இந்தியாவில், ஊரடங்கு அமலாகி ஐம்பது நாட்களாகி விட்டது. இந்த நாட்களில் நீங்கள், செய்திப் பத்திரிக்கை –தொலைக்காட்சிகளை கவனித்திருந்தால், சினிமா – விளையாட்டு-ஆன்மீகம்- அரசியல் சார்ந்த செய்திகள் விடுபட்டு இருப்பதை கண்டிருக்க முடியும்.
ஊரடங்குக்கு முன்பு, ஒவ்வொரு நாளும்அரசியல் –ஊடகம் –ஆன்மீகம் –விளையாட்டு யாவும் பரபரப்பான தகவல்களுடன் ஒரு வாசகர் அல்லது பார்வையாளர்களின் பெரும்பாலான நேரத்தை 24 * 7 முழுக்க அபகரித்துக்கொண்டதுண்டு.
ஊரடங்கின் காரணமாக,சினிமா அரங்குகள் மூடிக்கிடக்கிறது.விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில்களின் கதவுகள் சாத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் யாவும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டியுள்ளது.
1990களுக்கு,முன்பு தாராளமயகாலமாகும். மக்கள் நலன்,சட்டத்தின் ஆட்சி,ஜனநாயகத்தூண்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.அதன் பிறகான காலம் மக்கள் நலனுக்கு மாறாக போட்டியினை அடிப்படையாகக் கொண்ட நவதாராளமய காலமாகும் இதனை ஜனநாயகத்திற்கு பிறகான காலம் என்றும் அல்லது உண்மைக்கு பிறகான காலம் என்றும் கூறுவதுண்டு.
1990 களுக்குப்பிறகு, சமூக மனிதன் தனிமனிதனாகிறான்.பொது என்பது தனியாகிறது. கூட்டு முயற்சி தனிமுயற்சி என்பதாகிறது. சுருக்கமாக தனிநபர் அவர்தம் விருப்பம் முக்கியத்துவம் பெறும் காலமாகியது.
நவதாராளவாதத்தின் இரு கண்களாக உள்ள போட்டி மற்றும் நுகர்வினை மக்களிடையே பரவலாக்கிட, தகவல் மற்றும் ஒலி-ஒளி பரப்பு, தகவல் தொலைதொடர்பும் அவசியம் என்பதால் அவ்விரு அரசு நிறுவனங்களும் தனியாருக்கு அனுமதிக்கப்படுகின்றன.
தகவல் மற்றும் ஒலி-ஒளிபரப்பில் ,தனியாரும் அனுமதிக்கப்பட்டதால், ஃஎப்.எம் வானொலி அலைவரிசை மற்றும் தொலைக்காட்சிகள் தனியாரின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. தொலைக்காட்சிகளில் விளம்பரதாரர்(கார்ப்பரேட்டுகள்) நிகழ்ச்சிகள் யாவும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தயாரிக்கப்படுவதாய் இருக்கின்றன.இது போன்ற நிகழ்ச்சிகள் யாவும் வணிக நோக்கில்,கேளிக்கைக்கு முக்கியத்துவம் தந்து மக்களிடையே நுகர்வினை வளர்த்தெடுப்பதாக மாறியுள்ளன.
தகவல் தொலைத் தொடர்பில்,அலைகற்றைகளை தனியாருக்கு அனுமதித்ததின் மூலம் 3-ஜி, 4-ஜி தொழில்நுட்பம் என விரிவடைந்தது, மறுவகையில்,சமூக ஊடக நிறுவனங்களின் பெருக்கத்திற்கும்அது வழி வகுத்திருக்கிறது.
ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரிக்கும் போது, அதற்கேற்றவாறு சமூக ஊடகங்களில் மக்களின் பங்களிப்பும் அதிகரிக்கிறது. கையடக்க ஸ்மார்ட்போனில் செய்திகள்முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்- வீடியோக்கள்- வாட்ஸ்அப், ட்விட்டர் வரை பார்க்கவும்,பகிரவும் வாய்ப்பிருப்பதால்,பிறரிடம் பகிர்ந்து கொள்வது எளிதாகிபல்கிப்பெருகிடுகிறது.
இதேபோல்,கல்வியை தனியாருக்கு அனுமதியளித்ததன் மூலம்,அக்கல்விநிறுவனங்கள் பெருகி நவதாராளமயக் கருத்தியலினை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அதனை பின்பற்றுவதற்கும்ஒரு வாய்ப்பாகவும் ஆகியுள்ளது.
தொலைக்காட்சிகள்,ஃஎப்.எம்.வானொலி,அலைக்கற்றைத் தொழில்நுட்பம் யாவும் தனியார் வசமாகி பெருகப்பெருக அவைகள் அரசியல்- ஊடகங்கள்-ஆன்மீகத்தின் வழியாக மக்கள் மீது கடும்தாக்கத்தினைச் செலுத்தி எஞ்சியியிருந்த ஜனநாயகத்தின் அடிப்படை வேர்களைக் கூட பலமிழக்கச் செய்துள்ளன.
1990 களுக்கு பிறகான காலத்தில் அடையாள அரசியலும் எழுச்சி பெற்றது. தேசியவாதத்துடன் கலந்த மதப்பெரும்பான்மைவாதம் பேசும் இந்துத்துவ வலதுசாரிகள் பரவலாகினர். இதனையொட்டி சாதியை முன்வைத்த அடையாள அரசியலும் எழுச்சி பெற்றது.
தனியார் மயமான தகவல்,ஒலி-ஒளி பரப்பு மற்றும் தகவல் தொலைத்தொடர்புக்கும் மதம்,சாதியை முன்வைத்த அடையாள அரசியல் பெருகியிருப்பதற்கும் நெருங்கிய தொடர்புஉண்டு.
நவதாராளமயம் சமூகம்- பொருளாதார தளத்தில் தன்னை நங்கூரமிட்டு நிலை நிறுத்திக்கொள்வதற்கு இடதுசாரிகள் தவிர்த்த வெகுஜனஅரசியல்,ஊடகங்கள் (சினிமா-பத்திரிக்கை-சமூகஊடகம்)ஆன்மீகம் (இந்துமதம்)ஆகியன துணைநிற்கின்றன.அதே போன்று கார்ப்ப்ரேட் நிறுவனங்களும் மேற்கூறியவற்றினது வளம் பெருக உத்திரவாதம் அளிக்கின்றன. இந்நான்கினது கூட்டானது ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாத அளவுக்கு பிணைந்துள்ளது.சுருக்கமாகக்கூறின்,இவர்களின் கூட்டுறவானது நாட்டுயர்வுக்கானதல்ல. மாறாக நாட்டினது வளங்களை அபகரிக்க மட்டுமே !.
அரசியல்-ஊடகம்-ஆன்மீகம் இவற்றினது செயல்பாடுகளை ஒரு மாதிரிக்காக ஆய்வு நோக்கில் பார்க்கும்போது,கார்ப்பரேட் நிறுவன அணுகுமுறைகளுடன்(போட்டி-லாபம்-நுகர்வு ) ஒத்திருப்பதை கீழ்கண்டவைகளிலிருந்து கவனிக்கமுடிகிறது..
- அரசியலுக்கு-தொண்டர் : சினிமாவுக்கு – ரசிகன் : ஆன்மீகத்திற்கு- பக்தர் :கார்ப்பரேட்டுக்கு – நுகர்வோர் :
- அரசியலுக்கு -ஓட்டு : சினிமாவுக்கு -லாபம் :கோவிலுக்கு – காணிக்கை: கார்ப்பரேட்டுக்கு –வியாபாரம் :
அரசியல்–ஊடகம்-ஆன்மீகம் யாவுமே –
- மேலிருந்து கீழ் நோக்கி திணிக்கப்படுவதாக இருக்கின்றது.
- செய்தி மற்றும் பொழுதுபோக்கோடுபிரிக்கமுடியாதவாறு ஒட்டிக்கொண்டுள்ளது.விளம்பரம் என்றால் அவ்வளவு பிரியம்.
- மக்களை பக்திப்பரவசத்துடன் கேள்வியின்றி உள்வாங்க பழக்கப்படுத்துகின்றன.
- கடந்த காலம், நிகழ் காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றது. இதுவே அடையாள அரசியலுக்கான வித்தாகவும் மாற்றமடைகின்றன..
- கருத்தியலற்ற,குறிக்கோளற்ற அரசியல் எதுவும் அரசியலற்ற அரசியலே!இங்குள்ள வெகுஜன அரசியலும் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது. சினிமா பொழுதுபோக்குக்கு வழிவகுக்கிறது.அறநெறியும்-பயன்பாடும் அற்ற (இந்துமத) ஆன்மீகம் மக்களை நல்வழிப்படுத்தவில்லை.மாறாக வன்முறைக்குபாதை அமைக்கின்றது.
- தாங்கள் விரும்பும் எதையும்,மக்களின் மீதுஎளிதில் திணித்திடத்திடமுடிகிறது.
- அதிகாரத்தின் மீது அதித விருப்பமுடையதாகவும்,நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும் இருக்கின்றது.
- மக்களை முன்னிருத்தி,மக்களே அதிகாரம் உள்ளவர் எனக் கூறிக்கொள்ளும்.ஆனால்,நடைமுறையில் இதற்கு நேரெதிர்.
- இறுதி இலக்குவெற்றி -லாபம்- சரணாகதி.
- அரசியலானது அதிகாரத்திற்கும்:சினிமாவானதுகார்ப்பரேட் நலனுக்கும்:ஆன்மீகமானது பிராமணர் நலனை மட்டும் காப்பதாக இருக்கின்றன.
- இவை யாவுமே தனிமனித பிம்பத்தினை பெருக்குவதற்கு முக்கியத்துவம் தருகின்றன.
- சமூக ஏற்றத்தாழ்வு,சாதி-மத வேறுபாடு குறித்தஉரையாடலுக்கு துளிகூட முன்வருவதில்லை.
- இம்மூன்றிலும் பிரபலமானவர்கள் அடைமொழிப்பெயர் வைத்தே அழைக்கப்படுவதைக்காணமுடியும்.
- தற்போதுநாட்டம் (Trending)எதுவோ, அவற்றினை பின் தொடர்வது என்பதுஇவைகளின் பாணியாக ( FASHION)ஆகியுள்ளது.
- மக்களை திசை திருப்புவதில்(Distort)உறுதியோடு இருக்கின்றன.
- சமூக ஊடகங்கள் (Social media ) யாவற்றிற்கும் அன்றாடத் தீனி யாகவும்,போர்க்களத்திற்கு நிகரான உரையாடலின் மையமாகவும் விளங்குகின்றன.
- பொய்செய்திகளின் (Fake news)ன் உற்பத்திக்களமாக மாறி உள்ளது.
- தவறான தகவல் பரவலுக்கும் (Mis information) காரணமாக இருக்கின்றது.
- வதந்திகளின் (Gossip )ன் பிறப்பிடமாக இருக்கின்றன.
- புகழ்பெற்றவர்கள் (Celebrities)இவற்றிற்குள்ளிருந்தே உருவாகிறார்கள்.
- சிறியோர் முதல் பெரியோர்வரையிலானவர்களின் மூளைக்குள்.ஒவ்வொரு முறையும்… போரே அமைதி (War is peace) *அடிமையாய் இருப்பதே சுதந்திரம் (slavery is freedom) *அறியாமையே வலிமையானது (ignorance is strength) என பதியமிடப்படுகிறது.
அரசியல் –ஊடகம் –ஆன்மீகம் –கார்ப்பரேட் யாவுமே,போட்டி-நுகர்வு-லாபம் எனும் சூத்திரத்திற்குள் எளிய மக்களையும்,கண்மூடித்தனமாக இழுத்துச்செல்லும்போது, நிலைமை பரிதாபம் தான் !
வணக்கம் நிகழ் அய்க்கண். மிகச் சரியான கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இன்றைய காலகட்டத்திற்கான அவசியமான பதிவு. அரசியல் பதவிமோகம் ஆன்மிகம் கார்ப்பரேட் விளம்பரம் அனைத்துமே வியாபாரம், நுகர்வு, கொள்ளை லாபம் இவற்றையே நோக்கமாய்க் கொண்டு செயல்படுகின்றன. கல்வியும் மருத்துவமும் கொள்ளை லாபம் ஈட்டவே இயங்குகின்றன. இளைஞர்கள் வலைதளத்திலும் இணையத்திலும் மூளை மழுங்கடிக்கப் பட்டு, கற்பனை விளையாட்டுகளில் வாழ்வைத் தொலைத்துக் கொண்டும், மறுபுறம் சிந்திக்கத் திராணியற்று ஆன்மிகம் எதைச் சொன்னாலும் ஏனென்ற கேள்வியன்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலும், வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வமின்றியும், நுகர்தல் ஒன்றே வாழுதலின் குறிக்கோள் என்றும் இருந்து வருகின்றனர். கண் முன்னே நடக்கும் உயிரிழப்புகள் பயங்கரங்கள் போன்றவற்றில் இருந்து சகமனிதனைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அலைபேசியில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டு மகிழும் மனநிலையே வளர்க்கப் படுகிறது. கொலைகள் வன்கொடுமைகள் மதசாயம் பூசி நடத்தப்பட்டு அது தவறென்ற எண்ணம் கூட எழாமல் எதிர்த்துக் கேட்கப் பயப்படும் மனநிலை மக்களிடம் உருவாக்கப் படுகிறது. நவதாராளவாதம், தனியார் மயமாக்கம், வங்கிகளில் வராக் கடன் கொள்ளை, பன்னாட்டு நிறுவனங்களின் அதிகரிப்பு, பங்குச் சந்தைகளின் சுரண்டல், கொள்ளை நோயால் கொண்டுவரப்பட்ட பொருளாதார முடக்கம், மதவாதத்தால் திசைதிருப்பப்படும் மக்கள் இவையனைத்தாலும் இனியென்ன அழிவுகள் நிகழுமோ?
மிக அருமையான கட்டுரை. நன்றி நிகழ் அய்க்கண்.