புன்னகையின் மொழி ஒன்றே ..!
– பேரா. சோ. மோகனா
உங்களின் முகத்து அழகு சேர்ப்பது எது என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? கண்ணா.. பல்லா? நிச்சயம் பல்தான். ஒருவரின் சிரிப்புதான் மனிதர்களைக் கவர வல்லது. இதனை பற்கள்தான் செய்கின்றன. உங்களின் முகத்திற்கு அழகு தருவது நிச்சயமாகப் புன்னகைதான். உன் புன்னகை என்ன விலை.? உன் இதயம் கூறும் விலை என்ற பாடல் கோடி டாலர் மதிப்பு மிக்கதுதான். புன்னகையும், சிரிப்பும் வாழ்வில் விலை மதிப்பற்றது. அழகாக சிரிக்கும் முகம்தான் எல்லோராலும் நினைவு கூறப்படும். ஒரு 5 மாதக் குழந்தை கூட, நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது என்று, 2015ஆம் ஆண்டு, நவம்பர் அறிவியல் கண்டுபிடிப்பு தெளிவாகத தெரிவிக்கிறது.

நாம் இப்போது, சிரிக்கும் பற்களா, முத்துப் புன்னகையா, அதன் பின்னால் இருப்பது கால்கேட் பற்பசை என்று சொல்கிறோமே, அந்த மணக்க மணக்க கால்கேட் பற்பசை வந்தது 1873ஆம் ஆண்டில்தான். நீங்கள் சிரித்தால்தான் உங்களை மற்றவர்கள் நேசிக்கிறார்கள் கவனிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அசை போட பல் கதைகள்.. பல் அறிவியல்
பற்களின் பணி என்ன

பற்களின் பணி என்ன? பற்களின் அமைப்புதான் முகத்துக்கு அழகைக் கொடுத்தாலும், அதன்பணி அது அல்லவே. முக்கியமாக, பற்களின் வேலை, உணவை சீரணத்துக்கு வசதியாக அரைத்துக் கொடுப்பதுதான். அதைத் தவிர வேறு சில பணிகளும் பற்களுக்கு உண்டு. முக்கியமாக, உங்களின் மொழி, பேச்சு சரியாக அமைய, பற்கள்தான் உதவுகின்றன. சமீபத்திய கணக்கெடுப்புகள் சொல்லும் தகவலும், அமெரிக்கர்களின் எண்ணமும், என்னவென்றால், மனிதர்களின் சமூக பழக்க வழக்கத்திற்கு சமூக செயல்பாட்டுக்கு, அவர்களின் சிரிப்புதான் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவிக்கின்றனர். 92% சிரிப்புதான் சமூக தொடர்பாளர் என்கின்றனர்
பல் பல்.. எப்போது..? .. பல்…!
அட அதெல்லாம் சரிப்பா, புன்னகைக்கும், சிரிப்புக்கும் காரணி யார்? சந்தேகமே இல்லாமல் பற்கள்தான் என்கிறீர்களா? அதன் பின்னணியை எண்ணிப்பார்க்கவும். புன்னகையும் சிரிப்பும் உருவாக மூளையும், கன்னத்து தசைகளும் பெரும் பங்கு வகித்தாலும், அதனை வெளிக்காட்டுவது முக்கியமாக பற்கள்தான்.. பல் உருவானது உணவை அரைத்து விழுங்கவே. உங்களின் சீரணத்தை எளிமைப்படுத்தவே. ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு வகை பல் இருக்கிறது. அவை பரிணாமத்தில் பல்வேறு கால கட்டத்தில் உருவானவை. முதன் முதலில் முதுகெலும்பிகளிடம்தான், அதுவும், மீன்களிடம தான் பற்கள் உருவாயின. பற்கள் இருக்க தாடை என்பது வேண்டுமப்பா.

ஆனால் துவக்கத்த்தில் தாடையில்லா மீன்களும் இருந்தன. அதன் பின்னர் தாடையுள்ள மீன்கள் வந்தன. அதில்தான் பற்கள் என்ற அமைப்பு சுமார் 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், கேம்பிரியன் (cambrian period ) காலத்தில் உருவாகி பரிணமித்தது. ஆனால் இந்த பல்லைப் பளபளவென மினுக்க வைத்துக் கொண்டிருக்கும் எனாமல் என்ற பகுதி சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் , மீனின் செதிலிலிருந்துதான் உருவானது. உலகிலேயே உடம்பில் உள்ள மிகப் பலமான, கடினமான பொருள் எனாமல்தான். 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், சுறா மீனில் கொத்துப் பற்கள் உருவாயின.
![]()
மேலும் ஒரு சுறாமீனின் வாழ் நாளில் சுமார் 20,000 பற்கள் உருவாகும். ஒரு செட் பல் எதானாலாவது கடித்து விழுந்து விட்டால், அடுத்து உறைக்குள் சொருகி வைத்த பிச்சுவா கத்தி போல அடுத்த செட் படக்கென்று வெளியே வந்து எட்டிப்பார்க்கும்.
தாவரம் அரைக்க.. மாமிசம் கிழிக்கும்.. பல்லார்..!
சாப்பாட்டுக்கேன்றே தனிதனியா பல் உண்டாமே? அட ஆமப்பா..நாம சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான்.. நமக்கு இருக்கிற பல் அமைப்பும். தாவரங்களைச் சாப்பிட என்றால் அதனை அரைத்து சாப்பிட வேண்டும். அதற்காக அவர்களுக்கு (herbivores) பலமான தட்டையான, அகலமான கடைவாய்ப் பற்கள் (molars) வேண்டும். இவர்களுக்கு கிழிக்கும் கோரைப்பல்/சிங்கப்பல் தேவையே இல்லை. இல்லை மாமிசம் , இறைச்சி மட்டுமே வெட்டுபவர்களா (carni vores) ..அப்படீன்னா, உங்களுக்கு அதனைக் கிழித்து சாப்பிடும்படியான கோரைப்பல்/சிங்கப்பல் (canine teeth) கட்டாயமாய் வேண்டும். உங்கள் உணவுக்குத் தகுந்த மாதிரிதானே பல்லின் அமைப்பும் வகையும். என்றால் இப்போது ஒத்துக் கொள்வீர்களா? இடைப்பட்டவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் இரண்டையும் உண்பவர்கள்(omnivores /ரெண்டும்கெட்டான்) என்றால், வெட்டும் பல (incosors) கோரைப்பல், மற்றும் கடைவாய்ப்பல் எல்லாம் வேண்டும்.

உணவு முறையின் வரலாறு சொல்லும் பல்..!
அம்மாடியோவ்..அப்படீன்னா, நாம் எப்படி சாப்பிட்டோம்,என்ன சாப்பிட்டோம், என்ன மாதிரி வாழ்ந்தோம் என்ற நமது முன்னாள் சரித்திரம்,எல்லாம்,இப்ப நமக்கு இருக்கிற இந்தப் பற்கள் வழியாகத் தெரியும் என்கிறீர்களா? நமது உணவு விஷயத்தை நம் பற்கள் அறிவியல், பரிணாம ரீதியாக சும்மா புட்டு புட்டு வைத்துவிட்டது.நாம இனி உணவு விஷயத்தில் ஏமாற்ற முடியாது இல்லையா? அதுசரி நமக்கு இப்ப, வெட்டும்பல் , கோரைப்பல், கடைவாய்ப்பற்கள் எல்லாம் இருக்கே..அப்படீனா..? நாம் முன்பு பச்சை மாமிசம், வேகவைத்த மாமிசம், வேகவைத்த மாமிசம் உண்டதால்தான், மூளையின் அளவு பெரிதாகி, மனிதனின் அறிவு அதிகரித்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நாம் மாமிசம், தாவரங்கள் என அனைத்தையும் விடாது வெட்டியவர்கள் தான். .ஆனால் இப்பத்தான்.இப்படி நான் pure vegetarian னாக்கும். என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, நான் மாமிசமே சாப்பிட மாட்டேன்..தாவர சங்கமம் மட்டுமே சாப்பிடுவேன்..என்று சொல்வதெல்லாம், சும்மா ஒரு டுமீல்..ஒரு பம்மாத்துதான். அம்புட்டுதானே..அறிவியல் ஆய்வுகள் வேறு விஷையங்களைக் கூறுகின்றன நண்பர்களே.
பல்லின் கண்டுபிடிப்பும், மனித நகர்வும்..
நண்பா..பல் சம்பந்தமா இன்னொரு கதையும் , அதுவும் பரிணாமம் பற்றியதுதான். 2007ஆம் ஆண்டில், சீனாவிலே, கொஞ்சம் பற்கள், அதாம்பா 47 எண்ணிக்கையில் கிடைச்சுதே! அது கூட மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்து ஆசியா நோக்கி சென்ற நகர்வும், அதன் பதிவுகளின் காலக்கெடுவை, மாற்றி அமைப்பதாக உள்ளன என்று 2007ஆம் ஆண்டில், கண்டுபிடித்த, Scientific Journal Nature ல் வந்த செய்திகள் மனிதனின் துவக்க கால நடைபயண தேதிகளை, ஆண்டுகளை மாற்றி அமைப்பதாக உள்ளன என்று தெரிவிக்கிறது. எவ்வளவு தெரியுமா? நாம் நினைத்ததை விட சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு பயணப்பட தொடங்கி விட்டானாம்.
மனித பரிணாமம் மாற்றிய பல்
மனித பற்களும், மனிதனுடன் வாழ்ந்த விலங்குகளும் ஒன்றாகவே சீனாவில் கிடைத்துள்ளன.! சீனாவின் 47 பற்கள் சொல்லும் கதை/வரலாறு என்ன தெரியுமா? புதைபடிமமான ஒரு 47 மனித பற்கள், தென் சீனாவின் டாசியன் பகுதியில் (Daoxian region of southern China), பகுதியில், ஒரு பெரிய கட்டியான சுண்ணாம்பு பாறை குகைக்குள் கிடைத்தன. மனித பற்கள் மட்டும் கிடைக்கவில்லை. அத்துடன், மனிதர்களுடன் பழகி மனிதன் தன்னுடன் வளர்த்த, ஹையனா (hyena) வின் மிச்சச் சொச்சங்கள், இன்று அழிந்து போன பாண்டாஸ் (giant pandas) என்ற பாலூட்டிகள் மற்றும் ஏராளமான விலங்குகளின் படிமங்களும் கிடைத்தன. ஆனால் அங்கிருந்து எவ்வித கல் கருவிகளும் கிடைக்கவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் விஷயம், மனிதன் தனியாக குகைகளில் வாழவில்லை, அவன் அனைத்துவகை விலங்குகளோடும் இயைந்தே வாழ்ந்தான் என்பதே. எப்படி, ஒரு பல் என்பது மனித பரிணாமம் மற்றும் பரிமாணத்தையே மாற்றி விட்டது பார்த்தீர்களா?
முதல் பயணம்.. முன்னரே..!

மேலும் அங்கு கிடைத்துள்ள பற்களின் அமைப்பு புதிய நவீன மனிதன் போன்று இருந்தாலும்,அவை பழையவையே.என்பதும் தெரிந்தது.அத்துடன் அங்கு குகையின் பொங்கூசிப் பாறை/ சுண்ணக்கல் புற்று போன்றவற்றை (Stalagmites) யுரேனியம் மூலம் ஆராய்ந்ததில், அவற்றின் வயது 80,000 ஆண்டுகள் என்றும் அறியப்பட்டது. அங்கு கிடைத்த பற்களின் வயது 1,20,000 ஆண்டுகள் என்றும், மேலும் அங்குள்ள வேறு சில புதைபடிம விலங்குகள் பிலிஸ்டோசீன் (Pliestocene period) காலத்தவை என்றும் தெரிவிக்கின்றன. அப்படி எனில், மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து, இப்போது நாம் நினைத்ததை விட, 20,000 ஆண்டுகள் முன்பே பயணப்பட்டது என்பது இதன் மூலம் தெரிகிறது.
இதிலிருந்து நமக்கு கிடைக்கும் இன்னொரு கொசுறுத் தகவல், என்ன தெரியுமா? கொஞ்சம் ஆச்சரியமானது தான். மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி, அருகிலுள்ள ஐரோப்பா செல்லாமல், நேராக ஆசியா வந்துவிட்டான். பின்னரே ஐரோப்பா சென்ற விஷயம். காரணம் அங்குள்ள மக்கள் தொகை நெருக்கடியும், உணவுக்கான போட்டியும். கூட.
மரப்பல் வாஷிங்டன்..!
பல் பற்றிய இன்னொரு சுவையான தகவல் தெரிந்து கொள்ளலாமா?
ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றிய மிகவும் நீடித்த கட்டுக்கதைகளில் ஒன்று, அவருடைய செயற்கைப் பற்கள் மரத்தால் செய்யப்பட்டவை. அவரது சில பல் வகைகள், குறிப்பாக அவை கறை படிந்த பிறகு, ஒரு மர நிறத்தை எடுத்தது சாத்தியம், ஆனால் அவரது பல் பொருத்துதல்கள் எதையும் கட்டுவதற்கு மரம் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

ஜார்ஜ் வாஷிஙடன் பல் வியாதியால் அவதிப்பட்ட பின்னர். பலவிதமான பொய்ப்பல்/மாற்றுப்பற்களைப் பயன்படுத்தினாராம். முக்கியமாக, தங்கம், வெள்ளி, ஈயம், தந்தம் போன்ற பொருட்களை மாற்றுப் பல்லாக பயன் படுத்தினராம். வாஷிங்டன் தனது வாழ்நாள் முழுவதும் மனித மற்றும் அநேகமாக மாடு மற்றும் குதிரை பற்கள், தந்தம் (ஒருவேளை யானை), ஈயம்-தகரம் கலவை, செப்பு கலவை (ஒருவேளை பித்தளை) மற்றும் வெள்ளி கலவை போன்ற பொருட்களால் கட்டப்பட்ட ஏராளமான முழு மற்றும் பகுதியான பல்வகைகளை பயன்படுத்தினார் என்பது தகவல்.
அவர் மரத்தாலான பல்லை பயன் படுத்தவில்லை என்றாலும், அவரின் மரப்பல் உலகப் பிரசித்தம். மரப்பல் பற்றி ஏராளமான தேடல், தகவல்கள் உள்ளன. அவர் காண்டாமிருகத்தின் பல்லைக் கூட வைத்திருந்தாக பதிவுகள் சொல்லுகின்றன.அப்படி எனில் எப்படிப்பட்ட மனிதர் இவர்?
உலகில் மதிப்பு வாய்ந்த பல்

உலகின் கின்னஸ் பதிவின்படி, உலகத்திலேயே மிக மிக மதிப்பு வாய்ந்த பல் என்பது சர் ஐசக் நியூட்டனின் பல்தான். ஏன் தெரியுமா? 1816 ம் ஆண்டு, அவரது பற்களில் ஒன்று மட்டுமே 3,633 டாலருக்கு விற்கப்பட்டது. இப்போது அதன் மதிப்பைக் கணக்கிட்டால், 36,000-47,000 டாலர்கள் ஆகும்.
பல்லுக்கு நகை போட்ட மாயன்கள் ..!
![]()
உலகில், மனிதர்கள் ஆதிகாலத்தில் அணிகலன்களை கழுத்தில் அணிந்தனர். மனித இனம் பயன்படுத்திய முதல் நகை என்பது, நத்தையின் ஓடுதான் .சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் நத்தையின் ஓடுகளைக் கோர்த்து கழுத்தில் நெக்லசாக அணிந்திருந்தனர். ஆனால்..பல்லுக்கு நகை பூட்டிய மனிதர்கள் பற்றி தெரியுமா? சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் நண்பா. ஆதிகால நாகரிகத்தில், மாயன் நாகரிகம் மிகவும் முன்னேறிய நாகரிகமாக கருதப்பட்டது. அவர்கள் ரொம்பவும் சுவையான வாழ்க்கை வாழ்ந்தனர். இதோ பாருங்கள் அவர்களின் பல்லழகை.

ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களிடம் மிகவும் பிரமாதமான பல் மருத்துவர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் பல்லை அழகாக்கும் கலையின் விற்பன்னர்கள். அதனால் அவர்கள் பற்களை, முகத்தை அலங்கரிப்பது போலவே அலங்கரித்து அழகு செய்தனர். அவர்களின் பொருளாதார நிலை, சமூக நிலை தாண்டியும், , ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து மக்களும், பற்களுக்கு விலைமதிப்பற்ற கற்களைப் பதித்தனர். அவர்கள் பல்லை, அதன் நடுவில் வெட்டி, ,துளையிட்டு, பற்கள் உடையாமல் கன கச்சிதமாக, துளை போட்டு நிபுணத்துவத்துடன் .பொருத்தினர். அந்த பள்ளங்களில் பல விலை உயர்ந்த மணிகள்,நவரத்தினங்களான, மரகதம், இரத்தினம், நீலம், தங்கம் போன்ற மதிப்பு வாய்ந்த பொருட்களைப் பதித்து அழகூட்டினர்.இதுதான் இதுவரை உலகில் அதிக பட்ச பல் ஆபரணம் என்றும் கருதப்படுகிறது.
எழுதியவர் :
– பேரா. சோ. மோகனா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

