“தன்வியின் பிறந்தநாள்” – நூல் அறிமுகம்
சிறார் இலக்கியம் என்றாலே அறிவுரை நிறைந்த கதைகள் என்ற பொதுவான எண்ணத்தை மெதுவாக உடைத்து, குழந்தை மனதின் இயல்பான ஓட்டத்தோடு பயணிக்கச் செய்கிறது யூமா வாசுகியின் தன்வியின் பிறந்தநாள்.
குழந்தைகளின் உலகத்தை அவர்கள் பார்க்கும் கோணத்திலேயே நம்முன் விரிக்கிறது.
குழந்தைகளுக்காக எழுதப்பட்டாலும், குழந்தைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் பெரியவர்களுக்கும் இந்த நூல் ஒரு சாளரம் அமைத்துத் தருகிறது எனலாம்.
இந்த நூலில் இடம் பெறும் பத்து சிறுகதைகள், தன்வி என்ற சிறுமியும் அவளது அண்ணன் ஜெயும் அனுபவிக்கும் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகின்றன. பள்ளி, வீடு, தெரு, நண்பர்கள், விலங்குகள், இயற்கை என குழந்தைகளின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள உலகமே கதைகளின் களமாக மாறுகிறது. எதையும் மிகைப்படுத்தாமல், நிகழ்வுகளை அவை நடந்தபடியே சொல்லும் எழுத்து நடை வாசகரை கதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது.
முதல் கதையான ‘தன்வியின் பிறந்தநாள்’ குழந்தைகளின் கற்பனை உலகத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும் உயிரினங்களும் தன்விக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் காட்சி, குழந்தைகள் உலகை எவ்வாறு அன்புடன் அணுகுகின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இயற்கையை நேசிப்பது கற்றுக் கொடுக்க வேண்டிய பாடமல்ல; குழந்தைகளுக்குள் இயல்பாகவே இருப்பது என்பதைக் கதை இதன் மூலம் சொல்கிறது.
ஜெய் என்ற பாத்திரம் இந்த நூலில் மனிதநேயத்தின் பிரதிநிதியாக நிற்கிறது. அவனது பொறுப்புணர்வு, கருணை, துணிச்சல் போன்ற பண்புகள் எந்த இடத்திலும் நேரடி அறிவுரையாகச் சொல்லப்படவில்லை; அவன் செயல்களினூடே வெளிப்படுகின்றன. ‘தலைவர் ஜெய் செய்தது சரியா?’, ‘சிறகுத் தேள்’ போன்ற கதைகள், பிறர் நலனை முன்னிலைப்படுத்தும் மனப்பாங்கு எவ்வாறு உருவாகிறது என்பதைக் காட்டுகின்றன.
விலங்குகள் மீதான அன்பும் இந்த நூலின் முக்கிய கூறாகத் திகழ்கிறது. குட்டி நாய், ஆடு, கோழிக்குஞ்சு போன்ற உயிர்கள் கதைகளில் இடம் பெறுவது, குழந்தைகளின் கருணை மனதை இயல்பாக வெளிக்கொண்டு வருகிறது. பிற உயிர்களை நேசிப்பவன் மனிதநேயத்தை இழக்கமாட்டான் என்று உணர்த்துகிறது.
நூலில் மனதில் ஆழமாகத் தங்கும் கதைகளில் ஒன்று‘வலியினால் அல்ல’ குறிப்பிடத்தக்கது. பொறாமை, கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்ற உணர்வுகள் குழந்தைகளுக்குள்ளும் தோன்றும் என்பதை மறைக்காமல் காட்டும் இந்தக் கதை, அவற்றை அன்பும் பொறுமையும் எவ்வாறு மாற்றுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தன்வியின் நிதானமும் மன்னிக்கும் மனமும் வாசகரை சிந்திக்க வைக்கிறது.
எளிமையான எழுத்து நடையில் ஒவ்வொரு கதையும் தனித்தனியான அனுபவமாக இருக்கிறது.
ஆனால் இந்த கதைகள் அனைத்தையும் இணைப்பது மனிதம், அன்பு மற்றும் கருணை என்ற மைய உணர்வே. குழந்தைகளுக்கான நூலாக இருந்தாலும், பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவுகூரச் செய்யும் தன்மை இதில் உள்ளது.
மொத்தத்தில், தன்வியின் பிறந்தநாள் சிறுவர்களுக்கான கதைகள் மட்டுமல்ல; மனிதம் என்றால் என்ன என்பதை எளிமையாக உணர்த்தும் ஒரு அழகான சிறார் இலக்கியப் படைப்பு.
இந்த நூல் 2024-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தன்வியின் பிறந்தநாள் (Dhanviyin Piranthanaal) |
| ஆசிரியர்: | யூமா வாசுகி (Writer Yuma Vasuki) |
| வெளியீடு: | |
| விலை: | ₹.130 |
| அறிமுகம் எழுதியவர்: |
ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
|
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
