பேதமற்ற வகுப்பறை – ஒரு வாசிப்பு அனுபவம்
“வகுப்பறையை ஜனநாயகப்படுத்துதல் என்றால் என்ன? அனைவருக்குமான கல்வி சாத்தியமா? வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியுமா? இன்றைய பள்ளிகள் உண்மையில் தேர்வு மையங்களாக மட்டுமே மாறிவிட்டனவா?” போன்ற எண்ணற்ற கேள்விகள் எனது மனதில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தன. அவற்றிற்கான பதில்களைத் தேடும் முயற்சியாக கல்வி சார்ந்த பல நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
அந்த வகையில், ச. மாடசாமி எழுதிய பல நூல்களை ஏற்கனவே வாசித்திருந்தாலும், “பேதமற்ற வகுப்பறை” என்னும் இந்நூல் எனது பல கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை வழங்கியது.
பொதுவாக வகுப்பறை என்றாலே ஆசிரியர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்; மாணவர்கள் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்ற ஒரு கற்பனை நமக்குள் இருக்கிறது. ஆனால், இந்த நூலில் இடம்பெற்றுள்ள 12 கட்டுரைகள் வழியாக, வகுப்பறைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சமூகம் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும், அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் தனது அனுபவங்களின் அடிப்படையில் ஆசிரியர் விளக்குகிறார்.
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பார்கள். ஆனால் மாடசாமி, “ஆசிரியர் என்பவர் இன்னொரு பெற்றோர்” என்கிறார். குழந்தைகளின் எதிர்காலம் வீடுகளில் மட்டுமல்ல; வகுப்பறைகளிலும் உருவாகிறது என்பதை வலியுறுத்துகிறார்.
பாவுலோ ஃபிரெய்ரே முன்வைத்த Fear of Freedom மற்றும் உரையாடல் வழிக் கல்வி பற்றிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரை முதல், ஆசிரியரின் அடையாளம் குறித்த விவாதங்கள் வரை நூல் சுவாரசியமாக நகர்கிறது.
“இந்த சமூகத்தில் மனிதர்களுக்கான முதல் தேவை அங்கீகாரம். அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறார்” என்ற கருத்து ஆழமாக சிந்திக்க வைக்கிறது.
“வீட்டை விடப் பெரியது வகுப்பறை; வகுப்பறையை விடப் பெரியது சமூகம்”, “சுதந்திரமே பள்ளியின் முக்கிய குறிக்கோள்”, “குழந்தைகளின் படைப்பாற்றல் வகுப்பறைகளில் கொல்லப்படுகிறது” போன்ற நறுக்கென்ற கருத்துகள் இன்றைய கல்வி நிலையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
“பேச்சும் மௌனமும்” என்ற கட்டுரையில், பேச்சு என்பது வெறும் காதுகளுக்குச் சென்று சேரும் கலையல்ல; அது மனங்களையும் மாற்றும் ஆற்றல் கொண்டது என்பதை ஆசிரியர் அழகாக விளக்குகிறார்.
ஒரு ஆசிரியருக்கு அன்பும் பொறுமையும் அவசியம். அப்போதுதான் தன்னுடன் நடந்து வருபவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களை அரவணைத்து முன்னேற்றவும் முடியும். அதற்கான உரையாடல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன என்பதை நூல் முழுவதும் வலியுறுத்துகிறது.
சாக்ரடீஸ் கூறிய “சுயபரிசோதனை செய்யாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்ற கருத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆசிரியர்-மாணவர் உறவுகளில் நிலவும் பாகுபாடுகளை களைய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.
“நம் சமூகம் அறிவார்ந்தவர்களால் மட்டுமே நிரம்பியதல்ல; சாதாரண மனிதர்களும், அர்த்தமற்ற நம்பிக்கைகளும், பல்வேறு முரண்பாடுகளும் நிறைந்த சமூகம். இதை புரிந்துகொண்டு அதற்குள் பணியாற்ற வேண்டியது அவசியம்” என்கிறார்.
“அறிவைச் சேர்ப்பது முக்கியம்தான்; அதைவிட முக்கியம் மனித உறவுகளைச் சேர்ப்பது” என்ற உயர்ந்த கருத்து நூல் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இறுதியாக, ரோசா பார்க்ஸின் மறுப்பு எவ்வாறு பெரும் சமூகப் போராட்டத்தை உருவாக்கியது என்பதையும், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற பேருந்துப் புறக்கணிப்பு போராட்டத்தையும் குறிப்பிட்டு நூலை நிறைவு செய்கிறார்.
அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு சிறிய ஆனால் ஆழமான நூல் தான் “பேதமற்ற வகுப்பறை”.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பேதமற்ற வகுப்பறை” |
| ஆசிரியர்: | ச. மாடசாமி |
| வெளியீடு: | புக்ஸ் ஃபார் சில்ட்ரன் |
| விலை: | Original price was: ₹.60, 10% Discount price was: ₹.54 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அமுதன் தேவேந்திரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

