உலகறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய் (Shasanka Mohan Roy)
தொடர் : 39 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
ஷசங்க மோகன் ராய் உலகம் அறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஆவார். இவர் தற்பொழுது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அணுசக்தி துறையில் ராஜா ராமண்ணா பேராசிரியராக இருக்கிறார். டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்ற மும்பையைச் சேர்ந்த அறிவியல் ஆய்வகத்தின் கோட்பாட்டு இயற்பியல் ஆய்வாளர்களின் தலைவராகவும் தொடர்கிறார். மோகன் ராயின் சமன்பாடுகள் என்று அழைக்கப்படும் பியாண் பியோன் டய்னாமிக்ஸ் என்பதும் பெல்- ராய் ஏற்றத்தாழ்வுகள் என்பதும் உலக பிரசித்தி பெற்ற இயற்பியல் கோட்பாடுகள் ஆகும்.
QUANTUM MECHANICS அறிவியல் துறை குவாண்டம் இயக்கவியல் சார்ந்த இயற்பியல் துறையாகும். இது அணுக்களின் அளவிலும் அதை விட குறைவான அளவு உள்ள இயற்கையின் பரு பொருட்களின் நடத்தையை விவரிக்கும் அடிப்படை கோட்பாடாக உள்ளது. இது குவாண்டம் வேதியியல், குவாண்டம் கோட்பாடு, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட துறையாக வளர்ச்சி அடைந்து இன்று குவாண்டம் இயற்பியல் என்று அழைக்கப்படுகிறது..

எப்போதுமே பிரபஞ்சத்தில் இரு வகையான உலகங்கள் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படுகின்றன. ஒரு உலகம் MACRO என்று வர்ணிக்கப்படும் நட்சத்திர கூட்டங்கள் பிரம்மாண்டமான பூமி உள்ளிட்ட கோள்கள், சந்திரன்கள் மற்றும் நம் புவியில் கண்ணுக்கு புலப்படும் பெரிய பொருட்கள் சம்பந்தப்பட்டதாகும். இரண்டாவது வகை உலகம் அணுவுக்கு உள்ளே உள்ள கண்ணுக்கு புலப்படாத MICRO உலகம் என்று அழைக்கப்படும் குவாண்டம் உலகமாகும். குவாண்டம் இயக்கவியல் என்பது சாதாரண இயற்பியளால விவரிக்க முடியாத பல அமைப்புகளை கொண்டது. பாரம்பரிய இயற்பியல் MACRO அம்சங்களை ஆய்வு செய்கிறது. குவாண்ட இயற்பியல் மைக்ரோ உலகம் சம்பந்தப்பட்டது.
இந்த குவாண்ட இயற்பியலில் QUANTUM FIELD THEORY என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். குவாண்டம் புலக் கோட்பாடு என்னும் துறை தனியாக செயல்படுகின்ற சிறப்புத் துறை. இந்த துறையின் வல்லுநர் தான் மோகன் ராய். QFT என்று பொதுவில் வர்ணிக்கப்படும் இத்துறை குவாண்டம் இயக்கவியல் ஐ கிளாசிக்கல் புலக் கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் இவற்றோடு ஒன்றிணைக்கும் கோட்பாடு ஆகும். தற்போது துகள் இயற்பியல் நிலையான மாதிரி STANDARD MODEL என்றழைக்கும் அனுவின் உப்புகள் அமைப்பு இந்த புலக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது ஆகும்.

இந்த விஷயத்தில் விஞ்ஞானி மோகன் ராயின் ஆய்வுகள் என்பவை முக்கியமாக ஃபியோன் டயனாமிக் மற்றும் ஹைட்ரோன் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டது. குவாண்ட புலக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் AXIOMATIC QUANTUM FIELD THEORY எனப்படும் அச்சு குவாண்டம் புலக் கோட்பாடு தனித்துவமானது ஆகும். இது பலவகையான ஆழமான கடுமையான கோட்பாடுகளின் தொகுப்பாக உள்ளது. செயல்பாட்டு பகுப்பாய்வு மற்றும் ஆப்பரேட்டர் இயற்கணிதங்களுடன் தொடர்புடையது. இந்த துறையின் ஒரு முக்கிய ஒருங்கிணைந்த சமன்பாட்டை உருவாக்கி, அவை ராயின் சமன்பாடுகள் என்று அறியப்படும் அளவிற்கு இந்திய விஞ்ஞானி சசாங்க மோகன் ராயின் பங்களிப்பு உள்ளது.
ராய் உயர் ஆற்றல் வரம்புகள் என்பவை இந்த துறையின் குறிப்பிடத்தக்க அற்புதம் ஆகும். சமீப காலங்களாக தகவல் தொடர்பு குறித்த குவாண்ட அறிவியலில் அதிகம் பேசப்படுவது EINSTEIN-PODOLSKY-ROSHEN PARADOX .. என்னும் ஒரு முரண்பாடு ஆகும். EPR முரண்பாடு என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், போரிஸ் பொடல்ஸ்கி மற்றும் நாதன் ரோஷன் ஆகியோரால் முன்மொழியப்பட்ட ஒரு கற்பனை சிந்தனை பரிசோதனை ஆகும். குவாண்டம் இயக்கவியல் வழங்கிய இயற்பியல் உண்மைகளின் விளக்கம் முழுமை அடைவதற்கு சாத்தியமில்லை என்று இந்த மன ஆய்வு வாதிடுகிறது. இயற்பியல் எதார்த்தத்தின் குவாண்டம் மெக்கானிக்கல் விளக்கம் முழுமையானதாக கருதப்பட முடியுமா என்ற தலைப்பில் ஐன்ஸ்டீனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து வெளியிட்ட உண்மையின் கூறுகள் இன்னும் அதிகம் பேசப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை மையப்படுத்தி இந்த முரண்பாடு இயங்குகிறது. இந்த சிந்தனை பரிசோதனை என்று அழைக்கப்படும் மன அளவிலான சோதனை ஒரு ஜோடி துகள்களை உள்ளடக்கியது. இந்த கோட்பாட்டின் படி இரண்டு துகள்களும் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு துகள் கடிகார முறைப்படி சுழல்கிறது மற்றொரு துகள் எதிர் கடிகார முறைப்படி சுழல்கிறது என்று வைத்துக்கொண்டால் நாம் ஒரு துகளை அளப்பதன் மூலம் அதில் இருந்து எத்தனை தொலைவில் இருந்தாலும் அதன் ஜோடி துகளை நேரடியாக ஆய்வு செய்யாமலேயே அது எந்த திசையில் சுழல்கிறது என்பதை அறிவித்துவிட முடியும் இது தான் இந்த மனோ சோதனை.

ஹைசன்பார்கின் நிச்சயமற்ற கொள்கையின் அடிப்படையில் இந்த ஆய்வை சிந்திக்கின்ற பொழுது குவாண்ட இயந்திரவியல் பல விதமான ஆச்சரிய முடிவுகளை நோக்கிச் சென்றது. இதனடிப்படையில் ஜான் பெல் என்பவர் பல அவதானிப்புகளை வெளியிட்டார். ஆண்டிரோ மார்ட்டின் என்பவர் ஆய்வுகளை மேம்படுத்தினார். ஆனால் நம்முடைய மோகன் ராய் இவை அனைத்தையும் கணித வரையறைக்கு உட்படுத்தி அதன் விளைவாக ராய்- சிங் எல்லைகள் என்கின்ற உயர் ஆற்றல் குறுக்கு வெட்டுங்களின் ஒப்புமை வரம்புகளை அறிந்து வெளியிட்டார். இந்த இரண்டு துகள்களும் ஒன்று தூரத்தின் அடிப்படையில் வரம்புகளை கொண்டிருக்கும் அல்லது அவற்றின் நிறையின் அடிப்படையில் வரம்புகளை கொண்டிருக்கும். இந்த உச்ச வரம்புகள் இல்லாமல் உறுப்புகளை ஆய்வுசெய்து குவாண்ட உண்மைகளை முழுவதுமாக கண்டறிவது சாத்தியமில்லை என்பதுதான் மோகன் ராயின் கோட்பாடு. இது உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தரவு கோட்பாடுகளிலும் இன்றைக்கு மிக முக்கியமான படிநிலையாக பார்க்கப்படுகிறது.
மோகன் ராயின் பங்களிப்புகள் அத்தோடு முடியவில்லை. இந்தியாவின் அற்புதமான இயற்பியலாளரான சுப்ரமணியம் சந்திரசேகர் எனும் நோபல் அறிஞர் வழங்கிய சந்திரசேகர் வரம்பு மற்றும் போஸான் துகள் அமைப்புகளின் நிறைகளை கோட்பாட்டளவில் ஒன்று சேர்த்த பெருமை மோகன்ராய்யை சாரும். சந்திரசேகர் வரம்பு என்பது கருந்துளைகள் சம்பந்தப்பட்ட MACRO உலகைச் சேர்ந்தது. போஸான் துகள் கோட்பாடு என்பது MICRO உலகைச் சேர்ந்தது. இவை இரண்டையும் ஒன்றிணைக்க கூடிய ராய்யின் முக்கியமான சமன்பாடு ஒன்று இயற்பியலில் உள்ளது. ஆண்டிரே மார்டின் எனும் இயற்பியலாளர்ரோடு இணைந்து மோகன் ராய் சார்பியல் சரிவுக்கான ஆதார சமன்பாடு ஒன்றை முன்மொழிந்தார். இது ரே- ராய் சூப்பர் அல்காரிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அல்காரிதம் ஒரு குவாண்டம் மெக்கானிக்கல் அமைப்பின் மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு இன்று பயன்படுகிறது. இதைத் தவிர ராய் ஃப்ரான்ஸ் டீன் வால்டம் அளவியல் அறிவியலில் ஒரு துல்லியமான அளவீட்டு முறையாகும் இப்படி மோகன் ராயின் கண்டுபிடிப்புகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஷசங்க மோகன் ராய் 1941 ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் நாள் இந்தியத் தலைநகர் தில்லியில் பிறந்தார். ஆரம்ப பள்ளியை முடித்த பிறகு தில்லி பல்கலைக்கழகத்தில் 1960 ஆம் ஆண்டு Bsc., இயற்பியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். யூனியன் பிரதேஷ் உதவித்தொகை எனும் தேர்வை எழுதி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு இணைந்தார். கலிஃபோர்னியாவின் சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான குவாண்ட ஆய்வுகளுக்கு அறிமுகம் ஆனார். 1967 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் மும்பையில் 40 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் குவாண்ட இயற்பியலில் பிரம்மாண்ட ஆய்வு பணிகளை ஆற்றினார். தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உயர் ஆற்றல் விஞ்ஞானியாக தொடர்கிறார்.
உலகமறிந்த இந்த ஒப்பற்ற பழுத்த இந்திய இயற்பியலாளர் மோகன் ராய் 1981 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். 2003 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அறிவியல் மாநாட்டு சங்கம் எஸ் என் போஸ் என்று அழைக்கப்படும் சத்யேந்திரநாத் போஸ் பெயரில் நூற்றாண்டு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகப் புகழ்பெற்ற இந்திய துகள் இயற்பியலாளர் ரோகிணி காட்போல் (#Rohini Godbole)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Bose – Einstein சமன்பாடு பள்ளியில் படித்துள்ளேன். ஆனால் ரே- ராய் சூப்பர் அல்காரிதம் ஒரு குவாண்டம் மெக்கானிக்கல் அமைப்பின் மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு இன்று பயன்படுகிறது என்பதை மிக தாமதமாக இன்றுதான் அறிகிறேன். ராய் ஃப்ரான்ஸ் டீன் வால்டம் அளவியல் அறிவியல் ஒரு துல்லியமான அளவீட்டு முறை என்பதிலிருந்து ராயின் குவாண்டம் இயற்பியல் ஆய்வு உலகம் வரை உலகம் போற்றும் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ராய் என்பதில் ஐயமில்லை.
மைக்ரோ மற்றும் மேக்ரோ உலகை இணைத்த சிறந்த விஞ்ஞானியை அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா.
தங்கள் சேவை என்றும் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 🙏🙏🙏
மிகப்பெரிய கோள்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய அணுக்கள் என கட்டுரை தொடங்கி இந்தத் துறையில் நடைபெற்றுள்ள ஆராய்ச்சிகளை விளக்கியது அருமை. இது போன்ற விஞ்ஞானிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நிலையில் அவர்களின் கண்டுபிடிப்பை உங்கள் கட்டுரைகள் வெளி கொணர்வது சிறந்த பணி.