“வியனுலகம்” சிறுகதை (Viyanulagam Short Story) - தேனி சீருடையான் (Theni Seerudayan) | தமிழ் சிறுகதைகள் (Tamil Short Story) - Book Day Kathaikal

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

“வியனுலகம்” சிறுகதை

– தேனி சீருடையான்.

அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா?

“என்னம்மா சொல்றீங்க?”

“நெசந்தேங் மகனே. ஒங்கப்பா ஆவி சாந்தி அடையணும்னா நீ அவனுகள சல்லடக் கண்ணா பிச்சு எறியணும். நம்ம வம்சத்தோட கொழுந்து நீ; வாழவச்சவங்கள வணங்கலாம்; சாகடிச்சவங்கள வனக்கி எடுக்கணும்.”

எனக்குள் ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. ஆங்காரம் மூளையில் ஏறி அமர்ந்து சிவந்த நெருப்பைக் கக்கத் தொடங்கியது. “என்னம்மா செய்யணும்?”

“ஒங்கப்பாவக் கொன்ன அதே தினுசுல அவனுகளையும் கொல்லணும். அண்ணந்தம்பிக ரெண்டு பேரு மட்டுமில்லாம அவனுகள உசுப்பி விட்ட ஆத்தாகாரி உசுரயும் உருவி எடுக்கணும்.”

இரவு வெகுநேரம் வரை உறங்காமல் கிடந்த வேளை அம்மா சொன்ன காட்சிகள் மனசுக்குள் வந்து பயமுறுத்தின.

என் அப்பா சந்தன சிங்காரம். சிங்காரம் என்று எல்லாரும் அழைத்தார்கள். தனது சொந்தத் தென்னந்தோப்பில் காவல் இருந்த ஒருநாள் மாமன் மகன்களான சக்கரவர்த்தியும் சந்தானமும் தோட்டத்துக்குள் புகுந்து பல மரங்களின் தெக்கங்குலைகளை வெட்டி இறக்கினர். அப்பா சிங்காரம் “யாருடா அவனுக?” என்று கத்தினார்.

இருவரும் “நாங்கதேங்; என்னாங்கணும்குற?” எனக் கேட்டனர்.

“நெறபூட்டுல இருக்க வெள்ளாமைய நாசம் பண்றீகளே; நாயமா?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒம்பொண்டாட்டி கூட நெறபூட்டுலதேங் இருக்கா; அவளையா சீண்டுனம்?”

“ஏலே; அவ ஒங்கத்தடா; ஆத்தாளுக்குச் சமம்; இப்படிப் பேசலாமா?”

“ஓ அப்படியா? ஆத்தாளுக்குச் சமமா? அப்பன்னா எங்காத்தா கூட நீ படுப்பியாக்கும்? கோமாளித் தாயோளி.”

“வேணாம் மருமகன்களா; சம்பந்தவழி சீரழிஞ்சு போகும்.”

கைக்கை எனச் சிரித்தபடி கனமான தென்னங்குலை ஒன்றைத் தூக்கி அவர் மீது எறிந்தனர். கைகள் இரண்டையும் முன்னுக்கு நீட்டி, குலை கீழே சரியும்படி தள்ளிவிட்டார். “வேணாம் மருமகனே; நாம சம்மந்தவழிப் பட்டவுக; ஒங்காத்தா எனக்கு ஒடம்பொறப்பு; நமக்குள்ள எந்தக் கொறையிருந்தாலும் பேசித் தீத்துக்குவம்.”

வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு இருவரும் மல்லுக்கு நின்றனர். முதலில் அவரைக் கீழே தள்ளி வாய்க்குள் துணியடைத்து, பேச்சு வெளிவராமல் தடுத்தனர். அவர்களில் ஒருவன் இடுப்பில் செருகியிருந்த ஆக்கருவாளை எடுத்து அவரின் இடது கண்ணைக் குத்திக் கிழித்து ரத்தம் ஒழுகும்படி செய்தான். இன்னொருவன் இன்னொரு கண்ணை அதே வகையில் குருடாக்கினான். அவரால் அலற முடியாமல் துடிதுடித்து அழுதார். “என்னா தப்புச் செஞ்சிருந்தாலும் மன்னிச்சுக்க மருமகனே; இந்தத் தோட்டந்தொரவு எல்லாத்தியும் கூட எழுதித் தாரேங்; என்னய விட்டுருங்கய்யா.”

“அப்படியா? தோட்டத்துப் பத்திரம் எங்கருக்கு?”

“வீட்டுலதேங்; நீங்களே போயி எடுத்துக்கங்க.”

“ஒம்பொண்டாட்டியும் மகனும் கையெசுத்துப் போடுவாகளா?”

“போடாம என்ன; என்னோட சுய சம்பாத்தியம்;. தடுக்குறதுக்கு அவுகளுக்கு ஐவேஜு கெடையாது.”

“இந்தப் பம்மாத்தெல்லாம் வேணாம்; இது பூர்வீகச் சொத்து; நீ மட்டும் ஒப்புக்கிட்டாப் போதுமா?”

”பூர்வத்து சொத்து ஒரு பக்கம் இருந்தாலும் நானே சம்பாரிச்சதும் இருக்குல்ல.”

“அடிமொதலடிச்சு சுருட்டினதுதான?”

அவர் ஏதொன்றும் பேச முடியாமல் திணறியபோது தென்னை உச்சியில் இருந்து அரளிப் பூச்சி ஒன்று செத்துக் கீழே விழுந்தது. வேறு சில மரங்களில் இருந்தும் விழுந்தன. ஒரு மரத்திலிருந்து குருவி ஒன்று நீலம் பாரித்து மண்ணில் விழுந்து மடிந்தது. தென்னை மாத்திரை தின்று அவை செத்து விழுந்ததை அவர்கள் புரிந்துகொண்டனர்.

”வெஷ மாத்திர வச்சுருக்கியா? அந்த டப்பா எங்கருக்கு?”

“அய்யோ; வேணாம் மருமகனே; நாங் ஒங்காத்தாளுக்கு எம்புட்டு ஒதவி செஞ்சிருக்கந்தெரியுமா?”

அவர்கள் இடுப்பில் செருகியிருந்த மதுக் குப்பிகளை எடுத்துத் திறந்து அண்ணாக்க ஊற்றினர். அவர்களின் கண்கள் சிவந்து பழுத்ததை அவரால் காணமுடியவில்லை. “ஏலே கெழட்டு நாயி; எந்திரிடா?”

கண்களில் இருந்து ஒழுகிய ரத்தத்தைத் துடைத்தபடி பைய எழுந்தார். உலகம் இருட்டாய் இருந்தது. “வ்ருட்” “வ்ருட்” எனக் கத்திய சின்னச்சின்னப் பூச்சிகளின் ஒலியலைகள் துல்லியமாய்க் கேட்டது. தனது இடுப்பிலிருந்த பண்ணரிவாளை எடுத்து அவனுகளைக் கீறிவிடலாமா என நினைத்தபோது பார்வையற்ற மௌனம் தடை செய்தது. ஒருவன் அவர் வாயைப் பிளந்து பிடித்துக்கொள்ள இன்னொருவன் ஒவ்வொரு பல்லாய்ப் பிடுங்கினான். மூளைக்குள் வலி ஆங்காரமெடுத்து ஏறியது. தலை கிண்ணென வலித்தது. வாய்ரத்தம் உடம்பு முழுக்க சிந்தி சலசலத்தது. “அய்யோ; அய்யோ” என அலறினார். “இப்படியே கூட விட்டுருங்கப்பா; கொஞ்சநாக் கெடந்து செத்துப் போறேங். வலி தாங்க முடியல.”

“ஒன்னய உயிரோட விட்டா எங்க கெதி என்னாகுறது?”

“நீங்கதேங் செஞ்சீங்கன்னு வெளிய சொல்ல மாட்டேங்.”

“பெறகெப்படி சொல்லுவ?”

“கரண்டடிச்சுச்சுன்னு சொல்லி சமாளிச்சுக்குவங்.”

”கரண்டடிச்சா பல்லும் கண்ணுமட்டுமா சாகும்? உசுரும் போயிரும்.” சொல்லியபடி அவரின் குரல்வளையைக் கிழித்தெறிந்தான்கள். உயிர்மூச்சின் கடைசி ஒலி தொண்டைக் குழியிலிருந்து விலகி வானம் நோக்கிப் பாய்ந்தது.

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கதிகலங்கிப் போனேன். இத்தனை பெரிய கொடூரம் எங்கேனும் நடக்க முடியுமா? ராஜாக்கள் காலத்தில் தரப்பட்ட தண்டனை கூட இத்தனை சித்திரவதைப்பாடு கொண்டதாய் இருக்கவில்லை.

“இந்தக் கொடும செய்ய என்ன காரணம்மா?”

”அவுக ஆத்தா ஒங்கப்பா கூட பொறந்தவதான? இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி ஏத்திவிட்டுருக்கா?”

“இவ்வளவு பெரிய சதி நடக்குதுன்னா ஏதோ ஒண்ணு இருக்கணும்.”

“அவுகளுக்குச் சொந்தமான ரெண்டு செண்டு எடத்த ஆருக்கும் தெரியாம பட்டாப் போட்டுட்டாராம்.”

“வெறும் ரெண்டு செண்டா?”

“ஆமா மகனே. அதுகூட நம்ம நெலத்துக்குள்ள போக வழி இல்லைன்னு எம்புட்டோ கெஞ்சிக் கேட்டுப் பாத்திருக்காரு; நாட்டாமய வச்சுப் பஞ்சாயத்துப் பேசியும் வழி பொறக்கலைன்னதும் வம்படியா பாதை போட்டு நடபாத அமச்சிருக்காரு.”

மாமாவும் அத்தையும் சாந்தமானவர்கள். வம்புதும்புக்குப் போகும் வழக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. அப்புறாம் எப்படி இந்தக் கொடூரம் நிகழ்ந்தது? இன்னும் கொஞ்சம் யோசித்துத்தான் எந்தக் காரியத்திலும் ஈடுபட வேண்டும். அம்மாவின் நோக்கம் அப்பாவைக் கொன்ற அதே பாணியில் அத்தையையும் கொல்ல வேண்டும் என்பதாய் இருந்தது. மாமா அம்மாவுக்கு அண்ணன் அப்புராணியாம். அவர் குற்றமற்றவர். அதனால் அவரை எதுவும் செய்ய வேண்டியதில்லை; அவளை மட்டும் கீஸ்திரி மேஸ்திரியாய்க் கிழித்துவிட வேண்டும். அவர் மகன்கள் இருவரும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவன்களைத் தூண்டிவிட்ட அத்தையைப் பழிவாங்க வேண்டும்.

அம்மாவுக்குக் கல்யாணமாகி ஒன்றிரண்டு வருடங்களுக்குள் அத்தையின் பகையாளி ஆகிவிட்டார். அவர்கள் நிலத்தில் பருத்தி பொதுபொதுவென விளைந்து வெண்மை தட்டியபோது அம்மாவுக்குப் பொச்சுக்காப்பு உண்டானது. அத்தை அவர்கள் தோட்டக்காட்டில் மருந்தடித்ததால் அங்கிருந்த பூச்சிகள் தமது நிலத்தில் புகுந்துவிட்டதாகக் கூறி அம்மா வம்பிழுத்துவிட்டார். “ஒங்க தங்கச்சிய ஏன்னு கேக்க வக்கில்லையா?” என்று அப்பாவைத் தூண்டிவிட்டார்.

“எந்தங்கச்சிமேல தப்பில்ல; ஒங்கண்ணந்தேங் காரணம்.”

“எங்கண்ணெங் அப்பாவி; சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுக்குறவ அவதேங்;.”

“அவ சொன்னா ஒங்கண்ணனுக்கு எங்க போச்சு அறிவு; ஆள் பிடிச்சு மருந்தடிக்க வச்சது அவெந்தான?”

”வம்ச புத்தியக் காட்டிட்டைல்ல; கொலகொல்லி வம்சம்.”

அம்மா இரண்டு நாளாய்க் கஞ்சி காய்ச்சாமல் படுத்துக் கிடந்தார். அப்பாவோடு பேச்சுவார்த்தை வைக்காமல் ஒதுங்கினார். அப்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “என்னதாங் சொல்ற நீ?”

“என்னா ஏதுன்னு கேக்கணும்.”

உணர்ச்சிவசப் பட்டவராய், தனது தோப்பில் இருந்து தென்னை மட்டை ஒன்றை எடுத்துச் சென்று மாமாவின் மண்டையில் ஓங்கி அடித்தார். கிண்ணென்று வலித்த தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மல்லாக்க சாய்ந்தார். “நாங் என்ன மாப்பிள்ள தப்பு செஞ்சேங்?” திரும்பவும் ஓர் அடி.

அத்தை அலறியபடி வந்து மறித்து நின்று அப்பாவைக் கீழே தள்ளிவிட்டார். “ஒனக்கென்ன பித்துப் பிடிச்சுப் போச்சா? ஏங் இந்த ஆங்காரம்?”

“பேசாம போயிரு தங்கச்சி; எங்க வெள்ளாமய அழியணும்னு பாக்குறாங் ஒம்புருசெங்; நீயும் அதுக்கு வக்காலத்து வாங்குற.”

“நாங் ஒந்தங்கச்சிண்ணே; மதி மயங்கிட்டியா? ஒம் பொண்டாட்டி எதையாச்சும் ஒரசி ஊத்துனாளாக்கும்?”

தனது தங்கையின் முதுகிலும் ஓர் அடி போட்டார். சாட்டையடிபோல் நெடுநீளமான தடுப்பு விழுந்தது அத்தையின் முதுகில்.

இப்படித் தொடங்கிய பகைமை நாளும் பொழுதும் வளர்ந்தபடி இருந்தது. நான் படித்து முடித்து வந்த பிறகு என்னை அம்மா தூண்டிக்கொண்டே இருந்தார்.
கொல்லப்பட்ட அப்பாவின் உருவம் கண்முன் வந்து நின்றது. கண்கள் பிடுங்கப்பட்டு, பற்கள் உடைக்கப்பட்டு, முகம் பள்ளங்கள் விழுந்த சந்திர மண்டலமாய்க் காட்சியளித்தது.

அம்மா இன்னும் அதிகம் பேசி உசுப்பேத்திக் கொண்டே இருந்தார். “அல்லாருக்கும் ஒரு ரத்தந்தான ஓடுது; அவனுகளுக்கு இருக்க கையுங்காலுந்தான ஒனக்கும் இருக்கு; அவனுக ஆக்கருவாள வச்சு அத்தன காரியமுஞ்செஞ்சானுக; வீட்டுல வீச்சருவா கெடக்கு; கையில எடு; ஓடு; அந்தக் கொண்டி முண்டய நார் நாராக் கிழிச்சு எறிஞ்சுட்டு வா.”

அப்பாவைக் கொன்ற இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் கிடந்தார்கள். “இத்தனை பெரிய கொடூரம் செய்தவர்கள் இதற்கு மேலும் வாழும் தகுதியை இழந்துவிட்டனர். இவர்கள் உயிருடன் இருக்கும்வரை எந்த மனிதருக்கும் உயிர் உத்திரவாதம் இல்லை என்பதால் உயிர் பிரியும்வரை இவர்களைத் தூக்கிலிட ஆணையிடுகிறேன்” என்று நீதியரசர் தீர்ப்பு எழுதியிருந்ததால் வெளிவர முடியாத அளவுக்குச் சிறைக்குள் கிடந்தனர்.

அப்படியும் அம்மாவுக்கு ஆங்காரம் தீராததால் அனுதினமும் என்னோடு வாதிட்டபடி இருந்தார். அப்பாவைக் கொன்றதுபோல் அவர் தங்கையாகிய என் அத்தையைக் கொல்ல வேண்டுமாம். அவரின் ஆவேச மொழியால் உந்தப்பட்டு வீச்சரிவாளை சட்டையின் முதுகுப் பகுதியில் செருகியபடி அத்தை வீட்டை நோக்கி ஓடினேன். அத்தையும் மாமாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “வா மருமகனே” என்றார் மாமா. “வாங்க தம்பி” என்றபடி அத்தையும் எழுந்து நின்றார்.

“கொலகாரக் ………….” என்று கத்தியபடி அத்தையின் தோள்பட்டையை நோக்கி அரிவாளை வீசினேன். அது கொஞ்சம் விலகி வலதுகை ஓரமாய்ச் சரிந்தது. கையில் மேல் தோல் கிழிந்து ரத்தம் வழிந்து அத்தை கீழே சரிந்தார். மாமாவும் பக்கத்து வீட்டு மனுசிகளும் ஓடிவந்து என் காலை வாரிவிட்டுக் கீழே விழுக்காட்டினர். அத்தை எழுந்து சென்று துணியை நனைத்துக் கையில் கட்டிக் கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். மாமா அத்தையைப் பின் தொடர்ந்தார். நான் எழுந்து நிற்பதற்குள் அந்த மனுசிகள் என்னை இறுக்கிப் பிடித்து சீலைத் துணி ஒன்றை எடுத்துக் கைகளைப் பின்னுக்கு இறுக்கிக் கட்டினர். இன்று நான் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் அப்பாவைக் கொன்ற கொலையாளிகள் இருக்கும் அதே சிறையில். அவர்கள் பிளாக் எண் ஒன்றிலும் நான் இரண்டிலும்.

அம்மா வாரம் ஒருமுறை நேர்காணலுக்கு வந்து என்னைப் பார்த்துக் கண்ணீர் சிந்திவிட்டுப் போனார். “சூதானமா இரு மகனே; அந்தக் கொலகாரப் பயக உள்ளுக்குள்ள வச்சே ஒன்னயக் கொன்னுருவானுக.”

அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதாவது ஒரு புத்திமதி சொல்லுவார். “அந்தக் கொண்டிமுண்டைய கொல்லாம விட்டுட்டியே மகனே|” என்று ஒருமுறை சொன்னபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. அத்தை அவர் மகன்களை வந்து பார்த்தபோது அப்படியெல்லாம் பேசாதவராய் இருந்தார். மட்டுமில்லாமல் மகன்களுக்கு வாங்கிவரும் தின்பண்டங்களில் கொஞ்சம் எனக்கும் தரச் சொன்னதாய் மைத்துனன் சொன்னான். அவன்கள் என்னிடம் பெரிய அளவில் பகைமை பாராட்டவில்லை. எப்போதாவது சந்தித்தபோது “நல்லாருக்கியா மாப்பிள்ள” என்று விசரித்தனர். “நாங்கதேங் உணர்ச்சிவசப்பட்டுக் கொல செஞ்சுட்டம்; நீ படிச்சவெங்; அப்படிச் செய்யலாமா?”

“ஒங்கம்மா ஒங்களத் தூண்டிவிட்டுத்தான எங்கப்பாவக் கொன்னீக.”

“அப்படி இல்ல மாப்பிள்ள” என்று அவர்கள் ஒரு புதுக்கதை சொன்னார்கள்.

இருவீட்டாருக்கும் அருகருகில் தோட்டங்கள் இருந்தன. உள்ளே போகத் தனியாகப் பாதைகளும் இருந்தன. என் அத்தையின் தோட்டம் செழிப்பான மண்வளமும் நீர்வளமும் கொண்டு மகசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் அவர்களின் நீர் சேமிப்புத் திட்டம். .காலத்துக்கேற்ற உரமிட்டு, மருந்து தெளித்துப் பராமரித்தனர்.

காசுபணம் இருந்தும் அப்பா கஞ்சத்தனத்தோடு தோட்டத்தில் வெத்துக் காவல் இருந்தார். மராமத்துச் செய்வதற்கு அப்பா முயலவில்லை. அதிகச் செலவாகும் என்று நினைத்தாரோ என்னவோ? அத்தையின் தோட்டத்தில் வந்த அளவுக்கு வெள்ளாமை வரவில்லை. அப்பா தனது தோட்டத்துக்குப் போகும் பாதையையும் விளைநிலமாக்கிப் பயிர் செய்தார். அப்போதும் அவருக்குப் போதவில்லை. அனுதினமும் அவர் ஆசை வளர்ந்தபடி இருந்தது. அத்தைக்குச் சொந்தமான தோட்டத்தின் வரப்போரத்தையும் கட்டாப்பையும் தனது நிலத்தின் பகுதியாக்கினார். அத்தை வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அப்பாவுக்கு இரக்கம் உண்டாகவில்லை. “ஒனக்கு சீதனமமாக் குடுத்ததுதான; எனக்கும் பாத்தியம் இருக்கு.”

“நம்ம அப்பா எனக்கு ஒருகுளிதான தந்தாரு; ஒழச்சு சிக்கனப்படுத்திப் பெருக்குனம்; ஒழச்சுப் பெருக்கி இன்னக்கி நீ வச்சுருக்க அளவு நாங்களும் வச்சிருக்கம். எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட எப்படிண்ணே மனசு வருது?”

அவர் எதையும் அசட்டையாய் நினைத்து மேலும் மேலும் அத்தையின் நில எல்லைகளைத் தனதாக்க முயன்றார். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லியும் அனைவரையும் எடுத்தெறிந்து பேசினார். பரவு காவல் தங்கையா அறிவுரை சொன்னபோது அவரிடம் மல்லுக்கட்டித் தனது விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொண்டார்.. மாமாவும் அத்தையும் போலிசில் புகார் செய்தபோது “கோர்ட்டுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டனர். பொறுமைகாத்த மாமா ஒரு கட்டத்தில் எல்லைமீறிக் கோபமுற்றுத் தனது மகன்களைத் தூண்டிவிட்டு “அவெங் கையக் கால இணுங்கிட்டு வாங்கடா” என்று ஏவிவிட்ட நிலையில் மைத்துனர்கள் தங்கள் நிலத்தாய்க்குத் துரோகம் செய்தவனை சும்மா விடக் கூடாது என்று ஆக்கரிவாள் கொண்டு முதலில் உதட்டை மட்டும் கீறினர். அப்பா பெரிய வெட்டரிவாளால் மைத்துனர்கள் மேல் வீசினார். அவரிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கண்களைக் குருடாக்க வேண்டும் என்று தோன்றியது.

இல்லையென்றால் அவர் தங்களைத் தீர்த்துக் கட்டிவிடுவார். தாங்கள் தப்பும் விதமாய் வேகமெடுத்துச் செயல்பட்டனர். அப்போதும் அப்பாவின் வீரியம் குறையவில்லை. ரத்தக் கவுச்சி மைத்துனர்களைத் துரத்தியது. அப்பாவின் உயிரைப் போக்குவது என முடிவெடுக்கவில்லை என்றாலும் அப்பாவின் ரத்தத்துளிகள் மைத்துனர்களின் ஆக்கருவாளைப் பதம் தீட்டின. பூமிப் பரப்பில் என்ன நடக்கிறது என்று அனுமானமாகவில்லை. சுற்றுச் சூழலும் வானமண்டலமும் இருட்டுக் கட்டி மௌனமாய் விலகிநின்று வேடிக்கை பார்த்தன. ஆவேசம் பெருக்கெடுத்து ஓடிய தருணத்தில் அவரின் பற்களைப் பிடுங்கினர். அப்படியும் உணர்ச்சிவேகம் அடங்கவில்லை. அப்பா உயிரோடு இருந்தால் நிச்சயம் தங்கள் நிலங்களை அபகரிப்பார் என்பதோடு தங்கள் குடும்பத்தையே உயிரோடு புதைத்துவிடுவார் என்று தோன்றியபோது சங்கு வளையைக் கிழித்து உயிரைப் போக்கினர்.

இந்தக் கதையைச் சொல்லியபடி மைத்துனர்கள் அழுதார்கள். அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குள் அனுதாபம் முகிழ்த்தது. அப்பா இத்தனை பெரிய கொடுங்கோலனா? சொந்தத் தங்கையின் நிலத்தை அபகரிக்க மனம் எப்படி இடம் தந்தது? ஆனால் மைத்துனர்கள் சொல்லுவதெல்லாம் நம்பிக்கைக்கு உரியவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அம்மாவின் வார்த்தைகளுக்கும் மைத்துனர்களின் வாக்குமூலத்துக்கும் இடையில் நின்று மனம் அலறியது. எது உண்மை? அம்மாவின் சொற்களா; மைத்துனர்களின் வாக்குமூலமா?

மனம் அமைதியற்று அலைந்த தருணங்களில் சிறை நூலகம் என்னை வாங்கிக் கொண்டது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் அங்கு சென்று நிறைய வாசித்தேன். வரலாற்றுப் புத்தகங்கள் என்னை அதிகம் ஈர்த்தன. உலகில் நாகரீக யுகம் தோன்றிய நாளில் இருந்து மனிதப் பகைமை உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. மண்ணாசையும் பொன்னாசையும் மனிதனை வன்குணத்தோடு வளர்த்தன. தொழில்வளர்ச்சி உண்டாகி லாபச் சிந்தனை முகடுவரை உயர்ந்தபோது உலகம் முழுவதும் சந்தைகளை உருவாக்குவது என்ற நோக்கில் பிற நாடுகளைக் கொள்ளையடிக்கவும் தடுப்பவர்களைக் கொன்றொழிக்கவும் செய்தனர். அந்த வழியாக இன அழிப்புக் கோட்பாடும் உண்டானது. ஹிட்லரும் முசோலினியும் இன அழிப்பின் வழியே தங்கள் இன வளர்ச்சியையும் சாம்ராஜ்ய விரிவாக்கத்தையும் அமல்படுத்தினர். ஆனாலும் மனித சமுதாயம் இயல்பற்ற அத்தகைய வளர்ச்சிப் போக்கைக் குருதி சிந்தித் தடுக்கு முயல்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை என்ற ஞானத்தின் வழியில் மனித சமூகம் நடைபோட வேண்டுமானால் பெரும் மாற்றுச் சிந்தனை தேவை என்பதை நான் உணரத் தலைப்பட்ட போது எனக்கு பிணை விடுதலை வாங்கிவந்தார் அம்மா. மைத்துனர்களிடமும் சக கைதிகளிடமும் விடைவாங்கிக் கொண்டு ஊருக்குள் நுழைந்து வீட்டு முற்றத்துக்கு நடந்தேன். “ஒங்கப்பாவக் கொன்ன அந்த மொரசச் சிறுக்கிய சும்மா விடக் கூடாது மகனே” என்றார் அம்மா.

மறுநாள் காலை அத்தை வீடு நோக்கி நடந்தேன். அத்தை வரவேற்று அருந்தத் தண்ணீர் தந்தார். “மன்னிச்சிரு மருமகனே” என்று மாமா என்னைக் கட்டி அணைத்துப் பிடித்தார். “கையக் கால இணுங்கிட்டு வாங்கடான்னா உசுரப் பிடுங்கிட்டு வந்துட்டானுக” என அழுதார்.

பக்கத்துவீட்டு மனுசிகளும் அப்பாவின் முரட்டுத்தனமான செயல்பாடுகளையும் நில அபகரிப்புப் போக்கையும் விவரித்தனர். முதல் பிழை அப்பாவினுடையது எனப் புரிய முடிந்தது.

அத்தை மாமாவோடு சேர்ந்து நானும் கண்ணீர் சிந்தினேன். எனது நூலக வாசிப்பு என் மனதைப் பக்குவப்படுத்தியிருந்தது. உணர்வுநிலை பிறழ்ந்து உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள் மூழ்கினால் அசம்பாவிதங்கள் நிகழ சாத்தியமாகி விடுகிறது.; மைத்துனர்கள் உணர்ச்சிவேகத்தில் தவறு செய்துவிட்டனர். அம்மாவின் பேராசையும் ஒரு காரணம். மைத்துனர்களின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. அப்போது என் பள்ளி நண்பனும் கிரிமினல் லாயருமான பன்னீர் செல்வம் ஞாபகத்துக்கு வந்தார்.

சிறுகதை ஆசிரியர்:

Tamil writers: எழுத்தாளர் தேனி சீருடையான்

– தேனி சீருடையான்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. மிகச்சிறப்பான கதை. விருமாண்டி சினிமாவைப் போல பல விதமான பார்வைகளோடு சிறந்த கதையமைப்பு.

    • தங்கேஸ்

      அருமை தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *