ஒரு நாள் ஒரு குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு நரி மிக வேகமாக வந்தது. அப்போது அங்கு உட்கார்ந்திருந்த தவளை ஒன்று நரியைப் பார்த்து கர்க், கர்க் என்று சப்தமிட்டது. பின்னர், நரியைப் பார்த்து, ”இங்கிருந்து போய்விடு. இல்லாவிட்டால், நான் உன்னை முழுங்கி விடுவேன்.” என்றது.
நரி,” இந்த மாதிரி எல்லாம் பந்தா செய்யாதே. நான் உன்னைவிட வேகமானவன்,” என்றது.
இதைக் கேட்ட தவளை சிரித்தது. நரியோ மீண்டும் தான் மிக வேகமானவன் என்றது. வாக்குவாதத்தின் இறுதியில், நரி, “சரி, நாம் இருவரும் அடுத்த நகரம் வரை ஓடுவோம். யார் அங்கு முதலில் போய்ச் சேர்கிறார்கள் என்று பார்ப்போம்,” என்றது. தவளை ஒப்புக்கொண்டது.
நரி ஓடுவதற்காகத் திரும்பியதும், தவளை ஒரே தாவாகத் தாவி, நரியின் அடர்ந்த வாலில் தொற்றிக் கொண்டது. நரி வேகமாக ஓடி நகரத்தின் கோட்டை வாசலுக்குச் சென்றுவிட்டது. வாசலில் நின்று, தவளை எங்கே வருகிறது என்று பார்க்கத் திரும்பிய நேரத்தில், தவளை வாலிலிருந்து குதித்துவிட்டது. நரி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நகரத்திற்குள் நுழைவதற்காகத் திரும்பும் போது, தவளை,” நீ இப்போது தான் வருகிறாயா? நான் அப்போதே வந்து ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டேன். நீ வர இன்னும் நேரமாகும் என்று நினைத்து நம் ஊருக்குத் திரும்ப நினைத்தேன்,” என்றது.
நரி மயங்கி விழுந்தது.
எழுத்தாளர் ச.சுப்பாராவ்
மிகவும் அருமை
நன்றி..
மிகவும் அருமை. நல்ல கதை. ஸ்வஸ்திகா வுக்கு சொல்கிறேன்.