காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…!
– முனைவர். பா. ராம் மனோகர்
அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி மென் பொருள் நிறுவனங்கள் பெருக்கம், போன்ற, நவீன திட்டங்கள், வேலை வாய்ப்புகள் அதிகமாக, உருவாக்கும் நிலை, தவிர்க்க இயலாது.
எனினும் இயற்கை சார்ந்த பகுதிகளில், இத்தகைய வளர்ச்சிப் பணிகள், அதிகமாக மேற்கொள்வதை, முழுமையாக அனுமதிக்கக்கூடாது. பொது மக்கள் வாழ்வாதாரம் இதனால் நிச்சயம் அங்கு பெருகும். ஆனால் குறிப்பிட்ட இயற்கை பகுதியில்,அதிக மாசுபாடு, குப்பைகள், போக்குவரத்து நெரிசல், அதிகரித்து அடர் காடுகள் அழிக்க வாய்ப்புகள் வரும். அங்கு வசித்து வந்த உயிரினங்கள், வாழ்விடம் இல்லாமல், தவித்து அருகில் உள்ள நகர்புற மனித வாழ்விடங்கள் நோக்கி செல்ல துவங்கும். ஒட்டு மொத்தமாக அங்கு சுற்றுசூழல் பாதிக்கும் என்பது நிதர்சன உண்மை.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு கதையல்ல. சமீபத்தில் நம் அண்டை மாநிலத்தில் நடக்க இருந்த ஒரு காடழிவுக்கு, ஒரு தற்காலிக தடை, நீதித்துறை மூலம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் நான் தெலுங்கானா, மாநிலத்தின் ஹைதராபாத் சென்றிருந்தபோது அருகில் உள்ள, கச்சி பௌலி என்ற அழகிய காட்டுப் பகுதிக்கு, போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆம், இந்த வனப்பகுதி 400 ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் அருகில் உள்ளது.
நகரின் சுவாச நுரையீரலாக, விளங்கிடும் இந்த காட்டினில், புள்ளி மான்கள், உடும்பு, நட்சத்திர ஆமை போன்ற முக்கிய விலங்குகள், மற்றும் மயில், பெலிக்கன் என்ற கூழைக்கடா பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. 220 பறவை சிற்றினங்கள், 15 ஊர்வன சிற்றின விலங்குகள், 10,பாலூட்டி இனங்கள், 734 பூக்கும் தாவர வகை 72, வகை காட்டு பாரம்பரிய தாவரங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேலும் 40000 எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதாகவும், டைனோசர் காலத்திற்கு முந்தைய நாட்களில் உருவான, காளான் பாறைகள் இங்கு காணப்படுகின்றன. மயில் ஏரி, எருமை ஏரி, மற்றும் சின்ன, சின்ன நீர் தேக்கங்களும் இந்த வனப்பகுதியில், காணப்படுகின்றன.

தெலுங்கானா, மாநில, ரங்கா ரெட்டி மாவட்டத்தில், சிரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் உள்ள கச்சி பௌலி காட்டில்,அரிய இனம் “ஹைதராபாத் மரத் தண்டு சிலந்தி “இருப்பது ஒரு சிறப்பு ஆகும். உயிரின வேற்றுமைக்கு முக்கிய பகுதியாக இந்த (BIODIVERSITY HOTSPOT) காடு விளங்குகிறது. நகரப்பகுதியில், நூற்றுக்கணக்கான வகையில் வேறுபட்ட தாவர, விலங்குகள் இருப்பது மிகவும் சிறப்பு என்பதை நாம் அனைவரும், உணரவேண்டும்.
மேலும் இந்த காடுகள், நிலத்தடி நீரினை தக்க வைத்து மாநகரத்திற்கு உதவுகிறது. அடர் காடுகள் நம் வாகனங்கள், தொழிற் சாலை, மனித செயல்பாடுகள் மூலம் வெளியேறும் கரி அமில வாயு என்ற கார்பன் டை ஆக்ஸ் சைடு வாயுவின் உறிஞ்சு தொட்டியாக விளங்கி வருகிறது. முன்னரே 14% வனப்பகுதி” காண்கிரீட் அமைப்புகளாக “மாறிவிட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டில்” ஹரிதாஹரம் “ என்ற திட்டத்தின் மூலம் பசுமை பரப்பி னை அதிகரித்துள்ளது.
ஏனென்றால் இந்திய வன நிலை அறிக்கை யின் படி 2015 ஆம் ஆண்டு இம்மாநிலத்தில் 1727 ச.கி. மீ பரப்பாக இருந்து வந்த காடுகள், 2021 ஆம் ஆண்டு 2518 ச. கி. மீ. ஆக மாற்றம் பெற்ற நிலை பாராட்டக்கூடியது. இந்த மாநிலத்தில் 10% பட்ஜெட் பசுமை நோக்கம் கொண்டு மேற்கொள்ள ப்படுவது சிறப்பு ஆகும். அதாவது, ஆயிரக்கணக்கான ஏக்கர், நிலங்களை பசுமையாக்க கிராமங்களில், NURSERY செடி,நாற்றங்கால் அமைக்க திட்டங்கள் இடப்பட்டுள்ளது.
எனினும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், கச்சி பௌலி காடுகள் அழிக்க முடிவு எடுத்த நிலை கண்டு, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள், சமீபத்தில் போராட்டம் நிகழத்தினர். அவர்கள் அரசு எடுத்த முடிவு இயற்கை பாதிக்கும் என்று உணர்ந்து தொடர்ந்து நீதி மன்றம் சென்று” இடைக்கால தடை “பெற்று வந்துள்ளனர்.
இதன் மூலம் தற்காலிக தீர்வு கிடைத்து, பசுமை பகுதி காப்பாற்றப்பட்டுள்ள நிலை மகிழ்ச்சி தான், எனினும் எதிர்காலத்தில், கச்சி பௌலி காடுகள் அழிந்து போய்விடுமோ!? என்ற அச்சமும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இயற்கை பற்றிய புரிந்துணர்வு,கல்வியாளர்கள், கூரிய அறிவு கொண்ட இளம் தலைமுறை அரசு நிர்வாக உயர் அலுவலர்கள், தொழில் நுட்பம் பயின்ற பொறியியல் வல்லுநர்கள், ஆகியோருக்கு இல்லை என்று நாம் நிச்சயம் கூறவோ, வாதாடவோ இயலாது.
ஏனெனில் 1990 ஆம் ஆண்டு முதல் தொடக்க கல்வி முதல்,கல்லூரி உயர் கல்வி, பொறியியல் உட்பட அனைத்து பட்ட வகுப்புகளில், “சுற்று சூழல் அறிவியல் “ கட்டாய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதுவே உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தொடர்ந்து அதற்குரிய பாடத்திட்டம், தேர்வு என்று வரையறுக்கப்பட்டு கல்வி நிலையங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், உடன் பொருளாதார லாப நோக்கம் கொண்டு, அரசு, துறைகள் பசுமை பகுதிகளை பகட்டான காண்கிரீட் காடுகளாக மாற்ற ஆர்வம் கொண்டு இருக்கும் நிலை வருந்துதற்குரியது.

நாம் சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் கற்று அறிந்து, உரிய விழிப்புணர்வு பெற்று, அன்றாடம் தனிப்பட்ட மனிதர்கள் கூட சுற்றுசூழல், நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய வாழ்வியல் முறைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்வியாக, அறிவியல் பூர்வ மாக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை, காடுகள் பற்றி நோக்கினாலும், பேரிடர் காலத்தில், (வறட்சி,வெள்ளம், மழை, புயல்,) மட்டுமே நாம் இயற்கை யின் சீற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும் நிலை நகைப்புக்குரியது அல்லவா!!?
வாழ்வின் அடிப்படை யான இயற்கை அழிந்து செயற்கை அமைப்புகள் உருவாகும் போது, அந்த அழகிய இயற்கை அமைப்புகள் மாசுப்படுகின்றன, திடக்கழிவுகள் பெருகிவிடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு அவர்களின் அடிப்படை தேவைகளுக்கும், உணவுப்பொருள் பற்றாக்குறையுமஏற்படும். இந்த உண்மைகள் அறிந்தும் நாம், மேலும், மேலும் இயற்கை க்கு எதிராக தவறுகள் செய்வதை ஏன்!? தவிர்க்க முடிவதில்லை! சற்று சிந்திக்க நேரம் ஒதுக்குவோமே!
பொருளாதார மேம்பாடு மிக அவசியம் என்றாலும், ஹைதராபாத் போன்ற நகரங்களில் மீண்டும் இதனைப்போன்ற பாரம்பரிய காடுகள் அழிக்க திட்டம் இடுவது, நாமே நமக்கு, ஆபத்தினை வரவழைக்க வழி ஏற்படுத்தி கொள்வது போல் ஆகும்.
பாரம்பரிய காடுகளை அழித்துவிட்டு, புதிதாக மரக்கன்றுகள் நட்டு உடனடியாக புதிய சூழல் அமைப்பு உருவாக்க நினைப்பதும் நிச்சயம் விரும்பத்தக்க, அல்லது நாம் எதிர்பார்க்கும் பலன்கள் தரக்கூடிய தீர்வு அல்ல!. தெலுங்கானா மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களில் தொழில் பெருக்கம் என்ற பெயரில் இயற்கை காடுகள் அடியோடு அழித்தல் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். மீண்டும் பொதுமக்களும், அரசு களும் சிந்திக்க முன்வருமா!!!?
எழுதியவர் :
– முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

