ஏன் சாகிறோம் why we die எனும் தலைப்பில் நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Venki Ramakrishnan) எழுதி சென்ற வாரம் வெளிவந்துள்ள இந்த புத்தகம்தான் இன்று அறிவியல் எழுத்து உலகில் பெரிய பரபரப்பு. RNA வில் உள்ள ரிபோசோமங்களின் அமைப்பை உலகிற்கு கட்டுடைத்து நோபல் பரிசை வென்ற மாமனிதர் அவர். நம் தமிழகத்தில் சிதம்பரத்தில் பிறந்து பரோடாவில் கல்வி கற்றவர். இவருடைய தாயார் ராஜலக்ஷ்மி அம்மையார் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இந்தியாவின் உயிரியல் பெண் விஞ்ஞானி ஆவார். அதுசரி ஏன் சாகிறோம்? தத்துவத்தை விடுத்து அறிவியலை கையில் எடுத்திருக்கும் நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Venki Ramakrishnan) சொல்லுவது என்ன?
மரணம் குறித்து இலக்கியமும், தத்துவமும் இந்த உலகில் பலவாறு எடுத்துரைப்பதை நாம் பார்க்கிறோம். மனிதனுக்கான மரணம் குறித்த புதிர்தான் மதங்களையும் கடவுளையும் தோற்றுவித்தது. மனிதனுக்கு ஏன் வயதாகிறது வயதான பின் மூப்பு ஏன் வருகிறது ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து இன்று உலகெங்கிலும் அறிவியல் ரீதியில் பல வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த புத்தகம் அந்த ஆய்வுகளைத் தொகுத்து கொடுக்கிறது. அந்த ஆய்வின் முடிவுகளை பட்டியலிடுகிறது. அந்த பட்டியலின் ஊடாக முடிவுகளை அறிவிக்கிறது.
12 அத்தியாயங்களில் நம்முடைய வாழ்க்கையின் வேகமான வளர்ச்சியையும் அடுத்தடுத்த படிநிலைகளையும் குறுக்கு விசாரணை செய்கிறது..

இறந்து போவது குறித்த கல்விக்குள் நுழைவதற்கு வெங்கி ராமகிருஷ்ணன் முதல் நபர் அல்ல. நான் ஏற்கனவே THE SCIENCE OF DEATH தலைப்பில் ஜே ஆர் ராபர்ட்ஸ் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்து இருக்கிறேன்.. இந்த புத்தகம் ஒரு மர்ம நாவலை போல எழுதப்பட்டிருக்கும் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கும் ராபர்ட்ஸ் என் ஆத்மார்த்த எழுத்தாளர்களில் ஒருவர். தி சயின்ஸ் ஆஃப் டெத் ஒரு அறிவியல் நாவல் ஆகும் துப்பாக்கி செய்யும் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானியை இறந்து போகாமல் யாரும் கொன்றுவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று அரசாங்கம் கேட்டுக் கொள்ளும் டெக்சாஸ் எனும் ஊருக்கு அருகே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானிக்கே தெரியாமல் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் கதையின் கதாநாயகனுக்கு ஏற்படுகிறது .இந்த விஞ்ஞானி மரணம் குறித்து தனக்கு தானே தன் உடலை வைத்து பரிசோதனைகள் செய்து கொள்வதை அவர் கண்டுபிடிப்பார் .ஒருகட்டத்தில் இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு மற்றவர்களால் மோசமாகவும் பயன்படுத்தப்பட கூடும் என்பதை அறிந்து கொள்வார்.. பெரும்பாலும் மரணம் குறித்து அறிவியல் ரீதியில் களமிறங்கும் எல்லாரும் தன் உடலை சுயமாக சோதனைக்கு உட்படுத்துவதுலாகத்தான் இருந்திருக்கிறார்கள்..

மரணம் குறித்த அறிவியலுக்கு THANATOLOGY என்று பெயர். இந்த துறையை தோற்றுவித்தது அதற்கு அந்த பெயரையும் வைக்கவர் ரஷ்ய விஞ்ஞானி தடயவியல் நிபுணர் பேராசிரியர் METCHNIKOFF எனும் விஞ்ஞானி. இந்த விஞ்ஞானி மெஷின்காஃப் மேலுமொரு துறையையும் கண்டறிந்தார் அதுதான் GERONTOLOGY.. ஒருவர் முதுமை அடைதலின் சமூக கலாச்சார உருவவியல் உளவியல் குறித்து அறிவியலாகும் . இலியா இளிச் மேக்நிக்கவு எனும் மற்றொரு ரஷ்ய அறிஞர் GERONTOLOGY என்பதைமுதியோர் மருத்துவம் என்று பெயர் மாற்றினார். அதற்கு முன்னதாக இசுலாமிய பொற்காலத்தில் பல மருத்துவர்கள் இந்த துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிறைய எழுதி இருக்கிறார்கள். அபி சேனாவின் தி கனால் ஆஃப் மெடிசின் என்கிற நூல் முதுமையில் வரும் மலச்சிக்கலை மட்டுமே தனியாக விவரித்தது அரபு மருத்துவர் விபின் அலு ஜஸ்சார்முதியவர்களின் வலிகள் குறித்து எழுதினார் தூக்கமின்மை மறதி நினைவாற்றல் போன்றவைகளை பற்றி இசுலாமிய பொற்காலத்தில் பலர் எழுதினார்கள்
1970களில் முற்பகுதியில் என்று நினைக்கிறேன் டெத் வித் டிக்னிட்டி என்று மரணம் பற்றிய ஆய்வுக்கான ஒரு இயக்கம் நடத்தப் பட்டது இந்த இயக்கம் மன நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட கட்டமைப்பிற்குள் ஆலோசனைகள் வழங்குவதோடு தங்களுடைய உடலை ஆய்வுக்கு கொடுப்பதற்கு பரிந்துரைத்தது இப்படியெல்லாம் உலக அளவில் ஏற்கனவே நடந்திருக்கிறது . வில்லியம் பால்க்நர் எழுதியஎஸ் ஐ லே டையிங்.. புத்தகம் உலக அளவில் மிக பிரபலமானது 15 விதவிதமான மனிதர்களின் மரண கதைகளை இந்த புத்தகம் எழுதியது
இருந்தாலும் நம்முடைய நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதி தற்போது வெளிவந்திருக்கும் WHY WE DIE புத்தகம் இவற்றையெல்லாம் கடந்து தற்போதைய மரபணுவியல் பார்வையில் மரணத்தை அணுகுவதால் இந்த புத்தகம் வயதாவது மூப்பு அடைவது இறந்து போவது குறித்த ஆகச்சிறந்த புத்தகம் ஆகும்.

கிரேக்கர்கள் உடலை பாதுகாத்து வைத்தது ஏன் என்பதிலிருந்து இந்த நூல் தொடங்குகிறது அராபியர்களும் ஜைனர்களும் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒருவர் இறந்து போனால் மூன்று திட்டங்கள் வைத்துள்ளனர் முதல் திட்டம் மரணத்தை எப்படியாவது தள்ளிவைப்பது .இது தோல்வி அடைந்தால் இரண்டாவது திட்டம் மறு பிறப்பு.. மூன்றாவது திட்டம் நம்முடைய உடல் அழிந்து போனாலும் ஆன்மா எப்போதும் இங்கேயே தான் இருக்கும் என்பது இவற்றையெல்லாம் விட மனிதன் தான் என்றும் வாழ்வதற்கு நான்காவதாக ஒரு திட்டம் வைக்கிறான்.. தான் அழிந்து போகாமல் இருப்பதற்காக பல வகையான சின்னங்களை இந்த உலகத்தில் படைத்து தொடர்ந்து தன்னுடைய புகழ் நிலைத்திருக்கும் ஆறு செய்கிறான் என்று முன்னுரை பேசுகிறது. உலகத்தின் அனைத்து மதங்களையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் இப்படி ஒரே வரியில் சுவீகாரம் செய்து அறிவியலை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறார் வெங்கி ராமகிருஷ்ணன்.
இந்த பத்தாண்டுகளில் மரணத்தை தள்ளி வைப்பது குறித்து உலகஅளவில் 3,00,000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன 700 பிரம்மாண்ட ஆய்வு நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் மனிதன் இந்த பூமியில் நிரந்தரமாக வாழ்வது குறித்த அறிவியலை தீவிரமாக மருந்து யலோடு சேர்த்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன இன்றைக்கு மரபியல் மரணம் குறித்த புதிய பார்வையை மனிதனுக்கு கொடுத்திருக்கிறது நான் முதலத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற இரண்டு விஷயங்களை வாசித்து அசந்து போனேன் ஒன்று APOPTOSIS என்கிற சித்தாந்தம். நம் உடலின் செல்கள் நாள்தோறும் இறந்து கொண்டே இருக்கின்றன இந்த செல்கள் இறந்து போவதும் வளர்ச்சியின் ஒரு வடிவம் ஆகும் ஆனால் சில செல்கள் மரணிக்காமல் தன் வாழ்வின் தொடர்ச்சிக்காக இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன இந்த செல்கள் நம்முடைய உடலிலிருந்து நம் சந்ததிக்கு சென்று விடுகின்றன இவை மரணிப்பதில்லை ஆனால் மரணிக்கின்றனர் இந்த செயல்களுக்கு ஏமாற்றும் செயல்கள் என்று பெயர் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கப்படுவதற்கு பரிணாமவியல் ரீதியில் கண்டுபிடித்து வைத்திருக்கின்ற காரணம் இனப்பெருக்கம்.

இரண்டாவது அத்தியாயத்தில் மூன்று அற்புதங்கள் உள்ளன. ஐசக் நியூட்டன் (Isaac Newton) அமர்ந்திருந்த ஆப்பிள் மரத்தின் பாகங்களை இங்கிலாந்து முழுவதும் எடுத்துச் சென்று கிட்டத்தட்ட 300 இடங்களில் நியூட்டன் மரங்களை நட்டு இருக்கிறார்கள். எனவே தாவரங்கள் எப்படி தன்னுடைய வாழ்நாளை அதிகமாக்கிக் கொள்கின்றன என்பது குறித்து அந்த அத்தியாயம் விரிவாக பேசுகிறது. நியூட்டன் மரங்களின் உடைய வேர் என்பது பல 100 ஆண்டுகளுக்கு முன் நியூட்டன் அமர்ந்து புவியீர்ப்பு விசையை சிந்தித்த அந்த ஒரு ஆப்பிள் மரத்தை சார்ந்ததாகும். 1891 கண்டறியப்பட்ட நியூயார்க் நகரத்தின் உடைய ஒரு பிரம்மாண்டமான சிகோயா மரம் 1300 ஆண்டுகள் வயதானது ஆகும். ஆப்பிரிக்க காடுகளில் 3000 ஆண்டு வயதான மரமும் இருக்கிறதாம். இன்றைய மரபணுவியல் இவற்றில் இருந்து பாடம் கற்க விரும்புகிறது.
இன்னொரு விஷயம் இரண்டு வகையான உயிரிகளை சிறப்பு உயிரிகள் என்று இந்த நூலில் வெங்கி ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்திருக்கிறார்.. மரங்களை வெட்ட வெட்ட துளிர் விடுவது போல ஸ்டார் ஃபிஷ் – நட்சத்திர மீனின் கரங்கள் வெட்டப்பட்டால் அவை எளிதில் வளர்ந்து விடுகின்றன. தலையை வெட்டப் பட்டாலும் அவை மீண்டும் வளர்ந்து.. முதலில் இருந்து வாழ்கின்றன. இன்னொரு உயிர் இருக்கிறது. TURRITOPSIS DOHRNII இது ஒரு வகை ஜெல்லி மீன் இந்த மீன்கள் லேசாக காயம் பட்டாலும் உடனடியாக அது எந்த நிலையில் இருந்தாலும் அப்போதிலிருந்து வினோதமான ஒரு விஷயம் … அவை முதலில் இருந்து … வாழத் தொடங்குகின்றன…. சூரி பரோட்டா சாப்பிட்டது போல… கோடு எல்லாத்தையும் அழித்துவிட்டு …. ரிப்பீட் லைஃப்!

இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்தமான உட்பகுதி உண்டு.. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மனிதனுடைய இதய துடிப்பை அவர் கார்களின் இயந்திர துடிப்போடு ஒப்பிட்டிருக்கிறார். சராசரி மனித வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் ஒரு இதயம் உலகஅளவில் 1.5 பில்லியன் முறை துடிக்கிறது என்று அறிவியல் அறிவித்திருக்கிறது. அன் பிறகு இயற்கையாக உங்கள் இதயம் துடிப்பதை நிறுத்திவிடும்.. இதுதான் அனைத்து பாலூட்டிகளுக்கும் ஏறக்குறைய நடக்கும் விஷயம்.
கார் என்கிற நான்கு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது 1,50,000 மைல்கள் அதனுடைய மொத்த வாழ்க்கைக்காலம் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு கார் என்ஜினுடைய சுழற்சி இந்த ஆண்டுகளில் 1.5 பில்லியன் சுழற்சியாகும் .. இந்த ஒப்பீடு நம்மை அசர வைக்கிறது. ஜெஃப்ரி வெஸ்ட் இளம் விஞ்ஞானி 120 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்களை ஆய்வுசெய்து அற்புதமான தன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த முடிவுகள் நம்மை வழிநடத்துகின்றன. இவற்றை வைத்து மனிதர்கள் வாழ்நாளை நீட்டுவதற்கும் இறந்து போவதற்குமான ஒரு சமன்பாட்டையும் விதியையும் நிறுவ முடியும் என்று வெங்கி ராமகிருஷ்ணன் அறிவிக்கிறார்.
இந்த புத்தகத்தின் ஏழாவது அத்தியாயம் LESS IS MORE தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதில் பல விஷயங்கள் நமக்கு புரிய வைக்கப்படுகின்றன.. மூப்படைந்து 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களின் உடைய பொதுவான சாதனை மற்றும் அதிக நாட்கள் வாழ்கின்ற பறவைகளின் சாதனைகள் ஒப்பீட்டளவில் குறைவான உணவை எடுத்துக்கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருப்பதை ஒரு சராசரி காரணமாக இந்த அத்தியாயம் முன்வைத்து நமக்கு விளக்குகிறது. இறுதி அத்தியாயத்தில் உண்மையிலேயே நாம் நிரந்தரமாக வாழத்தான் வேண்டுமா என்கிற கேள்வியோடு உயிரின் மரணம் பரிணாமவியல் ரீதியில் ஏன் நிகழ்கிறது என்பதை விளக்குகிறது. மரணம் என்பது பரிணாமவியல் கண்டுபிடித்த மிக முக்கியமான கருதுகோள் அப்போதுதான் உயிரிகளுக்கிடையே இயற்கை வேற்றுமைகளும் அடுத்தடுத்த சந்ததியில் புதிய வகையான பரிமான உயிரிகளை ஏற்படுத்துகின்ற வாய்ப்புகளும் உயிரி பரிணாமத்திற்கு… கிடைக்கும்.

தற்போதுள்ள விஞ்ஞானிகளில் வெங்கி ராமகிருஷ்ணன் மிகவும் வித்தியாசமானவர். அவர் இந்தியாவில் தன்னுடைய கல்லூரி நாட்களில் இயற்பியல் பாடத்தை எடுத்துப் படித்தார்.. 1976 இல்ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார். ஆனால் பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட்ன் மீது இருந்த காதலினால் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மீண்டும் உயிரியல் சேர்ந்தார். உயிரியலில் முதலில் இருந்து பட்டப்படிப்பும், முதுகலைப் படிப்பும் கூடவே முனைவர் பட்டமும் விரும்பி கற்றார். ஜெல்லி மீன்கள் போலவே ரிப்பீட்! சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் மாணவராக இருந்தபொழுது RNA மீது காதல் விழுந்தது. ஈல் பல்கலைக்கழகத்தில் பீட்டர் மூர் உடன் இணைந்து ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். படித்தது இயற்பியல் மற்றும் உயிரியல் நோபல் பரிசு பெற்றது வேதியலுக்காக!! பின் நாட்களில் அற்புத விஞ்ஞானியாகவும் லண்டனின் ராயல் சொசைட்டி தலைவராகவும் பணியாற்றும் அளவிற்கு பிரம்மாண்ட அறிவியலாளராக வளர்ந்தார்..
WHY WE DIE சாவதற்குள் கண்டிப்பாக நாம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
கட்டுரையாளர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Why we dieல் மரணம் என்பது பரிணாமவியலின் முக்கியமான ஒரு கருதுகோள் என்றும் உயிரிகளுக்கிடையே இயற்கை வேற்றுமைகளும் அடுத்தடுத்த சந்ததியில் புதிய வகையான பரிணாம உயிரிகளை ஏற்படுத்துகின்ற வாய்ப்புகளும் உயிரி பரிணாமத்திற்கு கிடைப்பதற்காக நடக்கும் இயல்பான ஒன்று என்பதை அறிய முடிகிறது. அது மட்டுமின்றி பல்வேறு மரணம் தொடர்பான சிறப்பு கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கும் நூல்.
தாங்கள் கூறிய படி இறப்பதற்குள் வாசித்துவிட வேண்டிய அற்புதமான புத்தகம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
நானறிந்து தனது வாசகர்களுக்கு தங்களைப்போல் புத்தக விருந்து அளிப்பவர் யாருமில்லை.😇
மிக்க நன்றி சார். 🙏🏻🙏🏻🙏🏻
Why we die ? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தாங்கள் செய்து தமிழ் வாசகர்களுக்கு அளிக்க வேண்டும். மரணம் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறீர்கள். நன்றி! இந்த அறிவியல் சிந்தனையை நாம் தமிழகம் முழுவதும் கொண்டுச் செல்வோம்.
அவசியம் படிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.புத்தகம் கிடைத்த வுடன் படித்து விடுகிறேன்.