவது..
தாவணியை அவிழ்த்து
மீன்கள் பிடிப்பது …
டூரிங் கொட்டகையில்
திரைப்படம் பார்ப்பது..
திரும்பும்போது இருளில்
கையை அழுத்தி பிடித்துக் கொள்வது…
டூயட்டுகளை மாறி மாறிப் பாடுவது…
காலங்களை இழந்து விட்டோம் தோழர்..
கண்களில் காதல் உணர்வு
மின்னியது…’’
காதலில் டூயட்டுகளை மாறி மாறிப் பாடியிருந்தாலும் இன்று வாழ்க்கை ஜோடிகளை மாற்றி மாற்றிப் போட்டுவிட்டிருக்கிறது. கனவுகள் வடிந்த கண்களில் இன்று நிஜ வாழ்க்கையின் பீளைகள் வழிவதுதான் மிச்சம். அசைபோட வைக்கிற அற்புதமான தேனிலவு காலம். நிச்சயம் இந்த நேரத்திற்கு இரண்டாம் கோப்பைத் தேநீர் தீர்ந்துபோயிருக்கும். என்ன செய்வது? அத்தனை ஆசைகளும் ஆவியாகி ஆறிப்போய்விட்டது!
இனிமேல்தான் ‘கிளைமேக்ஸ்’. இதுவரையிலும் இரண்டு கோப்பைத் தேநீர் கொடுத்த நண்பரின் மனைவி இப்போது ஸ்நாக்ஸ் பரிமாற ஆரம்பிக்கிறார். தேநீர் சூடாக இருந்தது. ஸ்நாக்ஸோ சுவையாக இருக்கிறது.
நண்பரின் மனைவி இலேசாகச் சிரித்துக் கொள்கிறார். அர்த்த புஷ்டி ஆரம்பமாகிறது. மனையினுடைய இதயத்தின் மர்ம முடிச்சு அவிழ ஆரம்பிக்கிறது. அவிழ அவிழ கணவனின் கண்களில் சிக்குவிழுகிறது. காதல் ஒரு விசித்திரமான நூல் இல்லையா?
“எனக்கும் பள்ளிப் பருவம் இருந்தது…
எனக்கும் மாமன் மகன்கள்
இருந்தார்கள்..
எனக்கும் தாத்தா கிராமத்தில்
இருந்தார்..
எனக்கும் தாவணி அணியும் பருவம் இருந்தது…
அங்கேயும் நீரில் மீன்கள்
இருந்தன..
எங்களூரிலும் டூரிங் கொட்டகை இருந்தது..
அங்கேயும் திரைப்படங்கள் ஓடின..
அங்கும் இருள் இருந்தது.
என் முறைப்பையன்களுக்கும்
கைகள் இருந்தன…
எனக்கும் கைககள் இருந்தன..”
இறுதிவரி நச்சென்று முடியும். “நண்பரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை”. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏன் இப்படியொரு இரும்புத் திரை? பாரம்பரியம் இட்டுவைத்தப் பழைமையின் முத்திரை. பருவ நாடகம் ஓரங்க நாடகமா என்ன? இதயம் இருபாலாருக்கும் பொதுவானதுதானே? ஒரு பொம்மையை மட்டும் களவினால் செய்வதும்…. ஒரு பொம்மையைக் கற்பினால் செய்வதும்… இது ஒன்றும் கடவுளின் கைத்தொழில் அல்ல… இயற்கையின் படைப்பு. இங்கே சரி நிகர் சமானம். இந்தக் கவிதையைப் பெரியாரே வந்து பேசுவதுபோல் இருக்கிறது.
ஒன்றைக் கவனித்தீர்களா? இன்னும் பரிமாறுவது பெண்… பசியாறுவது ஆண்….பெரியார் இதையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இனி, முழுக் கவிதை…
நண்பர் இளமைக்கால நினைவுகளை முகநூலில்
எழுதுவதில் பெருமிதம் கொள்பவர்..
நிதானமாக இரண்டாவது
கோப்பையை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்..
சிறிது சிறிதாக பருகி நேரத்தின் வேகத்தை குறைக்க முயன்றார்..
வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..
பள்ளி கல்லூரி
விடுமுறைகளின் போது
தாத்தாவின் பண்ணைக்கு செல்வோம்..
நிறைய அத்தைகள்.. மாமன்கள்..
என்னுடைய வயதில்
ஏழெட்டு அத்தை மாமன் மகள்கள்..
காலம்தான் எவ்வளவு இனிமையானது..
வேர்க்கடலையை உரித்துக் கொடுப்பது..
விளையாட்டில் இருட்டில் பதுங்குவது..
தாவணியை அவிழ்த்து
மீன்கள் பிடிப்பது …
டூரிங் கொட்டகையில்
திரைப்படம் பார்ப்பது..
திரும்பும்போது இருளில்
கையை அழுத்தி பிடித்துக் கொள்வது…
டூயட்டுகளை மாறி மாறிப் பாடுவது…
காலங்களை இழந்து விட்டோம் தோழர்..
கண்களில் காதல் உணர்வு
மின்னியது…
நண்பரின் மனைவி சிறிதாக
புன்னகைத்துக் கொண்டே பரிமாறத் தொடங்கினார்..
“என்ன சிரிப்பு ” என்றார் நண்பர்…
ஒன்றுமில்லை..
எனக்கும் பள்ளிப் பருவம் இருந்தது…
எனக்கும் மாமன் மகன்கள்
இருந்தார்கள்..
எனக்கும் தாத்தா கிராமத்தில்
இருந்தார்..
எனக்கும் தாவணி அணியும் பருவம் இருந்தது…
அங்கேயும் நீரில் மீன்கள்
இருந்தன..
எங்களூரிலும் டூரிங் கொட்டகை இருந்தது..
அங்கேயும் திரைப்படங்கள் ஓடின..
அங்கும் இருள் இருந்தது.
என் முறைப்பையன்களுக்கும்
கைகள் இருந்தன…
எனக்கும் கைககள் இருந்தன..
ஒற்றுமையை நினைத்தேன் சிரித்தேன் என்றார்..
நண்பரின் முகத்தை பார்க்க முடியவில்லை..
ஆனாலும் அது என் கண்களில்
தெரிந்தது.
