ஆகஸ்ட் 20 : உலகக் கொசு தினம் (World Mosquito Day)
உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற குரல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு உயிரினத்தின் மீது அதிருப்தி அடைகின்றனர். அது மக்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது. அது மிகச் சிறிய உயிரினம் என்றாலும் அதனால் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆகவே அதனை ஒழிக்க வேண்டும் என பல்வேறு நாட்டு மக்களும், அரசுகளும் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கிறது. அது எந்த உயிரினம் என்றால் கொசு ஆகும்.
கொசு
கொசு ஒரு சிறிய பறக்கும் பூச்சி இனமாகும். கொசு இனம் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்கிறது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் கொசுவும் ஒன்றாகும். உலகம் முழுவதும் சுமார் 3,600 கொசு இனங்களை இது வரை கண்டுபிடித்துள்ளனர்.
கொசு சுமார் 3 முதல் 6 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் உடல் எடை 2 முதல் 5 மில்லிகிராம் வரை காணப்படும். கொசு ஒரு மணி நேரத்தில் 1 முதல் 2 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும். சில கொசுக்கள் இரவு நேரத்தில் 12 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும்.
கொசுவின் முக்கியமான உணவு விலங்குகளின் இரத்தமாகும். பெண் கொசுக்கள் மட்டுமே இரத்தத்தைக் குடிக்கும். ஆண் கொசுக்கள் மலரில் இருக்கும் தேனைக் குடித்து உயிர் வாழும். ஆண் கொசுக்களுக்கு கடிக்கும் திறன் இல்லை. ஏனெனில் அவற்றுக்கு தோலைத் துளைக்கத் தேவையான குறிப்பிட்ட உறுப்பு இல்லை.
பெண் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்த உணவு தேவை. இரத்தத்தில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முட்டைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒரு பெண் கொசு தன் உடல் எடையை விட மூன்று மடங்கு இரத்தத்தை உறிஞ்ச முடியும். அதற்கு ஏற்ப அதன் வயிறு விரிவடையும்.
கொசுக்கள் சிலரை மட்டும் தேடிப்பிடித்து கடிப்பது உண்டு. பொதுவாக A, B வகைகளை விட O வகை இரத்தம் உள்ளவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும். கொசுக்களுக்கு தொலைவில் இருந்து கரியமில வாயுவை முகரும் சக்தி உள்ளது. நாம் சுவாசித்து வெளியிடும் காற்றில் இருக்கும் கரியமில வாயுவை எளிதில் கண்டறிந்து கடிக்கும். ஆகவேதான் கொசு நம் முகத்திற்கு அருகே ரீங்காரமிட்டு சுற்றிக் கொண்டே இருக்கும்.
மது அருந்தியவர்களையும் கொசு கண்டுபிடித்து கடிக்கும். கருவுற்ற பெண்களை அதிகம் நாடும். ஏனெனில் அவர்கள் உடம்பில் இருந்து அதிக வெப்பமும், அதிக கரியமில வாயுவும் வெளிப்படும். அழுக்கான இடம் கொசுக்களுக்கு பிடிக்கும். அதனால் தான் கால் பகுதியில் கடிக்கிறது. தோல் செருப்பு போட்டிருந்தால் அந்த காலுக்கு கடி சற்று அதிகமாக கிடைக்கும்.
பெண் கொசு நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டைகளை இடும். ஆண் கொசுக்கள் 7 நாட்கள் மட்டுமே உயிர் வாழும். ஆனால் பெண் கொசுக்கள் 30 முதல் 40 நாட்கள் வரை உயிர் வாழும்.
ரொனால்டு ரோஸ்
ரொனால்டு ரோஸ் (Ronald Ross) என்பவர் ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் ஆவார். இவர் 1857 ஆம் ஆண்டு மே 13 அன்று இந்தியாவில் அல்மேராவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரியாக இந்தியாவில் பணிபுரிந்து வந்தார். இவர் இங்கிலாந்தில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். இந்தியாவில் 1981 ஆம் ஆண்டில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கினார்.
இவருக்கு சென்னை மாகாணத்தில் மருத்துவப் பணி வழங்கப்பட்டது. இவர் சென்னை, பர்மா, மியான்மர், பலுசிஸ்தான், அந்தமான் தீவுகள், பெங்களூரு மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் பணியாற்றினார். இவர் 1895 ஆம் ஆண்டில் மலேரியா ஒட்டுண்ணி சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.
இவர் ஊட்டி மலைக்கு அருகில் உள்ள சிகூர் காட் என்ற பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு சுவரில் ஒரு கொசு இருப்பதைக் கண்டார். இந்த கொசு எந்த இனத்தைச் சேர்ந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர் டப்பிள் விங்ஸ் (Dappled – Winged) என அந்த கொசுவை அழைத்தார்.
இவர் 1897 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள மலேரியா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றார். அவரிடம் மலேரியா நோய்த் தடுப்பு மருந்து குயினின் இருந்தது. இருந்த போதிலும் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் மலேரியா நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். பிறகு அவர் செகந்திராபாத்திற்கு திரும்பினார்.
இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு 1897 ஆம் ஆண்டில் 20 பழுப்பு நிற கொசுக்களை வளர்த்தார். ஹுசைன் கான் என்பவர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு கொசுவிற்கு ஒரு அணா என 8 கொசுவிற்கு 8 அணா கொடுத்து அவருடைய இரத்தத்தைக் கொசுக்கள் குடிக்க வைத்தார்.
இந்த கொசுக்களை அறுத்து வயிற்றுப் பகுதியை ஆய்வுச் செய்தார். கொசுவின் குடலுக்குள் மலேரியா ஒட்டுண்ணி இருப்பதை ஆகஸ்ட் 20 அன்று கண்டுபிடித்தார். அது டப்பிள் விங்ஸ் கொசு என அடையாளம் காட்டினார். இது அனோபிலிஸ் (Anopheles) இனத்தைச் சேர்ந்தது. அடுத்த நாள் ஆகஸ்ட் 21 அன்று கொசுவில் மலேரியா ஒட்டுண்ணியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று இந்திய மருத்துவ அரசிதழில் வெளியிடப்பட்டது. பின்னர் டிசம்பர் 1897 இல் பிரிட்டிஷ் மாத இதழிலும் வெளியானது.
இவருக்கு 1902 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
உலகக் கொசு தினம்
மலேரியா நோயைப் பரப்பும் கொசுவை ரொனால்டு ரோஸ் கண்டுபிடித்தார். கொசுக்களுக்கும் மலேரியா பரவலுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பைக் கௌரவிக்கும் வகையில் உலகக் கொசு தினம் (World Mosquito Day) உருவாக்கப்பட்டது.1902 ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 20 அன்று உலகக் கொசு தினம் கொண்டாடப்படுகிறது.
மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் ஒட்டுண்ணி ஆகும். ஒரு அனோபிலிஸ் பெண் கொசு உங்களைக் கடித்தால், அதன் வயிற்றில் மலேரியா ஒட்டுண்ணி இருந்தால் அது உங்களுக்கு மலேரியாவை ஏற்படுத்தி விடும். இது இது பொதுவாக பகலில் கடிக்காது. அந்தி நேரம் மற்றும் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,35,000 பேர் மலேரியாவால் இறக்கின்றனர். ஒவ்வொரு 45 வினாடிக்கு ஒரு குழந்தை உயிர் இழக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 219 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். மலேரியா 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த முடியும்.
உலகம் முழுவதும் மலேரியா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிரேக்க நாட்டில் 1974 ஆம் ஆண்டு மலேரியா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
கொசுவினால் ஏற்படும் நோய்கள்
கொசு ஒரு மிகச் சிறிய உயிரினம். ஆனால் சிங்கம், புலியை விட மிக மோசமானது. கொசுவைப் பார்த்தாலே மனிதர்களுக்கு ஒரு வித அளர்ச்சி ஏற்படும். மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் முதலிடத்தில் கொசு உள்ளது. இது நமக்குத் தெரியாமலே இரத்தத்தைக் குடித்துவிடும். கொசு கடித்தால் உடலில் அரிப்பும், வீக்கமும் ஏற்படும்.
தொல்லை தரும் கொசுக்கள் கடித்து இரத்தத்தைக் குடிக்கும். ஆனால் நோயைப் பரப்பாது. சில குறிப்பிட்ட கொசுக்கள் மூலம் 30 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மூளை அழற்சி, சிக்குன் குனியா, யானைக் கால், ஜிகா காய்ச்சல் போன்ற பல நோய்கள் பரவுவதற்கு கொசுக்கள் காரணமாக இருக்கின்றன.
ஆபத்தான கொசு
உலகில் மிகவும் ஆபத்தான கொசு ஏடீஸ் ஏஜிப்டி (Aedes aegypti) ஆகும். இது புலிக் கொசு என அழைக்கப்படுகிறது. இது டெங்கு போன்ற காய்ச்சலைப் பரப்புகிறது. இது ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் உலகம் முழுதும் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடிந்த வல்லரசு நாடுகளால் கூட இந்த கொசுவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.
இறப்புகள்
கொசுவினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மக்கள் இறக்கின்றனர். சுமார் 700 மில்லியன் மக்கள் நோய்வாய்ப் படுகின்றனர். அதாவது பத்தில் ஒருவர் பாதிக்கப்படுகிறார். உலகம் முழுவதும் ஓராண்டில் விலங்குகளால் ஏற்படும் இறப்புகள் பற்றிய எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.
கொசுக்களால் 7,25,000, மனிதர்களால் 4,75,000, பாம்புகளால் 50,000, நாய்களால் 25,000, நன்னீர் நத்தைகளால் 10,000, நாடாப் புழுக்கள் மூலம் 2,000, முதலைகளால் 1,000, காண்டாமிருகம் மூலம் 500, சிங்கத்தின் மூலம் 100, ஓநாய் மூலம் 10, சுறா மூலம் 10 என மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு
வீட்டைச் சுற்றி புதர் போன்ற செடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் கொசு வீட்டினுள் நுழையாதவாறு ஜன்னல்களை அடைத்து வைக்க வேண்டும். ஜன்னல்களில் கொசு வலை அடித்து கொசுக்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். வீட்டின் அருகில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும் கொசு வலையின் உள்ளே படுத்து உறங்குவது நல்லது.
கொசு இல்லாத நாடு
கொசு இல்லாத நாடு ஐஸ்லாந்து ஆகும். கொசு தண்ணீரில் தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இங்கு மூன்று முறை மிகப் பெரிய உறைபனி காலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கொசுவினால் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடியாது. ஆகவே ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்கள் இல்லை.
கொசு குறைவாக உள்ள நாடு
சிங்கப்பூரில் கொசுத் தொல்லை இல்லை. அரசின் கொசு ஒழிப்பு நடவடிக்கையால் கொசுக்கள் மிக மிக குறைவாகவே உள்ளன. இதே போல அமெரிக்க நாட்டின் குடியிருப்பு பகுதியில் கொசுக்கள் இருப்பதில்லை. பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் மக்களைப் பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மீன்,தவளை, சிறு பூச்சிகள், வௌவால்கள், ஊர்வன வகைகள் மற்றும் பறவைகள் போன்ற பல உயிரினங்களுக்கு கொசு உணவாகப் பயன்படுகிறது. கொசு மிக முக்கிய உணவுச் சங்கிலியாக விளங்குகிறது. நீர் நிலையில் வாழும் சிறிய மீன்களுக்கு கொசுவின் லார்வாக்கள் முக்கிய உணவாகும். கொசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டால் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு பல உயிரினங்கள் அழிந்து போகும்.
ஆண் கொசுக்கள் அதிகமாக மலர்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்கிறது. இதனால் கொசு அயல் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. கொசு இனம் அழிந்து விட்டால் கொசுவின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்கள் பல அழியும். இந்த தாவரங்களை நம்பி உயிர் வாழும் விலங்குகளும் பாதிக்கப்படும். ஆகவே கொசுவும் சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
படங்கள்
1. கொசு
2. ரொனால்டு ரோஸ்
3. அனோபிலிஸ்
4. பிளாஸ்மோடியம்
5. ஏடீஸ் ஏஜிப்டி
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களின் ஆகஸ்ட் 20 கொசு தினம் அரிய தகவல்களை அடங்கியதாக உள்ளது 7 லட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் இழப்பு.ஆபத்தான நோய்கள் ஏற்படுவது அதேசமயம் சுற்றுச்சூழல்பாதுகாப்பில் பெரும்பங்காற்றுவதும் வியப்பிற்குறியது.