கேரள மாநிலம் பொது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த ஒரு இலக்கினை வைத்து ஒரு நெடும் பயணம் செய்து வந்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக, அதுவும் ஷைலஜா டீச்சர் சுகாதார துறை அமைச்சரான பின் மாநிலத்தின் பொது சுகாதார நிறுவனங்கள் மீது பெரிதான கவனம் வந்திருக்கிறது என சொல்லலாம். “அரசு மருத்துவமனைகள் நோயாளிகள் நலம் சார்ந்தவையாகவும், தொழில் நுட்ப திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு மக்களின் மருத்துவத்திற்கான சொந்த செலவு என்பது வெகுவாக குறைய வேண்டும் என்ற மூன்று அம்சங்களை நாங்கள் குறிக்கோளாக வைத்திருந்தோம்.
ஆரம்ப சுகாதர நிலையங்கள் மிக முக்கியமானவை. அதுவும் ஊரக பகுதிகளில் இருப்பவை மிக மிக முக்கியமானவை. இன்று அவை அனைத்திலும் பரிசோதனை கூடங்கள் உள்ளதால் நோய் குறித்த ஆரம்ப கட்ட அறிகுறிகளை எளிதாக கண்டடைய முடிகிறது. மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவமனைகளில் புதிய உபகரணங்கள் உள்ளடக்கிய சிறந்த கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. எங்களின் தொடர்ந்த கவனம் என்பது இந்த அமைப்புகளை உறுதியாக்கி உள்ளது” – என சொல்கிறார் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா. நிபா நோய் தொற்றுக்கு பின்னான காலக்கட்டத்தில் மருத்துவர்களுக்கு தொற்று நோய்க்கான பயிற்சிகள் தரப்பட்டன. ஒரு தொற்று நோய் தாக்கும் காலத்தில் கைகொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த மாதிரி செயல்பாடுகளும் நடத்தப்பட்டன.
ஷைலஜா டீச்சர் எப்போது சுகாதார அமைப்பு குறித்து பேசினாலும் அது ஒரு குழு வேலை என்பதாகவே குறிப்பிடுகிறார். அவர், “நாங்கள் பெரு முயற்சி செய்து “நாம்” என்ற கருத்தினை விதைத்துள்ளோம்” என்கிறார். இந்த குழு மனப்பான்மையை உருவாக்க கேரளத்தின் 14 மாவட்டங்களில் இருக்கும் முன்னணி சுகாதாரத் துறை ஊழியர்களுடன் தினமும் காணொளி கருத்தரங்கு நடத்தப்பட்டது. “ஒவ்வொரு நாளின் காணொளி கருத்தரங்கும் ஒவ்வொரு தரப்பட்ட மக்களின் வேலைத் தன்மைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஒரு நாள், ஆஷா ஊழியர்கள், ஒரு நாள் நர்சுகள், ஒரு நாள் மாநில மருத்துவ அதிகாரிகள் என்று ஒவ்வொரு தரப்பாருக்கும் பிரத்யேகமாக இந்த காணொளி கருத்தரங்குகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த காணொளி கருத்தரங்குகள் மக்களுடன் உரையாட அவர்கள் சொல்வதை கேட்க மிக வாய்ப்பான ஒன்றாக அமைகிறது.
களத்தில் வேலை செய்பவர்களுடனான தொடர்பு என்பது மிக முக்கியமானது; அதை தக்க வைத்துக் கொள்ள நாங்கள் எல்லா வகையிலும் முயல்கிறோம். ஒரு மந்திரியோ அல்லது சுகாதாரத்துறை செயலாளரோ நேரிடையாக கள யதார்த்தத்தினை புரிந்து கொள்ள முயல்கிறார் என்பது ஊழியர்களின் மன உறுதியை கெட்டிப்படுத்துவதுடன் ஊக்கமும் தருகிறது, ஒரு பெரிதான மாற்றத்தை விதைக்கிறது” என்கிறார் ஷைலஜா டீச்சர். மிக நெருக்கடியான காலக்கட்டங்களிலும் ஷைலஜா டீச்சரின் தனித்த நடைமுறையை ஒத்ததாக இந்த குழு செயல்பாடு இருக்கிறது. சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஒரு கல்லூரி மாணவிக்கு கொரானா நோய் தொற்று உறுதியாக, அவருக்கு ஷைலஜா டீச்சரே தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து இருக்கிறார்.
எந்த மாதிரி விஷயங்கள் நடக்கும் என்கிற அறிவு குறைவாக இருக்கிற போது மிக அதிகம் தேவைப்படுவது மன உறுதியே. “இது இயல்பு நிலை அடைய இன்னும் நிறைய நாள் ஆகும். இந்த உண்மையை மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மற்ற வைரஸ் நோய் தொற்று போல் இல்லை இது. சிலருக்கு உடனே சரியாகின்றது சிலருக்கு 30 நாட்கள் வரை கூட ஆகிறது. உடலில் நோய் தொற்று உள்ளதா என கண்டடைவதே சிக்கலாக இருக்கிறது. சிலருக்கு ஐந்திலிருந்து 6 முறை கூட சோதனை செய்த பின்னே நோய் தொற்று இல்லை என உறுதி செய்ய முடிகிறது. ஆக, வைரஸ் நோய் தொற்றானது உடலில் சில காலம் தங்கியே இருக்கிறது என்பதனால் நோய் பரவும் சாத்தியமும் அதிகமாகிறது. கேரளத்தில் நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். இருப்பினும் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்தால் அடுத்த பெரும் பரவலுக்கு நாங்கள் ஆளாகிவிடுவோம் என ஷைலஜா டீச்சர் எச்சரிக்கிறார்.
—
vogue எனப்படும் 128 ஆண்டுகள் பழமையான பெண்களுக்கான பேஷன் மற்றும் ஸ்டைஸ் பத்திரிகை அமெரிக்காவிலிருந்து வெளிவருகிறது. சுமார் 12 இலட்சித்திற்கும் அதிகமான வாசகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளது. அந்த மாத இதழின் மே மாத இதழில் கேரள மாநில சிபிஐஎம் தலைமையிலான அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் திருமிகு ஷைலஜா டீச்சர் அவர்களின் கோவிட்-19 எதிர்ப்பில் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக முகப்பு அட்டையில் vogue warriors என தலைப்பிட்டு போர்வீரர் என கௌரவித்துள்ளது. அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான பத்தியினை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்.
மொழிபெயர்ப்பாளர் – ராம்.
vogue பத்திரிக்கைக்குப் பாராட்டுக்கள். உண்மையைக் கௌரவித்த்தற்காக. பேட்டியில் குழு நடவடிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, கேரள மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் திருமிகு ஷைலஜா டீச்சர் அவர்களின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.