அண்ணே கடைசியா
எங்க போனீங்க…?
கொரானா ல எங்கடா போறது…
இனி கடைசியா கொரானால போனாத்தா உண்டு…
ஏன்னே இப்படியெல்லாம் பேசறீங்க…
கடைசியா
வேண்டாம் வேண்டாம்
சமீபத்தில் என்ன படம் பாத்தீங்க…?
Cold case ன்னு பிரித்திவிராஜ் நடித்த மலையாளப் படம் prime ல் பார்த்தேன்…
படம் நல்லா இருந்ததாண்ணே…
crime, horror thriller படம். நல்லா இருந்தது, நல்லா எடுத்திருந்தாங்க தம்பி….
இப்ப என்ன புத்தகம் ன்னே படிக்கிறீங்க…?
உளவியலின் (psychology) தந்தை என்று அழைக்கப்படுகிற சிக்மண்ட் பிராய்ட் எழுதிய “உளவியல் ஒரு பகுப்பாய்வு” ன்னு புத்தகம் படித்தேன்…
நம்ம சமூகத்தில நடக்கற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது பாலியல் (sex) தான்.
என்னன்னே சொல்றீங்க…
நா சொல்லுல…
பிராய்டு சொல்றாரு தம்பி…
உண்மையாய்த்தான் படுது தம்பி…
வேணும்னா ஒரு மாதத்திற்குரிய தினசரி செய்தித்தாள் எடுத்துக்குங்க..
அதில் உள்ள பெரும்பாலான குற்றச் செயல்கள் எதுவா இருக்குன்னா, தாத்தா பேத்தி வயதுடைய பெண்ணிடம் பாலியல் சீண்டல், பக்கத்து வீட்டில் இருந்த சிறுமிக்கு தந்தை வயதுடைய ஆணால் பாலியல் தொந்தரவு, சித்தி யிடம் சீண்டல், மகளிடம் அத்துமீறல், இது போதாதென்று கள்ளக் காதல் கொலைகள், மது, கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம், படிக்க வந்த பெண்களை படுக்கைக்கு அழைத்த ஆசிரியர்கள், தாகாத உறவுகளால் தரம் கெட்டுக் கிடக்கும் ஆசிரமங்கள், ஊழியம் செய்ய வந்தவர்களை படுக்கைக்கு அழைக்கும் பாதிரிகள்…
நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன் மனைவியை வெட்டிக் கொலை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி….
காதலில் பார்த்தால்…
காதலி பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதால் அல்லது காதலன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் கொலை அல்லது விலகினால் ஆசிட் வீச்சு, பழிவாங்கல்…
குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள பெரும்பாலான விவாகரத்து வழக்குகளை ஆழமாக ஆய்ந்து பார்த்தால் அதன் காரணம் பாலியலில் (sex) தான் முடியும். திறமையின்மை, முயற்சியின்மை, திருப்தி இல்லாத நெடுங்காலப் படுக்கை, வேறு பெண்ணுடன், வேறு ஆணுடன் உறவு, என காரணங்கள் பல உண்டு.
இது தான் காரணம் என்றால் சமூகம் உற்று நோக்கும் பார்வையை சகிக்க இயலாமல் வரதட்சணை, கொடுமை, ஏமாற்றம் என ஏதோதோ காரணங்கள்…
அப்பறம் இதுக்கெல்லாம் என்னதான்னே தீர்வு..?
அது மட்டுமல்ல தம்பி…
திருட்டு, கொள்ளை, சமீபத்தில் நடைபெற்ற ATM கொள்ளை ன்னு ஈடுபடுகிற பெரும்பாலான குற்றவாளிகளின் பின்னணியை பார்த்தால் அவர்களது பெற்றோர்களின் நடத்தை மிக முக்கியமானதாக இருக்கும். சிறுவயதில் ஆழ்மனதில் படிந்த அழுக்குகள் என அவர்களது சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தால் அதுவும் இறுதியில் பாலியலில் (sex) தான் முடியும்.
சரிங்கன்னே… புரியுது…
அப்பறம் என்ன தான் இதுக்கெல்லாம் தீர்வு…?
சுருக்கமா சொல்லுங்க…
நேரமாச்சு…
நோய் என்னன்னு பிராய்டு சொல்லிட்டாரு…
அதுக்கான மருந்தை நம்ம மண்ணுக்கேத்த மாதிரி கொடுக்க வேண்டியது நாம தான் தம்பி…
நாளைய தலைமுறையை காக்க, நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டு வரலாம்.
பாலியல் பற்றிய புரிதல்களை, ஆண், பெண் பற்றிய அடிப்படை உண்மைகளை, இயற்கையான பாலியல் உணர்வுகளை எப்படி கையாளலாம் என்று
அந்தந்த பருவத்திற்கு ஏற்ப தக்க ஆசிரியர்களைக் கொண்டு விதைத்தால் நல்ல தரமான விளைச்சல் கிடைக்கும். சட்டம் ஒழுங்கு சீர்படும்..
சட்டம் ஒழுங்கா…?
உதாரணமா…
இக் கல்வியின் மூலம் பாலியல் குற்றங்கள் குறைந்தால் காவலர்களின் பணிச்சுமை குறையும், அப்படி குறையும் போது மன அழுத்தம் வெகுவாய் விலகும். அப்படி விலகும் போது அப்பாவி மக்களின் மீதான அரசு வன்முறை குறையும்.
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம் தம்பி…
மு.சிவகுருநாதனின் “கல்விக் குழப்பங்கள்” நூலில் ” வளரும் பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகள், குழந்தைகள் பிறரது பாலியல் சீண்டல்களை அறிந்து கொண்டு தற்காத்துக் கொள்ளுதல், பாலியல் உறுப்புகளின் தூய்மை போன்ற பல்வேறு வகையான ஒருங்கிணைக்கப்பட்ட பாடமே பாலியல் கல்வி” என்று கூறுகிறார்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு…
ஆண்மை, பெண்மை பற்றிய புரிதலற்ற குழப்பங்கள் நம் மனதிற்குள் தினித்து வைக்கப்பட்டுள்ளது.
தாய்மை உணர்வும், செயல்பாடுகளும் இரு பாலருக்கும் பொதுவானது என கருத்தில் கொண்டு…
புகழ் பெற்ற கல்வியாளர்கள், உளவியலாளர்கள், குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் கொண்டு பாலியல் கல்விக் கொள்கையை வகுக்கலாம்.
பாலியல் கல்வி என்றால் படுக்கையறை சமாச்சாரம் மட்டுமே என்றும், கலாச்சாரம், பண்பாடு என்றும் பதறிக்கொண்டு, பாய்ந்து வர ஒரு கூட்டம் உண்டு.
அதையும் கணக்கில் கொண்டு சமூகக் குற்றங்களை களையெடுக்க, ஆக்கபூர்வமான பாலியல் கல்வி முறைகளை அமுல்படுத்தினால் நாளைய தலைமுறை நலமாக இருக்கும் தம்பி…
நல்லது அண்ணே…
வருகிறேன்…
மீண்டும் சிந்திக்கலாம்… நன்றி.
– யாழினி ஆறுமுகம் –
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.