என்.குணசேகரன் எழுதிய "தமிழக அரசியலில் அதிமுக முக்கியத்துவம் இழப்பது ஏன்?" அரசியல் கட்டுரை | ADMK Losing Importance in TN Politics - www.bookday,in

தமிழக அரசியலில் அதிமுக முக்கியத்துவம் இழப்பது ஏன்? – என்.குணசேகரன்

தமிழக அரசியலில் அதிமுக முக்கியத்துவம் இழப்பது ஏன்?

– என்.குணசேகரன்

கடந்த காலத்தில் தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்கான போட்டி என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

தமிழக முதல்வர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டுக்குமான போட்டி என்கிறார். பல ஊடகங்களும் இதே போன்று விவாதிக்கின்றனர்.தவெகவினரும் பாஜக கூட்டணி என்று கூறி அதிமுக தங்களுக்கு பொருட்டல்ல என்பது போன்று பேசி வருகின்றனர்.தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகளும் இரண்டாம் இடத்தை பிடிப்பதில் அதிமுகவிற்கும் தவெகவிற்கும் போட்டி நடப்பதாகத் தெரிவிக்கின்றன.

இரண்டாம் பட்சமாக பார்க்கும் பாஜக

எதிர்த்தரப்பினர் அதிமுகவை ஓரம் கட்டிப் பேசுவதில் ஆச்சரியமில்லை.பாஜகவை சேர்ந்த தலைவர்களே அதிமுகவை இரண்டாம் பட்சமாக பார்க்கின்றனர்.கூட்டணிக்கான கட்சிகளை இணைப்பது, மற்ற மிரட்டல், உருட்டல் பேரங்களை பேசுவது உள்ளிட்ட அனைத்தும் பாஜகவின் மத்தியத் தலைமையே செய்து கொண்டிருக்கிறது.கூட்டணி அமைப்பதில் அதிமுகவிற்கு பெரிய பங்கு எதுவுமில்லை.அதனால்தான் மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர்கள் ‘தமிழ்நாட்டில் அமையப்போவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ‘என்று பேசினர். தனது தலைமையில், தான் முதலமைச்சராகி அதிமுக ஆட்சி அமைக்கும் என்கிற கனவோடு எடப்பாடி கூட்ட மேடையில் அமர்ந்திருக்க,பிரதமர் ‘அதிமுக’ ‘எடப்பாடி’ என்ற சொற்களைக் கூட சொல்லாமல் பேச்சை முடித்தார். இவை பாஜக கூட்டணியில் அதிமுகவிற்கு முக்கியத்துவம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்களாக உள்ளன.

இன்றைக்கும் கள மட்டத்தில் அமைப்பு பலம் கொண்ட கட்சியாக அதிமுக இருந்தாலும் ஏன் அதற்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்பது முக்கியமான கேள்வி.இதற்கான விடையை அதிமுகவின் அரசியல் சித்தாந்த நிலைபாடுகளில் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பவாத சறுக்கல்களில்தான் காண முடியும்.

சித்தாந்தத் தளர்வு

திராவிட இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு மிகப் பெரும் பிளவு ஏற்பட்டது. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை துவக்கினார்.தமிழகத்தில் அன்று நிலவிய சமூக பொருளாதாரக் காரணங்களும் அதிமுகவிற்கு சாதகமாக இருந்தன. 1967-ல் காங்கிரஸை தேர்தலில் தோற்கடித்த மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு தங்களது வாழ்வாதார மேம்பாட்டிற்குக் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் அவர்கள் புதிய சக்தியாக உருவெடுத்த அதிமுகவை ஆதரித்தனர்.

இதில் இணைந்த தொண்டர்கள், தலைவர்கள் திராவிட இயக்க சித்தாந்த தொடச்சி கொண்டவர்களாக இருந்தாலும் எம்ஜிஆரின் ரசிகர்களே கட்சிக்கு பிரதான பலமாக இருந்தனர்.மறைந்த எம்.எஸ்.எஸ் பாண்டியன் “பிம்பச்சிறை” நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“…..எம்ஜிஆரின் திரைப்படங்கள், திரை அரசியல் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட, மயக்கும் மாய உலகத்தில் தங்களைத் தொலைத்த ரசிகர்கள் 1987 -ல் எம்ஜிஆரின் இறப்பு வரை தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.”

எனவே,துவக்க காலத்தில் திராவிட இயக்கம் முன்னெடுத்த சில முற்போக்கான சித்தாந்த அடிப்படைகளும் அதிமுகவில் நீர்த்துப்போன வடிவில்தான் இருந்தது.

ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு சித்தாந்த நிலைகள் மேலும் வலுவிழந்து,நேர் எதிரான திசையில் அதிமுக பயணித்தது. அன்றைக்கு அயோத்தியா பிரச்சனை வந்த போது ஜெயலலிதா அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பேசி கர சேவைக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலை திராவிட இயக்க அடிப்படைகளுக்கு முரணானது.2002-ல் கட்டாய மதமாற்ற தடை மசோதா கொண்டு வந்து, எதிர்ப்பிற்குப் பிறகு ரத்து செய்தார். கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை கொண்டு வந்து அதைப் பிறகு ரத்து செய்தார்.இவை அனைத்தும் அதிமுகவின் சித்தாந்த சறுக்கல்களாகவே அமைந்தன.

இப்போது இவையெல்லாம் தேர்தல் பிரச்சினைகள் இல்லை. எனினும் அதிமுகவின் சரிவுப் படலத்திற்கான காரணங்களை உணர்ந்தால்தான் அதிமுக தலைமை அதை சரி செய்ய முடியும். இந்த சரிவினை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் வகுப்புவாத சக்திகளிடமிருந்து முற்றாக அதிமுக விடுபட வேண்டும். ஆனால் இதற்கு நேரெதிராக எடப்பாடி செயல்படுகிறார்.

அன்று ஜெயலலிதா கோடு போட்டு ,பிறகு நிறுத்திக் கொண்டார்;ஆனால் எடப்பாடி இன்று ரோடு போட்டு விட்டார்!ஜெயலலிதா கூட அதிமுக–பாஜக கூட்டணி “தற்போதும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை” என்று உறுதி எடுத்தார். ஜெயலலிதா எடுத்த நிலைக்கு மாறாக இந்துத்துவா சக்திகளோடு உறவாடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

அனைத்திற்கும் ஆமாம் சாமி போடும் கட்சி :

அனைத்துப் பிரச்னைகளிலும் ‘ஆமாம் சாமி’ போடும் கட்சியாக அதிமுக இருந்து வந்துள்ளதுசமீபத்திய .ஒன்றிய பட்ஜெட்டில் வேளாண் ஒதுக்கீட்டிற்கு கடந்த ஆண்டை விட ரூ . 6985 கோடி குறைத்துள்ளனர். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ . 5367 கோடி குறைத்துள்ளனர். விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி இதை கண்டித்தாரா? எதைப் பற்றியும் ஆழமாக சிந்திக்காமல்‘“உள்நாட்டு உற்பத்தியை வலியுறுத்தும் பட்ஜெட் “என்று பட்ஜெட்டை புகழ்ந்து வருகிறார்.

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு, ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (VB-G RAM G) சட்டம் 2025 என்று பெயர் மாற்றப்பட்டு இடதுசாரிகளால் வடிவமைக்கப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் இன்று உருக்குலைக்கப்பட்டுள்ளது.நூறு நாட்களில் இருந்து 125 நாட்களாக மோடி உயர்த்திவிட்டார் என்று லாலிபாடுகிற எடப்பாடி,பட்ஜெட்டில் 125 நாள் வேலைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மோடி ஒதுக்கினாரா என்பதை ஏன் பார்க்கத் தவறுகிறார்?இது ஏமாற்று வேலை என்று தெரிந்தும் ஏன் மூடி மறைக்க முயற்சிக்கிறார்?

உள்நாட்டுப் பொருளாதாரத்தை நாசமாக்குகிற இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தை “எல்லா டீல்களின் தாய்” என்று பாராட்டி, அது தமிழ்நாட்டின் கொங்குப் பகுதி தொழில்களுக்கு பயனளிக்கும் என்று கூறினார் எடப்பாடி.அடுத்து வந்த இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் உற்பத்திப் பொருட்களை இந்திய சந்தையில் நிரப்பி,முழுக்க முழுக்க நமது உள்நாட்டு சிறுகுறு தொழில் உற்பத்தி பொருட்களின் சந்தைகளை பாதிக்க உள்ளது என்பதை எடப்பாடி ஏன் கண்டுகொள்ளவில்லை ?அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 18% வரி விதித்தல் நடவடிக்கை, ஆயிரக்கணக்கான தொழில்கள் மூடப்படுகிற நிலைமையை ஏற்படுத்தும் என்பதை அவர் ஏன் பார்க்க மறுக்கிறார்?

பழங்கள்,பருத்தி மற்றும் உணவு விவசாய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது இது உள்நாட்டு விவசாயிகளை பாதிக்காதா?இதை எடப்பாடி உணர்ந்தாரா?

இந்திய வேளாண்மையை கைப்பற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சதித் திட்டம்தான்,ஒன்றிய அரசின் ‘2025 விதை மசோதா’. விதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக துணையோடு இந்த வேலையை செய்கிறபோது,அது பற்றி எடப்பாடி ஏன் உருப்படியான விமர்சனம் ஏதும் செய்யவில்லை?

கொள்கை வீழ்ச்சிப் படலம்

அண்ணா கூறினார்:”மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான்.”இவ்வாறு சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் மாநில சுயாட்சி பற்றி எடுத்துரைத்து,வாழ்நாள் முழுவதும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு குரல் கொடுத்தவர் அண்ணா.ஏன் இது எடப்பாடிக்கு புரியாமல் போனது?மாநில சுயாட்சியை வலியுறுத்திய அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் எடப்பாடி கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தும் பாஜகவை என்றைக்காவது கண்டித்தது உண்டா?

இந்தித் திணிப்பு முயற்சிகளை இடையறாது செய்து வரும் பாஜகவின் செயல்களை வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்து வருகிறார் எடப்பாடி.பெரியார் மீது அவதூறுகள், இழிசொற்கள் வீசப்படுகிறபோது அதற்கு உரிய உணர்ச்சிகரமான பதில்களை என்றைக்காவது எடப்பாடி கொடுத்ததுண்டா?சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதலை மேற்கொள்ளும் சங்கப் பரிவாரங்களை அவர் என்றாவது உறுதியாக கண்டித்தது உண்டா?

இவ்வாறு அதிமுகவின் கொள்கை வீழ்ச்சிப் படலம் தொடர்கிறது.கொள்கை, கோட்பாடுகளைக் கைவிட்டு பாஜகவுடன் சரணடைந்ததுதான் அதிமுக முக்கியத்துவம் இழப்பதற்கான முக்கிய காரணம்.

படுதோல்வி:

இன்றைக்கு பாஜகவின் நவபாசிச கொள்கைகளுக்கு எதிர்ப்பு தமிழகத்தில் மிக எழுச்சியாக உள்ளது. பாஜக அரசின் மாநில நிதி மற்றும் உரிமைகளைப் பறிக்கும் கூட்டாட்சி விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர்.இந்த சூழலில் பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயமாக படுதோல்வியை தழுவிடும். பிறகாவது அதிமுக பாஜகவின் உண்மை சொரூபத்தை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். மாறாக கொள்கை சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிக் கிடந்தால் அதிமுக கரைந்து போகும் நிலை ஏற்படும்.

மத அரசியலை முற்றாக நிராகரித்தால்தான் எந்த ஒரு அரசியல் சக்தியும் சரியான வழித்தடத்தில் தமிழகத்தில் பயணிக்க முடியும்!

அதிமுக பெறவிருக்கும் தேர்தலில் பெறவிருக்கும் படுதோல்வி அக்கட்சிக்கு பாடமாக அமையட்டும் !

========================================================.

எழுதியவர்:

– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *