விழித்திடு வாக்காளரே..! விழித்திடு…! – இல. சுருளிவேல்
தமிழக வாக்காளப் பெருங்குடி மக்களே, உங்களது பொன்னான வாக்குகளை ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்து சிறப்பு சேர்ப்பது அவசியமாகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் நிர்வாகத்தை பற்றி ஒவ்வொரு புரிதல் இருக்கும். குறைகள் இருந்தால் அதை சரி செய்வதற்கும், புதிய பிரதிநிதிகளின் மூலம் ஐந்து வருடத்திற்கு நம்மை நிர்வகிப்பதற்கும் ஒரு வாய்ப்பு. 1952 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
2026 ஆண்டில், 38 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில், 27738925 ஆண் வாக்காளர்களும், 28960838 பெண் வாக்காளர்களும், 7617 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 56707380 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7.77 கோடி என்றால் 72 விழுக்காடு மக்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். சட்டமன்ற தொகுதிகளில் அது சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. எவ்வளவுதான் விழிப்புணர்வு செய்யப்பட்டாலும் 100 விழுக்காடு ஓட்டு பதிவு என்பது நீண்டகால கனவாகவே இருக்கிறது.
எனது ஒரு ஓட்டால நாட்டில் என்ன நடக்க போகுது, எனக்கு என்ன ஆதாயம் என்றும் நினைக்கலாம். மனித நாகரிகத்தின் வளர்ச்சி ஜனநாயக மக்களாட்சியாகும். மன்னராட்சியாக இருந்தால் இதைப் பற்றி சிந்திக்க முடியாது. ஜனநாயக மக்களாட்சியில் நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதுதான். இதனை சாதாரணமாக கருத முடியாது.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”- 510.
ஆம், ஆராயாமல் நமது பிரதிநிதி ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். அடுத்து ஐந்து வருடங்களுக்கு அவர்களின் ஆட்சியின் கீழ் தான் இருக்க முடியும். வருத்தப்பட்டு பயன் கிடையாது. அதனால் விழித்துக் கொள்ளும் நேரம் இதுதான். சட்டமன்றத் தேர்தல் நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாகும்.
அரசியல் ஒரு சாக்கடை. தேவையில்லாத ஒன்று என்று கருதினால் அந்த சாக்கடை, தேவையில்லாத ஒன்றால் நாம் ஆளப்படுவோம் என்பதை மனதில் வைக்க வேண்டும். முக்கியமாக படித்த இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக அவசியம். அரசியல் குடும்பத்தில் தான் உருவாகிறது. ஒவ்வொரு குடும்பம் சேர்ந்தது தான் ஒரு சமூகம். எல்லா சமூகங்களும் சேர்ந்தது தான் ஒரு நாடு.
இந்த நாடு ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ சொந்தம் கிடையாது. அதனால் தான் இந்தியாவை பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்கிறோம். உலகிற்கு முன்மாதிரியாக விளக்குகிறோம். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதுதான் ஜனநாயக கடமை. தமிழகம் தலைசிறந்து விளங்க நமது ஒவ்வொரு தேர்தல் வாக்கும் மிக அவசியம். நாம் பதிவு செய்யும் ஒரு ஓட்டு வலுவான இந்தியாவை கட்டமைக்கிறது.
கோழிக்குள் இருந்து முட்டை வந்ததா, முட்டைக்குள் இருந்து கோழி வந்ததா என்ற கேள்வியை போன்று நல்ல அரசை உருவாக்குவது குடிமக்களா, நல்ல குடிமக்களை உருவாக்குவது அரசா என்று இருக்கிறது. நல்ல குடிமக்கள் என்றால் தனது வாக்கை விற்க மாட்டார்கள். சுதந்திரமாக வாக்கு செலுத்துவார்கள். நல்ல வேட்பாளர்கள் என்றால் வாக்கை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.
ஓட்டை விற்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றமே. அறத்திற்கு மீறிய செயலாகும். அந்த சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இந்த சமயத்தில் மிக அவசியம். நாட்டை குறை சொல்வதற்கு முன் குறைக்கான தீர்வு நம்மிடமிருந்து முதலில் உருவாகட்டும். அதற்கு 100% ஓட்டுப் பதிவு மிக அவசியம். ஏப்ரல் 23ஆம் நாள் வாக்குப்பதிவு என்பதை மனதில் வைத்து நம் குடும்பத்தாரை உறவினர்களை நண்பர்களை ஓட்டு போடுவதற்கு ஊக்குவிப்போம். அதுவும் யாரிடமும் ஓட்டுக்காக பணமோ பொருளோ பெறாமல் சுதந்திரமாக வாக்கு செலுத்தி நமது ஜனநாயக கடமையையும் உரிமையும் நிலைநாட்டுவோம். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் வாக்காளருக்கான நாளாகும்.
“ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்” – 484.
ஆம், ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும். ஆம், வாக்காளர் விழித்துக் கொள்ள வேண்டிய நாள் 23.04.2026 (வியாழக்கிழமை). மாற்றங்கள் முதலில் நம்மிடமிருந்து உருவாகட்டும். விழித்திடு வாக்காளரே! விழித்திடு!
📚 எழுதியவர்:
முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

