1976இல் வெளிவந்த நாவல் போக்கிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைக் கடந்து வெளிவந்திருப்பதாகவே கருதலாம். ஆனாலும் அது ஒரு பழைய நாவல் என்னும் தோற்றம் தராத வகையிலும் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகும் வகையிலும் இதன் மையக்கருத்து அமைந்திருக்கிறது.
மலை சார்ந்த ஒரு கிராமத்தில் ஒரு வேதியத் தாது கிடைப்பதை அறிந்தவுடன், அந்த இடம் ஒரு தொழில்மைய நகரமாக மாறத் தொடங்குகிறது. அந்தக் கிராமத்து மக்களும் வேறு போக்கிடமின்றி, அந்தத் தாதுவைத் தோண்டியெடுக்க வருகைதரும் தொழிற்சாலையிடம் தம் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக அவர்கள் தரும் ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் ஊர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையை ஒட்டிய பகுதிக்கோ குடியேறுகிறார்கள். அதிகாரமும் பணமும் தலைதூக்கும்போது, சாமானியருக்கும் விவசாயத்துக்கும் போக்கிடம்தான் ஏது என்பதை நாவல் பேசுகிறது.
நம் நாடு சுதந்திரமடைந்த கால்நூற்றாண்டுக்குள் தொழிற்சாலைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவந்த நேரத்திலேயே இந்த நிலைமை தொடங்கிவிட்டது. இன்றோ, சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்த நிலையிலும் நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில்மயத்துக்காக நாம் மகிழ்வோமா அல்லது அழிந்துவரும் கிராமப் பொருளாதாரத்திற்காக நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை விட்டல்ராவின் இந்த நாவல் மனத்தில் தோற்றுவிக்கிறது.
இன்று பல இடங்களில் ’செல் டவர்’ அமைப்பதற்காக எளிய மக்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ கனிமவள நிறுவனங்கள் இழப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு இழப்பீடும் தராமல் அவர்களை இழுத்தடிக்கின்றன. இப்படியெல்லாம் இன்றும் நிலைமைகள் இருப்பதாலேயே இந்த நாவலின் இளமை குன்றாமல் நீடித்திருக்கின்றது. காலங்கள் மாறினாலும் கடந்தாலும் சாதாரண எளிய மக்களுக்கு எதுதான் போக்கிடம்?
நாவலில் நடைபெறும் மற்ற இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கணவனை இழந்த பேச்சி தன் பத்து வயது மகனோடு தனிமையில் வசிக்கிறாள். மற்றொன்று, டேனிஷ்பேட்டையின் பள்ளிக்கூடம். கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைமையில்தான் இருக்கின்றன. கிராமத்துப் பள்ளிக்கூடம் எனில், அந்த ஊருக்கு வரும் அலுவலர்கள் தங்கிச் செல்வதற்கான இடமாகவும் பெரிய மனிதர்கள் வீட்டுப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்படுவதையே பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முழுமையான அளவு ஈடுபாடும் காட்டுவதில்லை. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் நல்ல ஆசிரியர் ஒருவர் கிடைத்தால் சிறப்பாக முன்னேறும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒரு கிராமத்தின் போக்கிடமாக, அதாவது ஒதுங்குமிடமாகவே அது கருதப்படுகிறது.
பேச்சி, கருணையுள்ளத்தோடு படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பாத்திரம். ஆனால் அந்தப் பெண்ணை தம் உடற்பசிக்கான போக்கிடமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். கவுண்டர், தன் மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பேச்சியிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், அது வெறும் உடற்பசியைத் தீர்த்துக்கொள்ளும் உறவாகவே இருக்கிறது. மேலும், அவர் அவளுடைய நிலங்களையெல்லாம் தானே ஏதோ ஒரு விலை போட்டுக்கொடுத்து தன் பெயரில் மாற்றிக்கொள்வதன் வழியாக பேச்சியை மறைமுகமாக ஏமாற்றுகிறார். பேச்சிக்கோ, தனக்கு கவுண்டரின் உறவு அந்தக் கிராமத்தில் தனித்து வாழ்வதால் நேரும் தொல்லைகள் நேராமல் இருப்பதற்கான ஒரு போக்கிடம். அவ்வளவுதான். பெண்ணின் பாதுகாப்பு தேடும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆணின் மனநிலையை, இந்த உறவு கூர்மையாக வெளிப்படுத்துகிறது. நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கும் சுகவனம் அவ்வப்போது தன் உடற்பசியை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழியாக மட்டுமே பேச்சியின் அன்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். அந்த அபலைக்கு உண்மையான அன்பு இத்தனை இடர்ப்பாடுகளுக்குப் பிறகே பீர்முகம்மதுவிடமிருந்து கிடைக்கிறது.
1976இலேயே விட்டல்ராவ் பேச்சி பாத்திரத்தை தன் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுயமாக யோசித்து முடிவெடுப்பவளாகப் படைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். அவளும் சுகவனமும் சேர்ந்திருந்ததை, கவுண்டரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியே, சுப்புரு அவளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான். ஆனால் பேச்சியோ “போ. யாருகிட்ட வேணா சொல்லிக்கோ. உன்னோட வரமாட்டேன்” என்று சொல்லும் இடம் அபாரம். பிங்க் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. பெண் என்பவள் தன் விருப்பத்துக்கு ஒரு ஆணுடனான உறவுக்கு உடன்படவோ மறுக்கவோ உரிமையுள்ளவள் என்பதைச் சொல்லும் திரைப்படம் அது. இந்தக் கருத்தை விட்டல்ராவ் 1976இல் தன் நாவலில் பதிவிட்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.
“அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்பதுபோன்ற நிலை சுகவனத்துக்கு. தொடக்கத்தில் சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டும், கிராமத்துப் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்ற துடிப்போடு டேனிஷ்பேட்டை கிராமத்துக்கு வரும் சுகவனம் இந்தச் சமூகச் சீர்கேட்டில் நிலவும் சுழலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தானும் அகப்பட்டுக்கொள்கிறான். கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் அவனுக்கு வேறு என்ன போக்கிடம்? மதிய உணவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் அவனுடைய மனம், அப்படிப் பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவுக்கு மாற்றமடைந்துவிடுகிறது. பள்ளியில் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தவன் ப்ரைவேட் டியூஷனில் வரும் வருமானத்திற்காக ஆசைப்படுகிறான். தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையை விட முடியாத அவன் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பின் சீர்கேட்டுக்குள் சிக்கிக்கொள்வதைத் தவிர அவனுக்கென வேறு என்ன போக்கிடம் உள்ளது? அவன் தன் வாழ்க்கைப்போக்கையே மாற்றிக்கொள்கிறான்.
நேர்மை, நியாயம், தர்மம், உண்மை என வாழ நினைப்பவர்களை இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் நிறைந்த இந்த அமைப்பு அமைதியாக வாழ விடுவதில்லை. வேறு என்னதான் போக்கிடம் என்று அவர்களும் இந்தச் சீர்கெட்ட அமைப்புக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.
விவசாயம், கிராமம் என்று தங்கள் உயிரையே வைத்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் வந்து, வேலை வாய்ப்புகளைக் கொடுத்து நிலங்களைப் பிடுங்கினால், அவர்களுக்கு வேறு எதுதான் போக்கிடம்? தன் நிலத்துக்கு தானே முதலாளியாக இருந்தவன் கூட கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவனுக்கு வேறு என்னதான் போக்கிடம்?
பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆட்டின் கால்களில் ஒட்டியிருக்கும் தாரை பீர்முகம்மது அகற்றும் காட்சியும் தீப்பெட்டியில் அடைத்துவைக்கப்பட்ட வண்டு பறந்துபோகும் காட்சியும் நாவலில் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.
சேலத்து வட்டாரமொழியில் இந்த நாவலை விட்டல்ராவ் அழகாக படைத்துள்ளார். மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும், நாவலை வாசிக்கும் வாசகர்களின் மனத்தில் தோன்றவைக்கும் விட்டல்ராவ், கதையை அப்படியே சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். அவராக தத்துவங்கள், கேள்விகள் என எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. நாவல் தெளிவாக நீரோட்டமாக ஒரே வாசிப்பில் படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பின்னிணைப்பாக விட்டல்ராவின் நேர்காணலை (பாவண்ணனால் எடுக்கப்பட்டது) இணைத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்று விட்டல்ராவ் எழுபது வயதைக் கடந்தவர். பாவண்ணனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் திருத்தமான உடையணிந்து, நிழற்படக்கருவியோடு சுறுசுறுப்பாக இங்குமங்கும் இயங்கியபடியே இருந்தார். அனைவரோடும் கலகலப்பாக பேசினார். போக்கிடம் நாவலை அவர் 1976இல் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரைப்போலவே நாவலும் புதுப்பொலிவோடு இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. மறுபதிப்பாக, இந்த நாவலை வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
(போக்கிடம் – நாவல். விட்டல்ராவ், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை, 38. விலை ரூ180)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.