“நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதை தீர்மானிப்பதுதான் ஒரு புரட்சியின் முக்கியமான அம்சம். இதற்காக ஒவ்வொரு வர்க்கத்தினுடைய சமூக பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்’’ இந்த வார்த்தைகள் மாவோ எழுதியவை. 1926 ஆம் ஆண்டு ‘‘சீன சமூகத்தில் வர்க்கங்களை பற்றிய ஆய்வு’’ என்ற ஆய்வுக் கட்டுரையில் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ரஷ்யாவில் விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி’ குறித்து 1899 ஆம் ஆண்டு லெனின் எழுதிய நூல் ரஷ்யாவில் கிராமப்புற மக்களை திரட்ட வழிவகுத்தது. மார்க்சியவாதிகளாகிய நாம் சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம், மனித குல விடுதலைக்காக உழைக்கிறோம். எனவே, நம்முடைய அன்றாட செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கே நம்முடைய நண்பர்கள் யார்; எதிரிகள் யார் என தீர்மானிப்பது அவசியம். மக்கள் ஜனநாயக புரட்சிக்காக திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் விரிவாக விளக்குகிறது. இத்தகைய வர்க்கங்களை திரட்டுவதற்காகவே இடதுஜனநாயக அணி என்ற முழக்கத்தை கட்சி முன்வைத்துள்ளது.

1937 ஆம் ஆண்டு அன்றைய பிராந்திய அரசு (சென்னை ராஜதானி) கேரளத்தில் மலபார் பகுதியில் குத்தகை விவசாயிகள் பிரச்சனை பற்றி ஆய்வு செய்திட அமைத்த குழுவில் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் இடம் பெற்றிருந்தார். அக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு தனது மாற்றுக் கருத்தை தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் குழுவிடம் சமர்ப்பித்தார். கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களுடைய உபரி நிலங்களை நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்வதன் மூலமே கிராமப்புற வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் காண முடியும் என தனது குறிப்பில் வலியுறுத்தினார். 1957 ஆம் ஆண்டு அவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றி அமலாக்கினார். இந்தியாவில் விவசாய வர்க்கங்கள் பற்றி ஆய்வு செய்திட இப்போதும் இஎம்எஸ் குறிப்பு முன்னுதாரணமாக திகழ்கிறது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு தோழர் சுந்தரய்யா முன்முயற்சியில் ஆந்திராவில் தெனாலி வட்டத்தில் அனந்தவரம் மற்றும் குண்டூர் மாவட்டம், குண்டூர் வட்டத்தில் கசா என இரண்டு கிராமங்களை தேர்வு செய்து இந்த கிராமங்களில் விவசாய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை செய்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நூலாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனுபவம்

தமிழ்நாட்டின் அனுபவத்திலும் இத்தகைய ஆய்வுகள் முக்கியமான இடம் பெற்றுள்ளன. அதில் ‘‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’’ என்ற தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய நூல் மிகவும் முக்கியமானதாகும். 1947 ஆம் ஆண்டு சீனிவாசராவ் எழுதிய இந்நூல் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழுவால் வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு துவங்கி பாரதி புத்தகாலயம் இதுவரை இந்நூலை மூன்று பதிப்புகள் வெளியிட்டுள்ளது. 1947க்குப் பிறகு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழத்தஞ்சையில் (திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) விவசாயத்திலும், விவசாய வர்க்க நிலைமைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், சீனிவாசராவ் எழுதிய இந்த ஆய்வு நூல் விவசாய வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்மாதிரியாகவும் இன்றைய சூழலை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டியாகவும் அமையும். 1947-ஆம் ஆண்டில் அன்றைய அரசு, காவல்துறை, ஊடகம் ஆகியன பற்றியும், நிலச்சுவான்தார்கள், குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட விவசாய வர்க்கங்கள் பற்றியும் ஆய்வு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் பெரிய நிலச்சுவான்தார்களின் நிலக்குவியல் பற்றியும், கோவில்களுக்கு, மடங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு இவர்களே அறங்காவலர்களாக இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களின் சமூக, பொருளாதார ஆதிக்கத்தை கீழ்க்கண்டவாறு தோழர் சீனிவாசராவ் விளக்கியிருக்கிறார். ‘‘பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு எஜமானர்களாக விளங்கும் மடங்கள் பல இருக்கின்றன. மிராசுதார்களில் பலர் லேவாதேவிக்காரர்கள். வட்டிக்கு வட்டி, கடும்வட்டி வாங்கி பணம் குவிப்பதில் கெட்டிக்கார புள்ளிகள். கிராமக் கமிட்டிகளிலும், கோவாப்பரேட்டிவ் சொஸைட்டிகளிலும் இவர்களே அடைந்து கொண்டு தம்மிஷ்டம் போல் அவற்றை ஆட்டுவிக்கிறார்கள். நெல் விற்பனை சம்மேளனமும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. இவர்களில் பலருக்கு முழுசாக அநேக கிராமங்கள் சொந்தம்’’ ‘‘…இவர்கள் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் இருக்கவே இருக்கிறார்கள்’’.

பண்ணையாட்கள் பற்றி…

‘‘பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே. இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால் அரை மரக்கால் நெல்தான்’… ‘‘…முடிவாக சொல்லப்போனால் ஜெயில்களில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, தஞ்சை ஜில்லா விவசாயிகள் உண்ணும் உணவை விட பல மடங்கு மேலானது’’. மேலும், பண்ணையாட்கள் குரூரமான தீண்டாமைக் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

குத்தகை விவசாயிகள் பற்றி…

‘‘ஆதி திராவிட பண்ணையாட்களின் நிலைமைதான் இப்படி; மிராசுதார்களிடமிருந்து நிலத்தை வாங்கி வாரத்திற்கும் குத்தகைக்கும் உழுகிற ஜாதி ஹிந்து விவசாயிகளுடைய நிலைமையாவது சுபீட்சமாயிருக்கிறதா? கிடையாது. இந்த ஜில்லாவில் வாரத்திற்கு உழுபவர்கள், விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்குதான் பெற்று வருகிறார்கள்’’.

சிறு மிராசுதார்கள் பற்றி…

‘‘ஒன்று முதல் பத்து ஏக்கர் வரை தமக்கு சொந்தமாக கொண்ட சிறு மிராசுதார்களாவது நல்லபடி இருக்கிறார்களா? இவர்களுடைய பேரில் பட்டா இருந்தாலும், உண்மையில் இவர்களும் இந்த பெரும் நிலப்பிரபுக்களின் பொருளாதார பிடிக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’’.

ஏழை விவசாயிகள் பற்றி…

‘‘ஏழை விவசாயிகள் இந்த மிராசுதார்களிடம் ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறார்கள். விதைப்புக் காலத்தில் மிராசுதார்களிடம் தானியமாக கடன் வாங்குவார்கள் விவசாயிகள். அறுவடைக் காலம் வந்தவுடன், தான் கொடுத்ததைவிட மூன்று மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டுபோவார் மிராசுதார்’’.

ஊடகங்கள் பற்றி…

‘‘விவசாயிகளை அடக்க வேண்டும், விவசாய சங்கங்களை நசுக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிற மிராசுதார்கள் என்ன கடிதமெழுதினாலும் சரி, உடனுக்குடன் அவற்றை, நாலு பத்தி தலைப்புக் கொடுத்து கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துவிடுகின்றன தேசியப் பத்திரிக்கைகள். அதே சமயத்தில், மிராசுதார்களின் பொய்ப் பிரச்சாரத்தை மறுத்து கிசான் சபைத் தலைவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ அறிக்கை விடுத்தால், அவைகளை வெளியுலகுக்கு தெரியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகின்றன அதே பத்திரிக்கைகள்’’. அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறை பற்றியும் நிலச்சுவான்தார்களின் பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட ஆதிக்கம் பற்றியும் விளக்கிய தோழர் சீனிவாசராவ் விவசாய சங்கத்தின் தேவையை குறித்து கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்: ‘‘மிராசுதார்களின் இத்தகைய மனித தன்மையற்ற சுரண்டலையும், பயங்கரச் செயல்களையும் எதிர்ப்பதற்காகவே 1943 ஆண்டு தஞ்சை ஜில்லாவில் கிசான் சபை ஏற்படுத்தப்பட்டது. கிசான் சபா இயக்கத்தின் முன்னணி வீரர்களாக கம்யூனிஸ்ட்டுகள் விளங்கினார்கள் என்பதில் ஆச்சரியப்படத்தக்க தொன்றுமில்லை’’.

வீரமிக்க போராட்டம்

கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் நடத்திய வீரமிக்க போராட்டத்தினால் கீழத்தஞ்சையில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை கொடுமையும் ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய வர்க்க போராட்டத்தினால் இதுபோன்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டு வரும் சூழலில் இன்றைய நிலைமைக்கேற்றவாறு முழக்கங்களை உருவாக்கி போராட வேண்டிய தேவை உள்ளது. 1947-ஆம் ஆண்டு தோழர் பி.சீனிவாசராவ் எழுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வெளியிட்ட ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற நூலை நாம் இப்போது மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளூரில் இதுபோன்ற ஆய்வுப் பார்வையை வகுத்துக் கொண்டு செயல்பட இந்த மறுவாசிப்பு சிறந்த பயிற்சியாக அமைந்திடும்.

நூல் : தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
ஆசிரியர் : பி.சீனிவாசராவ்,
விலை : ரூ.₹20/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நன்றி: தீக்கதிர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *