மத்திய இந்திய காடுகள் தீயிலிருந்து தப்பிவிடுமா? – முனைவர். பா. ராம் மனோகர்
காடுகள் நம் நாட்டின் இயற்கை செல்வம் என்பதை நாம் அறிவோம்.பொருளாதார உயர்வு மட்டுமின்றி, பருவ கால மாற்றத்தின் நேரடியான அல்லது மறைமுக, செயல்பாடுகள், பாதிப்புகள், மனித இனத்தினை பெருமளவில் பாதிக்காமல் இருக்கவும், உயிரின வேற்றுமை பாதுகாக்கவும், காடுகள் நம் நாட்டில் மிக அதிகம் உள்ளது. ஆனால் அந்த காடுகள் அழிக்க ப்படும்போது அந்த நிலை இயற்கை சுற்றுச் சூழல் சங்கிலியினை தடை செய்கிறது.குறிப்பாக காடுகள் “தீ “ விபத்துக்களால் அழிகின்ற நிலை மிகவும் வருத்தம் தரக் கூடிய ஒன்று, ஆகும்.
மத்திய இந்தியாவில் உள்ள காடுகள் இவ்வாறு” தீ “விபத்து மூலம் தொடர்ந்து பாதிக்கின்ற நிகழ்ச்சிகள் பற்றி, இந்திய வன மேலாண்மை நிலையத்தின் (INDIAN INSTITUTE OF FOREST MANAGEMENT) ஆய்வாளர் திரு.விபா சாகு என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இந்த ஆராய்ச்சி வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில், காடுகள் தொடர்ந்து பாதிக்கின்ற நிலைக்கான காரணங்களை அறியவும் முற்பட்டார். கடந்த 22 ஆண்டுகளில் அந்த காடுகளில் ஏற்பட்ட” தீ “விபத்துகள் பற்றிய தரவுகள் மூலம்,”இடர் பாதிப்பு பகுதிகளுக்கான வரைபடங்கள் “(RISK ZONE MAPS) தயாரிக்கப்பட்டது. இவற்றின் மூலம் ஆட்சியாளர்கள், அரசு
நிர்வாகம், அலுவலர்களுக்கு, கொள்கை உருவாக்குதலில் இந்த ஆய்வு முடிவுகள் உதவுகின்றன. குறிப்பாக, அந்த காடுகளின் உயிரின வேற்றுமையினை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காண்டுவா மற்றும் வடக்கு பேட்டுல் மாவட்டங்களில் உள்ள காடுகள் கடந்த 22 ஆண்டுகளில் தீப்பற்றிய நிலைகள் பற்றி இந்த ஆய்வில், அறியப்பட்டது. குறிப்பாக தீ விபத்து உருவாகிய வெவ்வேறு விதங்கள் பற்றி செயற்கைக்கோள் தரவுகள் கொண்டு தகவல்கள் திரட்டப்பட்டது. மேலும் “தீ” பரவிய காரணங்கள்பற்றி ஆராய்ச்சி செய்கையில், பெரும்பாலும் மனித காரணங்களாலும், சில சமயம், இயற்கைக் காரணிகளும், இவ்வகைப் பிரச்சினைகளுக்கு துணை போகின்றன, என்ற உண்மை அறியப்பட்டது. 45% சதவீதம் காண்டுவா வனப்பகுதிகள் மற்றும் வடக்கு பேட்டுல்பகுதி 50% சதவீதம் முற்றிலும் அழியக்கூடிய ஆபத்தான (HIGH RISK) நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

காண்டுவா மாவட்டத்தில் வடக்கு, தென் கிழக்கு பகுதியில், மற்றும் கிழக்கு காலி பிட் மேற்கு காலிபிட் ,சந்த் கார்,அவோன்லியா, சரகங்களில் கடந்த காலங்களில் 3 மடங்கு தீ விபத்து பாதிப்பு தொடர்கின்றன. வட கிழக்கு, வட மேற்கு பகுதியில் ஷாப்பூர், பேட்டுல் சார்னி, பாவ்ரா ஆகிய இடங்களில் தீ அழிவு வாய்ப்பு தொடர்ந்து இருக்கின்றன. இத்தகைய விபத்து, காடுகள் எரிவதற்கு, தாவர இனங்கள், நில அமைப்பு மற்றும் கூடுதலாக மனித இடையூறுகள் எனவும் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, சாலைகள் அருகில் உள்ள எளிதில் “தீ “ பற்றும் வாய்ப்புள்ள தாவரபகுதி இருப்பின் அங்கு இந்த பிரச்சனை தோன்றுகிறது. காண்டுவா பகுதியில் உள்ள தேக்கு மரக் காடுகள், பேட்டுல் பகுதியில் உள்ள, கலப்பு தாவர காடுகளை விட அதிக ஆபத்து வாய்ப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ANALYTIC HIERARCHY PROCESS முறை வழியில் ஐந்து அபாய காரணிகள்,மூலம் தீயினால் விபத்துகள் காடுகளில் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மிகவும் முக்கிய தாவரம், மஹுவா எனப்படும் இலுப்பை (MADHUCA INDICA) ஆகும். இந்த மரங்களின் மணமுள்ள மலர்கள், ஒரு குறிப்பிட்ட வகை போதை பானம், தயாரிக்க உதவுகிறது. மேலும் இந்த பூக்களை வறுத்து அல்லது நேரடியாக உண்ணும் வழக்கம் இப்பகுதி பழங்குடி மக்களுக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது.
அதே போல் டெண்டு இலைகள் சேகரிக்கப்பட்டு அவற்றை பீடி, என்ற புகை பிடிக்கும் தொழிலுக்கு பயன் படுத்தப்படுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட காடுகளில் மஹுவா மலர்கள், டெண்டு இலைகள் சேகரிக்கும் உள்ளூர் மக்கள், அவர்கள் அவற்றை சேகரிக்கும் முறை, போன்றவற்றால், குறிப்பாக, காடுகளில் உள்ள அடி நிலை தாவரங்களை தீ மூட்டுவது ஒரு முக்கிய அபாய காரணி ஆகும். வனங்களை பாதுகாக்க பல்வேறு செயல் திட்டங்களை அவ்வப்போது வனத்துறை நிறைவேற்றி வந்தாலும், தீ விபத்துகள் காரணமாக, காண்டுவா, பேட்டுல் காடுகள் எதிர்காலத்தில் முற்றிலும் இல்லாமல் போய்விடும் அபாய காரணிகள் பற்றி சிந்திக்க வேண்டும். சிறு வன பொருட்கள் சேகரித்து அதன் மூலம் தம் வாழ்க்கை பயணம் நடத்தும் பழங்குடியின மக்கள் நிலை பாதிக்கப் படாமல், திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
வன ஆராய்ச்சியாளர் விபா சாகு அவர்கள் “குறிப்பிட்ட இலக்கை நோக்கிய தீ விபத்து, தவிர்ப்பு முறைகள், செயல்பாடுகள்,உரிய நிதி ஆதாரத்துடன் கூடிய திட்டங்கள் மட்டுமே இந்த காடுகளை பாதுகாக்க அவசியம் “என்று கூறுகிறார். ஆம் மத்திய பிரதேச காடுகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து காடுகளிலும் தீ விபத்து மூலம் அரிய உயிரின வேற்றுமை அழிந்துவிடாமல் காக்க அரசு துறைகளிலும், திறன் மிகு சிந்தனை கொண்டு, வன பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்க முயலவேண்டும்! சிந்திப்போம்!
கட்டுரையாளர்:
முனைவர். பா. ராம் மனோகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

