எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்” கட்டுரை

மேற்கத்திய சிறார் இலக்கியமும் இந்தியச் சிறார் இலக்கியமும்

– உதயசங்கர்

ஐரோப்பிய நாடுகளில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடமைச் சமூகம் தனக்குள்ளேயே முற்றிக் கொண்டிருந்த முரண்பாடுகளால் தொழிற்புரட்சி நிகழ்ந்த து. தொடர்ந்து அறிவொளிப்புரட்சி, அறிவியல் புரட்சி நடந்தன. நிலவுடமைச் சமூகத்தின் பெரும்பாலான தளைகள் அறுத்தெறியப்பட்டன். குறிப்பாக மதங்களின் பழைய, பிற்போக்கான பிடியிலிருந்து அறிவுத்துறைகளனைத்தும் கலை, அறிவியல், மருத்துவம், உள்ளிட்ட அனைத்தும் மதங்களிலிலிருந்தும் ஆன்மீகத்திலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டு சுயேச்சையாக வளர்ந்தன.

பேகன், ஹம்போல்ட், நியூட்டன், டார்வின், இம்மானுவல் காண்ட், மார்க்ஸ், போன்றவர்களின் பங்களிப்பு உலக சிந்தனையையும் உலக இயக்கத்தையும் மாற்றியது. உலகத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சின. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற புதிய கோட்பாடுகள் எழுந்தபோது மதத்தின் ஒற்றைச் சர்வாதிகாரம் தகர்ந்து விட்டது. அதனால் அங்கே புதிய சிந்தனைகள், புதிய கலை இலக்கியப்படைப்புகள் தோன்றின.

முதலாளித்துவமும் அதன் அகோரப்பசிக்காக உலகநாடுகளை அடிமைப்படுத்த, சுரண்டலைப் பரவலாக்க போர்களை நட த்தினார்கள். நாடுகளை அடிமைப்படுத்தினார்கள். இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

அதுவரை நிலவுடைமைச் சமூகத்தில் கிட்ட த்தட்ட அடிமைகளைப் போலிருந்த மக்கள் முதலாளித்துவ அமைப்பில் லேசாக மூச்சு விட்டனர். போலியானதாக இருந்தாலும் ஜனநாயகத்தின் சிலபல நன்மைகளை அனுபவத்தார்கள். புதிய கோட்பாடுகள், புதிய இலக்கியம், உருவாயின. முதலாளித்துவ சந்தைமுறையினால் அவை பரவலாகவும் செய்தன. சிறார் இலக்கியத்திலும் அதன் பாதிப்புகள் இருந்தன.

இங்கிலாந்து நிலவுடமைச் சமூகத்தின் அரச அதிகாரத்தை விமரிசனம் செய்து அற்புத உலகில் ஆலீஸை லூயி கரோல் எழுதினார். ஜெர்மனியின் பாசிச த்துக்கெதிராக களத்தில் உளவு விமானியாகவும் இலக்கியத்தில் குட்டி இளவரசனை எழுதியும் அந்து வான் எக்சுபரி பங்களிப்பு செய்தார்.

ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய டாம் மாமாவின் குடிசை என்ற புகபெற்ற நாவல் ஒரு உள்நாட்டுப்போரையே உருவாக்கியது. அமெரிக்காவில் நிலவி வந்த நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக வெளிவந்த சிறார் நாவல். டாம் மாமாவின் வாழ்க்கைப் போராட்ட மாக விளக்கப்படும் நாவல் கொடூரமான அடிமைமுறை வாழ்க்கையை உலகத்துக்கே சொன்ன நாவலென்றும் சொல்லலாம். அடிமைகளைப் உயிரற்ற பொருட்களைப் போலப் பயன்படுத்தியதும் அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பளிக்காத குரூரத்தையும் பேசிய நாவல். பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான நாவலென்ற புகழையும் பெற்றிருக்கிறது.

மார்க் ட்வைனின் தொடர் நாவல்களான டாம் சாயரின் சாகசங்களும், ஹக்கிள் பெரிஃபின்னின் சாகசங்களும் அமெரிக்க க் குழந்தை இலக்கியத்தின் போக் கையே மாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

இத்தகைய மாற்றங்கள் மேற்கத்திய சிறார் இலக்கியத்தில் மட்டுமல்ல. பெரியவர்கள் இலக்கியத்திலும் நிகழ்ந்தன. அதாவது மதங்களின் கொடுங்கரத்திலிருந்து சிறார் இலக்கியம் உள்ளிட்ட அனைத்து அறிவுத்துறைகளும் விடுதலையடைந்தன.

ஆனால் அதேநேரம் இந்தியா எப்படி இருந்தது?

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே காலாகாலத்துக்கும் இருந்த தாகவும் அவை காற்றிலேயே பிறந்து வந்த தாகவும் அதாவது கடவுள் நேரே அருளியதாகவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டன. அதனால் அந்த வேதங்களைக் குறிப்பிட்ட சாதியினரைத் தவிர வேறு யாரும் படிக்க க் கூடாதென்று சட்டமும் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. இப்போதும் வேதகாலம் இந்தியாவின் பொற்காலம் என்ற கட்டுக்கதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குறிப்பாக வேதகாலத்துக்கு முன்பாகவும் சமகாலத்திலும் இந்தியாவில் வேறு மதங்களோ, கோட்பாடுகளோ இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. ( ஆங்கிலேயர்கள் தான் பௌத்தம் சமணம் சாங்கீயம் போன்ற மதங்கள் இருந்த தையும் அசோகர் போன்ற அரசர்கள் வாழ்ந்த தையும் கண்டுபிடித்தனர் )
சரி அந்த நான்கு வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருந்தன?

நான்கு வேதங்களிலும் சடங்குகள், யாகங்கள், வேள்விகள் குறித்தான பாடல்களே நிறைந்திருக்கின்றன. எந்தத் தத்துவமோ, கருத்தியலோ, வாழ்க்கை நெறிமுறைகளோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஒரு இனக்குழுவின் சடங்குப்பாடல்கள். அனைவருக்கும் பொதுவானதில்லை.
இந்தச் சடங்குகள் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டவும் அழிக்கவும் முற்பட்டபோது புதிய சமயங்கள் தோன்றின.

வேதகாலத்திலேயே மக்களின் தேவையின் அடிப்படையில் உருவான பௌத்தமும் சமணமும் சமூக வாழ்க்கை நெறிமுறைகளை, வாழ்க்கை குறித்த, தத்துவச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தன. மக்களும் அரசுகளும் பௌத்த சமண சமயங்களின் பால் ஆர்வங்கொண்டனர். வேத சமயம் மக்களிடம் செல்வாக்கிழந்தபோது வேதங்களுக்குத் தத்துவச்சாயம் பூசவேண்டிய தேவை உருவானது. வேதங்களின் விளக்கமென்ற போர்வையில் உபநிடதங்கள் எழுதப்பட்டன.

உபநிடதங்களில் சொல்லப்பட்ட கருத்துகளெல்லாம் பௌத்த சமண சாங்கீய சமயங்களின் தத்துவங்களிலிருந்து உருவியது, உல்டா செய்தவை. பிரம்மம், அத்வைதம் என்று உருட்டுகின்றவை. இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதங்களோ, பௌத்தமோ, சமணமோ, உபநிடதமோ ஆரம்பகால மனித அறிவு வளர்ச்சியின் படிநிலைகளில் அந்தக் கால நிலவுடமைச் சமூகத்தின் தேவைகளுக்காகவும் சுரண்டலை நிலைநிறுத்தவும் உருவானவை.

இப்படியே இந்தியா பழமைவாதச் சிந்தனைகளால், பிற்போக்கான கருத்துகளால், பெண்ணடிமைக்கொள்கைகளால், சாதி வேறுபாடுகளால் நிலவுடமை ஆட்சியின் பொருளாதாரச்சுரண்டல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பீடிக்கப்பட்டிருந்த காலத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைகிறார்கள். அவர்கள் வரும்போது இங்கிருந்த பழைமைவாதச் சமூகத்துடன் சமரசம் செய்து கொண்டார்கள். அடிப்படையான சமூக மாற்றங்களைக் கொண்டு வராமல் அவர்கள் நிர்வாகம் செய்வதற்கும் ஆள்வதற்கும் சுரண்டுவதற்கும் தேவையான மாற்றங்களை மட்டும் கொண்டு வந்தார்கள்.

இந்திய விடுதலைப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே வர்ணாசிரம தர்மத்துக்கு சனாதனத்துக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செய்த சிறிய சீர்திருத்தங்களை எதிர்த்து உருவானது தான். அனைவருக்கும் கல்வி, பெண்கள் கல்வி, சதிக்கு எதிரான தடைச்சட்டம், விதவை மறுமணச்சட்டம், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்களைத் தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இந்தியாவின் அறிவுத்துறைகள் மதங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தன. இங்கேயிருந்த உயர்சாதி நிலவுடமைச் சமூகமும் அனைத்து மதங்களும் அறிவுத்துறைகளின் சுயேச்சையான வளர்ச்சியை இன்றுவரை விரும்புவதில்லை.

எந்த மாற்றமும் அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதைப் போன்ற நிலைமை தான் இருக்கும். ஏனெனில் இங்கே நிலவுடமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவசமூகம் இயல்பாக வெடித்துக் கிளம்பவில்லை. எந்தவொரு மாற்றமும் தானாக நிகழ்வதற்கும் மாற்றத்தைத் திணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதனால் தான் இங்கே புதிதாகத் தோன்றிய முதலாளித்துவம் பழைய நிலவுடமைச் சமூகத்துடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அறிவியல் கண்டுபிடிப்பான ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் பூஜை செய்கிற அவலத்திலிருக்கிறோம்.

கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது சிறார் இலக்கியம் தான். குழந்தைகளை அறுதப்பழசான மதங்களின் பண்பாட்டு விழுமியங்களின் மூலம் மட்டுமே பண்படுத்த முடியுமென்ற சிந்தனை சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கிறது.

அதனால் தான் இன்னமும் உபநிடதக்கதைகள், வேதகாலக்கதைகள், என்றெல்லாம் புத்தகங்கள் குழந்தை இலக்கியமென்று வருவதைப் பார்க்கமுடிகிறது.
நாம். ஜேம்ஸ்வெப் கேமிரா நம்முடைய பால்வெளி மண்டலத்தையே படம் பிடித்துக் காட்டுகிற அறிவியல் காலத்தில் வாழ்கிறோம். இன்னமும் அறுதப்பழசான சமூகமதிப்பீடுகளையே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது உவப்பானதல்ல.

சிறார் இலக்கிய விடுதலையடைய வெகுதூரம் செல்ல வேண்டும். இதை சிறார்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லாம் மாறும். மாற வேண்டும். நிலையானது என்றோ, நித்தியமானது என்றோ எதுவும் கிடையாது.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *