பிப்ரவரி 13 – உலக வானொலி தினம் (World Radio Day) : சிறப்பு கட்டுரை
வானொலியின் கதை
தொலைத்தொடர்புத் துறையில் ஆகச்சிறந்த புரட்சியை ஏற்படுத்தியதில், வானொலி நிலையங்களுக்கு ஆகச்சிறந்த பங்கு இருக்கிறது. ஒலி வழி உணர்வுகளை சென்று சேர்க்கும் தகவல் ஊடகமாக விளங்கும், வானொலிகளின் சர்வதேச தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்பு தினத்தில் வானொலியின் (Radio) வரலாறு மற்றும் இன்ன பிற சிறப்புகள் குறித்து சற்றே திரும்பிப் பார்ப்போம்.
1864 ஆம் ஆண்டு இயற்பியலாளரான மேக்ஸ்வெல் தெரிவித்தக் கோட்பாடுகளின் அடிப்படையில், 1888 ஆம் ஆண்டு இயற்பியலாளர் ஹெர்ட்ஸ் அவர்கள் காற்றின் ஊடாக மின்காந்த அலைகளை (Electromagnetic Radiation) அனுப்பவும், பெறவும் முடியும் என நிரூபித்தார்.
அதைத்தொடர்ந்து வந்த பல விஞ்ஞானிகளும் இயற்பியலாளர்களும், வானொலியின் கண்டுபிடிப்பிற்கு பல்வேறு பங்களிப்புகளை செய்தார்கள். இறுதியாக 1896 ஆம் ஆண்டு இயற்பியலாளர் மார்க்கோனி வானொலிகளின் செயல்படக்கூடிய ஒரு வடிவத்தை கண்டறிந்தார். அதற்கான காப்புரிமை பின்னாளில், இங்கிலாந்து அரசாங்கத்திடம் இருந்தும் பெற்றார். இப்படிதான் உலக மக்களின் செவிக்கு விருந்து படைக்க பிறந்து வந்தது வானொலி (Radio).
2. தகவல் தொடர்பில் புரட்சி
தகவல் தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதற்கு வானொலியின் பங்கு மிக மிக முக்கியமானது. வானொலியானது ஆங்கிலத்தில் பொதுவாக ரேடியோ என அறியப்படுகிறது. இது மின் காந்த கதிர்வீச்சு வார்த்தையில் (electromagnetic radiation to “Radio”) இருந்து சுருக்கமாக பெறப்பட்டிருக்கிறது. ரேடியோ அலைகளின் அலைநீளமானது குறைந்தபட்சம் ஒரு சென்டிமீட்டரில் தொடங்கி அதிகபட்சம் 100 மீட்டர் வரை நீள்கிறது. ரேடியோ அலைகள் வெறும் வானொலி நிலையங்களின் தகவல்களை மட்டும் சுமந்து வருவதில்லை. தற்காலத்தில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டிகள்,ஏன் மொபைல் தகவல் தொடர்பில் கூட ரேடியோ அலைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை எவ்வித பாதகமற்ற மின்காந்த கதிர்வீச்சாகும்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக ரேடியோ கருவிகள் பயன்படுத்தப்பட்டது. ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் தகவல்களை அனுப்புவதற்கு ரேடியோ கருவிகளை உலகம் எங்கும் இருந்த அரசாங்கங்கள் பயன்படுத்தின. மேலும், அவசர தகவல் தகவல்களை பகிர்வதற்கும் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுவதற்கும், பேரிடர் போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் சிறந்த வழியாக ரேடியோ கருவிகள் அறியப்பட்டது.
இன்றளவும் கூட, இயற்கை பேரிடர் தருணங்களில் தகவல் தொடர்பிற்கு ஒரு ஆகச் சிறந்த வழிமுறையாக வானொலி நிலையங்கள் பயன்படுகிறது. ஏனெனில், மிக மோசமான வானிலை சூழலில் கூட வானொலி அலைகளை பரப்ப முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் வானொலி நிலையங்கள்:-
உலகின் முதல் வானொலி நிலையமானது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் பிட்ஸ்பர்க் நகரத்தில் அமைக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்த பண்பலையின் பெயர் KDKA ஆகும்.
இதைத்தொடர்ந்து, வர்த்தக ரீதியிலான வானொலி நிலையங்களின் பயன்பாடு உலகளாவிய அளவில் அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவின் முதலாவது வானொலி நிலையம் ஆனது ரேடியோ கிளப் ஆப் பாம்பே என்கிற பெயரில் அப்போதைய மும்பையில் 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சில மாதங்களிலேயே ரேடியோ கிளப் ஆப் கல்கட்டாவும் தொடங்கப்பட்டது. இந்தியாவின் ஆரம்ப கால வானொலி நிலையங்களாக இவை அறியப்படுகிறது. மேலும், இவை இரண்டும் தனியார் வானொலி நிலையங்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதைத்தொடர்ந்து, 1930 களில் எத்தகைய தனியார் வானொலி நிலையங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு அரசு வானொலி நிலையங்கள் ஆக மாற்றப்பட்டது. இதற்கு இந்தியன் ஸ்டேட் பிராட்காஸ்டிங் சர்வீஸ்(ISBS )எனும் பெயரும் வைக்கப்பட்டது.
இந்தப் பெயர்தான், 1936 ஆம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோ(AIR )என மாற்றம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்,குறிப்பிட்ட மண்டலங்களுக்கு ஒரு வானொலி நிலையம் என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்டன. மெல்ல மெல்ல நகரங்களில் வானொலியின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, 1947 ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் சுதந்திரம் அடைந்த செய்தியானது வானொலியின் மூலமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை அப்போதையே அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் திரு.ஆர்.எஸ் வெங்கட்ராமன் அவர்கள் வாசித்தார்கள். ஆனால், இந்திய சுதந்திரத்தின் போது சுமார் 2.5% நில பரப்பளவிற்கு மட்டுமே வானொலி சேவை சென்று சேர்ந்ததையும், 11.5% மக்களுக்கு மட்டுமே வானொலியை கேட்கும் வாய்ப்பு இருந்ததையும் விக்கிப்பீடியாவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.மேலும், அப்போது இந்தியாவில் ஆறு வானொலி நிலையங்கள் மட்டுமே இருந்தது.
ஆனால், இன்றைக்கு இந்தியாவில் 200க்கும் அதிகமான வானொலி நிலையங்கள் செயல்படுகிறது. பெரும்பாலான மக்களிடையே வானொலி சேவையானது சென்று சேர்ந்து இருக்கிறது. இன்னமும் கூட பலரும் நம்பகமான செய்திகளை பெறுவதற்கும், பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவும் வானொலிகளை பயன்படுத்துகின்றனர்.
காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட பண்பலைகள் ஆரம்ப காலத்தில் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கருவியாக ரேடியோ கருவிகள் இருந்தது. பின்நாளில் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, நடுத்தர வர்க்க மக்களிடமும் வானொலியின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
அப்போதைய காலகட்டத்தில் எல்லாம், ஊருக்கு ஒரு வானொலி பெட்டி என்கிற அடிப்படையில் பொதுவாக வானொலி பெட்டிகள் வாங்கப்பட்டு, அதில் காலையும் மாலையும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு மக்கள் செய்திகளை அறிந்து கொண்டதையும் கவனிக்க முடிகிறது. ஒருவர் வீட்டில் இருக்கும் வானொலி பெட்டியில் செய்தி கேட்பதற்காக, ஊர் மக்கள் அனைவரும் செல்லும் காலமும் இருந்தது.
மேலும், குறிப்பாக அப்போதைய தேர்தல் முடிவுகளை அறிவதற்கு வானொலி சேவை மட்டுமே ஒரே வழிமுறையாக இருந்தது. உடனுக்குடன் வெளியாகும் தேர்தல் முடிவுகள் வானொலியில் அறிவிக்கப்பட்டது. பேரிடர் மற்றும் திடீர் வானிலை மாற்றங்கள் குறித்தும் வானொலியின் மூலம் அறிவிக்கப்படும். மேலும் முக்கியமான தலைவர்களின் மறைவு நிகழ்வுகளும் வானொலியில் அறிவிக்கப்படும்.
அதன் பிறகு, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி பெட்டிகள் வீடுகளை நிறைக்க தொடங்கியது. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே வானொலி பெட்டிகளின் பயன்பாடு படிப்படியாக குறையத் தொடங்கியது. தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை காட்சி தகவல் ஊடகத்தை(visual communication )அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது.
இருந்த போதிலும், அதைத் தொடர்ந்து வந்த சிறிய மொபைல் கருவிகளில் கூட ரேடியோ கேட்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்காலத்தில், தனியாக ரேடியோ பெட்டிகளை வாங்காவிட்டாலும் , தங்கள் மொபைல் கருவிகளின் மூலமாகவே வானொலி செய்திகளை கேட்டுக்கொள்ளும் வசதியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தற்காலத்தில் இணையத்தில் கிடைக்கும் சில ஆண்ட்ராய்டு செயலிகளைக் கொண்டு(Example, Radio garden) உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வானொலி நிலையங்களை கூட நம்மால் கேட்க முடியும். மேலும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலி சேவைகளை நம்மால் கூட வழங்க முடியும்.
தற்காலத்தில் இணைய வானொலி சேவைகளும் பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் ,அதன் அடுத்த பரிமாணத்திற்கு நோக்கியும் பயணித்து வருகிறது.
இத்தகைய சிறப்புகள் கொண்ட வானொலியை கொண்டாடுவதற்கு, பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படும் என 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தன்னுடைய 36 ஆவது மாநாட்டில் அறிவித்தது.
முன்பெல்லாம் வானொலியில் தாங்கள் விரும்பும் பாடல்கள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதற்காக வானொலி நிலையத்திற்கு கடிதம் எழுதி அனுப்பும் அளவிற்கு வானொலி நேயர்கள் இருந்தார்கள். இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக விரும்பும் பாடல்களை, விரும்பும் நொடியிலேயே, இருந்த இடத்திலேயே கேட்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக ரேடியோ பண்பலைகளின் வளர்ச்சியும் தொடர்ந்து இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்னும் பல தசாப்தங்களுக்கும், உலகமெங்கிலும் வானொலியின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதும் நிச்சயம்.
இத்தகைய சிறப்புகள் மிக்க சர்வதேச வானொலி (World Radio Day) தினம் வரலாற்றில் இன்று.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ
இளங்கலை இயற்பியல் மாணவர்,
தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,
நாகர்கோவில் – 629002.
மின் மடல் முகவரி : [email protected]
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.