கே.பி.நாகராஜன் எழுதிய - ஏன் எழுதுகிறேன் | Why I Write - KP Nagarajan

 கே.பி.நாகராஜன் எழுதிய “ஏன் எழுதுகிறேன்” – நூலறிமுகம்

எடையற்றதாக்கும் எழுத்து,  துன்பத்தைக் கடக்கும் தோணி

 எங்கள் வீட்டில் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருப்பதால், எங்கள் பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கமும் சிறியவர்களாயிருக்கும்போதே வந்து விட்டது. எங்கள் இளைய மகனின் நண்பனின் தந்தை ‘ எதுக்கு இதெல்லாம் படிக்கணும்; எதுக்கு இதுலயெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணனும்?’ என்று கேட்பார். இந்தக் கேள்வி ஆச்சரியமானதாக இருக்கும். வாசிப்பென்பதை,  நேரத்தை அனாவசியமாக செலவழிப்பதான செயல் என்று அந்த மனிதர் நினைப்பதை எண்ணி வேதனைப்படுவதைத் தவிர வெறென்ன செய்ய?

படித்தல் என்பது தேர்வு எழுதி மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும்தான் என்பது அவர் எண்ணம் போலும். அது போல எழுதுதல் என்பது தருமி பொற்கிழிக்காக கவி எழுதியது போல என நினைத்துக் கொள்பவர் இருப்பர். இது எழுதி அனுப்பினால் எவ்வளவு காசு கிடைக்கும் என்று அந்தத் தந்தை கேட்பாராயிருக்கும்.  ஆனால், எழுத்து என்பது எந்த எதிர்பார்ப்புகளுமற்று, எவ்வித புறத்தூண்டுதலுமின்றி, தானாகவே எழும் ஒரு உத்வேகம். ஒரு அழகான பூ மலர்வது போல, மனதில் காதல் பூப்பது போல , எப்படி என சொல்லத் தெரியாமல் உணர்வின் வெளிப்பாடு. அந்த உணர்வு இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவமாக வெளிப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, நாவல் என ஏதோ ஒரு வடிவத்தில். தான் சாப்பிட்ட ஒரு இனிமையான பண்டத்தை மற்றவரும் ருசிக்கத் தருவது போல, தான் அடைந்த வேதனையை, வலியை மற்றவரும் உணர வைப்பது போல எழுத்தாளர்களின் எழுத்துகள் மூலம் வெளியே வருகிறது. ஒரு சிலருக்கு அது எளிதில் கை கூடி விடுகிறது. சிலருக்கு மேலும் மேலும் பயிற்சியின் மூலம் கை கூடுகிறது. தொடர்ந்து தான் நினைப்பதை, எண்ணுவதை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும், தான் ரசித்ததை மற்றவருக்கும் பகிர்ந்து விட வேண்டும் என நினைத்தே எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது  இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது

இன்னொரு புறம் இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கும் எழுத்தாளர்கள் பலர்  , தங்கள் மனதின் பாரத்தை, தன் வாழ்க்கையின் துயரத்தை எழுத்தின் வழியாகக் கடந்து வந்ததாகவே குறிப்பிடுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் கடினமான தருணங்களை, துன்பமான சூழ்நிலைகளை, மனதை நிலை குலையச் செய்த தருணங்களை ஏதோ ஒரு எழுத்து வடிவத்தில் இறக்கி வைத்து விட்டால், மனதே லேசாகி விடுவதை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். உண்மையில் இது சரி என்றே தோன்றுகிறது. 

 மனம் துன்பப்படும் சமயங்களில், நம் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டால் ஏதோ ஓர் ஆறுதல் கிடைப்பது உண்மைதானே? அதையே, ஒரு கடிதமாக வரைய முடிந்தால் அதுவும் மனது விட்டுப் பேசியது போலத்தானே? அவ்வளவேதான் எழுதுதலும் என்று இந்தப் புத்தகத்தை வாசிப்பவர் மனதில் எளிமையாகத் தோன்ற வைக்கிறது இந்தப் புத்தகம். இந்த எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள் என்று சொல்வதோடு, நாமும் எழுதலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

 வெறும் பயிற்சியினால் மட்டும் எழுத்து வருவதில்லை. எழுத்து என்பது ஓர் அகத் தூண்டுதல். தன் வலி போலப் பிறன் வலி உணரவும், தான் கொண்ட மகிழ்ச்சியைப் பிறரும் அறியச் செய்வதும், தனக்குத் தெரிந்ததை பிறரோடு பகிரவும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயல்வதும் இவை எல்லாம் ஓரளவு ஏதோ ஓர் இலக்கிய வடிவத்தில் வெளிப்படலாம். அகத்தூண்டுதல் இருந்தால் மட்டுமே அதை பயிற்சியின் மூலம் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். பயிற்சி என்றால் தேர்வுக்குப் படித்து மனனம் செய்வது போலன்று. எழுதத் தொடங்கிய எல்லோருமே முதலில் வாசிப்பை இடையறாது மேற்கொண்டவர்கள். இடையறாத வாசிப்பு, அவரவர் ஏற்றுக் கொண்ட சத்குரு போன்று, எழுதுவதற்கான திறனை மேம்படுத்தும். ஆக எழுத ஆசைப்படுபவர் எல்லாம் தொடர்ந்து நிறைய வாசிக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் தாங்கள் எழுதுவதற்கான காரணத்தைச் சொல்லும் அனேக எழுத்தாளர்கள் தாங்கள் சிறிய வயதிலிருந்தே நிறைய வாசிக்கப் பழகியதை, ஆசிரியர்கள் அதற்கு தூண்டுதலாக இருந்ததை, உதவி செய்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாவண்ணன் அவர்களின் கட்டுரையில், அவரது ஆசிரியர் தங்கப்பா கூறியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த உலகத்தில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், அறிவதற்கும் எத்தனையோ செய்திகளும், காட்சிகளும்  இருக்கின்றன. நமக்குத் தெரியாதவற்றையும் நமக்கு புத்தகங்கள்தான் அறிமுகம் செய்கின்றன. நிறையத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். வாசிக்க வாசிக்க எழுதும் ஆர்வமும், நுட்பமும் கை கூடி வரும் என்பது இந்த எழுத்தாளர்களின் சொற்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எழுத்தாளர் லாவண்யா தன்னுடைய தீவிர வாசிப்பனுபவமே தன்னை எழுத்துப் பாதையைக் காட்டியதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, யாரோடும் அதிகம் உரையாடுபவளாக இல்லாவிட்டாலும், எழுத்து என்பதோடு தீவிரமான உரையாடலை நிகழ்த்துவதாகக் குறிப்பிடுகிறார். தீவிர வாசிப்பு, இலக்கியம் என்றெல்லாம் அறிமுகம் இல்லாத குடும்பமாக இருந்தாலும், கல்லூரி நாட்களில் வாசிக்க ஆர்ம்பித்த பிறகு, அவரது எழுத்து என்பதும் தீவிரமடைந்தது எனவும் குறிப்பிடுகிறார். அதே போல பாவண்ணன் தன்னுடைய பள்ளி நாட்களிலே ஆசிரியர்கள் வாசிப்பை ஊக்குவித்ததையும், நூலகம் என்பது அவரது வாசிப்பு ஆர்வத்தையும்,  தளத்தையும் விரிவுபடுத்தியதையும் குறிப்பிடுகிறார். அதோடு, வாழ்க்கையின் துயரங்களைக் கடக்க, எழுத்து ஒரு நல்ல வழியாக இருப்பதைச் சொல்கிறார்.  நாஞ்சில் நாடன் தன்னுடைய வாழ்க்கை  தன்னை கிராமத்தில்;இருந்து ஒரு பெரு நகரத்தில் கொண்டு சேர்த்ததைக் குறிப்பிட்டு, அங்கு தன் வாசிப்பை விரிவாக்கிக் கொண்டதையும், தன் மனத் துயரங்களை எழுத்தின் வழியே கடந்து வருவதை பயிற்சியாக மேற்கொண்டதையும் குறிப்பிடுகிறார்.

தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த அனுபவங்களை மற்றவரோடு பகிர்வதும், இந்த சமூக அவலங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதும், தங்கள் எழுத்தின் நோக்கம் என்று திலகவதி, கரீம் போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அன்றாட வாழ்க்கையிலேயே மனிதர்களின் புரிதல்கள், மனக் கசப்புகள், கருத்து வேறுபாடுகள் இவற்றை எழுத்தில் வடிப்பதே என சில எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கே. நல்லதம்பி,பொழுது போக்கிற்காக மொழிபெயர்க்க ஆரம்பித்து, அதையே தன் வாழ்க்கையாகக் கொண்டு விட்டதாக, அதன் மூலம் பலருடைய தரிசனம் கிடைப்பதாகச் சொல்கிறார். 

அக்களூர் ரவியும் மொழிபெயர்ப்பில் தான் முழுவதுமாக இறங்கி விட்டதாகச் சொல்கிறார். சொந்தமாகப் படைக்க முடியாவிட்டாலும், மொழிபெயர்ப்பு வழியாக தன்னை இலக்கியத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்துகிறார்.    

தான் வாசிப்பதை அறிமுகப்படுத்துவது தனக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது என்று சுப்பாராவ் சொல்கிறார். புதிய புத்தகங்களைத் தேடி வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவருடைய புத்தக அறிமுகங்கள் மிகவும் கவனத்துக்குரியதாக இருப்பதாகச் சொல்கிறார். வாசிப்பதை மற்றவர்களோடு பகிர்வதற்காக வாசிப்பதும், வாசிப்பதைப் பகிர்வதும் மகிழ்ச்சியானதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

 புதியதைக் கண்டடைவதும், அது தொடர்புள்ளதாகவும், தொடர்பற்றவையாகவும் மனம் புதிது புதிதாக எதையெதையோ தொடுத்துக் கொள்வதும் சுவாரசியமாக இருக்கிறது என்று சுனில் கிருஷ்ணன் சொல்கிறார்.

 எஸ்ஸார்சி, விட்டல்ராவ் இருவரும், பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் தங்களை வாசிக்கவும், வாசித்ததைப் பகிரவும், மற்றவர் முன் நின்று கதைகள் சொல்லவும் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார்கள். எஸ்ஸார்சி தான் படிப்படியாக எழுத்துலகுக்குள் நுழைந்ததை அடுக்கடுக்காக விவரித்துச் சொல்கிறார். 

கலைச்செல்வி சிறுமியாய் மாயாவிக் கதைகள் வாசிக்க ஆரம்பித்து, தற்போது, எழுத்தே தன்னை எடையற்றவளாக உணர வைக்கிறது எனறு குறிப்பிடுகிறார்.

 இப்படி தொகுப்பு முழுவதும், எழுத்தாளர்கள்” ஏன் எழுதுகிறேன்” என்ற கேள்விக்கு விடையாகக் குறிப்பிடுவது பொருளீட்டவா என்றால் இல்லை; புகழ் சம்பாதிக்கவா என்றால் இல்லை. பொழுது போக்கவா என்றால் இல்லை.பின் எதற்காக எழுதுகிறீர்கள் என்றால், கிடைக்கும் பதில், தன்னை உணரவோ, புதுப்பித்துக் கொள்ளவோ எழுதுகிறார்கள். தங்கள் மன பாரங்களை இறக்கி வைத்த நிம்மதி பெறுவதாக உணர்வதால் எழுதுகிறார்கள். மனதைப் பாதிக்கும் ஏதோ ஒரு நிகழ்வு, ஒரு மனிதர், ஒரு சமுதாய அவலம், சீர்கேடு, நல்ல மனிதர்கள், அல்லது அல்லாதவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு என ஏதோ காரணம் பற்றி எழுதுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவது மனதுக்குப் பிடித்தமானதாக இருப்பதால் எழுதுகிறார்கள். நிறைய எழுதுபவர்கள் நிறைய வாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல சங்கீதம் இசைக்க விரும்புவர்கள், நிறைய கேட்கவும் வேண்டும்தானே? அது போல எழுத ஆசைப்படுபவர்கள், நிறைய வாசிக்கவும் வேண்டும். 

பாவண்ணன் நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, இந்தத் தொகுப்பு எழுத ஆசைப்படும் எளிய வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கும் சிறந்த கையேடாகவும், நடை பழகும் குழந்தைக்கு நடைவண்டி ஒரு பிடிமானமாக இருப்பது போலவும் இருக்கும். புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது,  நாமும் எதையாவது எழுதிப் பார்க்கலாம் என்று நிச்சயம் வாசகர்களுக்குத் தோன்றும். அதுவே இந்த நூலின் வெற்றி.  

 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய “ஏன் எழுதுகிறேன்” என்ற கட்டுரையை புத்தகத்தின் அறிமுகக் கட்டுரையாக பதிவிட்டிருப்பதும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. இப்படியொரு தொகுப்பினைக் கொண்டு வந்தால் என்ன என்று நண்பர் கே.பி. நாகராஜனுக்குத் தோன்றிய ஒரு சிறு ஆசையை உண்மையில் பாராட்டியே ஆக வேண்டும். எப்போதுமே, புன்னகை பூத்திருக்கும் முகம் என்று சொன்னால் போதாது, எப்போதும் சிரிப்பில் கொப்பளிக்கும் உற்சாகத்துடன் உலாவரும் கே.பி.நாகராஜன், இந்தத் தொகுப்பினைக் கொண்டு வருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை அவர் முன்னுரையில் விவரித்திருக்கும் விதமே, அவர் எவ்வளவு ஆர்வத்துடன் பல எழுத்தாளர்களையும் தொடர்பு கொண்டு இந்தக் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார் என்பதை உணர வைக்கிறது. உண்மையில் அவர் மிகுந்த பாராட்டுக்குரியவர். அவருக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து புத்தகமாக வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பக நடராஜன் அவர்களும், பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.  

             

நூலின் தகவல்கள் 

நூல் : ஏன் எழுதுகிறேன்?

நூலாசிரியர் : கே.பி.நாகராஜன்

விலை: ரூ.300/-

வெளியீடு:சந்தியா பதிப்பகம்

 

எழுதியவர்
 எஸ்.ஜெயஸ்ரீ

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



  

Show 2 Comments

2 Comments

  1. எஸ்ஸார்சி

    சிறப்பான கட்டுரை.நன்றிபல.
    எஸ்ஸார்சி

  2. ரகுராமன்

    அருமை அருமை. நல்ல நூல் அறிமுகம். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *